
விசாலமான படுக்கை அறையில் அழகிய தேக்கு மரக்கட்டில் போடப்பட்டிருந்தது. அதன்மீது சொகுசான மெத்தையும் அதன்மீது ஷேரலாப்பூர் வேலைப்பாடுகள் நிறைந்த ஆடம்பரமான விரிப்பு விரிக்கப்பட்டு, வெல்வெட் உறைகள் போடப்பட்ட தலையணைகள் போடப்பட்டிருந்தன. தலையணையில் தன் முகம் பதித்து அழுது கொண்டிருந்தாள் சரிதா. சாலை விபத்தில் ஒரே நேரத்தில் தன் பெற்றோரை இழந்துவிட்ட துயரம், நினைவிற்கு வந்து அவ்வப்போது சரிதா அழுவது வழக்கம்.
ஆனால் அன்று, அவள் அழுததற்கு வேறு காரணம் இருந்தது. சுதாகரின் மிரட்டலால் பயந்து போய், செய்வதறியாது அழுது கொண்டிருந்தாள்.
கண்களில் கண்ணீர் பெருகியதால் ஐ லைனர் கலைந்து வழிந்திருந்தது. கண்களும், மூக்கும் வீங்கி, சிவந்து காணப்பட்டது. கண்ணீரின் ஈரத்தால் தலையணையும் அவளது புடவையும் நனைந்திருந்தது.
அபிலாஷின் காலடியோசை கேட்டது. அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கி, மூக்கு வீங்கி இருப்பதைக் கவனித்த, அபிலாஷ், மனம் பதறினான்.
''என்னம்மா... உங்கப்பா, அம்மா ஞாபகம் வந்துருச்சா?'' வழக்கமாய் சரிதா அதற்குதான் அழுவாள் என்பதால் கேட்டான் அபிலாஷ்.
''அ... அ... ஆமாங்க. ரோட்ல ஓரமா வாக்கிங் போய்க்கிட்டிருந்த எங்கம்மா, அப்பாவுக்கு குடிகார டிரைவர் ஓட்டிக்கிட்டு வந்த லாரி எமனாயிடுச்சு. விபத்து நடந்த அந்த இடத்துலயே அவங்க ரெண்டு பேரும் ரத்த வெள்ளத்துல செத்துக்கிடந்ததை பார்த்த அந்த அதிர்ச்சி என்னோட நினைவுக்கு வந்துடுது. நான் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வர்ற வழி அந்த வழிதான். என் கண்ணால பார்த்த அந்த கொடுமையான காட்சி இன்னும் என்னோட கண்ல இருந்து நீங்கலை. ஒரே நேரத்துல பெத்தவங்க ரெண்டு பேரையும் பறி குடுத்துட்ட அந்த துயரத்தை என்னால மறக்கவே முடியலை...'' சுதாகரால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையுடன், கூடவே பெற்றவர்களின் பிரிவுத் துயரம் பற்றி பேச ஆரம்பித்தபின் மேலும் கதறி அழுதாள் சரிதா. அதைப் பார்த்துப் பதறிப்போன அபிலாஷ், அவளை அள்ளி, அணைத்து அவளது கண்களைத் துடைத்துவிட்டான்.
''உனக்கு அம்மாவா... அப்பாவா... கணவனா... துணைவனா... நண்பனா... எல்லாமே நான் இருக்கும்போது எதுக்கு இந்தக் கண்ணீர்? பெத்தவங்களை இழந்து தவிக்கிறது பெரிய சோகம்தான். கொடுமைதான். அதுக்காக? அதையே நினைச்சுக்கிட்டு அழுதுகிட்டே இருந்தா? நீ அழறதைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கே...''
''சரிங்க... நான் அழலை...''
''நீ சந்தோஷமா இருந்தாத்தான் நான் என்னோட ம்யூஸிக் வேலையில முழுமையா கவனம் செலுத்த முடியும். உனக்கு என்ன குறை? நான் பிரபலமான ம்யூஸிக் டைரக்டர்னு பேர் வாங்கி இருக்கேன். பாப்புலரான இசை அமைப்பாளரோட மனைவிங்கற பெருமையை உனக்கு குடுத்திருக்கேன். எல்லா விஷயத்துலயும் உனக்கு சுதந்திரம் குடுத்திருக்கேன். இதுக்கெல்லாம் மேல... நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். இதைவிட உனக்கு வேற என்ன வேணும்? எப்பவும் இருக்கறதப்பத்தி நினைச்சு சந்தோஷமா வாழணும். இல்லாததப்பத்தி நினைச்சுப் பார்த்து சோகமா இருந்தா... மனசு தவிச்சுப்போகும். மனுஷப்பிறவியா பிறக்கறது ரொம்ப பெரிய, அரிதான விஷயம்ன்னு சொல்லுவாங்க. அதனால இந்தப் பிறவியில, ஒவ்வொரு நிமிஷமும் வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிச்சு வாழணும் 'லிவ் எவ்ரி மூவ்மெண்ட்'ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. அது நூத்துக்கு நூறு சரியானது. நடந்ததையே மறுபடி மறுபடி நினைச்சிக்கிட்டிருக்கறது வீணான மன உளைச்சலைத்தான் குடுக்கும். இப்ப... இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கா? அதை அனுபவி. 'ஃப்ளாஷ் பேக்'குக்கே போகாதம்மா.''
''சரிங்க...''
''கொஞ்சம் சிரிங்க...''
''என்னங்க நீங்க... போங்க...''
''போகவா...?''
''ம்கூம்... வாங்க...'' சிணுங்கியபடி அவனை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டபோது பெரிய நிம்மதி கிடைத்தது. ஆனால் மறுகணம், சுதாகரின் பயமுறுத்தல், நினைவில் தோன்றி அவளை சித்ரவதைப் படுத்தியது. என்றாலும் அபிலாஷின் அன்பான ஆறுதல் வார்த்தைகளை நினைத்து, தன்னை சமாளித்துக் கொண்டாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook