
அதற்கு முன்பு இக்கோரன் அவளுக்கு வஞ்சகம் செய்துவிட்டான். சொல்லப்போனால் அவன் அவளைக் காப்பாற்றவல்லவா செய்திருக்கிறான்? எது எப்படியோ பன்னிரண்டு வருடங்களும் 'அந்த பகவதி கோவிலும் அவர்கள் இரண்டு பேரும்' யாருக்கும் தெரியாமல் அடக்கி வைத்த ரகசியம் அன்று வெளியே வந்துவிட்டது. பன்னிரண்டு வருடங்கள் அவர்கள் உலகத்தில் உள்ளவர்களை ஏமாற்றி வாழ்ந்தார்கள். இப்போது அந்தப் பழைய ரகசியம் வெளியே வந்துவிட்டது. மலையளவு தங்கத்தைக் கொண்டு மூடினாலும் அதன் வாசனையை மூடி வைக்க முடியாது. போதாததற்குத் தன்னுடைய செல்ல மகனும் போய்விட்டான். எங்கே? அவனுடைய தந்தை இருக்குமிடத்திற்கு? அவனுடைய தந்தை! அவளுக்கு ஒரு உள்ளக் கொதிப்பே உண்டானது. பன்னிரண்டு வருடங்கள் வெறுத்தும் மறந்தும் இருந்தது ஒரே ஒரு நொடியில் மறைந்து போய்விட்டது. அந்தக் காதல்! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த அந்தக் காதல்! பன்னிரண்டு வருடங்கள் மண்ணுக்குக் கீழே போட்டு மூடிய முந்திரிச்சாறின் இனிய சுவையுடன் அது அவளை மீண்டும் தழுவ வருகிறதோ? தான் குழி தோண்டிப் புதைத்த நினைவுகள் அனைத்தும் முளைத்து தளிரிட்டு வளர்ந்து அவளை மீண்டும் எதற்காக வளைக்க வேண்டும்? அவளுக்குப் பணம் கிடைக்கப் போகிறதாம். அதை வைத்து அவள் என்ன செய்யப் போகிறாள்? இக்கோரன் ராகவனை அவனுக்குக் கொடுத்தவுடன், ராகவனுடன் சேர்த்து தன்னையும் கொடுத்துவிட்டது போலவே அவளுக்குத் தோன்றியது. அவன் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொஞ்சினான். அவனுக்கு அவள் எப்போதோ மன்னிப்புக் கொடுத்துவிட்டாள். ஆனால், அவளிடம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிப்படுத்திய அந்தக் காதலை மீண்டும் ஒரு கருகுமணி அளவாவது வெளிப்படுத்த அவள் விடுவாளா? நடக்காத விஷயம். அவள் அவனுக்கு அருகில் மனைவி கோலத்தில் நின்றிருந்த பத்மினியை நினைத்துப் பார்த்தாள்.
'ச்சே... நான் ஒரு வஞ்சகி. நீர்ல சிக்கின ஒரு படகைப் போல என் மனசு எங்கெங்கோ போய்க்கிட்டு இருக்கு. ஆனா, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்...'
முன்னறையில் ஒரு காலடிச் சத்தம் கேட்டு அவள் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். இக்கோரன் அறைக்குள் வந்து கொண்டிருந்தான்.
"என்ன இன்னும் விளக்கு பத்த வைக்கல?"
அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. இக்கோரனுடன் வாழ்ந்த இல்லற வாழ்க்கையைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் அவளுடைய உயிரையும், மானத்தையும் பன்னிரண்டு வருட வாழ்க்கையையும் காப்பாற்றியிருக்கிறான். அந்த இல்லற வாழ்க்கையில் அவளுக்குக் குறைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடந்ததில்லை. ஆனால், அவனுடன் அவள் வாழ்ந்த அந்த இரண்டு மாத வாழ்க்கை!அதில் பத்தில் ஒரு பங்கு அளவிற்கே கூடச் சந்தோஷம்- பெண்கள் மனதிற்குள் விரும்பக்கூடிய கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்- இந்தப் பன்னிரண்டு வருடங்களில் அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இக்கோரனைப் பார்க்கும் போதும் நினைக்கும் போதும் ஒரு பக்தியும் மரியாதையும் அவளுடைய இதயத்தில் தோன்றும். தீர்க்கவே முடியாத ஒரு நன்றிக்கடன் அவன் மீது அவளுக்கு இருக்கிறது. ஆனால், ரவீந்திரனைப் பற்றி நினைக்கும் போது அவள் முழுமையாக மாறிப் போகிறாள். தான் இக்கோரனுக்குத் துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் அவளை வேதனைப்படுத்தியது.
வெளியே வானத்தில் கருமேகங்கள் நிறைந்தன. மழைக்காலத்தின் முதல் மழை. அதோடு சேர்ந்து இடி இடித்தது. இக்கோரன் அவளுக்கு அருகில் வந்தான். நீண்ட நேரம் நின்ற ஒரு மின்னல் வெட்டின் வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை நன்கு பார்க்க முடிந்தது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இக்கோரன் மாளுவின் தோளில் கையை வைத்துக் கொண்டு கேட்டான்: "மாளு, ஏன் அழறே?"
சிறிது நேரம் அவள் அமைதியாக இருந்தாள். பிறகு தழுதழுக்கும் குரலில் அவள் சொன்னாள்: "பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னாடி நீங்க என் உயிரைக் காப்பாத்துனீங்க. இப்போ நீங்க எனக்குத் துரோகமும் பண்ணிட்டிங்க. இனி ஆளுங்களோட முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? இவ்வளவு காலமா ஊர் மக்களை ஏமாற்றின குற்றத்தையும் அவமானத்தையும் நாளைக்கு நாம சந்திச்சு ஆகணும். என் செல்ல மகனை நான் இழந்துட்டேன். நீங்க பணத்துக்காக வித்தாச்சு. அதோட சேர்த்து என்னையும் வித்திருக்கலாமே!"
சுத்தமான இதயத்தைக் கொண்ட இக்கோரன்அவள் மீது கொண்ட இரக்கத்தால் குலுங்கிக் குலுங்கி அழுதான். "மாளு, நான் இப்படியெல்லாம் நினைக்கல. அந்த ஆளோட மோசமான நிலைமையைப் பார்த்து என் இதயம் இளகிடுச்சு. நான் அப்படிச் சொல்லிட்டேன். அதுக்குப் பிறகுதான் நான் உன்னைப் பற்றி நினைச்சேன். கடவுளே, பணத்துக்காகவா நான் இதைச் செய்தேன்? மாளு, நீ அதை மட்டும் சொல்லாதே."
இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
மழை பெரிதாகப் பெய்து கொண்டிருந்தது. கடுமையான இடியும் காற்றும் சேர்ந்து சூழ்நிலையை பயங்கரமாக்கின.
"ஆமா.."- அவள் தொடர்ந்தாள்: "ராகவனை வித்தப்போ என்னையும் வித்தது மாதிரிதான். ஆனா, இனிமேல் நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க பணக்காரர் ஆயிட்டீங்க. தோட்டத்துக்குச் சொந்தக்காரர் ஆயிட்டீங்க. சந்தோஷமா வாழுங்க. எனக்கு முன்னால ஒரே ஒரு வழிதான் இருக்கு..."
இக்கோரன் ஆர்வத்துடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.
அவள் இரைச்சல் எழுப்பியவாறு ஓடிக் கொண்டிருந்த இருவழிஞ்ஞி ஆற்றைச் சுட்டிக் காட்டிக் கொண்டு சொன்னாள்: "அந்த ஆறு..."
இக்கோரன் அவளுடைய கையைப் பிடித்து அழுத்தியவாறு கேட்டான்: "நீ முடிவு பண்ணிட்டியா?"
"முடிவு பண்ணிட்டேன்."
"சரி.. அப்படின்னா நானும் வர்றேன். நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே போவோம்."
திரு.பர்ட்டனும் இக்கோரனும் மாளுவும் போன பிறகு ரவீந்திரன் பத்மினியை அருகில் அழைத்து ராகவனைத் தொட்டுக் கொண்டு சொன்னான்: "பத்மினி, இவனை எனக்கு முதல்ல தந்ததே நீதான். இனிமேல் இவன் நம்மளோட பிள்ளை..."
பத்மினியின் முகத்தில் சந்தோஷம் உண்டாகவில்லை. எனினும் அவளுக்கு ராகவன் மீது உள் மனதில் ஒரு பாசம் பிறந்திருந்தது. அன்று ஆற்றின் கரையில் முதல் தடவையாக அவனைப் பார்த்த போது அவளிடம் உண்டான அன்பையும் கருணையையும் சம்பவங்களின் சற்றும் எதிர்பாராத இந்தப் பரிணாம வேளையிலும் அவளால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
ராகவனை அணைத்துக் கொண்டு அவன் சொன்னான்: "பாரு இவங்க உன் அம்மா..."
ராகவன் எதுவும் புரியாமல் ரவீந்திரனின் முகத்தையே பார்த்தான்.
"நான் தான் உன்னோட அப்பா. என்னை அப்பான்னு கூப்பிடுறதுல உனக்குச் சம்மதம்தானே?"- ரவீந்திரன் அவனுடைய நெற்றியில் முத்தமிட்டவாறு கேட்டான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook