Lekha Books

A+ A A-

ஒரு கெட்ட கனவு - Page 7

Oru Ketta Kanavu

'ஒரு புலர் காலைப் பொழுதில் ஸிங்கோவோவிலிருந்து லுச்கோவோவிற்கு நடந்து செல்லும்போது, ஆற்றின் கரையில் ஒரு பெண் என்னவோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகில் சென்றபோது, என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. கடவுளே! டாக்டர் இவான் ஸெர்ஜியேவிச்சின் மனைவி ஆடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள். டாக்டரின் மனைவி கல்லூரியில் படித்தவள்! யாரும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே கண் விழித்து, ஒரு மைல் தூரம் நடந்து சென்று... எல்லையற்ற தன்னம்பிக்கை... நான் தெரிந்து கொண்டேன் என்பதை அறிந்ததும், அவள் முழுமையான அவமானச் சுமையால் சிவந்து போய் விட்டாள். நான் மொத்தத்தில் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். உதவி செய்வதற்காக நான் ஓடிச் சென்றேன். ஆனால், அவளுடைய கிழிந்த துணிகளை நான் எங்கே பார்த்து விடப் போகிறேனோ என்று பயந்து, அவள் அவற்றை ஒரு ஓரத்தில் விலக்கி வைத்தாள்.'

'நம்ப முடியவில்லை...'- மனதிற்குள் ஒரு அதிர்ச்சி உண்டாக, குனின் பாதிரியார் யாக்கோவின் முகத்தையே பார்த்தான்.

'நம்ப முடியாதுதான். உலகின் எந்த இடத்திலும் ஏதாவது டாக்டரின் மனைவி ஆற்றுக்குச் சென்று தானே துணிகளைச் சலவை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்காது பாவல் மிகாய்லோவிச். உலகத்தின் எந்த இடத்திலும்! அவளுடைய பாவ மன்னிப்புகளைக் கேட்பவன் என்ற முறையில் அதில் எதுவும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால், என்ன செய்ய முடியும்? அவளுடைய கணவரிடமிருந்து சிகிச்சை இலவசமாக கிடைப்பதற்கு முயற்சிக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இவை எதையும் நம்ப முடியவில்லை என்று நீங்கள் கூறியது சரிதான். என்னால் என்னுடைய கண்களையே சில நேரங்களில் நம்ப முடியவில்லை. பாவ மன்னிப்பு காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் மக்களின் பரிதாப நிலை கண்களில் படும். பசியின் கொடுமையில் சிக்கிய பாதிரியார் ஆவ்ராமியும், மனைவியும், டாக்டரின் மனைவியும், நீரின் குளிர்ச்சியால் நீல நிறம் படர்ந்திருக்கும் அவளுடைய கைகளும் ஞாபகத்தில் வரும். என்னையே மறந்து அங்கேயே நின்று விடுவேன். முட்டாளைப் போல... மணி அடிக்கும் ஆள் தட்டி எழுப்பும் வரை... கட்டுப்பாடே இல்லாமல்! பயங்கரமான விஷயமது!'

பாதிரியார் யாக்கோவ் அறையில் அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தார். 'ஜீஸஸ்'- அவர் கைகளை விரித்தார். 'கர்த்தரின் பரிசுத்தர்களே! என்னுடைய பொறுப்புகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே! நீங்கள் பள்ளிக் கூடத்தைப் பற்றிப் பேசும்போது, நான் ஒரு மரத்தின் தடியைப் போல இருக்கிறேன். எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை. என்னுடைய மனதில் எப்போதும் உணவைப் பற்றிய சிந்தனைகள்தாம்... பிரார்த்தனை நடக்கும் இடத்தில் கூட... இல்லை... நான் இவற்றையெல்லாம் எதற்கு இப்படி கூறுகிறேன்?'- சற்று நிறுத்தி விட்டு, அவர் கேட்டார் : 'நீங்கள் வெளியே செல்ல வேண்டாமா? என்னை மன்னிச்சிடுங்க. இப்படியெல்லாம்... என்னை மன்னிக்கணும்.' பாதிரியார் யாக்கோவின் கைகளைப் பிடித்து மெதுவாக குலுக்கியவாறு குனின் அவரைக் கூடத்திலிருந்து வெளியே செல்வதற்கு வழியைக் காட்டினான். திரும்பவும் அறைக்குள் வந்து சாளரத்திற்கு அருகில் நின்றான்.

நீளமான ஓரங்களைக் கொண்ட கிழிந்த தொப்பியைத் தலையில் அழுத்தி வைத்து, கூறிய விஷயங்கள் உண்டாக்கிய வெட்கக் கேட்டால் ஏற்பட்ட சுமை என்பதைப் போல தலையை உயர்த்தி வைத்துக் கொண்டு, பாதிரியார் யாக்கோவ் மெதுவாக நடந்து தூரத்தில் செல்வதை அவன் பார்த்தான்.

'அவருடைய குதிரையை இங்கு எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லையே!'- இந்த எல்லா நாட்களிலும் பாதிரியார் யாக்கோவ் தன்னை பார்க்க வந்து கால் நடையாக நடந்துதானோ என்ற சிந்தனை ஒரு பயமாக அவனை பாடாய் படுத்தியது. ஸிங்கோவோவிற்கு ஏழு மைல்கள் தூரமாவது இருக்கும். வழி நிறைய சேறுகள் நிறைந்த குழிகள்...

வண்டிக்காரன் ஆந்த்ரேயும், பாரமன் என்ற இளைஞனும் பாதிரியார் யாக்கோவின் ஆசீர்வாதத்தை வாங்குவதற்காக ஓடி வருவதை குனின் பார்த்தான். சேற்றில் குதித்து ஓடி, அவர் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டு அவர்களுடைய வருகை... தொப்பியைக் கழற்றி விட்டு, பாதிரியார் யாக்கோவ் முதலில் ஆந்த்ரேயையும், பிறகு இளைஞனையும் ஆசீர்வதித்தார். அவனுடைய தலையை வருடினார்.

குனின் கண்களுக்கு மேலே கையை ஓட்டினான். அங்கு ஈரம். அவன் சாளரத்திலிருந்து விலகி, நாணம் கலந்த அந்த பரிதாபக் குரல் இப்போதும் நிறைந்து நின்று கொண்டிருந்த அறை முழுவதையும், தளர்ந்து போன கண்களால் பார்த்தான். பாக்யம் என்றுதான் சொல்ல வேண்டும்! அவசரத்தில் பாதிரியார்  யாக்கோவ் சொற்பொழிவு குறிப்புகளை எடுப்பதற்கு மறந்து விட்டிருந்தார். குனின் ஒரே ஓட்டத்தில் அதை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக கிழித்து, மேஜைக்கு அடியில் ஏறிந்தான்.

ஸோஃபாவில் தளர்ந்து விழுந்து கொண்டே அவன் தனக்குள் கூறினான்: 'எனக்கு இது எதுவுமே தெரியலையே! குழுவில் நிரந்தர உறுப்பினர், மிகவும் மதிக்கப்படும் நீதிபதி, பள்ளிக்கூட கவுன்சிலின் உறுப்பினர்...' இப்படி ஒரு வருட காலம் மிகப் பெரிய பணிகளில் இருந்தும்... ! கண் பார்வை தெரியாத பொம்மை! அழகாக வெளியே தோன்றும் மோசமானவன்! இனி சிறிதும் தாமதிக்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும். இப்போதே!'

வேதனைகளால் மனதில் துயரத்திற்கு ஆளாகி, கழுத்தைத் தடவியவாறு, அவன் ஆழமான சிந்தனையில் மூழ்கினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel