Lekha Books

A+ A A-

ஒரு கெட்ட கனவு - Page 5

Oru Ketta Kanavu

'இங்கே இருக்கும் பிஸ்கட்டின் ருசி நன்றாக பிடித்ததுதான் காரணமாக இருக்கும்.' -குனின் மனதிற்குள் நினைத்தான். ஞாயிற்றுக் கிழமை மதிய நேரம் தாண்டிய வேளையில், பாதிரியார் யாக்கோவ் மீண்டும் வந்தார். இந்த முறை அங்கியின் அடிப்பகுதி மட்டுமல்ல- தொப்பி வரை அழுக்கு படிந்திருந்தது. முதல் தடவையில் இருந்ததைப் போலவே, வியர்வையில் குளித்து, நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார். பள்ளிக் கூடத்தைப் பற்றி எதுவுமே பேசக் கூடாது என்று குனின் தீர்மானித்தான். வெறுமனே எதற்கு முத்துக்கள்...

'பாவல் மிகாய்லோவிச், நான் பள்ளிக்கூட புத்தகங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு வந்திருக்கிறேன்.'

பாதிரியாரின் வருகைக்குப் பின்னாலிருப்பது இந்த பட்டியல் அல்ல என்பது மிகவும் தெளிவாக தெரிந்தது. அந்த தோற்றமே இனம் புரியாத ஒரு போலித்தனத்தை வெளிக் காட்டியது. ஆனால், புதிய சில எண்ணங்கள் தலைக்குள் தோன்றிய மனிதனின் தன்னம்பிக்கையும் அந்த முகத்தில் தெரிந்தது. மிகவும் முக்கியமான ஏதோ சிலவற்றைக் கூறக் கூடிய விருப்பமும், கூற ஆரம்பிக்க இருந்த வெட்கமும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

'இவர் ஏதாவது ஒன்றைக் கூறினால் என்ன? இங்கே வந்து வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பது... இந்த ஆளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து வீணாக்க எனக்கு நேரமில்லை.'

உள்ளே நடந்து கொண்டிருந்த போராட்டத்தை மறைத்து வைக்கக் கூடிய முயற்சியில் பாதிரியார் ஈடுபட்டு, புன்னகைத்தார். வியர்வை அரும்பி சிவந்த முகத்தில் வெளிப்பட்ட அந்தச் சிரிப்பிற்கும், சாம்பல் நிறம் கலந்த நீல நிற கண்களின் அகலமான பார்வைக்கும் இடையே இருந்த பொருத்தமற்ற தன்மையில் மனம் வெறுத்து, குனின் கண்களை தூரத்தில் செலுத்தினான். அவன் கூறினான்: 'ஃபாதர், மன்னிக்கணும். நான் கொஞ்சம் வெளியே போகணும்.'

உறக்கத்திற்கு மத்தியில் தலையில் அடி வாங்கிய மனிதரைப் போல பாதிரியார் யாக்கோவ் வேகமாக எழுந்தார். பதைபதைப்பை விலக்காமல், அங்கியை இறுக பற்றியவாறு, சிரித்துக் கொண்டே நின்றார். கடுமையான வெறுப்பிற்கு மத்தியில் அவர் அப்படி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாலும், குனினுக்கு இரக்கம் உண்டானது.

'ஃபாதர், நாம் பின்னர் ஒருமுறை பேசுவோம். பிறகு... ஆட்சேபணை இல்லையென்றால், என்னுடைய ஒரு வேண்டுகோள்... நேற்று நான் இரண்டு சொற்பொழிவுகள் எழுதினேன். நீங்கள் அவற்றைச் சற்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பரவாயில்லை என்று தோன்றினால், தேவாலயத்தில் வாசிக்கலாம்.'

'சரி சார்... நான் படிக்கிறேன்'- பதைபதைப்பு விலகாமல் மேலும் சிறிது நேரம் அங்கியின் ஓரத்தை இறுக பற்றியவாறு நின்று கொண்டிருந்து விட்டு, உறுதியான முடிவுடன் அவர் தலையை உயர்த்தினார்.

சத்தமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கு முயற்சித்தவாறு அவர் கூறினார்: 'பாவல் மிகாய்லோவிச், நீங்கள் காரியதரிசியைப் போகுமாறு கூறி விட்டீர்கள் என்றும், வேறு ஆளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன்.'

'உண்மைதான். யாரையாவது சிபாரிசு செய்கிறீர்களா?'

'நான்... உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால்... அந்த வேலையை.. எனக்கு தருவீர்களா?'

'நீங்கள் பாதிரியார் பணியை விடப் போகிறீர்களா?' - ஆச்சரியத்துடன் குனின் கேட்டான்.

'இல்லை... இல்லை...' - வெளிறிப் போய், விறைத்த நிலையில் பாதிரியார் யாக்கோவ் உடனடியாக கூறினார்: 'கடவுள் மேல சத்தியம் பண்ணி சொல்றேன். உங்களுக்கு ஏதாவது நம்பிக்கைக் குறைவு இருந்தால், எனக்கு வேலையைத் தர வேண்டாம். நான் இடையில் கிடைக்கக் கூடிய நேரத்தில்... கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அந்த அளவிற்கு தேவை எதுவுமில்லை... ஆ... பரவாயில்லை.'

'ம்... வருமானம்... ஆனால், நான் இருபது ரூபிள்தான் சம்பளம் தருவேன்.'

'கடவுளே! பத்துக்குக் கூட நான் வேலை செய்வேன்'- சுற்றிலும் பார்த்தவாறு பாதிரியார் யாக்கோவ் மெதுவான குரலில் கூறினார்: 'பத்து ரூபிள் என்றால் கூட போதும். கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றும். பணத்தின் மீது ஆசை வைத்திருக்கும் பாதிரியார்! 'இந்த பணத்தையெல்லாம் இந்த ஆள் என்ன செய்கிறார்?' என்று நினைப்பார்கள். எனக்கே கூட தோன்றுவது உண்டு. நான் ஒரு பேராசை பிடித்தவன். நான் என்னையே தண்டித்துக் கொள்வேன். என்னை நானே மதிப்பீடு செய்து கொள்வேன். மனிதர்களின் கண்களைப் பார்ப்பதற்கு எனக்கே கூச்சமாக இருக்கும். அதுதான் உண்மை. பாவல் மிகாய்லோவிச், உண்மை கடவுள் எனக்கு சாட்சியாக இருக்கும்...'

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, பாதிரியார் தொடர்ந்து சொன்னார்:

'உங்களிடம் கூறுவதற்கு பெரிய ஒரு சொற்பொழிவையே தயாராக்கிக் கொண்டுதான் நான் வந்தேன், நண்பரே! ஆனால், எல்லாவற்றையும் மறந்து விட்டேன். கூறுவதற்கு இப்போது வார்த்தைகள் கிடைக்கவில்லை. தேவாலயத்திலிருந்து எனக்கு வருடமொன்றிற்கு நூற்று ஐம்பது ரூபிள்கள் கிடைக்கின்றன. நான் அதை வைத்து என்ன செய்கிறேன் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது... உங்களிடம் நான் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுகிறேன். என் சகோதரன் பேத்யாவிற்கு மருத்துவ அறிவியல் கல்விக் கூடத்திற்கு நாற்பது ரூபிள்கள் தர வேண்டும். அவனுடைய தங்குமிடத்திற்கான செலவு, உணவிற்கான கட்டணம்.... இவை அனைத்தும் அதற்குள் அடங்கி விடுகிறது. ஆனால், புத்தகம், பேனா... இவற்றுக்கு தனியாக பணம் தர வேண்டும்...'

'ம்... சரி. எனக்கு உங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஏன் இப்படி?'

அவருடைய கண்களில் வழிந்த நீர்த் துளிகளை நிறுத்துவது எப்படி என்று தெரியாமல், அவர் வெளிப்படுத்திய ரகசியங்களின் தாங்க முடியாத சுமையைச் சுமந்தவாறு குனின் 'பரவாயில்லை... எல்லாம் சரியாகும்' என்பதைப்போல சைகை செய்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel