Lekha Books

A+ A A-

உன் மனதை நான் அறிவேன் - Page 6

Unn Manadhai Naan Ariven

வெண்ணிலா ஹோட்டலில் தனியார் நிறுவனத்தின் வெள்ளி விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ட்ரேயில் கண்ணாடி க்ளாஸ்கள் உரசும் ஓசையும், சிலரது உரக்கப் பேசி சிரிக்கும் ஒலியும் கலந்து காற்றில் மிதந்தது. விஸ்கியையும், பிராந்தியையும் குடித்து விட்டு போதையில் மிதந்து கொண்டிருந்தனர் சிலர்.

கயல்விழியின் நடனம் ஆரம்பித்தது. அவளது நடன நிகழ்ச்சியுடன் வெள்ளி விழா நிறைவுற்றது. அனைவரும் கலைந்தனர். அந்த நிறுவனத்தின் அதிபர் அருண்விஜய்திலக் மட்டும் ஜெயராஜூடன் பேசிக் கொண்டிருந்தார்.

அருண்விஜய்திலக், சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களுள் ஒருவர். ஐம்பது வயது நிறைவடைந்தவர் எனினும் இளமை குறையாத தோற்றத்துடன் காணப்பட்டார். அவரது உடை, ஷர்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பேனா மற்றும் கண் கண்ணாடி ஃப்ரேம் ஆகியவை அவரது செல்வச் செழிப்பை அடையாளம் காட்டின. எல்லா விதத்திலும் ஒரு சிறந்த மனிதர் எனும் பெயர் பெற்றிருந்த அவர், பெண்கள் விஷயத்தில் மட்டும் சபலப்படும் இயல்பு உடையவராய் இருந்தார். கயல்வழியைப் பார்த்ததிலிருந்து அவளது நடனத்தை ரஸித்தது மட்டுமல்லாமல் அவளையே ருசித்துப் பார்க்கும் ஆவலில் இருந்தார்.

''மிஸ்டர் ஜெயராஜ்... மிஸ் கயல்விழியை சந்திச்சு, அவங்களோட டான்ஸை பாராட்டணும்னு நினைக்கறேன்...''

''மேக்கப் ரூம்ல இருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸார், அவங்களை கூட்டிட்டு வரேன். அருண்விஜய்திலக்கை உட்கார வைத்து விட்டு கயல்விழியை அழைத்து வந்து அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

''மிஸ் கயல்விழி... உங்க டான்ஸ் பிரமாதம். அழகா... நளினமா ஆடறீங்க...''

''தேங்க்ஸ் ஸார்...''

''ஸார்ன்னு கூப்பிடாம அருண் அப்பிடின்னு கூப்பிடுங்களேன்... சின்ன வயசுலயே டான்ஸ் கத்துக்கிட்டிங்களா...?''

''எங்க குடும்ப சூழ்நிலையினால, டான்ஸ் க்ளாசுக்கு போகலை. பிழைப்புக்காக... ஹோட்டல்ல டான்ஸ் ஆடறேன்...''

''உங்களுக்கு என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நான் காத்திருக்கேன்...''

''தேங்க்யூ... நான் கிளம்பறேன்...''

''மிஸ் கயல்விழி... ஒரு நிமிஷம்... உங்க டான்ஸ் மட்டுமில்ல... நீங்களும் அழகா இருக்கீங்க... உங்க அழகுக்கு நான் அடிமை. நீங்க சம்மதிச்சா... சம்மதிச்சா... நான்...''

''நான் சம்மதிச்சா... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா...?''

''அ... அ... அதில்லை... நான் கல்யாணம் ஆனவன்...''

''அப்போ...? உங்க மனைவி சம்மதிச்சா... என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா...?''

கயல்விழி கேட்ட கேள்விக்கு மிகவும் அதிர்ச்சி அடைந்தார் அருண்விஜய்திலக்.

''இ... இ... இல்லை... அது வந்து...''

''நான் சம்மதிச்சா... என்னை... சும்மா... 'வச்சு'க்கப்போறீங்க? அப்படித்தானே?...''

''.............''

அருண்விஜய் திலக்கின் மௌனத்தை தன் கோபத்தால் உடைத்தாள் கயல்விழி.

''மிஸ்டர் அருண்விஜய்திலக்... உங்க பேரை சொன்னா சென்னையில எல்லாருக்கும் தெரியக்கூடிய ஒரு பிரபலம் நீங்க. உங்களுக்குத் தெரியாத விஷயம்... பெண்களை மதிக்கணும்ன்னு. நாலு பேர் முன்னால டான்ஸ் ஆடறவள்ன்னா... நாலு பேர்கூட படுத்துக்க சம்மதிப்பாள்ன்னு நீங்க எடை போட்டுடாதீங்க... நம்ம சமூகத்துல பெண்கள்ன்னா இளப்பமா நினைக்கறது... ஒரு வியாதியாவே ஆயிடுச்சு. ராக்கெட்டையே இயக்கற அளவுக்கு பெண்கள் சாதிச்சாலும் கூட ராத்திரி நேரப் பறவைகளாத்தானே மதிப்பிடறீங்க? ஏழ்மையில உழலற அழகான பொண்ணுன்னா... அழைச்சதும் உங்க அந்தரங்க அந்தப்புரத்துக்கு வந்துடுவாள்ன்னு இழிவா நினைச்சுடறீங்க... உங்களுக்கு மனைவி, மகன்... மகள்னு பல பேர் சொந்த பந்தமா இருக்கலாம். உங்க மனைவியையோ, மகளையோ, இப்பிடி ஒருத்தன் கூப்பிட்டா...? நான் இப்பிடி கேட்கும்போதே... உங்க ரத்தம் சூடேறுதில்ல? எங்க ரத்தமும் சுத்தமானதுதான். என் குடும்பமும் கண்ணியமான குடும்பம்தான். நல்ல பெண்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் ரெண்டு கண்கள் மாதிரி... உங்க விரலை வச்சு உங்க கண்ணை நீங்களே குத்திக்கலாமா? ஏழ்மையில கஷ்டப்படறவதானே... கேள்வி கேட்க ஆள் இல்லாதவதானே... கூப்பிட்டா வந்துருவா... தொட்டா ஒட்டிக்குவாள்ன்னு தப்புக் கணக்கு போடாதீங்க. உங்க மகளை வயசுக்கோளாறுல எவனாவது லேஸா கிண்டல் பண்ணினா கூட 'ஈவ்டீஸிங்'ன்னு ஏழு வருஷம் 'உள்ளே' தள்ள ஏற்பாடு பண்ணுவீங்க. ஆனா... அந்நியப் பெண்கள்ன்னா அந்யோன்யமா பழகிடுவாள்ன்னு... அநியாயமா... இப்பிடி அலையறீங்க... ஒட்டு மொத்தமா ஆண்களை மட்டுமே குறை சொல்ல முடியலை. இதுக்குக் காரணம்... சில பெண்கள், ஆண்களுக்கு தங்களோட அழகை... உடம்பை... தன்மானத்தை... விட்டுக் குடுத்துடறாங்க.

ஒரு சில பெண்கள் அப்படிப்பட்ட மனோபாவத்துல இருக்கிறத வச்சு... எல்லாரையும்... இருட்டுல பழகற இன்ப ராணிகள்ன்னு இளக்காரமா நினைக்கறது தப்பு. பெண்களை ஆற்றல் மிக்கவள், சக்தி மிக்கவள்ன்னு ஆகோ ஓஹோன்னு உயரத் தூக்கி புகழாட்டா கூட பரவாயில்லை... அவளை கீழே போட்டு மிதிச்சு கீழ்த்தரமா நடத்தாம இருந்தா அதுவே போதும்...'' படபடப்புடன் பேசிய கயல்விழிக்கு மூச்சிறைத்தது.

''ஸாரி... வெரி... ஸாரி...''

''அறிவின் பலத்தால பெரிய புகழ் அடைஞ்சு பிஸினஸ் மேக்னெட்ன்னு பேர் எடுத்திருக்கற நீங்க, பெண்ணாசைங்கற பலவீனத்தால 'சபலிஸ்ட்'ங்கற இமேஜ்க்கு ஆளாயிட்டீங்க. எங்கப்பா ஓடிப்போனப்புறம் எங்க அம்மா, உடல் தேய உழைச்சு, அடுப்படியில வெந்தாங்க. அதிலயும் சோதனை... அவங்களுக்கு குறுக்கு வலி வந்து, படுத்த படுக்கையா ஆகிட்டாங்க. அவங்க என்னிக்கு படுத்தாங்களோ... அன்னிக்கு நான் எழுந்திருச்சேன். அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் சுயமா... என்னோட சொந்தக் கால்கள்ல்ல நின்னுக்கிட்டிருக்கேன். யாரையும் எதிர் பார்க்காம எதிர்நீச்சல் போட்டு வாழற எனக்கு திமிர் உண்டு. வாழ்க்கைங்கறது ஒரு நீண்ட, நெடுந்தூரப் பிரயாணம். இதில எதையோ அடையறோம்... எதையோ இழக்கறோம்... எல்லாத்தையும் சமாளிச்சு ஒரு சவாலா வாழறதுலதான் நாம படற கஷ்டங்களை கொஞ்சம் மறக்க முடியுது. 'லைஃப் இஸ் எ சேலன்ஞ்!' இது என்னோட வாழ்க்கைக்கு பொருத்தமா இருக்கு. என்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராத எந்த வேலையும் செய்யலாம்ங்கற எண்ணத்துலதான்... எனக்குத் தெரிஞ்ச இந்த டான்ஸ் ஆடற வேலைக்கு வந்தேனே தவிர, தன்மானத்தை வித்து, வெகுமானங்களை அடையறதுக்காகவோ... என்னோட அழகை மூலதனமா வச்சு பெரும் பணம் சம்பாதிக்கணும்ங்கற இழிவான எண்ணத்துக்காகவோ இல்லை. உங்க மனசுல நீங்க கேக்கணும்னு நினைச்சதை ஓப்பனா கேட்டுட்டீங்க. என் மனசுல நினைச்சதை நான் பேசிட்டேன். குட்பை...'' அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் கயல்விழி.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel