Lekha Books

A+ A A-

நான்தான் தவறு செய்தவன் - Page 8

naandhan thavaru seidhavan

“தெற்குப் பக்கம் காய்ந்துபோன இலைகளைப் பெருக்கி போட்டிருக்கோம்ல.... அதுக்குள்ளே இதைக் கொண்டுபோய் வைப்போம்”

“அதுதான் சரி.”

“இருந்தாலும் இதைக் கொஞ்சம் அவிழ்த்துப் பார்த்துட்டு வைக்கலாமா?” - சுமதி கேட்டாள்.

“அப்படின்னா சீக்கிரமா அவிழ்த்துப் பாருங்க.”

சுமதி சாக்கு மூட்டையை அவிழ்த்தாள். அந்த மூட்டையில் அரிசியும் மளிகைச் சாமான்களும் இருந்தன. சுமதி சொன்னாள்:

“இதுல இருந்து கொஞ்சம் எடுத்துட்டு, மூட்டையைக் கட்டி வச்சிடுவோம்.”

“அப்படின்னா சீக்கிரம் நடக்கட்டும்... யாராவது பார்த்துட்டாங்கன்னா...”

சுமதியும் ராதாம்மாவும் சேர்ந்து கொஞ்சம் அரிசியையும் மற்ற பொருட்களையும் ஒரு முறத்தில் எடுத்தார்கள். அவர்கள் திரும்பவும் மூட்டையைக் கட்டினார்கள். சங்கரன் நாயர் சாக்கு மூட்டையை எடுத்துக்கொண்டு தெற்குப் பக்கமாகச் சென்றார்.

பொழுது புலரும் நேரத்தில், ராதாம்மா பங்கனையும் ராஜனையும் எழுப்பினாள். அவர்கள் எல்லோரும் கஞ்சி குடித்தார்கள்.

மறுநாள் சாயங்காலம் ஆனபோது, ராமுவைப் போலீஸ்காரர்கள் பிடித்துவிட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் கேட்டார்கள்.

நாட்கள் அதற்குப் பிறகும் பல கடந்தன. காய்ந்த இலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டையில் இருந்த அரிசியும் பொருட்களும் பன்னிரெண்டு நாட்களுக்குச் சரியாக இருந்தன.

ஒரு நாள் சாயங்காலம் ராதாம்மா வாசலில் நின்றிருந்தாள். கிருஷ்ணன் நாயர் ஒற்றையடிப் பாதையில் நின்றுகொண்டு மெதுவான குரலில் கேட்டான்:

“நான் அங்கே வரட்டுமா?”

ராதாம்மா பதில் எதுவும் கூறவில்லை. அவள் தலையைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள்.

“அங்கே மாமா இருக்காரா?”

“இல்ல...”

“எங்கே போயிருக்காரு?”

“தெரியல...”

“எப்ப வருவாரு?”

“தெரியாது...”

அவன் வாசலுக்கு வந்தான். அவன் மெதுவான குரலில் கேட்டான்:

“ராதாம்மா... உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”

“ம்...”

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதைப் பற்றி உனக்கு சம்மதம்தானா?”

“எனக்கு சம்மதம்தான். ஆனா, அப்பா சம்மதிக்க மாட்டாரு.”

“மாமாவோட சம்மதம் இல்லாமலே நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நான் கேக்குறேன். உன்னை நான் காப்பாத்துறேன்.”

“அது... அது நடக்காது. அப்பா சம்மதிக்காம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”

“மாமா சம்மதிக்காததற்குக் காரணம் என்ன?”

“காரணமா? காரணம் தெரியாதா?”

“எனக்குத் தெரியாது.”

“எங்கம்மா ஒன்பது பிள்ளைகளைப் பெத்தாங்க. அதுல இரண்டு பேர் செத்துப் போயிட்டாங்க. மீதி நாங்க ஏழு பேர். மூத்த அண்ணனுக்கு அஞ்சு பிள்ளைங்க. அக்காவுக்கு நாலு பிள்ளைங்க. அஞ்சாவது பிள்ளை வயித்துல இருக்கு. இனிமேல் நானும் சுமதியும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு அப்பா சொல்றாரு.”

“பிள்ளைகள் உண்டாயிடுவாங்கன்றதுக்காக பயந்து போயா கல்யாணம் பண்ண வேண்டாம்னு அவர் சொல்றாரு?”

“ஆமா...”

“பிள்ளை பெறாத பெண்களும் இருக்காங்களே!”

“நான் பிள்ளை பெறாத பெண்ணா?”

“எனக்குப் பிள்ளைகள் பிறந்தால், அவர்களுக்கான செலவுக்குக் கொடுக்க என்னால முடியும்.”

“அதை ஏன் என்கிட்ட சொல்லணும்?”

“பிறகு யார்கிட்ட சொல்லணும்?”

“அப்பாக்கிட்ட சொல்லணும்.”

“புலியைப் போல கடிச்சு கிழிக்கிறதுக்குத் தயாரா நிக்கிற ஆள்கிட்ட நான் எப்படிச் சொல்வேன்?”

“எப்பவும் பட்டினியையும் கஷ்டங்களையும் மட்டுமே அனுபவித்துக்கொண்டிருந்தால்,  மனிதர்கள் புலியா மாறிடுவாங்களோ?”

“அப்படின்னா...”

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.”

“அது எனக்குத் தெரியும். இந்த வாசல்படியை மிதிக்கக் கூடாதுன்னு மாமா சொன்ன பிறகும், நான் வர்றதுக்குக் காரணமே அதுதான்...”

“யாருடா? என் மகள்கிட்ட கொஞ்சிப் பேசுறதுக்கு வந்திருக்கவன் யாருடா?”  என்று உரத்த குரலில் கத்தியவாறு அப்போது வேகமாக வந்தார் சங்கரன் நாயர்.

கிருஷ்ணன் நாயர் பாதையில் இறங்கி ஓடினான்.

“அவன் ஏன்டி இங்கே வந்தான்?”

“ராதாம்மா பதில் எதுவும் கூறவில்லை.” சங்கரன் நாயர் கவலை கலந்த குரலில் சொன்னார்:

“மகளே, கஷ்டங்களையும், துன்பங்களையும் நாமே கூப்பிட்டு வரவழைச்சிக்கக் கூடாது. அண்ணனும் அக்காவும் கஷ்டப்படுறதை மகளே... நீ பார்க்கறேல்ல? அவங்களை மாதிரி நீயும் ஆகணுமா?”

“நான் அவங்களை மாதிரி ஆகமாட்டேன் அப்பா.”

“அப்படின்னா... அவன் இந்தப் படியில் கால் வைக்கிறப்போ, இங்கேயிருந்து அவனை ஏன் நீ போகச் சொல்லல?”

ராதாம்மா தொண்டை கம்ம, சொன்னாள்:

“அதை நான் சொல்லமாட்டேன் அப்பா. சின்னப் பிள்ளையா இருக்குறப்பல இருந்து பாசமா அவர்கூட பழகியிருக்கேன். இங்கேயிருந்து போங்கன்னு நான் சொல்லமாட்டேன்.”

“மகளே, நீ கஷ்டப்படுறதைப் பார்க்க முடியாதுன்றதுக்காகத்தான் நான் சொல்றேன்.”

“இப்பவும் கஷ்டம் இருக்கத்தானே செய்யுது, அப்பா?”

“இப்பவும் கஷ்டம்தான்... மேலும் மேலும் கஷ்டங்களைக் கூப்பிட்டு வரவழைச்சிக்கணுமான்னுதான் நான் கேக்குறேன்.”

“நான் கூப்பிட்டு வரவழைச்சிக்க மாட்டேன் அப்பா. அதே நேரத்துல, இங்கே வந்தால் வெளியே போங்கன்னு நான் சொல்லமாட்டேன். என்கிட்ட வந்து பேசினா, நானும் பேசுவேன்.”

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு சங்கரன் நாயர் சொன்னார்.

“ம்... ஆணாக இருந்தால் ஒரு பெண் வேணும்... பெண்ணாக இருந்தால் ஒரு ஆண் வேணும். தடுத்தால் கேட்க மாட்டாங்க!”

அதற்குப் பிறகும் பல மாதங்கள் கடந்தோடின. ஒரு நாள் பொழுது விடியும் நேரத்தில், சங்கரன் நாயரின் வீட்டில் ஒரு பூகம்பம் உண்டானது. அவர் சட்டி, பானைகளை எடுத்து வீசி எறிந்தார். அவர் உரத்த குரலில் கத்தினார்:

“கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அவளை இன்னைக்கே நான் கொல்லுவேன்.”

அவர் வேளியே ஓடினார்.

வழியில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்துக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கும். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள். வெள்ளை நிறத்தில் புடவையும் ப்ளவுஸும் அணிந்திருந்தாள். இடது கையில் கடிகாரம் கட்டியிருந்தாள். கையில் ஒரு வேனிட்டி பேக் இருந்தது. வலது கையில் பெண்களுக்கான குடை இருந்தது. அவள் மெதுவாக வீட்டை நோக்கி நடந்து வந்தாள்.

திண்ணையில் தாடையில் கையை வைத்துக்கொண்டு சோகத்துடன் உட்கார்ந்திருந்த ராதாம்மா எழுந்து நின்றாள். அவள் அங்கு வந்து நின்ற பெண்ணையே பார்த்தவாறு நின்றாள். அந்தப் பெண் கேட்டாள்:

“இங்கே என்ன சண்டை?”

“சண்டை எதுவும் இல்ல. என் தங்கையைக் காணோம்.”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel