Lekha Books

A+ A A-

ரவியின் கதை - Page 8

raviyin-kadhai

அவன் ஹலீத் ஆக இருந்தான். ஆனால், அவனை அவள் ரவி என்றே அழைத்தாள். அவன் இருபத்தைந்து வயதுகள் மட்டுமே ஆன ஒருவனாக இருந்தான். எனினும், அவள் அவனை வழிபட்டாள். அது ஒரு கனவு மட்டுமே என்று அவளுக்கு மெல்லிய ஒரு புரிதல் இருந்தது. எனினும், அந்தக் கனவை நம்புவதற்கு அவள் முயற்சித்துக் கொண்டேயிருந்தாள். இறுதியில், அவர்களுடைய புதிய உறவைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள். அவளுடைய கணவன் காயம்பட்ட உணர்வுடன் நீண்ட நேரம் அமர்ந்து சிந்தித்தான். தான் இவை அனைத்தையும் எதிர்பார்த்ததுதான் என்பதை இறுதியில் அவன் புரிந்து கொண்டான். அவளுடைய நடத்தை ஒரு போலித்தனம் கொண்டதாக இருந்தது. அவன் அவளிடம் சொன்னான்:

‘‘நான் இந்த பிரச்சினையை தெளிவான சிந்தனையுடன் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். இனிமேல் நாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது. நீ உன்னுடைய தந்தையைத் தேடிப் போவதுதான் நல்லது.’’

‘‘சரி...’’

மன்னிப்பு கேட்டு கெஞ்சவில்லை. புகார்கள் இல்லை. அவன் அவளுடைய கண்களையே ஓரக்கண்களால் பார்த்தான். அவள் அழவே இல்லையே! அந்த அளவிற்கு கடுமையான இதயத்தைக் கொண்ட ஒரு பெண்ணை தான் எதற்காக விரும்பினோம்?

 

பிரியமான ஹலீத்,

நீங்கள் ரவி அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். இல்லாமலிருக்கலாம். ஆனால், ரவி முடிவடைந்துவிடவில்லை.

எனக்கு உங்கள்மீது தோன்றக் கூடிய இந்த பைத்தியக்காரத்தனமான உணர்வு- அது எது வேண்டுமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்- அழியாமல் இருகஅகம் காலம் வரை ரவி முடிவடைய மாட்டார். அவர் நமக்கப் பிறக்கப் போகும் ஆன்மாவாக இருப்பார். என்னை உங்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்த்தது அவருடைய தூண்டுதலால்தான் இருக்க வேண்டும். காரணம்- அவர் என்னிடம் மட்டுமே வாழ்வார். என்னுடைய சேர்ந்தே இறக்கவும் செய்வார். நான் ரவி. அல்லது ரவிதான் நான். எனக்குள் இருக்கும் நரம்புகளில் ஓடும் ரத்த ஆறுகளில் ஆணவம் கொண்ட ஒரு கடவுளைப் போல அவர் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் என்னுடன் சேர்ந்தபோது, அவர் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நிரந்தரமானவராக ஆகிவிட்டார். நம்மிடம் உண்டான தப்பு என்ன என்பது உங்களுக்குப் புரிகிறதா, ஹலீத்? நாம் வெறும் விளையாட்டு பொம்மைகளாக இருந்தோம். அவர்தான் சந்தோஷச் சிரிப்புடன் கயிறுகளை இழுத்து நம்மை செயல்பட வைத்தார்.

வடிவமற்ற சிந்தனைகளால் களங்கம் உண்டான ஒரு அன்பு கலந்த உறவை நீங்கள் தேடவில்லை. ஒன்று, இரண்டாக ஆவது; மீண்டும் அது ஒன்றாக ஆவது. எவ்வளவோ சாதாரணமான இந்தச் செயலின் இறுதியில், பொறுப்புகள் எதுவும் இல்லாமல், அவமான உணர்வு எதுவும் இல்லாமல், நீங்கள் எழுந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டாம். என்னுடைய சிந்தனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டாம். நீங்கள் எந்தச் சமயத்திலும் எனக்கு அன்பையோ இரக்கத்தையோ அளித்ததில்லை. அளிக்கப் போவதும் இல்லை. எனக்கு அருகில் இருக்கும்போது நீங்கள் எப்போதும் வெறும் கடுமையான மனிதராகவே இருந்திருக்கிறீர்கள். கலப்படமே இல்லாத கடுமை. நம்மைச் சுற்றி, அன்பு கலந்த சொற்கள் வெளிப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் கூட நான் மரங்களின் கடுமையான நிழல்களை மட்டுமே பார்த்தேன். காட்டு உயிரினங்களின் கர்ஜனைகளை மட்டுமே கேட்டேன். உங்களை அவருக்குத் தேவையில்லை. எனக்குள்ளே இருந்து கொண்டு தைரியம் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. எனினும், நான் மதிப்பை விட்டெறிந்து விட்டேன். நீங்கள் ரவி இல்லை என்ற விஜயத்தைத் தெரிந்துகொண்ட பிறகும், உங்கள் மீது அன்பு வைத்தேன்.

கடிதம் எழுதுவதுகூட தேவையற்ற ஒன்றுதான். நீங்கள் கூறுவதைப் போல இன்னொரு பைத்தியக்காரத்தனமான செயல். ஆனால், நான் புறப்படுகிறேன். வழி தவறிப் போய்விட்ட ஒர பெண்ணை எந்தக் கணவன்தான் தூக்கி எறியாமல் இருப்பான்? என்னை மன்னிக்க வேண்டும்- எல்லா வகையான தவறுகளுக்கும்.

சொந்தம்,

லில்லி!

 

வண்டி நகர ஆரம்பித்தபோது, பதினெட்டு வயதான அந்த மகன் தன் தாயிடம் சொன்னான்: ‘‘அம்மா, நீங்க இப்படி நடந்து கொள்வீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என்னால் தலையை உயர்த்தி வைத்துக் கொண்டு நடக்க முடியவில்லை.’’

லில்லி எதுவும் கூறாமல், வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கூந்தலில் இங்குமங்குமாக இருந்த ஒன்றோ இரண்டோ வெள்ளை முடிகளைப் பார்த்துக் கொண்டே மகன் மீண்டும் தொடர்ந்து சொன்னான்:

‘‘அம்மா, நீங்கள் குறிப்பாக இந்த வயதில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வீர்கள் என்று... ஓ... எனக்கு நினைத்துப் பார்க்கும் போதே பைத்தியம் பிடிக்கிறது. அப்பாவை எதற்கு குறை சொல்ல வேண்டும்? இந்த அவமானத்தை அப்பாவால் தாங்கிக் கொள்ள முடியுமா?’’

‘‘நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை.’’ அவள் சொன்னாள்.

‘‘பரிதாபப்படவும் இல்லை. அப்படித்தானே?’’

அவனுடைய குரல் மிகவும் ஆண்மைத்தனம் நிறைந்ததாக இருந்தது. அவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கே லில்லியால் முபபியவில்லை. அவள் வெளியே, வேகவேகமாக மறைந்து போய்க் கொண்டிருந்த நெல் வயல்களையே பார்த்துக கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

‘‘அதுவும் ஒரு முஸ்லீம்! என்னைவிட சற்று மட்டுமே வயதில் அதிகமான ஓர் இளைஞன்... ஓ... அம்மா நீங்கள் இதைச் செய்திருக்கக் கூடாது. எனக்கு எவ்வளவு சிந்தித்துப் பார்தத்லும், ஒரு காரணமும் கிடைக்கவில்லை. உங்களுக்கு அனைத்தும் இருந்தன அல்லவா? எந்தவொன்றுக்கும் குறைவே இருந்ததில்லை. எனினும் ஒர சாதாரணப் பெண்ணைப் போல...’’

தன் தாயின் கண்கள் ஈரமாவதைப் பார்த்ததும், அவன் அமைதியாக இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான்.

 

வண்டி கல்கத்தாவை அடைந்தபோது, நேரம் இருட்டி விட்டிருந்தது. மகன் திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்து சிவப்பு சட்டை அணிந்திருந்த சுமை தூக்கும் மனிதரிடம் சைகை காட்டினான்.

‘அம்மா!’ - அவன் அழைத்தான்: ‘கல்கத்தா வந்துவிட்டது.’

அந்த அறையில் அவனுடைய தாய் இல்லை. அவன் குளியலறையைப் பார்த்தான். அம்மா எங்கு போய் மறைந்து விட்டாள்? தான் கூறிய வார்த்தைகளுக்கு சற்று கடுமை அதிகமாகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது.

‘‘அம்மாவைக் காணோம். என் அம்மாவைக் காணோம்.’’ அவன் சொன்னான்.

அடர்த்தியான நீலநிற பேண்ட் அணிந்த ஒரு இளைஞன் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னான்: ‘‘உன் அம்மாவை எங்கே?’’

ஹலீதைப் பார்த்ததும், லில்லியின் மகனின் உதடுகள் துடித்தன. அவன் சொன்னான்:

‘‘என் அம்மாவைக் காணோம்.’’

‘‘எங்கே காணாமல் போனாள்?’’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel