Lekha Books

A+ A A-

ஒரு கெட்ட கனவு - Page 4

Oru Ketta Kanavu

'மனைவியாக இருக்கும். அவள் எப்படிப்பட்டவளாக இருப்பாளோ? - குனின் மனதிற்குள் நினைத்தான்.

சிறிது நேரம் சென்றதும், வியர்வையில் குளித்த நிலையில் பாதிரியார் யாக்கோவ் வந்து, சிரிக்க முயற்சித்துக் கொண்டே குனினுக்கு எதிரே இருந்த திவானின் நுனியில் அமர்ந்தார்.

'அடுப்பு பற்ற வைக்கணும். அவ்வளவுதான்...' - விருந்தாளியின் முகத்தைப் பார்க்காமலே அவர் கூறினார்.

'கடவுளே! அடுப்பைக் கூட பற்ற வைக்கவில்லை. இனி எவ்வளவு நேரம் ஆவது?' என்று மனதிற்குள் நினைத்த குனின் கூறினான்: 'பிஷப்பிற்கு அனுப்புவதற்காக தயார் பண்ணி வைத்திருக்கும் கடிதத்தை, தேநீர் பருகிய பிறகு படிச்சு காட்டுறேன். ஏதாவது சேர்க்க வேண்டுமென்று உங்களுக்கு தோன்றினால்...'

'மிகவும் நல்லது, சார்.'

நீண்ட நேர அமைதி. பாதிரியார் யாக்கோவ் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தார். தலை முடியில் விரல்களை ஓட்டினார். மூக்கைச் சிந்தினார்.

'நமக்கு இங்கே நல்ல தட்ப வெப்ப நிலை, சார்'- பாதிரியார் சொன்னார்.

'ம்... நான் நேற்று எங்கேயோ வாசித்தேன். வோல்ஸ்காவில் இருக்கும் எல்லா பாடசாலைகளையும் 'ஸெம்ஸ்த்வோ' அமைப்பு, சபைக்கு விட்டுக் கொடுக்க தீர்மானிச்சிருக்குதாம்.'

குனின் எழுந்து மண் தரையில் அங்குமிங்குமாக நடந்து, தன்னுடைய கருத்துக்களை உரத்த குரலில் வெளிப்படுத்தினான்.

'என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கும், பொறுப்புணர்வு கொண்ட பாதிரியார் இருக்கும் பட்சம், எல்லா விஷயங்களும் நன்றாகவே நடக்கும். கல்வியறிவிலோ, தார்மீக விஷயங்களிலோ ராணுவத்தில் க்ளார்க்காக இருப்பதற்குக் கூட தகுதியில்லாத எவ்வளவோ பாதிரியார்களை எனக்கு தெரியும். மோசமான ஆசிரியரைவிட கெட்ட விஷயங்களை ஒரு பள்ளிக் கூடத்திற்கு மோசமான பாதிரியார் உண்டாக்கி வைத்து விடுகிறார் என்ற கருத்துடன் நீங்களும் உடன்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.'

குனின் பாதிரியார் யாக்கோவைப் பார்த்தான். பாதிரியார் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். கூறியது எதையும் கேட்கவே இல்லை என்று தோன்றியது.

'யாஷா, இங்கே... இங்கே வாங்க'- திரைச் சீலைக்குப் பின்னாலிருந்து ஒரு பெண்ணின் குரல். பாதிரியார் யாக்கோவ் எழுந்து அந்தப் பக்கம் சென்றார். மீண்டும் 'குசு குசு' சத்தம்.

இப்போதே தேநீர் குடித்தாக வேண்டும் என்று குனினுக்குத் தோன்றியது. தேநீர் கிடைப்பதற்கான ஒரு அடையாளம் கூட தெரியவில்லை. அவன் சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். 'என் வருகையை அந்த அளவிற்கு விரும்பவில்லை என்று தோன்றுகிறது. குடும்பத் தலைவர் வெறுமனே பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைத் தவிர, ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு மனதைத் திறக்கவில்லையே!'- அவன் மனதிற்குள் நினைத்தான்.

குனின் தொப்பியை எடுத்து, பாதிரியார் வருவதற்காக காத்திருந்தான்... பிறகு விடை பெற்றுக் கொண்டு வெளியேறினான்.

'நல்ல ஒரு புலர்காலைப் பொழுது வீணாகி விட்டது'- அவனுக்கு கோபம் வந்தது. 'மரத் தலையன்... முட்டாள்... போன வருடம் பனி உருகிய விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்கக் கூடிய ஆர்வம் கூட அந்த மனிதருக்கு இந்த பள்ளிக்கூட விஷயத்தில் இல்லை. அவருடன் சேர்ந்து ஒரு காரியத்தைக் கூட நல்ல முறையில் செய்து முடிக்க முடியாது. இந்த பாதிரியார் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இருப்பார் என்ற விஷயம் தெரிந்திருந்தால், பள்ளிக் கூட விஷயத்தில் மார்ஷல் இந்த அளவிற்கு ஆர்வம் கொண்டிருக்க மாட்டார். பள்ளிக் கூடத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, நல்ல ஒரு பாதிரியார் கிடைப்பாரா என்று பார்க்க வேண்டும்.'

குனின், பாதிரியார் யாக்கோவை கிட்டத்தட்ட முழுமையாக வெறுத்து விட்டிருந்தான். அவலட்சணமான பரிதாப உருவம், நொறுங்கி தாறுமாறான தோற்றம், தொழிலாளி பெண்களின் முகம், பிரார்த்திக்கும்போது கூட பக்தி வெளிப்பபடாத தோற்றமும் நடையும், நடந்து கொண்ட முறைகளும், தன் மீது கொண்டிருந்த உயர்வான எண்ணமும் எல்லாம் சேர்ந்து... அவனிடம் எஞ்சியிருந்த மத ஈடுபாட்டிற்கு அவை எதிரானவையாக தோன்றின. அவருக்கே நன்மை கிடைக்கக் கூடிய இந்த விஷயத்தில் அவனுடைய உண்மையான முயற்சிகள் நிறைந்த அமைதியான செயல்களைக் கூட பொறுத்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

அன்று இரவு குனின் சிந்தனையில் மூழ்கியவாறு நீண்ட நேரம் அறையில் நடந்து கொண்டிருந்தான். இறுதியில் ஏதோ தீர்மானம் எடுத்து, பிஷப்பிற்கு ஒரு கடிதம் எழுதினான். பள்ளிக் கூடத்திற்கு பணமும், அவருடைய ஆசீர்வாதங்களும் வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு விட்டு, ஒரு மகனுடைய ஆத்மார்த்த நிலையையும், சுதந்திரத்தையும் எடுத்துக் கொண்டு அவன் ஸிங்கோவோவிலிருக்கும் பாதிரியாரைப் பற்றி இவ்வாறு எழுதினான். 'அவர் வயதில் இளையவர். கல்வியறிவு குறைவு. பார்க்கும்போது மது அருந்தக் கூடியவர் என்று தோன்றும். பாதிரியார்களைப் பற்றி பல நூற்றாண்டுகளாக ரஷ்ய மக்களின் மனங்களில் வடிவம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்த சிறிதும் இயலாத ஒரு ஆள்.'

கடிதத்தை எழுதி முடித்து, நீண்ட பெருமூச்சை விட்டு, முழுமையான திருப்தியுடன் அவன் படுக்கையில் சாய்ந்தான்.

திங்கட்கிழமை அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்பே, தன்னை பாதிரியார் யாக்கோவ் பார்ப்பதற்காக வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. எழுந்திருப்பதற்கு தோன்றாததால், வீட்டில் இல்லை என்று கூறும்படி சொல்லி விட்டு, தப்பித்துக் கொண்டான்.

செவ்வாய்க் கிழமை ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு, திரும்பி வந்தது சனிக் கிழமை. இதற்கிடையில் எல்லா நாட்களிலும் பாதிரியார் யாக்கோவ் பார்ப்பதற்காக வந்திருந்தார் என்ற தகவலை அங்கு வேலை பார்க்கும் ஊழியர் கூறினார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel