![உன் மனதை நான் அறிவேன் Unn Manadhai Naan Ariven](/images/novels/un-manathai-naan-ariven.jpg)
கலைஞர் தொலைக்காட்சி அலுவலக வளாகம், ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 'ரோஸ் நேரம்' நிகழ்ச்சிக்குரிய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தாள் கயல்விழி. இயக்குநர், அவளிடம் அன்றைய படப்பிடிப்பிற்குரிய ஸ்க்ரிப்ட் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். கவனமாக கேட்டுக் கொண்டாள் கயல்விழி. படப்பிடிப்பு துவங்கியது.
கயல்விழியிடம் கேள்விக் கணைகளை வீசினார் ரோஸ்.
''இரவு நேரத்துல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டான்ஸ் ஆடற இந்த வேலை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?''
''சின்ன வயசுல டான்ஸ் ஆடறதுல எனக்கு விருப்பமும் ஆர்வமும் அதிகமா இருந்துச்சு. ஆனா... முறைப்படி கத்துக்க பொருளாதார வசதி இடம் கொடுக்கலை. வறுமையின் கொடுமைக்காக ஹோட்டல்ல டான்ஸ் ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு. ஆசைப்பட்ட நாட்டியக்கலை... பின்நாள்ல்ல... அத்தியாவசியமான தேவைக்காக என்னோட வாழ்க்கையோட ஐக்கியமாயிடுச்சு...''
''அப்பிடின்னா... ஹோட்டல்ல டான்ஸ் ஆடற இந்த வேலை உங்களுக்குப் பிடிக்கலையா?''
''பிடிக்காம போனதுக்கு பல காரணங்கள் இருக்கு. டான்ஸை நான் ஒரு கலையா மதிச்சு ஆடறேன். ஆனா டான்ஸை பார்க்கறவங்களோட கண்ணோட்டத்துல வக்கிரம் தலைவிரிச்சு ஆடுது. பல் ஆட்டம் கண்ட கிழவர்கள் கூட கீழ்த்தரமான ரஸனையிலதான் என்னோட ஆட்டத்தைப் பார்க்கறாங்க, அவங்க பார்க்கறது என்னோட டான்ஸை மட்டுமில்ல... அதையெல்லாம் சகிச்சிக்கிட்டுதான் ஆட வேண்டியாதிருக்கு...''
''கௌரவமான, பெரிய... ஸ்டார் ஹோட்டல்லதானே ஆடறீங்க...?''
''ஹோட்டல்ஸ், ஃபைவ் ஸ்டார் தரமா இருக்கலாம். கௌரவமானதா இருக்கலாம். ஆனா வர்றவங்க?''
''ஏன் நீங்க வேற வேலைக்கு முயற்சி செய்யலை?''
''இளமையில் வறுமைதான் மிகவும் கொடியதுன்னு ஒளவையார் பாடினாங்க. வறுமை... என்னோட வளமான கல்விக்கு வழி வகுக்கலை... முடியாத ஒரு விஷயமா இருந்தது என்னோட உயர் கல்வி. அதனால என்னால முடிஞ்சதை செஞ்சு, வறுமையின் சிகப்பு நிறத்தைக் கொஞ்சம் செழிப்பாக்கலாமேன்னு இந்த வேலைக்கு வந்துட்டேன். செய்யற எந்த வேலையா இருந்தாலும் என்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராத பட்சத்துல அதில முழு கவனத்தோட ஈடுபடுவேன்...''
''ஹோட்டல்ல டான்ஸ் ஆடறதுனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கா?''
''நான் உண்டு... என்னோட வேலை உண்டுன்னு இருக்கற சுபாவம் எனக்கு. குறிச்ச நேரத்துக்கு டான்ஸ் ஆடப்போவேன். ப்ரோக்ராம் முடிஞ்சதும் என்னோட சம்பளத்தை வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டே இருப்பேன். இதையும் மீறி, ஒரு பெண்ணான எனக்கு சில நபர்கள் தொந்தரவு குடுத்திருக்காங்க. அவங்க நினைக்கற மாதிரி, நான் 'அப்படிப்பட்ட பொண்ணு' இல்லைன்னு பொறுமையா சொல்லுவேன். என் பொறுமையை சோதிச்சாங்கன்னா... கடுமையா பேசிடுவேன். என்னோட ஏழ்மை காரணமா... என்னோட பெண்மையை அவமதிச்சா... அதை என்னால தாங்கிக்கவே முடியாது. வார்த்தைகளாலேயே சவுக்கடி குடுத்துடுவேன். பெண்கள்ன்னா... போகப் பொருட்கள்ன்னு ஆண் இனம் நினைக்கறதை எதிர்க்கறவ நான்.''
''உங்க டான்ஸை பார்க்கறதுக்கு எத்தனை வயசுல உள்ளவங்க வர்றாங்க?''
''இளைஞர்கள் ரொம்ப குறைவு. நடுத்தர வயதினரும், வயது முதிர்ந்தவங்களும்தான் பெரும்பாலும் வர்றாங்க. மனைவியோட வர்றவங்க, மனைவி இல்லாத பிற பெண்களோடு வர்றவங்களைவிட, தனியா... மதுவின் துணையோட வர்றவங்கதான் அதிகம். தங்களோட மகள் வயசுல இருக்கற என்னை கண்ணாலயே கற்பழிக்கற கிழடுகளும் வரும். அவங்களோட கண்லயும், புத்தியிலயும் நான் ஒரு பெண் அப்பிடிங்கற காம உணர்வுதான் இருக்குமே தவிர இந்த வயசுல தனக்கு ஒரு மகள் இருக்கறாங்கற நினைப்பெல்லாம் அவங்களுக்கு இருக்காது. 'நீ இல்லாட்டி இன்னொருத்தி'ன்னு ஆசையை அசை போட்டுக்கிட்டு... ஆடு... மாடு... மாதிரி போய்க்கிட்டே இருப்பாங்க. ஆடம்பரமான செலவுகளுக்காக, இந்த மாதிரி நபர்கள்ட்ட தங்கள் மானத்தை விட்டுக் கொடுக்கற பெண்களும் இருக்காங்க. அத்தியாவசியமான தேவைகளுக்கு தங்களோட பெண்மையை பலி கொடுக்கற பெண்களும் இருக்காங்க. முன்னே சொன்ன பெண்கள் கண்டனத்துக்கு உரியவர்கள். பின்னால் சொன்ன பெண்கள், பரிதாபத்துக்குரியவர்கள்...''
''சமூகத்துல இதுபோல பிரச்னைகளை சந்திக்கற பெண்கள் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?''
''இயற்கையா செடியில மலர்ந்திருக்கிற அழகான பூவை பல பேர் தொட்டுப் பார்ப்பாங்க. முகர்ந்து பார்ப்பாங்க... இறைவன் படைச்சு, இந்த பூமியில் பிறந்து, பெண்ணா மலர்ந்திருக்கற ஒரு பாவையை பல பேர் தொட்டுப் பாக்கலாமா? பார்த்து ரஸிக்கலாமா? இது பத்தி, பெண்ணாசை பிடிச்சு அலையற ஆண்கள் சிந்திக்கணும். இப்படிப்பட்ட ஆண்களுக்கு இடம் குடுக்கற பெண்களும் சிந்திக்கணும். எங்கேயும், எப்பவும் பெண்கள், அவங்க பழகற விதத்துலதான் மத்தவங்க எடை போடுவாங்க. ஒழுக்கமா இருக்கணும்னு தீவிரமான தீர்மானத்துல இருந்தா... தன்மானத்தை விட்டுக் குடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது.''
''நீங்க... ஹோட்டல்ல டான்ஸ் ஆடறதைப் பத்தி உங்க குடும்பத்தினரும், உங்க உறவினர்களும் என்ன நினைக்கறாங்க?''
''நடு இரவு நேரத்துல வீடு திரும்பும்போது, தூங்காம முழிச்சுட்டிருக்கற தங்கச்சிக்கு தெரியும் நான் ஹோட்டல்ல ஆடினாத்தான் எங்க குடும்ப வண்டி ஓடும்னு. உடம்பு சரி இல்லாம படுத்து இருக்கற என்னோட அம்மா, வைத்தியத்துனால உடம்பு தேறி, என்னோட கஷ்டத்துல ஒரு சின்ன பங்காவது எடுத்துக்கணும்னு துடிச்சிக்கிட்டுருக்காங்க. மத்தபடி சில உறவினர்கள், தூரத்து சொந்தக்காரங்களெல்லாம் என்னோட இந்த இரவு நேர டான்ஸ் வேலையை இழிவாத்தான் நினைக்கறாங்க. என்னை கண்ணிய குறைவா நினைக்கற அவங்களா... என் கண்ல கண்ணீர் வழியும் போது துடைக்கப் போறாங்க? அவங்களா என் தங்கைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு முன் வருவாங்க? அவங்களா எங்க அம்மாவுக்கு மருந்து வாங்கித்தர நானாச்சுன்னு உதவிக்கரம் நீட்டறாங்க? என்னைப் பார்த்தாலே 'எங்க இவ பணம்... கிணம் கேட்ருவாளோ'ன்னு பயந்து ஓடறவங்கதான் அவங்க. யார் இழிவா பேசினாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. நான் சுத்தமானவ. என் மனசு சுத்தமா இருக்கு. என்னோட இந்த டான்ஸ் ஆடற வேலை ஒரு வேலை மட்டுமில்ல அது ஒரு கலையும் கூட. அப்படித்தான் நான் மதிக்கிறேன். வேற யார் என்ன நினைச்சாலும் எனக்கென்ன அதைப்பத்தி...?''
''பெண்களுக்கு நீங்க சொல்லக் கூடிய அறிவுரை?''
''என்னோட அனுபவங்கள் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி இருக்கு, பெண்களுக்கு கல்விதான் முக்கியம். பெண்கள் சொந்தக்கால்ல நிக்கறதுக்குரிய மனதிடத்தையும் பொருளாதார வளத்தையும் கொடுக்கறது கல்விதான். உயர்கல்வி இருந்தா வாழ்க்கையில உயரலாம். தலை நிமிர்ந்து வாழலாம்.''
மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குரிய பதில்களை திறமையாகக் கூறிக் கொண்டிருந்தாள் கயல்விழி. ஷூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook