
அபிலாஷ், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்தான். காதுகளில் ஹெட் ஃபோனைப் பொருத்திக் கொண்டு இசையை ரஸித்துக் கொண்டிருந்தான். ஸ்டுடியோவில் பணிபுரியும் சீனிவாசன் எனும் இளைஞன், அபிலாஷ், ஹெட் ஃபோனை காதிலிருந்து எடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
அபிலாஷ், ஹெட் ஃபோனை எடுத்தான். அங்கே நின்ற சீனிவாசனை பார்த்தான்.
''என்ன சீனி... என்ன விஷயம்?''
''உங்களைப் பார்க்க ஹேமரஞ்சனின்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்க ஸார். புது நடிகையாம்.''
''என்ன சீனி இது... நடிகைன்னா... சினிமா டைரக்டரைத்தான் பார்க்கணும். ம்யூஸிக் டைரக்டரை பார்க்க வந்திருக்காங்க?!..''
''ரொம்ப நேரமா காத்திருக்காங்க ஸார்...''
''சரி... உள்ள வரச்சொல்லு...''
சீனிவாசன் வெளியே சென்று, ஹேமரஞ்சனியை உள்ளே அனுப்பினான். புன்னகைப்பூ பூத்தபடி உள்ளே வந்தாள் ஹேமரஞ்சனி. இளமை அவளிடம் கொட்டிக்கிடந்தது. தளதளவெனும் பருவம் அவளது உடலில் அழகையும், கவர்ச்சியையும் அள்ளித் தெளித்திருந்தது. பதினெட்டு வயது கூட நிறையாத இளம் வயது எனினும் வயதிற்கு மீறிய வனப்பும் அவளது உடலில் மின்னியது.
முகமும் சந்திர பிம்பம் போல ஜொலித்தது. கரிய விழிகளும், சிறிய உதடுகளும் அவளது அழகை மேலும் மேன்மைப்படுத்தியது. காண்போரை நிலைதடுமாற வைக்கும் இந்த அழகுப் பெண், திரைப்படத்தில் நடிப்பதற்கு தேர்வானதில் ஆச்சர்யம் இல்லை.
அவள் அபிலாஷைப் பார்த்ததும் பரபரப்பானாள்.
''அபிலாஷ் ஸார்... உங்க பாட்டுன்னா எனக்கு உயிர். என்னோட கம்ப்யூட்டர்ல, என்னோட கார் ஆடியோ ப்ளேயர்ல, என்னோட 'ஐ-பாட்'ல எல்லாத்துலயும் உங்க பாட்டுதான்.''
தன்னைப் பற்றி ஏதும் சொல்லிக் கொள்ளாமல், பார்த்த உடனே பரவசமாகி, வளவளவென்னு பேசிக்கொண்டே போனாள்.
அவளது ஒவ்வொரு பாராட்டுதலுக்கும் 'தேங்க்ஸ், தேங்க்ஸ்' என்று சொல்லிக் கொண்டே இருந்தான் அபிலாஷ். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினாள்.
''ஸார்... உங்களை நிறைய சினிமா விழாக்கள்ல்ல பார்த்திருக்கேன். டி.வி.யில பார்த்திருக்கேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. ஒரு ஹீரோ மாதிரி இருக்கீங்க... நீங்க படத்துல நடிச்சா... நீங்கதான் 'நம்பர் ஒன்'னா இருப்பீங்க. உங்களோட சுருட்டை முடியில என் மனசு சுருண்டு கெடக்கு...''
ஹேமரஞ்சனியின் பேச்சு வேறு விதமாக திசை மாறியதைக் கேட்ட அபிலாஷ் திகைத்தான். அபிலாஷின் முகமாறுதலையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்பது போல பொரிந்து தள்ளினாள்.
''உங்களை முதல் முதல்ல பார்த்ததுல இருந்து என்னோட மனசு என்கிட்ட இல்லை. என் கிட்ட இருந்த மனசு உங்ககிட்ட இருக்கான்னு பார்க்கணும். ஐ லவ் யூ அபிலாஷ் ஸார்.''
அவள் கூறியதைக் கேட்ட அபிலாஷ் மேலும் அதிர்ச்சி அடைந்தாள். பின்னர், சமாளித்து பேசினான்.
''இங்க பாரு. நீ சின்ன பொண்ணு. இந்த வயசுல வர்ற ஆர்வக் கோளாறுல ஏதேதோ பேசற. இது தப்பு. புதுசா நடிக்க வந்திருக்கறதா சொன்னாங்க. நடிகையா வர்றதுக்குரிய தகுதி உனக்கு இருக்கு. உன் திறமையை பத்தி உனக்குதான் தெரியும். திறமை இல்லாம ஒரு டைரக்டர் உனக்கு திரைப்படத்துல வாய்ப்பு குடுத்திருக்க மாட்டார். அதனால நடிப்புல உன் மனசை செலுத்து. இவ்வளவு சின்ன வயசுல காதல்ங்கறதெல்லாம் தேவையில்லாத விஷயம். வாழ்க்கையில முன்னுக்கு வர்றதுக்கு முயற்சி எடுக்கணும்... இப்ப நீ பேசினதெல்லாம் நீ பேசினது இல்லை. உன்னோட வயசு அப்பிடி பேச வைக்குது. கொஞ்சம் முயற்சி பண்ணி நீ கால் வச்சிருக்கற துறையில உன் மனசை ஈடுபடுத்து... நடிச்சு நல்ல பேர் எடு. சிறந்த நடிகைன்னு பேர் வாங்கு...''
ஹேமரஞ்சனி அவளது போக்கில் பேச்சைத் தொடர்ந்தாள். ''நடிகைன்னு பேர் வாங்கறதைவிட ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷேரட மனைவிங்கற பேர்தான் எனக்கு பெருமை...''
''இங்க பாரும்மா. நான் கல்யாணமானவன். என்னோட மனைவி மேல என் உயிரையே வச்சிருக்கேன்.''
''ஒரு செடியில பல பூக்கள் பூக்குதே ஸார்.''
இதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அபிலாஷ்.
'எல்லாம் தெரிஞ்சுதான் இப்பிடி உளறிக்கிட்டிருக்கா இந்தப் பொண்ணு' உள்ளுக்குள் ஓடிய எண்ணத்தை வெளிக்காட்டாமல் தொடர்ந்து பேசினான் அபிலாஷ். இப்போது அவனது குரலில் கடுமை தொனித்தது.
''நீ சொல்ற பூ விஷயம்... தாவர இனத்துக்கு பொருந்துமே தவிர மனித இனத்துக்கு இல்லை. நாம மனுஷங்க. வாழறது ஒரு முறை. அந்த வாழ்க்கையை வரைமுறையோட வாழணும். நிலை மாறும் மனசோட நீ எடுக்கற முடிவு தப்பு. திருமண வாழ்க்கையிலதான் ஈடுபாடுன்னு உறுதியான முடிவுல நீ இருந்தா... ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணிக்க...''
''எனக்கு நீங்கதான் நல்லவர்... வல்லவர் எல்லாமே. என்னவரா... நீங்க எனக்கு கிடைக்கணும்...''
தான் சொல்வதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் இஷ்டப்படி பேசிக் கொண்டே போன ஹேமரஞ்சனியைப் பார்த்து கோபத்தின் உச்சிக்குப் போனான் அபிலாஷ்.
''ஷட் அப். ஒரு பொண்ணாச்சேன்னு இவ்ளவு நேரம் பொறுமையா பேசினேன். என் பொறுமையை சோதிக்காதே...''
''எனக்கு பாடம் போதிக்காதீங்க அபிலாஷ் ஸார். நீங்க எனக்கு ஊர் அறிய தாலி கட்ட வேண்டாம். உங்களோட மனசுங்கற நிழல்ல ஒதுங்கி வாழ ஒரு சின்ன இடம் குடுத்தா போதும்...''
''இதுக்கு மேல எதுவும் பேசாதே. என்னோட மனசு முழுசும் என் மனைவி சரிதா நிறைஞ்சிருக்கா. அவதான் என் உயிர். என் உலகம். என் ஜீவன். எந்த ரதி, ரம்பை வந்தாலும் என் மனசு அசையாது...''
''என்ன ஸார் இது... திரைப்பட உலகத்துல இருந்துக்கிட்டு இப்பிடி பேசறீங்க...?!''
''திரைப்பட உலகத்துல இருக்கறவங்கன்னா திரைமறைவான வாழ்க்கை வாழறவங்கன்னு அர்த்தமா? திரைஉலகத்துல இருக்கறவங்களும் மனுஷங்கதான். அவங்களுக்கும் குடும்பம், குழந்தைன்னு நல்லபடியான வாழ்க்கை இருக்கு. சினிமா உலகம்ன்னா ஒழுக்கம் கெட்டுப் போற உலகம்ன்னு சினிமாவுல நடிக்க வந்திருக்கிற நீயே பேசறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.''
''நியாயமான என்னோட ஆசையை நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க...''
''எது நியாயம் எது நியாயம் இல்லைன்னு எனக்குத் தெரியும். நீ ஒரு நடிகை. போக வேண்டியது ஷுட்டிங் நடக்கற இடத்துக்கு. என்னோட ஸ்டூடியோவுக்கு இல்லை. ஒரு பெண்கிட்ட முரட்டுத்தனமா பேசறது நாகரீகம் இல்லைன்னுதான் நான் இவ்ளவு நேரம் உன்கிட்ட பேசினேன். இனி எதுவும் பேசாதே. 'கெட் அவுட்'ன்னு என்னை சொல்ல வைக்காதே...''
அபிலாஷின் கோபமான வார்த்தைகள் அவளது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மௌனமாக வெளியேறினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook