
கயல்விழி பயணித்துக் கொண்டிருந்த கால் டேக்ஸி, கயல்விழியின் வீட்டை நெருங்கியதும் நின்றது. டிரைவருக்கு பணம் கொடுத்தபின் வீட்டினுள் சென்றாள் கயல்விழி. தூங்காமல் காத்துக் கொண்டிருந்த வந்தனாவை கடிந்து கொண்டாள்.
''என்கிட்டதான் வீட்டு சாவி இருக்கே வந்தனா, நீ ஏன் தூங்காம இருக்க...? இவ்ளவு நேரமாச்சே...''
''பரீட்சைக்கு படிச்சுக்கிட்டிருந்தேன்க்கா...''
''சரி வந்தனா. நீயாவது நல்லா படி. நான் படிக்காத படிப்பையெல்லாம் சேர்த்து நீ படிக்கணும். உன்னோட படிப்புக்காக நான் செலவு செய்யறேன். நல்ல மார்க் வாங்கினா... ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.''
''சரிக்கா. நான் நல்லா படிச்சு உன்னை சந்தோஷப்படுத்துவேன்...''
''அது சரி, அம்மாவுக்கு மாத்திரை குடுத்துட்டியா?''
''குடுத்துட்டேன்க்கா... தூக்க மாத்திரையும் சேர்த்து குடுத்துருக்கறதுனால அசந்து தூங்கறாங்கக்கா.''
''சரி வந்தனா. நீ போய் தூங்கு...''
''தூக்கம் வரலைக்கா...''
''என்னது? நடுராத்திரி ரெண்டு மணிக்கு மேல ஆச்சு... தூக்கம் வரலையா?''
''ஆமாக்கா... பரீட்சைக்கு மும்முரமா படிக்கற வரைக்கும் கஷ்டம் தெரியலை. படிச்சு முடிச்சதும் நீ... எங்களுக்காக ராத்திரி... பகல் பார்க்காம உழைக்கறதை நினைச்சு ரொம்ப வேதனையா இருக்குக்கா. நீ ஒருத்தி இல்லைன்னா...''
''நான்தான் இருக்கேனே... நீ ஏன் கவலைப்படறே? என்னால படிக்க முடியலைன்னுதான் உன்னைப் படிக்க வைக்கிறேன். என்னைப் படிக்க வைக்க எனக்கு ஒரு அண்ணனோ... அக்காவோ இல்லை. உனக்கு நான் இருக்கேன். அதைப் பத்தி கவலைப்பட்டு... மனசை அலைபாய விடாம படிக்கறதைப் பத்தி மட்டும் யோசி. வேற யோசனையே இருக்கக் கூடாது. போம்மா வந்தனா... போய் படுத்துக்க. நிம்மதியா தூங்கு.''
கண்ணீர் துளிகள் பனித்திருந்த வந்தனாவின் கண்களைத் துடைத்துவிட்டாள் கயல்விழி. அவளது கைகளைப் பிடித்துக் கொண்ட வந்தனாவை அணைத்துக் கொண்டாள். பாசமலர்களாய் இருவரும் கட்டுண்டனர்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook