
“திருச்சியில ஒரு பார்ட்டியைப் பார்க்க வந்தேன். நிறையச் சரக்கு தேவைப்படறதாகவும், ரேட் பேசணும்ன்னும் கூப்பிட்டிருந்தார். அவரோட பேர் தினகரபோஸ். புதுசா ரெடிமேட் ஷாப் ஆரம்பிக்கறதா சொன்னார். அவரோட கடையில ஹொஸைரி ஐட்டங்களையும் ஒரு பகுதியில வைக்கப்போறதா சொன்னார். அந்த தினகர போஸ்ங்கறவரோட மச்சினர்க்கு எங்க முதலாளி ஃப்ரெண்டாம். அதனால எங்க முதலாளி தினகர போஸைப் பார்த்துப் பேசிட்டு வரச் சொன்னார்...”
“என்ன?! முதலாளியா?!...”
“ஆமா சங்கர். எங்க ஹொஸைரி எக்போர்ட் கம்பெனியோட முதலாளி மிஸ்டர் ராஜேந்திர பிரசாத். அவருக்கு நான் மகன் மாதிரி. அவருக்கு நான் மகன் ஆனது ஒரு பெரிய கதை. அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும். இன்னொரு நாள் நான் உங்களோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வரேன். நான் இங்கே வந்ததுன்னு இன்னொரு காரணம், திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார். அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு நான் இது வரைக்கும் போனது இல்லை. எங்க முதலாளி ராஜேந்திர பிரசாத், என்னை அந்தக் கோவிலுக்குப் போயிட்டு வரணும்ன்னு சொல்லி அனுப்பிச்சார்.”
“ஆமா பிரபாகர். அந்தக் கோவில் பிள்ளையார் ரொம்ப சக்தியுள்ள கடவுள். கண்டிப்பா நீங்க போயிட்டு வாங்க...”
“சரி சங்கர். முன்ன பின்ன பார்க்காத உங்களை ரொம்ப நாளா பார்த்துப் பழகின மாதிரி ஒரு உணர்வு எனக்கு. உங்களோட மொபைல் நம்பர் குடுங்க. உங்களைப் பார்க்கணும்ன்னா போன் பண்ணிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கும்.”
சங்கர் மொபைல் நம்பரைச் சொன்னதும், அதைத் தன் மொபைல் போன் புக்கில் போட்டு வைத்துக் கொண்டான் பிரபாகர்.
“அப்போ... நான் கிளம்பறேன் சங்கர்” என்ற பிரபாகர், சிப்பந்தி கொண்டு வந்த பில்லுக்குப் பணம் கட்டுவதற்காகத் தன் பர்ஸை எடுத்தான். அவன் பணம் எடுப்பதைத் தடுக்க முயற்சி செய்தான் சங்கர்.
“இது எங்க ஊர். நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. நான்தான் குடுக்கணும்.” பிரபாகரிடமிருந்த பில்லை வாங்கிய சங்கர் பணத்தைக் கொடுத்தான்.
இருவரும் அங்கிருந்து கிளம்ப, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர்.
சங்கரின் கை குலுக்கி அவனிடம் விடை பெற்றுத் தன் இன்னோவா காரில் பயணித்தான் பிரபாகர். ஸொனோட்டா காரில் ஏறிய சங்கரின் முகத்தில் புதிய சந்தோஷம் தென்பட்டது.
‘புது இன்டஸ்ட்ரி துவங்கற நேரம் நல்ல நேரம் போலிருக்கு. நான் நினைச்சபடியே... என்னோட திட்டப்படியே நடக்கறதுக்கு ஏத்த மாதிரி எக்ஸ்போர்ட் பண்ற பிரபாகர் அறிமுகமாகி இருக்கார். அந்தப் பிரபாகர் மூலமா புதுத் தொழிலை விருத்தி பண்ணிடலாம்னு தோணுது.’
புதிய தொழில் அபிவிருத்தி அடையும் அடையாளங்கள் தென்பட்டதும், சங்கரின் கவலைகள் எப்போதைக்குச் சற்று மறந்தன. புது உற்சாகத்துடன் காரை ஓட்டினான்.
பாண்டிச்சேரி, மங்களத்தம்மாவுடைய பங்களாவின் பராமரிப்பில் பெரும்பங்கையும், மங்களத்தம்மாவின் குடும்ப நலன்களில் கடுமையான உழைப்பையும் மேற்கொண்ட ஜானகி மீது திகுந்த அன்பு கொண்டிருந்தாள் மங்களத்தம்மா.
ஜானகியின் மகன்கள் கண்ணாவையும், குட்டியையும் எந்த வேலையும் வாங்காமல் அவர்களைப் படிக்க வைத்தாள் மங்களத்தம்மா. அவர்களது படிப்பிற்குரிய செலவுகள் அத்தனையையும் மங்களத்தம்மா ஏற்றுக் கொண்டாள். அவர்களுக்குப் பள்ளிக்கூடச் சீருடைகள் மட்டுமல்லாது பண்டிகை தினங்களில் நல்ல, அழகிய உடைகளையும் வாங்கிக் கொடுப்பது மங்களத்தம்மாவின் வழக்கம். ஜானகிக்குப் புடவைகள், ஜாக்கெட் துணிகள் வாங்கிக் கொடுப்பாள்.
உழைப்பை மையமாகக் கொண்டு தன் கணவனின் பிரிவையும், அதனால் ஏற்பட்ட வறுமையையும் ஓரளவு வளமானதாக மாற்றிக் கொண்டாள் ஜானகி. வறுமை வளம் ஆகலாம். ஆனால் அவளது மனம்?! அது அவளது வாழ்வில் ஏற்பட்டுள்ள துன்பச் சுமையைச் சுமப்பது பற்றி சிந்தித்தபடியே இருக்க வைத்தது. வீட்டு வேலைகளிலும், சமையல் வேலைகளிலும், மற்ற ஊழியர்களை உரிய நேரத்தில், அவர்கள் பணிக்ள் செய்வதை மேற்பார்வை பார்ப்பதிலும் ஈடுபட்டிருந்தாலும் மனதின் ஓரத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் சோகம் அவளது கண்களை நிரந்தரமாக ஈரத்தில் வைத்திருந்தது. மனதை முள் போல் தைத்துக் கொண்டிருந்தது.
மங்களத்தம்மாவின் உறவினர் கூட்டம் அடிக்கடி அங்கே வருவதும், சில நாட்கள் தங்குவதுமாக இருப்பது வழக்கம். அது போன்ற சமயங்களில் ஜானகிக்கு மிக அதிகமாக வேலைப் பளு இருக்கும். ரகுவைப் போன்ற போக்கிரிகளும் அந்த உறவுக் கூட்டத்தில் இருப்பார்கள்.
குறையாத இளமையும், நிறைந்த செழுமையான உடல் வனப்பும் கொண்ட ஜானகியை வளைத்துப் போட முயன்றவர்கள் பலர். அத்தகைய கேவலமான மனிதர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவள் நெருப்பாகத் தகிக்க வேண்டி இருந்தது. அந்தச் சூழ்நிலை அளிக்கும் வேதனைகளைச் சகித்துக் கொள்ள வேண்டி இருந்தது.
‘புருஷன் துணை இல்லாதவ. கூப்பிட்டா வந்துடுவா!’ன்னு சில ஆண்கள் தன்னை மிகக் கேவலமாக மதிப்பிடுவதை நினைத்து அவமானப்பட்டாள். சில நேரம் ஆத்திரப்பட்டாள். உள்ளத்திற்குள் ஒளித்து வைத்து ரகசியமாய் அழுதாள்.
அன்றும் அப்படித்தான். உறவினர்கள் பத்துப் பேருக்கு அதிகப்படியாகச் சமைத்து முடித்துப் பரிமாறிய பிறகு ஏற்பட்ட களைப்பால் சமையலறையிலேயே ஓர் ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள் ஜானகி. படுத்தவள், அலுப்பினால் உடனே கண் அயர்ந்தாள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவளது கழுத்தில் ஏதோ பூச்சி ஊருவது போலிருக்க, கைகளால் தட்டிவிட்டாள். மறுபடியும் அதே உணர்வு ஏற்பட மறுபடியும் தட்டிவிட்டாள். மூன்றாவது முறை ஏதோ உணர்வு தோன்றிய போது அவளது அலுப்பும், ஆழ்ந்த தூக்கமும் கலைந்து போனது. தன் கழுத்தில் ஊர்வது பூச்சி அல்ல. ஒரு மனிதனின் கை என்று புரிந்து கொண்டதில் வேகமாய் எழுந்தாள். வேங்கையைப் போல் சீறினாள். எதிரே நிற்பவன் யாரென்று கூடப் பார்க்காமல் எரிமலையாய் வெடித்தாள்.
“நீங்க கோடீஸ்வரனா இருக்கலாம். ஆனா இப்ப என் முன்னாடி நீங்க ஒரு அற்பப் புழு. அபலைப் பொண்ணுன்னா சேலையை மாத்தற மாதிரி ஆளை மாத்தறவன்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. வறுமையின் கொடுமையில வாழற பொண்ணோட இளமையை இழிவா நினைக்காதீங்க. நீங்க நினைக்கற மாதிரியான பொண்ணா இருந்தா நான் ஏன் இந் சமையல்காரி வேலைக்கு வரணும்? மானமும், கெளரவமும்தான் எனக்கு முக்கியம். பொண்டாட்டி, பிள்ளை, குட்டின்னு வாழற குடும்பஸ்தரான உங்களுக்கு ஏன் இவ்வளவு கேவலமான புத்தி....”
ஜானகியின் வசைமாரியினால் மனம் மாறினான் அவள் மீது கை வைத்தவன். ஜானகியின் சாட்டையடியான வார்த்தைகள் அவனது பெண் வேட்டையாடும் கேடு கெட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டின. அவன் மனதைச் சுட்டன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook