Lekha Books

A+ A A-

மிருதுளா பிரபு

mirudhula-prabhu

 

1

னம் ஒரு க்யான்வாஸா?

அப்படித்தானென்றால், கோடுகளும் வண்ணங்களும் என்ன? உணர்வுகள், அனுபவங்கள், நினைவுகள்...

புதியது பழையதை மறைக்கிறது. க்யான் வாஸில் ஒரு நிறத்தைத் தேய்க்கலாம். விளைவு? முதலில் இருந்த நிறம் மங்குகிறது, மாறுகிறது, மறைகிறது.

ஒரு அனுபவம். அதன்மீது மற்றொன்று. இப்படி ஒன்றின்மீது இன்னொன்றாக அசாதாரணங்களான அனுபவங்கள் - ஒவ்வொன்றுக்கும் அதற்கு முன்பு இருந்ததைவிட அடர்த்தியான நிறம்...

பலவும் மாறுகின்றன, மறைகின்றன.

ஒழுங்கு தவறுகிறது.

கால அளவிற்கு கட்டுப்படாமல் இருக்கிறது.

ஒரு பழைய கிண்ணத்தைப் போல என்னுடைய நினைவுகள் அதன் ஓரம் உடைந்திருக்கிறது. பளபளப்பு குறைந்திருக்கிறது. கிண்ணத்தின் உடலில் கோடுகளும் அடையாளங்களும் இருக்கின்றன. நான் மறதி உள்ளவனாகியிருக்கின்றேன்.

எனினும், அவ்வப்போது சில விஷயங்கள் ஞாபகத்தில் வருகின்றன.

நினைவில் சிறு துண்டுகள்.

நான் அவற்றைப் பொறுக்கி எடுக்கலாம். அவற்றைக் கூட்டிச் சேர்த்து ஒரு வடிவத்தை உண்டாக்க முயற்சிக்கலாம்.

ஆரம்பிக்கட்டுமா?

நான் - முகுந்தன்.

நான் எப்போது அங்கு சென்றேன்? அந்தப் பழைய அன்னை இல்லத்திற்கு எப்படிப் போனேன்? எங்கிருந்து போனேன்?

யார் திருமதி மிருதுளா பிரபு?

அழகியான மிருதுளா- வயது நாற்பதைத் தாண்டியிருந்தாலும் அம்மா - காப்பாற்றுபவள் - காதலி - காமம் கொண்டவள் - கெட்ட பெண் மந்திரவாதி.

நான் கூறுவதெல்லாம் உண்மையா?

என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. மனம் என்பது ஆழமான ஒரு ரகசியம். ஞாபகசக்தியை இழந்தவனின் மனமோ?

மிருதுளா கூறுவாள்: மனம் ஒரு ரகசிய பெட்டியைப் போல. ஏராளமான தோல்களைக் கொண்ட அபூர்வமான வெங்காயம் அது. அந்த வெங்காயத்தின் தோலை ஒவ்வொன்றாக உரித்து உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கு சீராக செயல்படும் நகங்கள் வேண்டும்.

அன்னை இல்லத்தின் மாடியிலிருந்த அறையில் இருக்கும்போது இந்த வார்த்தைகளை அவள் சொன்னாள்- ஏதோ ஒரு இரவு நேரத்தில்.

காற்றாடி மரங்கள் மட்டுமே வளர்ந்திருக்கும் பரந்த மணல் வெளியில் கதவுகளை அடைத்து சிறை வைக்கப்பட்ட வயதான கிழவியைப் போல அன்னை இல்லம் தனியாக இருந்தது.

காலைப் பொழுதுகளில், சாயங்கால வேளைகளில் வெப்பம் நிறைந்த இரவு நேரங்களில், காற்றாடிகளில் ஊசி இலைகள் ஒன்றோடொன்று உரசி முனகும். எங்கேயோ கடல் இரைந்து கொண்டிருக்கும்.

அருகில் வேறெங்கும் வீடுகள் இல்லை. பேருந்துகள் ஓடும் சாலைகள் இல்லை. ஆட்கள் ஆரவாரம் செய்துகொண்டிருக்கும் தெருக்கள் இல்லை.

எந்த தங்கத் தம்புரான் இந்த அன்னை இல்லத்தைக் கட்டினார்? எந்தப் படுக்கையறையில் இன்பம் காண்பதற்காக?

இது ஒரு ரகசிய இடமோ?

ஒரு மாலை நேரம்.

மாதம், தேதி தெரியவில்லை.

அந்தச் சாயங்கால வேளைகளிலும் காற்றாடி மரங்கள் முனகின. கடல் இரைந்து கொண்டிருந்தது. காற்றாடிகளின் முனகல்களுக்கு மத்தியில் ஒரு அழைப்பு கேட்டது.

‘‘முகு!’’

மாளிகையின் வாசலில் நின்றிருந்த நான் அந்த அழைப்பைக் கேட்டேன். திரும்பிப் பார்த்தேன்.

மிருதுளா பிரபு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.

வாசலிலிருந்து நான் உள்ளே வந்தேன். அவளுக்கு எதிரிலிருந்த வேறொரு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவளைப் பார்க்காமலேயே நான் உட்கார்ந்திருந்தேன். அதாவது - அவளுடைய முகத்தை நான் பார்க்கவில்லை. பார்க்கத் துணியவில்லை என்பதுதான் அதற்கு அர்த்தம்.

எங்களின் நாற்காலிகளுக்கு மத்தியில் ஒரு பழைய மேஜை இருந்தது. கலை வேலைப்பாடுகள் இருந்த பழைய மேஜை, ஈட்டி மரம், யானைக் கொம்பு- இரண்டையும் கலை நயத்துடன் கலந்து செய்யப்பட்டிருந்த மேஜை. அதன் கால்களையே நான் பார்த்தேன். மேஜையின் மேற்பகுதியில் தந்தத்தாலான தாமரைகள் இருந்தன. மேஜையின் கால்கள் பாம்புகளாக இருந்தன. தந்தத்தாலான கண்களும் தந்தத்தாலான புள்ளிகளும் கொண்ட புணர்ந்து கொண்டிருக்கும் பாம்புகள். மேஜையின் கால்களைப் பார்த்தபோது திருமதி. மிருதுளா பிரபுவின் கறுப்புநிற பட்டுப் புடவையின் மடிப்புகளையும் தங்க நிற ஓரப்பகுதியையும் நான் பார்த்தேன். அது மட்டுமல்ல- கறுப்பு நிற வெல்வெட் செருப்புகளை அணிந்திருந்த வெளுத்த பாதங்களையும்தான்.

வெளுத்த விரல்கள் அசைந்து கொண்டிருந்தன.

அப்போது சாயம் பூசப்பட்ட நகங்கள் மின்னி மறைந்தன - வளர இருக்கும் பாம்புக் குட்டிகளின் படத்தைப் போல.

‘‘முகு!’’ - மீண்டும் மிருதுளா அழைத்தாள்.

நான் தலையை உயர்த்தினேன். ஆனால், மிருதுளாவின் கண்களைப் பார்க்க என்னால் முடியவில்லை. பார்த்தது அவற்றுக்கு மேலே இருந்த சுவரைத்தான்.

சுவரிலிருந்த ஓவியம் இப்படியும் அப்படியுமாக ஆடியது.

பச்சையும் கறுப்பும் காவியும் கலந்த தேவகன்னியின் ஓவியம். மீதமிருந்த வெளிச்சம் மிக வேகமாகப் பின்வாங்கியது. அதனால் அப்படித் தோன்றியிருக்கலாம்- தேவகன்னிகளின் மார்பகங்கள் குலுங்கின.

யார் இந்த சுவர் ஓவியங்களை வரைந்தது?

இந்த அளவிற்குப் பெரிய மார்பகங்களை அந்த மனிதன் எதற்காக வரைய வேண்டும்?

தங்கத் தம்புரானின் படுக்கையறைத் தோழி ஓவியனின் மாடலாக இருந்திருப்பாளோ?

தூரத்திலிருந்த சாளரத்தை நோக்கி என் கண்கள் சென்றன. சாளரம் வழியாக கண்ட அலரிப்பூக்கள் இப்போது சாம்பல் நிறத்தில் காட்சியளித்தன. இறுதி சூரிய கிரகணங்கள் அவற்றில் சமாதி அடைந்து கொண்டிருந்தன.

‘‘முகு!’’ - மீண்டும் மிருதுளா.

நான் தரையைப் பார்த்தேன்.

‘‘என்னைப் பார்க்க, என் கண்களைச் சந்திக்க, உனக்குப் பயமா இருக்கா என்ன?’’

மிருதுளா கேட்டாள்.

‘‘இல்லம்மா...’’

‘‘எனக்கு ஒரு பேர் இருக்கு முகு. என் பேரைச் சொல்லிக் கூப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும்.’’

‘‘நான் பேரைச் சொல்லி கூப்பிட மாட்டேன் அம்மா’’

‘‘உன் அம்மாவா இருக்குற அளவுக்கு எனக்கு இன்னும் வயசு ஆகல’’- மிருதுளாவின் வார்த்தைகளில் வெறுப்பு கலந்திருந்தது.

அப்போது கூடத்திற்கு அப்பாலிருந்த தொலைபேசி மணி ஒலித்தது. மிருதுளா பிரபு எழுந்து நின்றாள். கூடத்தை நோக்கி நடந்தாள். கறுப்பு நிற பட்டுப் புடவையின் ஓரம் கால்களில் பட்டு ஓசை உண்டானது. அந்த ஓசை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சீரான இசையைப் போல எங்கும் பரவிக் கேட்டது.

இருட்டு பரவியது. இருட்டுக்கு உயிர் இருக்கிறதோ? என்னை மூச்சு விடாமற் செய்வதற்காக அது தன் கூர்மையான விரல்களை நீட்டுகின்றதோ? எழுந்து நிற்க வேண்டும். விளக்கின் இயக்கியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், எழ முடியவில்லை. இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு சக்தி என்னை நாற்காலியுடன் சேர்த்துக் கட்டிப் போட்டிருக்கிறது.

திடீரென்று நினைத்தேன்- இன்று வெள்ளிக்கிழமை.

வெள்ளி - செவ்வாய் - வெள்ளி.

இந்த நாட்கள் ஆபத்து நிறைந்த நாட்களோ?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel