
சரிதாவின் வீட்டிற்கு சென்றாள் கயல்விழி. கயல்விழியைப் பார்த்த சரிதாவின் முகத்தில் வழக்கம் போல தென்படும் மகிழ்ச்சி இல்லை.
'என்ன ஆச்சு சரிதாவுக்கு?' என்ற நினைத்தபடியே உள்ளே நுழைந்தாள் கயல்விழி.
'ஹாய், பூய்' என்று கூவி அழைத்து கட்டிப்பிடித்துக் கொள்ளும் சரிதா, அன்று சற்று எட்டியே நின்றாள்.
''என்ன இது? ஃபோன் கூட பண்ணாம வந்திருக்க?''
இப்படி ஒரு கேள்வியை சரிதாவிடமிருந்து கயல்விழி எதிர்பார்க்கவில்லை.
அவளது முகம் வாடியது. அப்போது மாடி அறையில் இருந்து அபிலாஷ் இறங்கி வந்தான்.
''அட... கயல்விழி... ஸர்ப்ரைஸ் விஸிட்டா இருக்கே?'' அபிலாஷ், சிரித்த முகத்துடன் கேட்டான்.
''என்ன அபிலாஷ்... நீங்களும் வீட்லதான் இருக்கீங்களா? நல்ல வேளை இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்கீங்க. ஜாலியா பேசிக்கிட்டிருக்கலாம். மேடம் சரிதாதான் கொஞ்சம் 'மூட்' சரி இல்லாதது மாதிரி தெரியுது...'' பேசியபடியே சரிதாவின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள் கயல்விழி.
''சரிதா... 'மூட்' அவுட்டா? ச்சான்ஸே இல்லை... இவ்ளவு நேரம் ஜாலியாதானே பேசிக்கிட்டிருந்தா?''
''உங்க கூட பேசறதுன்னா ஜாலியாத்தான் இருக்கும்...''
''சரி... ஏன் நின்னுக்கிட்டே இருக்க? உட்காரு... உன் கூடயும் ஜாலியா அரட்டை அடிக்கறேன்...''
கயல்விழி உட்கார்ந்தாள்.
''அப்புறம்? டான்ஸ் ப்ரோக்ரம் எல்லாம் எப்பிடி போய்க்கிட்டிருக்கு? டான்ஸை பார்த்து மயங்கிப் போற மன்மத ராசாக்கள் பண்ற ஜொள்ளாட்டமெல்லாம் தொடர்ந்து நடக்குதா?''
''அதெல்லாம் வாடிக்கையா நடக்கற வேடிக்கை... என்னோட டான்ஸையா ரஸிக்கறாங்க? என்னைத்தானே ரஸிக்கறாங்க...''
''உன்னைப் போல அழகான பொண்ணு நாலு பேர் பார்க்கற பொது இடத்துல ஆடும்போது ஏற்படற சங்கடங்கள் இயல்பானது...''
அபிலாஷ் கூறிய 'உன்னைப் போல அழகான பொண்ணு' என்கிற வார்த்தை, சரிதாவின் மனதை சுட்டது. 'உங்க கூட பேசினா ஜாலியாத்தான் இருக்கும்' என்று அபிலாஷிடம் கயல்விழி கூறியதும் அவளுக்குக் கடுப்படித்தது.
'பாவனா சொன்னது சரிதானோ?! இவர் என்னடான்னா கயல்விழியை அழகுங்கறார். அவ என்னடான்னா அபிலாஷ் கூட பேசினா ஜாலியா இருக்கும்ங்கறா... நானே இடம் குடுத்துட்டு... இப்ப... தடம் புரண்டு போயிடுமோன்னு பயப்படறேனோ... '
''சரிதா... என்ன மௌன விரதமா?'' கயல்விழி சரிதாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.
'விரதமா? விரோதமா? எனக்கே புரியலியே' மனதிற்குள் குழம்பிய சரிதா, நினைவுகளை ஒதுக்கிவிட்டு பேச ஆரம்பித்தாள்.
''திடீர்னு அம்மா... அப்பாவோட நினைப்பு வந்திருச்சு.''
''அடடே... ஸாரி சரித்...''
''சச்ச... ஸாரியெல்லாம் எதுக்கு? என்னோட இந்த கவலை புதுசா என்ன?''
''அடிக்கடி உன்னோட அம்மா, அப்பா ஞாபகம் வந்து நீ வருத்தப்படறதும் ஸ்ட்ரெஸ் ஆகறதும் எனக்குத் தெரியாதா? நீ சந்தோஷமா வாழறதைப் பார்க்க, அவங்களுக்கு குடுத்து வைக்கலை. அவங்களை நினைச்சு நீ இப்பிடி கஷ்டப்படறதை விட... நீ சந்தோஷமா இருந்தா தெய்வமாகிட்ட அவங்க ஆத்மா சாந்தி அடையும்.''
தான் கூறிய சமாளிப்பான பொய்யை உண்மை என நம்பி.. வெகுளித்தனமாக தனக்கு ஆறுதல் கூறும் கயல்விழியைப் பார்க்க சரிதாவிற்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. அவளை சமாதானப்படுத்தும் விதமாக சரிதா பேசினாள்.
''உன்னோட ஆறுதல் வார்த்தைகள் எனக்கு நிம்மதியைக் குடுக்குது. வீடு தேடி வந்திருக்கற உன்னை சரியா கவனிக்க கூட முடியாத மனநிலை...''
''யப்பாடா... இப்பத்தான் என்னோட பழைய சரிதாவைப் பார்க்க முடியுது. நீ இப்பிடி 'மூட் அவுட்' ஆகி நான் பார்த்ததே இல்லை. அதனால... என்னமோ... ஏதோன்னு பதறிப் போயிட்டேன்...''
அப்போது அபிலாஷ் குறுக்கிட்டான்.
''நான் ரெக்கார்டிங் கிளம்பணும். சரிதா... நான் கிளம்பறேன்மா...'' என்றவன், கயல்விழியிடம் ''கயல்விழி... உன்னை கொண்டு போய் விட்டுடறேன்... கிளம்பு...''
அப்போது அவசர அவசரமாக, ஒருவித பதைபதைப்புடன் சரிதா கூறினாள். ''வே... வேண்டாங்க. கயல்விழி இங்கே இருக்கட்டும். அவ இன்னும் கொஞ்ச நேரம் என் கூட இருந்துட்டு போகட்டும்.''
''ஓ.கே. கயல்விழி உன் கூட இருந்தா உனக்கு மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். நான் புறப்படறேன்.''
கயல்விழியிடமும், சரிதாவிடமும் விடைபெற்று கிளம்பினான் அபிலாஷ்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook