Lekha Books

A+ A A-

வல்லிகாதேவி

vallikadevi

மாதவமேனன் பரந்து கிடந்த அந்த வயல்வெளிகளின் வழியாக சுற்றி நடந்து, மாலை மயங்கும் நேரத்தில் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு முன்னாலிருந்த சிறிய பாதையில் நடந்து, வீட்டிற்குள் ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை நெருங்கியபோது, தன்னுடைய அறைக்குள்ளிருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும், ஆரவாரமும் வந்து கொண்டிருப்பதை அவர் கேட்க நேர்ந்தது.

வெறுப்பின் காரணமாக முகம் இருண்டுபோக, சிறிது நேரம் அந்த முற்றத்திலேயே அவர் எந்தவித அசைவுமில்லாமல் நின்றுகொண்டிருந்தார்.

மாதவமேனனின் அறையில் மூன்று நான்கு பெண்களும் ஓரிரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். தன்னுடைய அறைக்குள் தன் சொந்த மனைவிகூட தேவையில்லாமல் நுழைவதை அவர்

சிறிதும் விரும்பியதில்லை. அவர்கள் அங்கு சிறிது நேரத்திற்கு முன்பு நடைபெற்ற ஏதோ சுவாரசியமான சம்பவத்தைப் பற்றிப் பேசி குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

பரணின் மேலே இருந்து அரிசி மூட்டை கீழே விழுவதைப்போல ‘தும்' என்றொரு சத்தமும், ‘அய்யோ!' என்றொரு கூக்குரலும்... ‘ஹ! ஹ! ஹ!!!'

மாதவமேனன், தன் மனைவியுடைய சகோதரியின் எலிக்குஞ்சுக் குரலில் வந்த பேச்சை தெளிவாகக் கேட்டார்.

‘‘நான் அந்த வேலையைச் செய்ததால்தானே நீங்க எல்லாரும் இப்படி சிரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது?''

அது மருமகன் பாலகிருஷ்ணனின் மிடுக்கான குரல்.’’ஓ... அதைக் காதிலேயே வாங்காதீங்க.

இப்படி ஒரு வழியை யார் சொல்லித் தந்தது? இந்த மாதிரி ஒரு சுவாரசியமான சம்பவத்தை நான் விளக்கிச் சொன்ன பிறகுதானே, ஆள் போயி ஏணியை நகர்த்தி வச்சதே!''

அது மாதவமேனனின் மனைவியின் குரல்.

‘‘அப்படின்னா அப்படியே இருக்கட்டும்... அத்தைக்கு ஜே! அத்தைக்கு ஜே!''

குழந்தைகள் உரத்த குரலில் சத்தம் போட்டார்கள். பெண்கள் சிரித்து, குழைந்து விழுந்தார்கள். அறை முழுவதும் ஆரவாரத்தால் நிறைந்திருந்தது.

மாதவமேனனுக்கு எரிச்சலும் வெறுப்பும் அதிகரித்தது! அவர் பொறுமையை இழந்து, ஓசை உண்டாக்கியவாறு வீட்டிற்குள் நுழைந்தார்.

திடீரென்று அறை முழுவதும் அமைதியாக ஆனது. பாலகிருஷ்ணனும் அவனுடைய சிறிய தம்பி கங்காதரனும் மேஜைக்குக் கீழே பதுங்கினார்கள். மெதுவாக வெளியே நகர்ந்து தப்பித்தார்கள். மாதவமேனனின் மனைவி தேவகியம்மாவைத் தவிர, பெண்கள் எல்லாரும் தங்களின் முகங்களைத் தாழ்த்திக்கொண்டு, மேலே அணிந்திருந்த துணியால் சிரிப்பை மறைத்துக் கொண்டிருந்தார்கள். கூச்சத்துடனும் பயம் கலந்த ஒரு உணர்வுடனும் அவர்கள் மெதுவாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்கள்.

தேவகியம்மா சிரித்து, கொஞ்சிக் குழைந்துகொண்டு- பலமான காதல் உணர்வுடன் இருப்பதைப்போல காட்டிக்கொண்டு தன் கணவனை நோக்கி வலிய நடந்து சென்றாள்.

மாதவமேனன் தன் மனைவியின் புதிய காதல் வெளிப்பாடுகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், தன்னுடைய சட்டையை அவிழ்த்து மேஜையின் மீது போட்டார். ஒரு மேல்துண்டை எடுத்து தன்னுடைய வியர்வை வழிந்து கொண்டிருந்த உடலின்மீது வீசிக்கொண்டே, அந்த அறையிலிருந்த பிரம்பு நாற்காலியில் சாய்ந்து படுத்து, ஏதோ சிந்திக்க ஆரம்பித்தார்.

மாதவமேனன் நல்ல அழகான ஒரு இளைஞனாக இருந்தார். குறிப்பாக அந்த நேரத்தில் அவருடைய தோற்றமும், நடந்துகொண்ட முறையும் மிகவும் ஈர்க்கக் கூடியவையாக இருந்தன. வியர்வை அரும்பி ஈரமாக இருந்த தலைமுடி, முகத்தின் மேற்பகுதியிலும் இரண்டு ஓரங்களிலும் மூடிக் கிடந்தது. ரோமங்கள் அடர்ந்திருந்த மார்பின் வழியாக ஒரு மெல்லிய வியர்வை நதி ஓடிக்கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த கருப்பு நிறக் கரை போட்ட கதர் வேட்டி அவிழ்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.

தன் கணவரின் அந்த அழகான சிலை போன்ற தோற்றத்தை சிறிது நேரம் மிக அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, பின் மனதிற்குள்ளிருந்த தாகத்தை அடக்கியவாறு தேவகியம்மா பேச ஆரம்பித்தாள்.

‘‘பிறகு... இந்த விஷயம் தெரியுமா? ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது... ஓ.... நீங்கதான் பெரிய காங்கிரஸ்காரராச்சே! சொல்வதற்கே பயமா இருக்கு. என்றாலும், விழுவதைப் பார்த்து சிரிக்காதவங்க ரசனையே இல்லாதவங்கன்னு ஒரு பழமொழி இருக்கு. நம்ம வாசற்படியில் இருக்குற தாழ்ந்த ஜாதிப்பெண் இருக்கிறாள் இல்லையா? சேர... அவள் சரியா கீழே விழுந்தா... அந்த பெரிய திண்டு மேல இருந்து, தலைகீழா அந்த குறு'கலான பாதையில... ட்டும்னு.''

தன்னையே அறியாமல் மாதவமேனன் சற்று அதிர்ந்து போய்விட்டார். தன் மனைவியின் உரையாடலையும், விசேஷமாக அதைக் கூறியதையும், கூறிய முறையையும் அவர் அப்போதைக்கு வெறுத்தாலும், நடந்த சம்பவத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அளவுக்கும் அதிகமான ஆர்வத்துடன் அவர் தன் தலையை உயர்த்திக் கேட்டார்: ‘‘எந்த சேர? அந்த கர்ப்பிணிப் பெண்ணா?''

தன் கணவரின் ஆர்வத்தைப் பார்த்து தேவகியம்மாவிற்கு சுவாரசியம் உண்டானது. ‘‘ஆமாம்... ஆமாம்.. அந்த கர்ப்பிணியாக இருக்கும் தாழ்ந்த ஜாதிப் பெண்தான். அதுதான் சுவாரசியமான விஷயமே. பத்து மாதம் ஆகிட்டதால், வயிறு தானியக் கிடங்குபோல வீங்கியிருக்கு. அந்த வீங்கிப்போன வயித்தோடதான் அவள் பன்றியைப்போல தலைகீழா விழுந்தா. விழுந்தவுடன் வயித்துக்குள்ள இருக்கிற குழந்தை வெளியே வந்திருக்கும்னு நாங்க எல்லாரும் நினைச்சோம்.  அது நடக்கலை'' என்றாள் அவள்.

மாதவமேனன் தன்னுடைய பதைபதைப்பையும் கவலையையும் அடக்கிக்கொண்டு ஒரே மூச்சில் கேட்டார். ‘‘ஏதாவது நடந்துடுச்சா?''

‘‘ஏதாவது நடந்துடுச்சான்னா கேட்கிறீங்க? அசைவோ சலனமோ இல்லாம விழுந்து கிடக்குறதைப் பாத்துட்டு, அவ செத்துப்போயிட்டான்னு நாங்கல்லாம் முடிவு செஞ்சுட்டோம். ஆனா... அதைப்போய் பார்க்கிறதுக்கு- அந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணுக்கு பக்கத்தில் எந்த நாய் போகும்? கொஞ்ச நேரம் தாண்டினதும் அந்த ஏரிக்கரையில் செடி வெட்டப் போயிருந்த தாழ்ந்த ஜாதி ராயன் வந்து அவளைத் தூக்கிக்கிட்டுப் போனான். அவள் சாகலைன்னு அவன் சத்தம் போட்டுச் சொன்னான்.''

அந்த பேச்சைக் கேட்டு மாதவமேனன் அதிர்ச்சியடைந்து விட்டார். தான் வீட்டிற்கு வந்தபோது, தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கீழே விழுந்ததைப் பற்றி பெண்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலை அவர் நினைத்துப் பார்த்தார். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்தப் பெண் கீழே விழுந்த காரணம் பற்றி சில சந்தேகங்கள் அவருடைய மனதிற்குள் எழுந்தன.

ஆனால், தன் மனைவியிடம் அதைப்பற்றி எதுவும் பேசாமல், அவர் உரத்த குரலில் ‘‘பாலா'' என்று அழைத்தார்.

மாதவமேனனின் மருமகன் பாலகிருஷ்ணன் அறைக்குள் வந்தவுடன், அவர் மேஜையிலிருந்த பெரிய பிரம்பை எடுத்து, பாலகிருஷ்ணனை தனக்கு முன்னால் கைகட்டி நிற்கும்படி கூறிவிட்டுக் கேட்டார்: ‘‘உண்மையைச் சொல்லு... அந்த தாழ்ந்த ஜாதிப் பெண் எப்படி கீழே விழுந்தா?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel