
மற்ற கோடீஸ்வரர்கள் தலா ஒரு பள்ளி வாசலைத்தான் கட்டியிருக்கிறார்கள். அதோடு நிற்காமல் அவர் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக சமுதாயத்திற்கு ஒரு இடத்தை இலவசமாகவே தந்திருக்கிறார். அங்கு ஒரு கட்டிடம் கட்டி வாடகைக்கு அவர் விட்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஏராளமான பணம் வாடகையாகக் கிடைத்துக் கொண்டிருக்கும். முஸ்லீம் சமுதாயத்திற்காக ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பணத்தைத்தான் அவர் இழந்த ஒவ்வொரு வருடமம் எவ்வளவு பணத்தைத்தான் அவர் இழந்து கொண்டிருப்பார்!
“இதுக்கு மேல நான் என்ன செய்யணும்?சொல்லு...”
மஜீத் எதுவும் சொல்லவில்லை.
கான் பகதூர் மஜீத்தின் கால் போனதற்காக மிகவும் கவலைப்பட்டார். “எல்லாம் விதி! இதுக்குமேல வேற என்ன சொல்றது?”
விதியாக இருக்கலாம். பரவாயில்லை. அதற்குமேல் வேறு என்ன சொல்ல முடியும்?
மஜீத் அந்த நீளமான தடியை ஊன்றியவாறு ‘சலாம்’ சொல்லிவிட்டு, மெதுவாக நடந்தான். படியை அவன் தாண்டியபோது, கான் பகதூர் தன் வேலைக்காரன் மூலமாக ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினார்.
“இந்தப் பணத்தை என்கிட்ட தந்துட்டதா நீங்க சொல்லிடுங்க. நீங்களே இதை வச்சுக்கங்க” - வேலைக்காரனிடம் சொன்ன மஜீத் நடந்தான். அவன் அப்படி நடந்துகொண்டது சரிதானா?
மஜீத் என்ன காரணத்திற்காக அந்தப் பணத்தை வாங்கவில்லை? அந்தக் கோடீஸ்வரனுக்கு முன்னால் தினந்தோறும் எத்தனையோ ஏழைகள் போய் நிற்கும் விஷயமும், அவர்களுக்கு அவர் உதவிகள் செய்யும் விஷயமும் மஜீத்திற்கு நன்கு தெரிந்ததுதானே? மஜீத் ஒரு கோடீஸ்வரனாக இருந்தால் அவன் என்ன செய்வான்? முதலில் வந்து உதவி கேட்டு நிற்கும் ஏழைக்கு தன்னுடைய சொத்தில் பாதியைக் கொடுத்து விடுவானா என்ன? ஒரு செம்புத் தகட்டைவிட அதிகமாக அவன் கொடுப்பானா? கான் பகதூர் ஒரு ரூபாய் தந்தார். அதை அவன் வாங்கியிருக்க வேண்டாமா? மஜீத் எண்ணிப் பார்த்தான். ஆனால், அங்கு மொத்தம் இருப்பதே ஐந்து கோடீஸ்வரர்கள்தான். அவரை நீக்கிவிட்டு பார்த்தால் மீதியிருக்கும் பலவகைப்பட்ட மனிதர்களையும் சேர்த்தால், ஆறரை இலட்சம் பேர் வருவார்கள். எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இடையில் சிலர் மரணத்தைத் தழுவுகிறார்கள். மஜீத் இழந்தது ஒரு காலின் பகுதியை மட்டும்தான். இரண்டு கால்களை இழந்தவர்கள் கூட இருக்கிறார்கள். இரண்டு கைகளை இழந்தவர்களும் இருக்கிறார்கள். கண்களை இழந்தவர்களும் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் துயரம், மகிழ்ச்சி இரண்டுமேதான் இருக்கின்றன. பெரியவனும் இருக்கிறான். சிறியவனும் இருக்கிறான். நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது. அதே நேரத்தில் அழுகையும்தான். பொதுவாக எதைப் பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மஜீத் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தான். வாழ்க்கை நன்றாக நடப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உழைக்க வேண்டும். அதுதானே கடமை!
மஜீத்தின் கைத்தடி நான்கு அங்குலம் தேய்ந்துவிட்டது. உள்ளங்கையில் கால் அங்குல அளவிற்கு தழும்பு உண்டானது. பல இடங்களுக்கும் போய் அவன் தனக்கொரு வேலைக்காக முயற்சித்தான். பட்டினி கிடந்ததால் அவனுடைய உடல் மிகவும் மெலிந்துவிட்டது. அப்போது ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்தது.
மஜீத்திற்கு வேலை கிடைத்தது. ஒரு ஹோட்டலில் எச்சில் “ பாத்திரங்களைக் கழுவுவது - இதுதான் அவனுக்குக் கிடைத்த வேலை. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு பதினோரு மணி வரை தண்ணீர் குழாயின் அருகிலேயே இருக்க வேண்டும். பெரிய கூடையில் கொண்டு வந்து வைக்கப்படும் எச்சில் பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து கழுவி வேறொரு கூடையில் போட வேண்டும். அதை வேறொருவன் எடுத்துக்கொண்டு போவான். அப்போது இன்னொரு ஆள் எச்சில் பாத்திரங்களை அங்கு கொண்டு வருவான்... இதுதான் அவனுடைய வேலை. எனினும், வயிறு நிறைய எதையாவது சாப்பிடலாம். வெயில், மழை எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை வீணாக வெளியே அலைய வேண்டாம். ஒரு இடத்தில் அமர்ந்து மெதுவாக வேலையைச் செய்தால் போதும். கிடைத்ததுவரை நல்ல விஷயம்தான். வாழ்க்கை பெரிய கஷ்டம் எதுவும் இல்லாமல் சிறு சந்தோஷத்துடன் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் தன்னுடைய வீட்டிற்கு ஒரு சிறிய தொகையை அவன் அனுப்பிவைப்பான்.
வீட்டிலிருந்து முதன்முறையாக ஒரு கடிதம் வந்தது. அதில் ஸுஹ்ராவிற்கு சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டிப்பதாக எழுதப்பட்டிருந்தது. அவள் மிகவும் மெலிந்து போயிருக்கிறாளாம். கொஞ்சம் இருமலும் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. ‘இங்கு எல்லாரும் நலம். உன்னை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது’ என்றெழுதி கீழே ‘சொந்தம் ஸுஹ்ரா’ என்று ஸுஹ்ரா கையெழுத்துப் போட்டிருந்தாள்.
ஸுஹ்ராவைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தான் மஜீத். தன்னைப் பார்க்கும்போது அவனின் உம்மா, வாப்பா, சகோதரிகள், ஸுஹ்ராவின் உம்மா, அவளின் சகோதரிகள், ஊர்க்காரர்கள் எல்லாரும் என்ன நினைப்பார்கள்?
ஒன்றரைக் காலன் மஜீத்! ஸுஹ்ரா அவனை அப்படி அழைப்பாளா? நிச்சயமாக அவள் அப்படி அழைக்க மாட்டாள். மீதியிருக்கும் பாதி கால்பகுதியைக் கண்ணீருடன் அவள் முத்தமிடுவாள். முன்பு... நினைத்துப் பார்த்தபோது மஜீத்திற்கு சிரிப்பு வந்தது. கொஞ்சம் பெரிய ஒண்ணு!
அந்தக் கதைகளைச் சொல்லி மஜீத் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறான். ஸுஹ்ராவைப் பற்றி பலரிடமும், அவன் கூறியிருக்கிறான். ஹோட்டலில் பணியாற்றும் மற்ற பணியாட்களெல்லாம் மஜீத்தின் நண்பர்கள்தாம். குளித்து வயிறு நிறைய சாப்பிட்டு முடித்து இரவில் படுத்துக் கிடக்கும்போது மஜீத் தன்னுடைய அனுபவங்களையும் நகைச்சுவையான விஷயங்களையும் அவர்களிடம் கூறுவான். பெரும்பாலும் அவன் நகைச்சுவையான விஷயங்ளைத்தான் அதிகமாகச் சொல்லுவான். அதைக்கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். தினந்தோறும் இரவில் படுக்கும்போது மஜீத் ஏதாவது சொல்ல வேண்டும். சொல்வதற்குத்தான் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே! பெரும்பாலும் அவர்கள் எல்லாரும் சிரித்துக்கொண்டே தான் உறங்குவார்கள். எல்லாரும் தூங்கியபிறகு மஜீத் ஸுஹ்ராவிடம் ஏதாவது பேசுவான். ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் தாண்டி இருக்கும் ஸுஹ்ராவை அவன் பார்ப்பான். அவளின் இருமல் சத்தம் அவன் காதில் விழும். என்னென்னவோ சொல்லி அவன் அவளைத் தேற்றுவான்.
இரவும் பகலும் - எந்நேரமும்.
“ஸுஹ்ரா, இப்போ நீ எப்படி இருக்கே? நெஞ்சு வலி இருக்கா?” என்று கூறியவாறு தான் கழுவிய பாத்திரங்களை அவன் பார்ப்பான். உள்ளங்கைகளில் இருந்த தழும்புகள் காய்த்துப் போயிருந்தன. உடம்பில் நல்ல பலம் ஏறியிருந்தது. உற்சாகத்துடன் எதையும் பார்க்கப் பழகிக் கொண்டான் மஜீத். நியாயமாக உழைத்துக் கிடைக்கும் பணத்தைப் பார்க்கும்போது அவனுக்கே பெருமையாக இருந்தது. வாழ்க்கையில் சில மாறுதல்கள் உண்டாகத்தான் செய்கிறன்றன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook