
தன் மீது வந்து விழுந்த மலையை சகல சக்தியையும் உபயோகித்து தூக்கி எறிவதைப் போல... வேதனையுடன் நினைவு திரும்பி வந்தது.
என்ன நடந்தது?
அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். உடலை நன்றாக நீட்டி அவன் படுத்திருந்தான். கழுத்துவரை வெள்ளைத் துணியால் மூடியிருந்தார்கள். மருத்துவமனை! எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்த்தான்.
கடினமான, தாங்க முடியாத வலி! வலதுபக்க காலில் நெருப்பு எரிவதைப் போல ஒரு வலி! தலைவரை அந்த வலியின் கொடுமை தெரிகிறது. மஜீத் தன் கையால் தடவினான். இடுப்பில் ஏராளமான துணிகளைச் சுற்றியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது? மஜீத் ஞாபகப்படுத்திப் பார்த்தான். உடம்பில் திடீரென்று ஒரு குளிர்ச்சி பரவியதை அவனால் உணரமுடிந்தது.
ஒரே இருட்டு!
மஜீத்திற்கு இப்போது வியர்த்தது. மயக்கம் வருவதைப் போல் அவன் உணர்ந்தான். நிரந்தரமாக அவன் காலின் ஒரு பகுதி இல்லாமற்போயிருக்கிறது!
படுத்த நிலையிலேயே ஆழமான ஒரு குழியில்தான் போய் விழுவதைப்போல அவன் உணர்ந்தான். உலகமே தலைகீழாகக் சுற்றுகிறதோ?
மீண்டும் மஜீத் தடவிப் பார்த்தான். வெறுமை! கீழே எதுவும் இல்லை. தாங்க முடியாத அளவிற்கு வலி எடுத்தது. ஸுஹ்ராவின் முதல் முத்தம் கிடைத்த வலது கால்!
அது எங்கு போனது?
கண்கள் திறந்துதான் இருந்தன. கன்னங்கள் வழியே கண்ணீர் சூடாக வழிந்துகொண்டிருந்தது. படுக்கைக்கு அருகில் டாக்டரும் நர்ஸும் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேனேஜரும் வந்தார்கள்.
மஜீத்தின் நெற்றியில் தன்னுடைய குளிர்ச்சியான கையை வைத்த கம்பெனி மேனேஜர் மெதுவான குரலில் குனிந்துகொண்டே கூறினார்: “மிஸ்டர் மஜீத்... நான் உண்மையாகவே வருத்தப்படுகிறேன. நீங்க கவலைப்படக்கூடாது.”
“ஸுஹ்ரா!”
“என்ன மஜீத்?”
“நீ ஏன் ‘உம்’ கொட்டல?”
“நான் ‘உம்’ கொட்டினேனே! பிறகு... பையா, நீ ஏன் என்னை ‘நீ’ன்னு கூப்பிடுறே?”
அதைக்கேட்டு மஜீத் ஒருமாதிரி ஆகிவிட்டான்.
‘ஸுஹ்ரா’ என்று அழைத்தவாறு மஜீத் திடுக்கிட்டு எழுந்தான்.
“பகல் கனவு காணறியா?” -நர்ஸ் கேட்டாள்.
மஜீத் புன்னகைக்க முயற்சித்தான்.
அறுபத்து நான்கு பகல்களும் அறுபத்து நான்கு இரவுகளும் கடந்தோடின. தன்னைவிட உயரமாக இருந்த ஒரு கழியின் உதவியுடன் மஜீத் தான் பணியாற்றிய மேனேஜருடன் மருத்துவமனையின் வெளி வாசலைக் கடந்து மக்கள் நடமாடிக் கொண்டிருந்த தெருவில் கால் வைத்தான்.
சில ரூபாய்களை மஜீத்தின் கையில் தந்த நிறுவனத்தின் மேனேஜர் சொன்னார்: “நீங்கள் இனிமேல் வீட்டுக்குப் போங்க. இப்படியொரு சம்பவம் நடந்ததுக்காக நான் வருத்தப்படுறேன்.”
மஜீத்திற்கு அழுகை வருவதைப் போல் இருந்தது.
“என் சகோதரிகள் திருமண வயதைத் தாண்டி வீட்டுல இருக்காங்க. என் பெற்றோர் வயசானவங்க. எங்களுக்குன்னு இருந்த சொத்து முழுவதும் இப்போ கடன்ல இருக்கு. எங்க வீட்டுலயே ஒரே ஆம்பளைப் பிள்ளை நான் மட்டும்தான். வீட்டுல இருக்குற கஷ்டங்களுக்கு ஒரு மாற்று உண்டாக்காம நான் அங்கே போறதை என் மனசு விரும்பல. பிறகு... இந்தக் கோலத்தோட நான் அங்கே போயி அவங்களை ஏன் மன கஷ்டப்பட வைக்கணும்?”
“அப்படின்னா என்ன செய்யிறதா எண்ணம்?”
“என்னால தெளிவா சொல்ல முடியல.”
“என் நிறுவனத்துல உங்களுக்கேற்ற ஒரு வேலையும்.. க்ளார்க் வேலை செய்ய நீங்க தயாரா இருக்கீங்களா?”
“இல்ல... நான் கணக்குல ரொம்பவும் மோசம்.”
கொஞ்சம் பெரிய ஒண்ணு!
மஜீத் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டான். பரவாயில்லை. இந்த பிரபஞ்சத்தில் எல்லாருமே தனித் தனியானவர்கள்தான். அதற்கு ஏன் பயப்பட வேண்டும்?
தனக்குக் கிடைத்த பணத்தில் முக்கால் பங்கை மஜீத் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அதனுடன் ஒரு கடிதமும். தனது வலது கால் போன விஷயத்தை கடிதத்தில் அவன் எழுதவில்லை.
மஜீத் மீண்டும் வேலைதேடி அலைய ஆரம்பித்தான்.
இரண்டு கைகளிலும் தடியை ஊன்றிக்கொண்டு ஒரே ஒரு காலால் குதித்து குதித்து... நான்கடி நடந்த பிறகு அவன் நிற்பான். பிறகு நடப்பான். நின்று எதையாவது நினைப்பான்... பிறகு நடப்பான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவனுக்கென்று ஒரு இடமில்லை. எந்த இடத்தில் வேண்டுமானாலும் படுத்துத் தூங்குவான்.
கடைசியில் நகரத்தின் பணக்காரர்களைப் பார்த்து உதவி கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான். பலரிடமும் விசாரித்ததில் நல்ல தாராள குணம் கொண்டவர் நகரத்திலேயே கான் பகதூர் என்பவர்தான் என்ற விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. நகரத்திலிருந்த பெரிய கட்டிடங்களெல்லாம் அந்த மனிதருக்கச் சொந்தமானவையே. அவரின் பாதாள அறையில் ஏராளமான தங்கக் கட்டிகள் பாசி பிடித்து கிடக்கும் என்று சொன்னார்கள். அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு கொண்ட மனிதர் அவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள். சமீபத்தில்தான் அவர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து கவர்னருக்கு ஒரு விருந்து தந்திருந்தார். அவரால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்... எது வேண்டுமானாலும்.
ஆனால், வாசலில் நின்றிருந்த காவலாளிகள் மஜீத்தை உள்ளே விடவில்லை. தினந்தோறும் அந்த மாளிகையின் முன்னால் வந்து அவன் நிற்பான். இப்படியே ஒரு வாரம் ஓடி முடிந்தது. கடைசியில் காவலாளிகளுக்கே அவன் மீது இரக்கம் பிறந்துவிட்டது. கான் பகதூரின் முன்னால் அவன் கொண்டு போய் நிறுத்தப்பட்டான். மஜீத் அவரைப் பார்த்து ‘சலாம்’ சொன்னான். ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமைப் பார்க்கம்போது “அஸ்ஸாலாமு அலைக்கும்” என்று கூற வேண்டும். மஜீத் சொன்னான்.
ஆனால், கான் பகதூர் என்ன காரணத்தாலோ பதிலுக்கு சலாம் வைக்கவில்லை. அவன் ‘சலாம்’ சொன்னதை தான் கேட்கவேயில்லை என்பது மாதிரி அவர் காட்டிக்கொண்டார். கான் பகதூர் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெள்ளையான பருத்த உடம்பைக் கொண்ட ஒரு மனிதர். கல் வைத்த பெரிய தங்க மோதிரங்கள் விரல்களில் ஒளி வீச, தாடியைத் தடவி விட்டவாறு அவர் மஜீத்தின் கவலை தோய்ந்த வார்த்தைகள் முழுவதையும் ‘உம்’ கொட்டி கேட்டார்.
கடைசியில் கான் பகதூர் சொன்னார். “நம்ம சமுதாயத்துல கல்யாணம் பண்ண வசதியில்லாத எத்தனையோ பெண்கள் இருக்காங்க. சாப்பாட்டுக்கு வழியில்லாத ஆட்களும் நிறைய இருக்காங்க. என்னால் முடிஞ்ச அளவுக்கு நான் எல்லாருக்கும் செஞ்சிக்கிட்டுத் தான் இருக்கேன். சொல்லு... இதுக்குமேல நான் என்ன செய்யணும்?”
மஜீத் எதுவும் சொல்லவில்லை.
கான் பகதூர் முஸ்லீம் சமுதாயத்தின் உயர்வுக்காக தான் செய்திருக்கும் பெரிய காரியங்ளை விளக்கிச் சொன்னார். அவர் நான்கு பள்ளி வாசல்களைக் கட்டியிருக்கிறார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook