Lekha Books

A+ A A-

உன் மனதை நான் அறிவேன் - Page 41

Unn Manadhai Naan Ariven

சிகரெட் புகையை வளையம் வளையமாக விட்டு, அதை வேடிக்கை பார்த்தபடியே சிந்தனை வயப்பட்டிருந்தான் சுதாகர். புருவத்தின் மத்தியில் இரண்டு கோடுகள் போட்டிருக்க, சிகரெட்டின் நிகோட்டின் கறை படிந்த உதடுகள் கறுத்துப் போயிருக்க, தீய வழியிலேயே அவளது எண்ணங்கள் இருந்தபடியாலும், அவனது செயல்கள் தீயனவாக இருந்தபடியாலும் அவனது முகம், வயதுக்கு மீறிய முதுமையை அடைந்திருந்தது. நல்ல மனம் இருந்தால் தோற்றமும் நன்றாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாத மனிதனான அவன், தன் தவறான பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தான். அவன் வரச் சொல்லி மொபைலில் அழைத்தபடியால் அங்கே வந்த பாவனா, சிகரெட் புகையின் நெடி தாங்காமல் முகத்தை சுளித்தாள்.

''சுதாகர்... ப்ளீஸ்... சிகரெட்டைத் தூக்கி வீசறியா...?''

''வந்துட்டியா? வரும்போதே அதிகாரம் தூள் பறக்குது?!...''

''ப்ளீஸ்ன்னு கேக்கறதுக்கு உன்னோட அகராதியில அதிகாரம்ன்னு அர்த்தமா?....''

''அர்த்தமோ... அனர்த்தமோ...'' என்றபடியே சிகரெட்டை வாயிலிருந்து எடுத்து வீசினான் சுதாகர். தொடர்ந்தான் தன் கேள்வியை.

''என்ன உன்னோட ஃபேஷியல் வசியம், அபிலாஷ்- சரிதா ஜோடிகிட்ட ஒண்ணும் நடக்கலை போலிருக்கு?!''

''இது ஒண்ணும் சின்ன பிள்ளைங்க விளையாடற கண்ணாமூச்சி ஆட்டம் இல்லை. ஒரு தம்பதியோட தாம்பத்யத்தை ஆட்டம் காண வைக்கற ஆபத்தான வேலை. வெடிகுண்டு வைக்கற வேலையைவிட கவனமா செய்ய வேண்டிய வேலை. ரொம்ப சுலபமா ஒண்ணும் நடக்கலை அது இதுன்னு பெனாத்திக்கிட்டிருக்க?''

''பின்னே என்ன? அந்த சரிதாகிட்ட சதாசர்வமும் மந்திரம் ஓதிக்கிட்டிருந்தா போதுமா? மந்திரத்தோட பலன் தெரிய வேண்டாமா?''

''என்ன இது? மந்திரம்.... தந்திரம்ன்னுகிட்டு? சூமந்திரக்காளி போட்டு மாயாஜால வித்தை காட்டறவளா நான்? நல்ல மனசை கலைக்கறோமோங்கற மனக் கஷ்டத்தோட போராடிக்கிட்டிருக்கேன். ஆனா அதே சமயம் உன்கிட்ட வாங்கப் போற தொகைக்கான நடவடிக்கைகளை தவறாம செஞ்சுகிட்டுதானே இருக்கேன். சும்மா என்னை தொந்தரவு பண்ணாதே. என்னை என்னோட போக்குல விட்டுடு. உன்னோட திட்டப்படி, எல்லாமே நடக்கும்.''

''கோவிச்சுக்காத பாவனா. என்னை ஏமாத்தின அந்த சரிதா... அவ புருஷனோட சந்தோஷமா வாழவே கூடாது. அவங்க பிரியணும். அதைப் பார்த்து நான் ரஸிக்கணும். எம் மனசுல ஆசை விதை விதைச்சுட்டு அந்த ஆசை, மரமாகி வளர்ந்தப்புறம் வேரோட வெட்டி சாய்ச்சுட்டா. அதே போல அவ அமோகமா வாழற அந்த குடும்ப வாழ்க்கை நாசமாகணும். அந்த நாளை சீக்கிரமா பார்க்கணும்...''

''சீக்கிரமா பார்க்கறதுக்கு இது என்ன வாண வேடிக்கையா? தீ பத்தவச்ச உடனே புஸ்னு எழும்பற பூவாணமா? கல்யாணம்ங்கற புனிதமான சடங்கைப் பத்தியும், இல்லறம்ங்கற சந்தோஷமான வாழ்க்கையைப் பத்தியும் உனக்கு என்ன தெரியும்? உனக்கு தெரிஞ்சதெல்லாம் பணமும் பகட்டும்தானே? பாசத்தைப் பத்தியும், குடும்ப நேயத்தைப் பத்தியும் உனக்கு என்ன தெரியும்?''

''சும்மா நிறுத்து பாவனா... அன்பு, காதல், அதோட வெற்றி, சந்தோஷம் இதெல்லாம் தேவைப்படற சராசரி மனுஷன்தான் நானும். சின்னஞ்சிறு வயசுல இருந்து அம்மாவோட அன்புக்காக ஏங்கினவன் நான். அப்பாவோட தோளுக்காக ஏங்கினவன் நான். அண்ணன், அக்கா, தம்பிகளோட அரவணைப்புக்காக ஏங்கினவன் நான். 'அம்மா'ன்னு கூப்பிட தாய் இல்லை. மகனேன்னு கூப்பிட அப்பா இல்லை. யாருமே இல்லாம... தானாக வளர்ந்த மனிதன் நான். வறட்சியாகிப் போன என் மனசு, புரட்சி செய்ய ஆரம்பிச்சது. அம்மா, அப்பாவைத் தவிர மத்த அனைத்தையும் விலைக்கு வாங்கலாம்ன்னு எனக்கு நானே ஒரு மூர்க்கத்தனத்தை வளர்த்துக்கிட்டேன். மனசாட்சியை மறைய வச்சேன். களவு, ஏமாற்றிப் பிழைக்கறதுன்னு என்னோட 'ரூட்'டை புரட்டிப் போட்டேன். என்னோட அடாத நடவடிக்கைகளைப் பார்த்து அடங்காதவங்க கூட அடங்கினாங்க. பயத்துல மடங்கினாங்க. என்னோட அந்த முரட்டுத்தனம்தான் மத்தவங்க என்னைப் பார்த்து பயப்பட வைக்குதுன்னு புரிஞ்சுக்கிட்ட நான், மேல மேல வன்முறைகளை செய்ய ஆரம்பிச்சேன். அதில எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் குடுத்தது பணம்தான். நேர்வழியில வருதோ... குறுக்கு வழியில வருதோ...

பணம்தான் பிரதானம்ன்னு புரிஞ்சுக்கிட்ட நான், குறுக்கு வழிதான் சுலபமான வழின்னு தெரிஞ்சு. அந்த வழியில நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். பணம் எனக்கு குடுக்கற சந்தோஷம் வேற எதிலயும் இல்லை. பெண்களோட அத்யாவசிய தேவைகளைப் புரிஞ்சுகிட்ட நான், என்னோட திட்டங்களை பெண்களை மையமா வச்சு தீட்டினேன். தொடர்ந்து வேற பல வழிகளில்லயும் என்னோட கபட புத்தியை தீட்டினேன். வெற்றிடமா இருந்த என் மனசுல சரிதா வந்து சேர்ந்தா. ஆனா... அதுவும் பாதியில் அறுந்த காத்தாடி போல ஆடிப்போச்சு.....''

குறுக்கிட்டாள் பாவனா.

''ஆடி அடங்கறதுதான் வாழ்க்கை. ஆறடி நிலம்தான் சொந்தம்ன்'னு கவிஞர்கள் எழுதி, இருக்காங்க. இந்த உலகத்துல உயிரோட வாழற வரைக்கும் நம்பளால முடிஞ்ச நல்லதை செய்யணும். சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் சாக்கா வச்சுக்கிட்டு நாம செய்யற தப்புக்களை நியாயப்படுத்தக் கூடாது...''

பலமாக சிரித்தபடி பேச ஆரம்பித்தான் சுதாகர்.

''சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் குற்றம் சொல்லி சம்பாதிக்கற நீ... எனக்கு அறிவுரை சொல்றியா?''

''அனுபவங்கள் குடுக்கற பாடங்கள்தானே அறிவுரைகளா வெளிப்படுது? படிச்சிருந்தா... கிடைச்ச வேலையை செஞ்சு பிழைச்சுருப்பேன். கௌரவம் பார்க்காம வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு செய்யப் போன இடத்துல பாலியல் தொல்லையால நான் அவதிப்பட்ட அவலம்தான் உனக்கு தெரியுமே? அழகா பிறந்தது என்னோட அதிர்ஷ்டம்னு சின்ன வயசுல நினைச்சு சந்தோஷப்பட்டிருக்கேன். ஆனா அழகா பிறந்தது என்னோட துரதிர்ஷ்டம்ன்னு வளர வளர... புரிஞ்சுக்கிட்டு வேதனைப்பட்டுட்டிருக்கேன். கல்விதான் காலத்துக்கும் கை குடுக்கும். கல்விதான் கஷ்டகாலத்துல கை குடுக்கும்ன்னு பெரியவங்க சொன்னாங்க. அவங்க சொன்னபடி... படிக்கறதுக்கு அந்த ஆண்டவன் படி அளக்கலியே? படிப்பு இல்லாததுனால... நயவஞ்சகர்களிட்ட சிக்கிக்கிட்டு சீரழிஞ்சு போனேன். 'செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறினா என்ன'ன்னு டைரக்டர் பாக்யராஜ் ஸார் ஒரு படத்துல வசனம் எழுதி, பேசி இருப்பாரு. அது மாதிரி ஒரு தடவை நாசமாகிப்போன கற்பு, எத்தனை தடவை நாசமாகிப் போனா... என்னன்னு விரக்தியாயடுச்சு. படிக்க வசதி இல்லாத ஒரு வறுமையான சூழ்நிலையில... படுக்கையில பத்து பேரோட படுத்துக் கிடக்கற விதியாயிடுச்சு. அந்த இழிவான வருமானம் இனி வேண்டாம்னுதானே மனசாட்சியை அடகு வச்சு, சீ சொல்ற இந்த அநியாயமான காரியத்தை செய்யத் துணிஞ்சிருக்கேன். பகட்டுக்கும், பணக்கார ஆசைகளுக்கும் ஆளாகியா நான் அந்த மோசமான வழிக்குப் போனேன்? ஒரு பொண்ணு, தன்னோட மானத்தை வித்து வந்த வருமானத்தை, பதுக்கி வச்சுக்கிட்டவன்தானே நீ? அந்தப் பணத்தை கேஸ் போட்டு திரும்ப கேட்கறதுக்கு கடன் பத்திரமா இருக்கு என்கிட்ட? உன்னோட பழி வாங்கற படலத்தை வெற்றிகரமா முடிச்சப்பறம் அதுக்கு பேசின தொகையை உன்கிட்ட இருந்து வாங்கின அடுத்த நிமிஷத்துல இருந்து நீ யாரோ... நான் யாரோ...''

அதற்கு மேல் பேச அவளது கோப நெருப்பு, தண்ணீர் பட்ட தணலாய் அணைந்து போய், அந்தத் தண்ணீர் அவளது கண்களில் கண்ணீராய் வழிந்தது. அவளது உள்ளம் உடைந்து நொறுங்கிப் போய் கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்தது.

''ஸாரி... பாவனா... நம்ம பேச்சு இப்பிடி ஒரு பிரச்னையில முடியும்ன்னு நான் எதிர்பார்க்கலை...''

அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாத பாவனா, எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel