Lekha Books

A+ A A-

ஒரு கெட்ட கனவு - Page 2

Oru Ketta Kanavu

ஒரு பாத்திரத்தில் பிஸ்கட்களுடனும், இரண்டு குவளையில் தேநீருடனும் பணியாள் வந்தபோதுதான் பாதிரியார் யாக்கோவ் சற்று அசைந்தார். உடனடியாக அவர் தேநீரை எடுத்து பருகினார்.

'நாம் பிஷப்பிற்கு கடிதம் எழுதினால் என்ன?'- குனினின் சிந்தனைகள் உச்ச நிலையில் தொடர்ந்து கொண்டிருந்தன. 'தேவாலயங்களுக்குக் கீழே உள்ள பள்ளிக் கூடங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி ஆணை பிறப்பித்தது. 'ஸெம்ஸ்த்வோ' (மாவட்டத்தின் ஆட்சியமைப்பு) அல்ல. அவற்றைப் பிறப்பித்தது சபையின் அதிகாரிகள். அப்படியென்றால், அவர்கள்தான் பணத்தையும் தர வேண்டும். இந்த பிரிவில் பணம் ஒதுக்கி வைத்திருப்பதாக வாசித்திருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?'

தேநீரில் மூழ்கியிருந்த பாதிரியார் உடனடியாக பதிலெதுவும் கூறவில்லை. சாம்பல் நிறத்திலிருந்த கண்களை மெதுவாக உயர்த்தி குனினைப் பார்த்தார். கேள்வியை நினைவிற்குக் கொண்டு வந்து, அவர் 'இல்லை' என்பதைப் போல தலையை ஆட்டினார். அந்த முகத்தில் இனம் புரியாத ஒரு பிரகாசத்துடன் கடுமையான பசியும் வெளிப்பட்டது. ஒவ்வொரு மடக்கையும் மிகவும் ரசித்து பருகி, இறுதி துளியும் தீர்ந்தவுடன் தேநீர் குவளையைக் கீழே வைத்தார். மீண்டுமொரு முறை எடுத்து உட்பக்கம் கூர்ந்து பார்த்து விட்டு திரும்பவும் அதை வைத்தார். முகத்திலிருந்த பிரகாசம் மறைந்தது. பிறகு... பாத்திரத்திலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து, ஒரு முறை கடித்து விட்டு, இப்படியும் அப்படியுமாக அதை புரட்டிப் பார்த்தார். பின்னர் வேகமாக அதை பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார்.

'ஒரு பாதிரியார் செய்யக் கூடிய செயல் இல்லை இது...'- குனின் மனதிற்குள் நினைத்தான். என்ன இது? வெறியா அல்லது சிறு பிள்ளைத்தனமான ஆசையா?

மேலும் ஒரு குவளை தேநீரைக் கொடுத்து, பாதிரியார் யாக்கோவை விடை கொடுத்து அனுப்பி வைத்து விட்டு, குனின் வரவேற்பறைக்கு திரும்பி வந்தான். ஸோஃபாவில் படுத்து, அந்தச் சந்திப்பு உண்டாக்கிய அமைதியற்ற சிந்தனைகளில் மூழ்கினான்.

'என்ன ஒரு நாகரீகமற்ற பிறவி! சுத்தமும் சுறுசுறுப்பும் இல்லவே இல்லை. அறிவும் இல்லை. குடிகாரனைப் போல இருக்கிறான்... பாதிரியாராம் பாதிரியார்! ஆடுகளுக்கு நல்ல இடையன். ஒவ்வொரு 'குர்பானா' (பாவ மன்னிப்பு கேட்டும் செயல்)விற்கு முன்பும், 'பரிசுத்த பிதாவே, ஆசீர்வதியும்!' என்ற வாசகத்தை உச்சரிக்கும்போது, மனதிற்குள் இருக்கக் கூடிய எண்ணங்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நல்ல... முதல் தரமான... 'பரிசுத்த பிதா!' மதிப்பு, மரியாதை ஆகியவற்றின் ஒரு சிறிய அடையாளமாவது... பள்ளிக் குழந்தையைப் போல பிஸ்கட்டை எடுத்து பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்வது... பிஷப் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு ஆளுக்கு பாதிரியார் பட்டத்தை அளித்திருப்பார்! குருமார்கள் இப்படியென்றால், சாதாரண மனிதர்களைப் பற்றி இவர்களெல்லாம் மனதில் என்ன நினைத்திருப்பார்கள்? அவர்களுக்கு தேவை...'

ஒரு ரஷ்யன் பாதிரியார் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனை அதற்குப் பிறகு...

'நான் ஒரு பாதிரியாராக இருந்திருந்தால்... தொழிலின் மீது விருப்பம் கொண்டிருக்கும், நன்கு படித்த ஒரு பாதிரியாரால் எவ்வளவோ காரியங்களைச் செய்ய முடியும். எவ்வளவோ காலத்திற்கு முன்பே நான் ஒரு பள்ளியைத் தொடங்கியிருப்பேன். தேவாலயத்தில் ஆற்றக் கூடிய சொற்பொழிவுகளோ? தன்னுடைய சொந்த செயல்களை விரும்பக் கூடிய பாதிரியாரின் சொற்பொழிவுகள் எந்த அளவிற்கு கம்பீரத்தன்மை கொண்டவையாகவும், ஈர்க்கக் கூடியவையாக இருக்கும்!'

கண்களை மூடிக் கொண்டு, குனின் தன் மனதிற்குள் ஒரு சொற்பொழிவிற்கு வடிவம் கொடுத்தான். சிறிது நேரம் கழித்து அதை தாளில் எழுத ஆரம்பித்தான். 'அவர் இதை தேவாலயத்தில் சத்தம் போட்டு வாசிக்கட்டும்' - அவன் மனதிற்குள் நினைத்தான்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை குனின் ஸிங்கோவோவிற்குப் புறப்பட்டான். பள்ளிக்கூட பிரச்சினைக்கு ஒரு பரிகாரம் கண்டு பிடிக்க வேண்டும். தன்னுடைய தேவாலயத்தைச் சற்று காணவும் செய்யலாமே! சிறிது பனி மூட்டம் இருந்தாலும், நல்ல புலர் காலைப் பொழுதாக இருந்தது. சூரியனின் கதிர்கள் முந்தைய நாள் விழுந்திருந்த பனித் துளிகளைத் துளைத்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. உருகிக் கொண்டிருந்த பனிக்குக் கீழே பச்சை இலைகள் முகத்தைக் காட்டின. பறந்து திரிந்து கொண்டிருந்த காகங்கள் தரையில் இறங்கி, தத்தித் தத்தி நடந்து, கால்களை நிலத்தில் உறுதியாக ஊன்றி, நின்றன.

குனின் பார்த்த தேவாலயம், மிகவும் பழையதாகவும், சிதிலமடைய ஆரம்பித்ததாகவும், மரத்தால் ஆன ஒன்றாகவும் இருந்தது. எப்போதோ பூசப்பட்ட வெள்ளை நிற வர்ணம் உதிர்ந்து, பாசி பிடித்த இரண்டு பெரிய தூண்கள்.... வாசலுக்கு மேலே இருந்த புனித உருவம் ஒரு நிழலைப் போல மட்டும்... அந்த தரித்திர நிலை குனினின் மனதைத் தொட்டது. கண்களை தாழ்த்தி வைத்துக் கொண்டு, தலையைக் குனிய வைத்துக் கொண்டு அவன் தேவாலயத்தின் வாசற்படியில் நின்றிருந்தான். பிரார்த்தனை ஆரம்பித்திருந்தது. கூன் விழுந்த, மணி அடிக்கும் மனிதன் பலவீனமான குரலில், யாருக்கும் காதில் விழ முடியாத அளவிற்கு இறங்கிப் போய், பிரார்த்தனைகளை உச்சரித்துக் கொண்டிருந்தான். வசனங்கள் இல்லாததால், பாதிரியார் யாக்கோவே தேவாலயத்தைச் சுற்றி வந்து தூபார்ப்பணம் செய்து கொண்டிருந்தார். தேவாலயத்தின் நிலைமையைப் பார்த்து மனதில் பதைபதைப்பு உண்டாகாமல் இருந்திருந்தால், பாதிரியார் யாக்கோவின் தோற்றத்தைப் பார்த்து குனின் சிரித்திருப்பான். கிழிய ஆரம்பித்திருந்த மஞ்சள் நிற துணியால் ஆன, சுருக்கங்கள் விழுந்த அங்கியை அணிந்திருந்த, மெலிந்து போய் காணப்பட்ட அந்த குள்ள மனிதரின் தோற்றம் அந்த வகையில் இருந்தது. அங்கியின் மடித்து தைக்கப்பட்ட ஓரப் பகுதி தரையில் விழுந்து கிடந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel