Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நிர்வாண நிஜம் - Page 2

இளையராஜா வரவில்லை - இறுதி மூச்சு நின்றுவிட்டது!

சுரா

ண்ணூர் ராஜன் - இவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். மலையாளத்தில் நிறைய திரைப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட காலமாக மலையாளப் படங்களுக்கு இசையமைத்து வரும் இவரை நான் 1991-ஆம் ஆண்டில் பார்த்தேன்.

மலையாள படங்களுக்கு இசையமைத்தாலும், இவரின் வீடு இருந்தது சென்னை சாலிக்கிராமம் பகுதியில்தான். எனக்கு மலையாள திரைப்படப்பாடல்களின்மீது எனக்கு இருந்த அளவற்ற ஈடுபாட்டின் காரணமாக எங்களுக்கு இடையே நெருங்கிய நட்பு உண்டானது.

ஒரு நாள் என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்தார் கண்ணூர்ராஜன். மூன்று நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதை தானே இசையமைத்து, இயக்கப் போவதாகவும் அவர் சொன்னார். 'நல்ல விஷயம்தான்' என்று நான் பாராட்டினேன். புதிய கதாநாயகன் ஒருவரை தான் அறிமுகப்படுத்தப் போவதாகவும், கதாநாயகியாக தன்னுடைய மகள் சோஹினியைப் போட இருப்பதாகவும் சொன்னார். இன்னும் பத்து நாட்களில் தொடக்கவிழா நடக்க இருப்பதாகவும், இளையராஜாவை விழாவிற்கு அழைத்திருப்பதாகவும் சொன்னார். பூஜையில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைக்க இளையராஜா சம்மதித்திருப்பதாக கண்ணூர்ராஜன் கூறினார்.

''இளையராஜா ரொம்பவும் பிஸியான இசையமைப்பாளராயிற்றே! அவர் சாதாரணமாக வெளி கம்பெனிகளின் பூஜைக்கு வருவதே இல்லையே! தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று இருக்கக் கூடிய மனிதராயிற்றே அவர்! எப்படி அவர் உங்கள் படத்தின் பூஜைக்கு வருவதற்கு சம்மதித்தார்?'' என்று நான் கண்ணூர்ராஜனைப் பார்த்துக் கேட்டேன். அதற்கு அவர் ''இளையராஜாவை எனக்கு இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே தெரியும். 'நான் டைரக்ட் பண்றதா இருக்கற படத்தைப் பற்றி ராஜாக்கிட்ட சொன்னேன். “ராஜா, நீங்க பெரிய இசை மேதை. நீங்க வந்து என் படத்தை ஆரம்பிச்சு வைக்கணும்ன்றது என்னோட விருப்பம். ராசியான கைக்குச் சொந்தக்காரர் நீங்க. அந்த ராசி எனக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும்'னு ராஜாகிட்ட சொன்னேன். கட்டாயம் வர்றேன்னு சந்தோஷமா சொல்லி அனுப்பினார் ராஜா” என்றார் கண்ணூர்ராஜன்.

தொடர்ந்து, தனக்கு அருகில் இருந்த ப்ரீப்கேஸை திறந்து ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் தந்தார். அதில் வேஷ்டி, ஜிப்பாவுடன் இளையராஜா நின்றிக்க, அவரின் தோள்மீது பந்தாவாக தன் கையை போட்டபடி நின்றிருந்தார் கண்ணூர் ராஜன். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் அது என்பது படத்தில் இருந்த இளையராஜாவைப் பார்த்தபோதே தெரிந்தது. மலையாள பாடல் பதிவின்போது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இளையராஜாவின் தோள்மீது இவ்வளவு சுதந்திரமாக கையைப் போட்டு படமெடுத்தவர் கண்ணூர் ராஜன் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். அதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

மறுநாள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய நீல நிற மாருதி காரில் என்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் கண்ணூர் ராஜன். தன் மனைவியையும், இரண்டு மகன்களையும், படத்தில் நடிப்பதாக இருந்த மகள் சோஹினியையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரின் மகள் சோஹினியின் சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்த ராதிகாவின் சிரிப்பை அந்தப் பெண்ணின் சிரிப்பு எனக்கு ஞாபகப்படுத்தியது. வெள்ளைச் சிரிப்பு என்று சொல்வார்களே, அது அந்தப் பெண்ணின் சிரிப்பாகத்தான் இருக்க முடியும்! தன்னுடைய இரண்டு மகன்களையும் இசைக் கருவிகளை இசைப்பதில் பழக்கிவிட்டிருந்தார் கண்ணூர் ராஜன். மூத்த மகன் கிடார் வாசிப்பதைக் கேட்டேன். அவரின் இளைய மகன் (வயது அவனுக்கு அப்போது பத்து அல்லது பன்னிரண்டுதான் இருக்கும்) பிரமாதமாக தபேலாவும், மிருதங்கமும் இசைப்பதைப் பார்த்தபோது, அந்தப் பையனை அப்படியே செல்லமாக வாரி எடுத்து கொஞ்ச வேண்டும் போல் எனக்கு இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் கண்ணூர் ராஜனின் வீட்டில் இருந்தேன். நல்ல ஒரு மகிழ்ச்சி நிலவும் குடும்பத்தைச் சந்தித்த மன நிறைவு எனக்கு அப்போது உண்டானது.

இளையராஜாவுடன் தான் நின்றுகொண்டிருக்கும் புகைப் படத்தைப் போட்டு படத்திற்கான பூஜை அழைப்பிதழை அச்சிட்டிருந்தார் கண்ணூர் ராஜன். என்னிடம் சில புகைப்படங்களை அவர் தர... நான் அவற்றைச் சில பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்தேன். இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையே இருக்கும் நட்பை பத்திரிகைகளில் நான் சொல்லியிருந்தேன். படவுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் கண்ணூர் ராஜன் அச்சடித்த பூஜை அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

படத்தின் தொடக்க விழா நாள் வந்தது. அன்றைய தினம் காலையில் வெளிவந்த, 'தினத்தந்தி' நாளிதழில் இளையராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்திருந்தார் கண்ணூர் ராஜன். இளையராஜாவை வரவேற்று வாசலில் துணி பேனர் கட்டியிருந்தார்கள். பூஜை தொடங்குவதற்கான நேரம் வந்தது. இளையராஜாவை எதிர்பார்த்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குச் சொந்தமான கோதண்டபாணி ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. ஆனால், இளையராஜாவைத்தான் காணவே காணோம்! இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். அடுத்த நிமிடம் காரை எடுத்துக் கொண்டு வேகமாக கண்ணூர் ராஜன், பிரசாத் ஸ்டூடியோவை நோக்கிப் போனார். இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். அவர் திரும்பி வந்தார்- தொங்கிய முகத்துடன்! இளையராஜா பூஜைக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம். கடுப்பாகிப்போன கண்ணூர் ராஜன், பூஜையை ஆரம்பிக்கும்படி சொன்னார். இளையராஜாவை வரவேற்று கட்டியிருந்த துணியை உடனடியாக அவிழ்க்குமாறு கூறினார். இளையராஜா இல்லாமலே பூஜை நடந்தது.

பாடல் பதிவு நடந்தது. ஆனால் படம் அத்துடன் நின்று போனது. படம் மட்டுமா நின்றுபோனது? இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் கண்ணூர் ராஜனின் இதயத்துடிப்பே நின்று போனது.

புகழ் பெற்ற ஒரு கலைஞனின் வாழ்க்கை முடிந்து போனதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள். அதுதான் சினிமா!

கண்ணூர் ராஜன் சிறந்த இசையமைப்பாளர். மலையாளத்தில் மறக்க முடியாத பல படங்களுக்கு இசையமைத்தவர். அவற்றில் மோகன்லாலும், ரேவதியும் நடித்து, ப்ரியதர்ஷன் இயக்கிய 'சித்ரம்' மிகப் பெரிய வெற்றிப் படம், வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி வரலாறு படைத்த அந்தப் படத்தில் இசையமைத்ததற்காக கண்ணூர் ராஜனுக்கு விருது கிடைத்தது. தனது இசையில் தமிழ் இசையமைப்பாளர் ஒருவரைப் பாட வைக்க நினைத்தார் கண்ணூர்ராஜன். அந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. ராஜன் தனது விருப்பத்தைத் தெரிவித்ததும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்ட ராஜா, 'உங்கள் இசையில் நான் பாடுவது என் பாக்யம்' என்று நெகிழ்ந்து சொன்னார்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version