
ரிக்கார்டிங் முடிந்து, வீட்டிற்கு திரும்பியிருந்தான் அபிலாஷ்.
''இன்னிக்கு ரெக்கார்ட் பண்ணின பாட்டு பிரமாதம் சரித்...''
''ம்... ம்...''
''கவிஞர் எவ்ளவு அற்புதமா வார்த்தைகள்ளல்ல விளையாடி இருக்கார் தெரியுமா? அத்தனையும் வைரவரிகள்!''
''ம்... ம்...''
''என்ன சரித்... எதுக்கெடுத்தாலும் 'உம்' கொட்டிக்கிட்டிருக்க? நான் என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்? என்ன ஆச்சு உனக்கு?''
''எனக்கு ஒண்ணும் ஆகலை. உங்களுக்குத்தான் என்னமோ ஆயிடுச்சு...''
''என்னது?! எனக்கா...?''
''ஆமா... உங்க இசை அமைப்பை புகழறதுக்கு அந்த புது நடிகை மாலாவை ரிக்கார்டிங் ஸ்டுடியோ வரைக்கும் வர்றதுக்கு அனுமதிச்சிருக்கீங்களே... அதைச் சொன்னேன்...''
''சீச்சி... அவ என்னை பாராட்டறதுக்கு வரலைம்மா... 'அந்த மாலாவுக்கு நல்ல குரல் வளம்... அவளை ஒரு பாட்டு பாட வைங்க'ன்னு டைரக்டர் சொன்னார். வாய்ஸ் டெஸ்ட் எடுத்தேன். எனக்கு திருப்தியா இருந்துச்சு. அதனால பாடல் பதிவுக்கு அவளை வரச்சொல்லி இருந்தேன். 'ஸாங் ரிக்கார்டிங்'காகக்தான் அவ வந்திருந்தா. ஏற்கனவே ம்யூசிக் ட்ரூப்ல பாடிக்கிட்டிருந்திருக்கா அந்தப் பொண்ணு... ''
''என்னது? பொண்ணா? அந்த குண்டா?!...''
''சரிம்மா... அந்தக் குண்டு பொண்ணு...''
''போதும். போதும் அவ நல்லா பாடினா. அவ குரல் நல்லா இருந்துச்சு... அவ்வளவுதானே?..''
''அடேங்கப்பா ஏன் இவ்ளவு கோபம்...?''
''பின்னே? நீங்க அழகா இருக்கீங்களாம். ஹீரோமாதிரி இருக்கீங்களாம். 'இஹி... இஹி'ன்னு பல்லைக் காட்டி பேசறா அந்த நடிகை, நீங்களும் ஈன்னு இளிச்சிக்கிட்டு கேட்டுக்கிட்டிருக்கீங்க. போதாதக்குறைக்கு உங்க கையை வேற குலுக்கிட்டு போறா... ''
'ஓ... இதுதான் கோபமா? 'ஸெலிப்ரேட்டி'யா இருக்கற எல்லாருக்குமே இந்த மாதிரி பிரச்னைகள் வரும். உனக்கு மட்டுமே நான் சொந்தம்ங்கறது நம்பளோட குடும்ப வாழ்க்கை... ஆனா... பொது வாழ்க்கையில ஒரு பிரபலமான ம்யூஸிக் டைரக்டரான நான், என்னோட ரஸிகர்கள், ரஸிகைகள் அத்தனை பேருக்கும் சொந்தமானவன். காலம் ரொம்பவே மாறிப் போனதுனால, பெண் ரஸிகைகள் தயங்காம கை குலுக்கறாங்க. அதில அவங்களுக்கு ஒரு சந்தோஷம். 'ஒரு பிரபல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷை நான் நேர்ல பார்த்தேன்; அவர் கூட பேசினேன்... அவருக்கு கை குடுத்தேன்...' அப்பிடின்னு மத்தவங்ககிட்ட சொல்லிக்கறதுல்ல பெருமைப்பட்டுக்கறாங்க. எவ்ளவு பெரிய பிரபலம் ஆனாலும் என்னோட திறமையை ரஸிக்கற ஒவ்வொரு தனி மனிதனும் எனக்கு முக்கியமானவங்க. இதில ஆண், பெண்ங்கற இனபேதம் பார்க்கமாட்டேன்.
அவங்களோட ரஸனைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. அவங்களை நான் மதிக்கணும். அதே சமயம், என்னோட இசை அமைப்புக்கு எத்தனை பெரிய கூட்டம் இருந்தாலும் என்னோட இதயத் துடிப்புக்கு நீதான் ஜீவன்! என் வாழ்க்கையில இசைக்கும், உனக்கும் சமமான இடம். அதுதான் முதலிடம்...'' அவளை அணைத்தபடியே அன்பாக பேசினான் அபிலாஷ்.
அவனது அன்பில் கரைந்து போனாள் சரிதா.
''இதுதாங்க எனக்கு வேணும். உங்க மனசுல எனக்கு மட்டும்தான் இடம். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேற யாருமே... வேற எதுவுமே வரக் கூடாது. நீங்க எனக்கு மட்டும்தான் சொந்தம். என் உலகமே நீங்கதான். என் உயிர் நீங்கதான்.''
''என் உயிர் நீதான். நீ இல்லாம நான் இல்லை...'' மீண்டும் அவளை இறுக்கி, கட்டித் தழுவினான் அபிலாஷ். ஊடலுக்குப் பின் ஏற்பட்ட கூடலில் அந்த காதல் பறவைகள் சங்கமித்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook