
ஆனால், உலகம் ஹூஸூர்சிங்கை விட விரும்பவில்லை. மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும் ஹூஸூர்சிங்கிற்கு ஆத்ம பார்வை கிடைத்தது. அதன் பேரொளியில் அவன் பார்க்கத் தொடங்கினான். பிறப்பு, மரணம் ... அதற்கு நடுவில், ராணு மருமகள் - திருமண நாளன்று, மருதாணி அணிந்த வெண்மையான கைகளைக் கூப்பி, பர்தாவிற்குப் பின்னால் குனிந்த தலையுடன் மாமனாரிடம் வேண்டுகிறாள்: “தந்தையே! நீங்க உங்களின் மகனை எனக்குத் தாங்க. அதற்குப் பதிலா நான் உங்களுக்குப் பத்து மகன்களைத் தருவேன். அதே உடல் பலமும், வடிவமும் கொண்ட மகன்கள்...”
அப்போது தந்தை கூறுகிறார்: “சரி... மகளே! என்னோட இந்த மகன்...”
பிறகு ஹூஸூர்சிங் கண்களைத் துடைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
ஹூஸூர்சிங் பாசத்துடன் ராணுவின் தலையை வருடிக் கொண்டிருந்தான். இன்று அவளுக்கு இல்லாமல் போன சொந்த தந்தையின் இடத்தில் கடவுளின் அருளால் ஒரு தந்தை கிடைத்திருக்கிறான். அதனால் அவள் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் தந்தையின் மார்பில் தலையை மோதி அழுதுகொண்டு சொன்னாள்:
“இல்ல... இல்ல... அது முடியாத விஷயம். அய்யோ! என் மகளே! நான் செத்துப்போயிடுவேன். அப்பா...!”
அந்தச் சமயத்தில் ‘பரிகார’த்திற்காக வந்திருந்த புனிதப் பயணிகளின் கூட்டம் முடிந்து போயிருந்தது. மக்கள் மூச்சை அடக்கிக்கொண்டு ஒரே ஒரு முடிவைத் தெரிந்துகொள்ள காத்திருந்தார்கள். ராணு சம்மதம் தந்தால் உலகம் இருக்கும் - இல்லாவிட்டால் பூகம்பத்தில் அழியும் என்று தோன்றும் வண்ணம் - மிகப் பெரிய பூகம்பம் - அதில் மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், பூமியும், ஆகாயமும் அழிந்து போகும்! அந்த நேரத்தில் ஒரு ‘நுஹ்’ஹூம், பூகம்பத்துடன் தொடர்புள்ள முஸ்லீம் தீர்க்கதரிசியும் இருக்கப்போவதில்லை. கடவுளின் பக்கம் ஒரு ஆத்மாவும் - சத்தத்திற்கு ஓங்காரமும், சூரியனுக்கு பிரகாசமும் இருக்காது. அதனால் பஞ்சாயத்தின் ஐந்து பரமேஸ்வரன் மார்கள் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பிரார்த்தனையில் கள்ளங்கபடமற்ற மங்கலும் சேர்ந்துகொண்டான்.
ராணுவிற்கு ஆறுதல் கூறும் வகையில் ஹூஸூர்சிங் சொன்னாள்: “மகளே! இது எல்லாம் எதற்கு? எதற்காக இவையெல்லாம் நடக்குதுன்னு எனக்கும், உனக்கும், இந்த மக்களுக்கும் தெரியாது. அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும் கூடாது.” சுற்றிலும் அமைதி... அங்கு மூச்சுவிடக் கூட இடமில்லை...
ராணு திரும்பிப் பார்த்தாள்: ‘படி’யின் சோகம் படிந்த முகம் அவளுடைய பார்வையில் பட்டது. படி வேதனை நிறைந்த குரலில் சொன்னாள்: “அம்மா! நீங்க என்ன செய்றீங்க? நீங்க சம்மதம் தரலைன்னா, நான் வாழ்க்கை முழுவதும் திருமணமே செய்யாம இருக்க வேண்டியதுதான்... பாலைவனத்தைப்போல!”
ராணு மாமனாரின் தோளிலிருந்து தன் தலையை உயர்த்தினாள்: “சரி, அப்பா! உங்க விருப்பம்போல நடக்கட்டும்!”
திடீரென்று திருமணப் பாடல் ஆரம்பமானது. மக்கள் ஆவேசத்துடன் பாடவும் நடனமாடவும் ஆரம்பித்தார்கள். ராணு கோவிலையே பார்த்தாள். தேவி புன்னகைத்தாள். கோவிலின் தங்கத் தாழிகைக் குடத்தின் பிரகாசம் ராணுவின் முகத்தில் பிரதிபலித்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு இருட்டு பரவியது. இப்போதும் புரிந்து கொள்ள முடியாத ஏதோ பிரகாசம் ராணுவின் முகத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் கோவிலில் மணிகள் முழங்கின. பள்ளிவாசலில் ‘வாங்கு’ ஒலித்தது. இருட்டில் நாழிகைக் குடத்தின் இடத்தில் யாருடைய கையோ தெரிந்தது. பயந்துபோன ராணு கோவிலின் நாழிகைக் குடத்திற்கு நேராகத் தன் கைகளை உயர்த்திக் கொண்டு சொன்னாள்: “ஹே! தேவி! அம்பிகை!”
அப்போது வித்யா பூரண்தேயியைக் கிண்டல் பண்ணினாள்: “ஏய், பூரூ! எல்லாரும் வந்துட்டாங்க. ஆனா, உங்க தர்மதாசன் வரலையே!”
பூரண்தேயி அழுதுகொண்டே மகனுடைய சட்டவிரோதமான தந்தைக்காகவும் தன்னுடைய நரை விழுந்த கணவனுக்காகவும் கண்ணீர் விட்டாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook