
சிறுவன் அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. அன்று ஆற்றின் கரையில் தனக்குப் பணம் தந்த நிமிடத்திலிருந்து ரவீந்திரன் மீது அவனுக்கும் ஒரு தனிப்பட்ட மரியாதையும் அன்பும் பிறந்து விட்டிருந்தன. அதனால் அவனுக்குப் பதைபதைப்பு உண்டாகவில்லை. ஆனால், தன்னுடைய தந்தையும் தாயும் அங்கே இல்லாமலிருந்தது அவனைக் குழப்பமடையச் செய்தது.
"என் அப்பாவும் அம்மாவும் எங்கே போனாங்க?"- ராகவன் நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு கேட்டான்.
"இதோ இங்கே இருக்கோமே நாங்க ரெண்டு பேரும்! நான் உன் அப்பா. இவங்க உன் அம்மா."
"இல்ல இல்ல... என் அப்பாவையும் அம்மாவையும் நான் பார்க்கணும்."
"உனக்கு என்ன வேணும்? எல்லாம் தர்றேன். பிறகு எதுக்கு அவங்களைப் பார்க்கணும்?"-ரவீந்திரன் தன்-னுடைய பாக்கெட்டிற்குள் வைத்திருந்த வைரம் பதிந்த ஒரு சிகரெட் பெட்டியை எடுத்து ராகவனின் கையில் கொடுத்தான்.
ராகவனின் முகம் மலர்ந்தது. "இதை எனக்குத் தருவீங்களா?"- அவன் கேட்டான்.
ரவீந்திரன் சிரித்துக் கொண்டே அவனைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் சொன்னான்: "இதையா? இது என்ன... எது வேணும்னாலும் எடுத்துக்கோ. இதோ... இதுவும் உனக்குத்தான். (ரவீந்திரன் தன்னுடைய வைர மோதிரத்தைக் கழற்றி அவனிடம் தந்தான்) இதுவும்... இதுவும்.. இதுவும்...(ரவீந்திரன் தன்னுடைய தங்கத்தால் ஆன கைக்கடிகாரம், வைரத்தால் ஆன பொத்தான்கள், ஃபவுண்டன் பேனா ஆகியவற்றையும் அவனிடம் தந்தான்).
ராகவன் சந்தோஷத்தால் சிரித்தான். "எனக்கு விளையாட ஒரு பந்து வாங்கித் தருவீங்கா£?"- அவன் கேட்டான்.
ரவீந்திரன் சற்று மிடுக்கான குரலில் சொன்னான்: "எனக்கு ஒரு பந்து வாங்கித்தாங்க அப்பான்னு சொல்லு. அப்படின்னா, நான் ஒரு தங்கத்தால் ஆன பந்தையே உனக்கு வாங்கித் தருவேன்."
ராகவன் சற்றுத் தயங்கினான். பிறகு, "அப்பா, எனக்கு ஒரு பந்து வாங்கித் தாங்க" என்று சர்வசாதாரணமான குரலில் சொன்னான்.
ரவீந்திரனின் இதயத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டானது. 'அப்பா' என்ற இனிமையான அந்த அழைப்பு! தான் ஒரு அப்பா ஆன முழுமையான உணர்வு! ராகவனின் சதைப்பிடிப்பான கன்னத்தில் இடைவிடாமல் முத்தங்கள் பதித்த ரவீந்திரன் சொன்னான்: "என் செல்ல மகனுக்கு இப்பவே ஒரு தங்கத்தால் ஆன பந்துக்கு 'ஆர்டர்' பண்ணப் போறேன்."
"என் அம்மாவுக்கு ஒரு புடவையும்..."-ராகவன் தாழ்வான குரலில் கேட்டான்.
ரவீந்திரனுக்குச் சிரிப்பும் வருத்தமும் ஒரே நேரத்தில் உண்டானது. அவன் பத்மினியின் முகத்தைப் பார்த்தான்.
அவள் பல விஷயங்களையும் சிந்தித்தவாறு சற்று ஒளி குறைந்த முகத்துடன் அங்கு எதிலும் கவனம் செலுத்தாமல், எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரவீந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். இந்தப் புதிய சந்தோஷத்தின் சூழ்நிலையையும் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் மன வருத்தங்களையும் பொறாமைப் போட்டிகளையும் அவன் நினைக்காமலில்லை. எனினும், எல்லாவற்றையும் தன்னுடைய புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலமும் பொறுமையாலும் சரி பண்ணிவிடலாம் என்று அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
இடியும் மழையும் தொடர்ந்து கொண்டிருந்தன. சூறாவளி உயர்ந்து நிற்கும் மரங்களின் உச்சியை மோதி அவற்றைப் பேயாட்டம் ஆடச் செய்தது.
இக்கோரன் வீட்டின் வாசலிலிருந்த திண்ணையில் படுத்திருந்தான். எப்படிப்பட்ட வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் அவன் படுத்திருக்கும் இடம் அதுதான்.
இரவு வெகு நேரமாகியும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. தாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று நுழைந்த எதிர்பாராத சம்பவங்களை நினைத்தவாறு அவன் படுத்திருந்தான். தான் ராகவனை அவனுக்குக் கொடுத்ததன் மூலம் மாளுவிற்குத் துரோகம் பண்ணிவிட்டோமா என்ன? பையன் உண்மையாகப் பார்க்கப் போனால் அவனுக்குச் சொந்தமானவனாக இருக்க, தனக்கு அவன் மீது என்ன உரிமை இருக்கிறது? தான் அவளையும் அன்று வயிற்றுக்குள்ளிருந்த இந்தக் குழந்தையையும் காப்பாற்றியதால், குழந்தையை அந்த மனிதனுக்குக் கொடுப்பதில், அவளைவிட உரிமை உள்ளது தனக்குத்தானே? ஆனால், தான் எதற்கு அந்த ரகசியத்தை அந்த இடத்தில் வெளிப்படுத்த வேண்டும்? தன்னை தற்சமயம் துரோகம் செய்தது ஒரு கிராமத்து மனிதனின் மனசுத்தமும் இதயத்தில் கொண்ட இரக்கமும்தான் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
திடீரென்று அவன் இடி, மின்னலின் வெளிச்சத்தில் ஒரு உருவம் படியைக் கடந்து மறைவதைப் பார்த்தான். அவனுக்கு அந்த உருவம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய மனதிலும் ஒரு வெளிச்சம் தோன்றியது. கண் இமைக்கும் நேரத்தில் அவன் கதவுக்கு அருகில் போனான். அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. அவன் வீட்டின் வடக்குப் பக்கம் இருந்த கதவைத் தேடி ஓடினான். அது வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே புகுந்தான். மாளு படுத்திருந்த அறையில் சென்று பார்த்தான். அங்கு அவள் இல்லை. அவள் படுத்திருந்த பாய் ஒரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவன் வெளியே ஓடி, படியைக் கடந்து, கீழே இறங்கி, முன்பக்கம் ஓடிக் கொண்டிருந்த சேறு நிறைந்த பாதை வழியே ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.
சிறிது நேரத்தில் அவன் அந்தப் பழைய பகவதி கோவிலுக்கு அருகில் வந்தான். அப்போது கண்களையே குருடாக்கும் அளவிற்கு மின்னல் அடித்தது. அதன் வெளிச்சத்தில் ஒரு வெள்ளை உருவம், இரைச்சல் உண்டாக்கி ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் குதிப்பதை அவன் பார்த்தான். ஒரு வினாடி! என்ன செய்வதென்று தெரியாமல் அவன் செயலற்று நின்று விட்டான். அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அந்த பகவதி கோவில் திண்ணை மீது ஏறி நின்று அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.
திரு.பர்ட்டன் பதைபதைப்புடன் எழுதினார்.
முக்கம்,
ஏப்ரல் 17
அன்புள்ள மிஸ்டர். ரவீந்திரன்,
கடைசி கடைசியாக வருத்தப்படக் கூடியதும், யாரும் நினைத்துப் பார்க்க முடியாததுமான ஒரு சம்பவத்தை உங்களுக்குத் தெரிவிக்கக் கூடிய துரதிர்ஷ்டம் எனக்கு உண்டானதற்காக மனப்பூர்வமாக நான் வருத்தப்படுகிறேன். இக்கோரனும் அவனுடைய மனைவி மாளுவும் இறந்துவிட்டார்கள். உங்களால் அதை நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால், என்ன செய்வது! அது நடந்து முடிந்து விட்டது. அவர்களுடைய உடல்கள் இங்கிருந்து இரண்டு மைல்கள் தாண்டி கீழே ஒரு இடத்தில் ஒதுங்கிக் கிடந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா, இல்லாவிட்டால் ஒரு ஆளைக் காப்பாற்ற இன்னொரு ஆள் முயன்றபோது அந்த ஆளும் விபத்தில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உண்டாகிவிட்டதா என்பது தெரியவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook