Lekha Books

A+ A A-

ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 4

o-v-vijayan-oor-arimugam

பெரிய எழுத்தாளர்

                                   - கமலாதாஸ்

டெல்லியில் வைத்துத்தான் நான் முதன்முதலாக விஜயனைப் பார்த்தேன். அப்போது எனக்கு இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது வயது இருக்கும். விஜயன் மெலிந்து காணப்படும் ஒரு இளைஞராக இருந்தார். பார்ப்பதற்கு ஒரு எலும்புக் கூட்டைப்போல இருப்பார். அப்போது நான் ஆங்கிலத்தில் நிறைய கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். விஜயன் என்னை மலையாளத்தில் எழுதும்படி வற்புறுத்துவார். ஆனால், எனக்கு மலையாள மொழி அவ்வளவாகத் தெரியாது. நான் ஆரம்பப் பாடசாலையில் வகுப்பில் மலையாளம் கற்றிருக்கிறேன். 1984- இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நான் நின்றேன். அந்தச் சமயத்தில் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு மலையாளப் பாடல் கேசட்டை விஜயன் எனக்கு அனுப்பியிருந்தார். ‘யார் இந்த சாரல்ஸ்? ஓட்டுப் போடுங்கள் கமலாவுக்கு...’ இப்படிப் போகும் அந்தப் பாட்டு. அதைப் பாடியது விஜயன்தான் என்று பலரும் சொன்னார்கள்.

விஜயன் நான் மனம் வருந்தும்படி ஒரு போதும் நடந்ததில்லை. நான் மதம் மாறியபோது, பலரும் அதற்காக என்னைக் கண்டித்தார்கள். அப்போது கூட மிகவும் அன்புடன் என்னிடம் நடந்து கொண்டார்கள் ஓ.வி.விஜயனும், அவரின் சகோதரி ஓ.வி.உஷாவும். அவரின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே இப்போதும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்தாம். அவ்வப்போது என்னை அழைப்பதுண்டு. என்னைப் பார்க்க வேண்டும் என்று கூப்பிடுகிறபோது நான் அங்கு ஓடிச்செல்வேன். விஜயனைக் கட்டிப்பிடிப்பேன். அந்த ஆட்டுத் தாடியைப் பிடித்து இழுப்பேன்.

இப்போது விஜயனால் பேச முடியவில்லை. இருந்தாலும் என்னுடைய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் விஜயனிடம் மனம் திறந்து கூறுவேன். அதைக் கேட்பதில் விஜயனுக்கும் விருப்பம் அதிகம். நான் விஜயனிடம் எல்லா விஷயங்களையும் பேசுவேன்.

என் சொந்த விஷயங்களைக் கூறுவதற்கு எனக்கு ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிற போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த எண்ணமே ஒரு விதத்தில் எனக்கு பலத்தைத் தருகிறது. பாலனும் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) விஜயலட்சுமியும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் மதம் மாறிய பிறகு இலக்கிய உலகில் எனக்கிருந்த நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது. யாரும் முன்னைப் போல என்னை அழைப்பதில்லை. என்னை வந்து பார்ப்பதும் இல்லை. ‘கேரளப் பிறவி’யைத் தொடர்ந்து இங்கு நிறைய நிகழ்ச்சிகள் இருந்தன. என்னை முதலில் யாரும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. நான் இலக்கியத்தில் எந்த அளவிற்குப் பங்களிப்பு செய்திருக்கிறேன்! அதையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? நான் முஸ்லீமாக மாறிய பிறகு, யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. ஆரம்பத்தில் அவர்களின் இந்தச் செயல் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இப்போது அது குறித்து நான் கொஞ்சம்கூட கவலைப்படுவதில்லை. அவர்களின் கபட வேடங்கள் இப்போது எனக்குத் தெரியவருகிறது. இப்போதுதான் அன்று அவர்கள் காட்டிய நெருக்கமும் அன்பும் போலித்தனமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

 ஓ.வி.விஜயன் இரண்டு நாட்களுக்கு முன்னால் என் வீட்டிற்கு வந்தார். எர்ணாகுளத்தில் உள்ள ‘சாஹித்ய பரிஷத்’ஏற்பாடு செய்த ‘கேரளப் பிறவி’யை யொட்டி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்தார். என் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போனார்.

விஜயன் ஒரு அறிவு ஜீவி. நான் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவள். நாங்கள் இருவரும் பயன்படுத்தும் மை மாறுபட்ட தன்மை கொண்டவை. விஜயனின் வார்த்தைகள் அறிவில் இருந்து வந்து விழுபவை. என்னுடைய எழுத்துக்களில் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும். இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. என்னால் முடியாத உயர்ந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன விஜயனின் சிந்தனை, எழுத்து எல்லாம்.

விஜயனைப் பற்றி நல்ல விஷயங்களைத் தவிர, வேறு எதுவும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. நல்ல குணம், நல்ல எழுத்து, நல்ல பழகும் முறை. விஜயனால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கிடையாது. பிரச்னைகளே இல்லாத ஒரு எழுத்தாளர். சொல்லப்போனால் அவர் மிகவும் அப்பாவி. அதனால்தான் சொல்கிறேன் - விஜயனுக்கு எந்த விருது கிடைத்தாலும், அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அண்ணன் மீது ஓ.வி. உஷாவுக்கு அப்படியொரு பிளீயம்.

விஜயன் என்னுடைய நல்ல நண்பர்- எனக்கு நல்ல பலமாக இருப்பவர். விஜயனுடன் சேர்ந்து நான் நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அவருடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு மிகவும் விருப்பமே.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel