Lekha Books

A+ A A-

ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 3

o-v-vijayan-oor-arimugam

ஜீனியஸ்ஸின் முத்திரை உள்ள மொழி

                                                                  - வி.கெ. என்.

விஜயனை நான் முதல் தடவையாகப் பார்த்தது 1956 - ஆம் ஆண்டு பாலக்காட்டில் உள்ள ஹரிக்காரத் தெருவில் இருந்த ஒரு லாட்ஜில். அப்போதுதான் விஜயனின் ‘மூன்று யுத்தங்கள்’ என்ற நூல் வெளிவந்திருந்தது. அதற்குப்பிறகு பல வருடங்கள் அவர் ஒன்றுமே எழுதவில்லை. அதற்குப்பிறகு 1959-60 கால கட்டத்தில் அவரை கோழிக்கோடு மலபார் கிறிஸ்டியன் கல்லூரியில் பார்க்கிறேன். அப்போது விஜயன் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். அந்தச் சமயத்தில் விஜயனுடன் குன்னிக்கல் நாராயணனும் வேறு சிலரும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு 63 வாக்கில் டெல்லியில் இருந்தவாறு அவர் தஸராக்கைப் பற்றிச் சிந்திக்கிறார், எழுதுகிறார். அது அவரின் ஒரு மாறுபட்ட படைப்பாக அமைந்தது. எட்டு வருடங்கள் விஜயன் கஸாக்கைப் பற்றிச் சிந்தனையிலேயே மூழ்கிவிட்டார் என்பதே உண்மை. அந்தக் கால கட்டத்தில் விஜயன் கார்ட்டூன், ஆங்கிலக் கட்டுரைகள் என்று மிகவும் பிஸியான ஒரு மனிதராக இருந்தார். ‘கஸாக்கின் இதிகாசம்’ மாத்ருபூமியில் பிரசுரமான பிறகு, தான் நடந்து செல்ல வேண்டிய பாதை எது என்பதை விஜயன் தெரிந்து கொண்டார். கதை எழுதுவதும், நாவல் எழுதுவதும்தான் இனி தன்னுடைய கேன்வாஸ் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் குரு சாகரம், மதுரம் காயதி, கடல் தீரத்து, காற்று பறஞ்ஞ கதை ஆகிய நூல்களை விஜயன் எழுதினார்.

அவர் எழுதிய கதைகளில் குறிப்பிடத்தக்கவை ‘கடல் தீரத்’தும் ‘காற்று பறஞ்ஞ கதை’யும். எந்த மொழி கதைகளுடனும் போட்டி போட்டு நிற்கக் கூடிய அளவிற்கு உயர்ந்த தரம் வாய்ந்த கதைகள் அவை.

நெருக்கடி நிலை கால கட்டத்தின் போது விஜயன் ‘தர்ம புராணம்’ நாவலை எழுதுகிறார். இந்த நூல்களை எல்லாம் மலையாளத்தில் எழுதுகிறபோதே, ஆங்கிலத்திலும் அந்தப் படைப்புகளை விஜயன் மொழி பெயர்த்துவிடுவார். ஆங்கிலம், மலையாளம் - இரு மொழிகளும் விஜயனுக்கு சர்வ சாதாரணமாகக் கைவரப்பெற்ற ஒன்றாக இருந்தன. ஒரு ஜீனியஸ்ஸின் முத்திரை விஜயனின் மொழியில் இருந்தது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் இதுவரை தொகுக்கப்படவில்லை. மொழியால் ஒரு மகா உற்சவமே நடத்திக் கொண்டாடினார் விஜயன் என்று சொல்வதே பொருத்தம்.

மலையாளிகள் மிகவும் தாமதமாகத்தான் விஜயனைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். விஜயனின் நூல்கள் எந்த அளவுக்கு வரவேற்புப் பெற வேண்டுமோ, அந்த அளவுக்கு வரவேற்பு பெற்றனவா என்பது சந்தேகமே. ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரையில் விஜயனின் மொழியையோ, நடையையோ, அவரின் எண்ணங்களையோ, சிந்தனைகளையோ, புவியியல்படி பாலக்காடைப் பற்றியோ சரிவர, புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார்கள்.

அதனாலோ என்னவோ விஜயனுக்கு மத்திய அரசாங்கத்தின் சாஹித்ய அகாடெமி பரிசு மிகவும் தாமதமாகவே கிடைத்தது. விஜயன் பரிசுகளுக்காகவும் விருதுகளுக்காகவும் எந்தக் காலத்திலும் ஏங்கியதும் இல்லை.

தன்னுடைய அறுபது வயதுடன், தன்னைத்தானே ஒதுக்கிக் கொண்டு அமைதியான ஒரு மனிதராக மாறிவிட்டார் விஜயன். ஆனால், விஜயனின் எழுத்துக்கள் என்றுமே மக்களிடமிருந்து ஒதுங்கியதில்லை. இவரின் வேதாந்தம் கலந்த புதினங்கள் ஆங்கிலத்தில் இன்றும் பேசப்படுகின்றன - விவாதிக்கப்படுகின்றன.

விஜயன் ‘பத்மாஸனம்’ என்ற புதிய நூலைத் தற்போது எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார். உடல் ரீதியாகப் பல பிரச்னைகள் இருந்தாலும் விஜயனின் மனம் என்னவோ இன்னும் சுறுசுறுப்பாகவும் நிர்மலமாகவும் தான் இருக்கிறது.

விஜயனின் கதைகளையும் நாவல்களையும் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிற விமர்சகர்களின் நூல்களும் நிறைய வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் ததும்பி நிற்கிற ஒரு ஜீனியஸ்ஸாக, மலையாள இலக்கிய உலகின் ஒரு உன்னத மனிதராக விஜயன் வளர்ந்து கம்பீரத் தோற்றம் தந்து கொண்டிருக்கிறார்.

விஜயனின் வார்த்தைகளையே பயன்படுத்தி கொஞ்சம் மாற்றிக் கூறுவதாக இருந்தால் ‘அவரோகணம் இல்லாமல் ஆரோகணமாக’ மட்டும் விஜயனின் இலக்கிய ஆக்கங்கள் மலையாள மொழியில் காலம் காலமாக நிலைபெற்று நிற்கும். அப்படி நிற்பதுதான் எல்லோரின் ஆசையும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel