Lekha Books

A+ A A-

வாழ்க்கைப் பயணம்

vazhkai-payanam

காற்றும் மழையும் காரணமாக பஞ்சாயத்து விளக்குகள் அணைந்து ஊரே இருளில் மூழ்கிப் போயிருந்தது. இல்லாவிட்டாலும் விளக்குகள் சீக்கிரமே அணைந்து போவது என்பது இப்போது ஒரு வழக்கமான செயலாக மாறியிருக்கிறது.

மண்ணெண்ணெயின் நினைக்க முடியாத அதிக விலை தான் அதற்குக் காரணம் மழை மேகங்கள் நட்சத்திரங்களை மூடியிருந்தன. வயல், வரப்பு, கரை, ஏரி எதையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் இருட்டும் நீரும் மட்டுமே.

"அய்யோ, கண் தெரியல விளக்கைக் கொளுத்துங்க."

"இப்போ விளக்கு எதுக்கு? கிடந்து உறங்கு."

அவள் இளைய மகனின் பின்பக்கத்தில் இலேசாகக் கிள்ளினாள். அவன் பிள்ளைகள் உறங்குவதற்காகக் காத்து படுத்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். பிள்ளைகள் எல்லாரும் சீக்கிரமே உறங்கிவிட்டாலும், இளையவனின் கண்கள் மட்டும் மூடவில்லை.

"பயமா, இருக்கு, விளக்கைக் கொளுத்துங்கம்மா."

"மகனே, ஏண்டா பயப்படுற? அம்மாவும் அப்பாவும் உன் பக்கத்துலதானே இருக்கோம்!"

அவள் இருட்டில் அவனுடைய தலையை வருடினாள். தன் கணவனிடமிருந்து ஒரு நீளமான பெருமூச்சு வருவதை அவள் உணர்ந்தாள். தன் மார்புடன் ஒட்டிக் கிடந்த இளைய மகனுடைய நெஞ்சு ஒரு குருவியின் நெஞ்சைப் போல துடிப்பதையும் அவளால் உணர முடிந்தது.

அவளுடைய கணவனின் பருமனான கை படுக்கை வழியாக ஊர்ந்து வந்து அவள் வயிற்றின் மீது வந்து நின்றது.

"என்ன சத்தம்?"

அவளுடைய மார்புடன் ஒட்டியிருந்த மகனின் தலை இலேசாக அசைந்தது.

"உன்கிட்ட நான் தோத்துப் போயிட்டேன்டா, மகனே. நீயும் தூங்குறது இல்ல. மத்தவங்களையும் தூங்க விடுறது இல்ல. இது என்னடா பழக்கம்?"

வீட்டிற்கு முன்னாலிருந்த தெரு வழியே ஒரு ஜட்கா வண்டி போய்க் கொண்டிருக்கும் சத்தம் தான் அவன் கேட்டது. இந்தக் காற்றிலும் மழையிலும் குதிரை வண்டியில் போவது யாராக இருக்கும்?

"நான் ஜட்கா வண்டியைப் பார்க்கணும்?"

அவன் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தான்.

"உன்னை நான் இன்னைக்கு கொல்லப் போறேன். அது மட்டும் உண்மை.

கோபம் வந்த அவள் அவனை பலமாகப் பிடித்து படுக்க வைத்து அவனுடைய பின் பாகத்தில் இன்னொரு முறை கிள்ளினாள்.

"நடுராத்திரி ஆன பிறகும் பையனுக்குத் தூக்கமே வர்றது இல்ல."

அவன் முணுமுணுத்தான்.

திடீரென்று மீண்டும் மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. வானத்திலிருந்து குடங்கள் வீட்டிற்கு மேலே வந்து விழுவதைப் போல் அவனுக்குத் தோன்றியது. மேலே விழுந்த நீர் வழிந்து வாசலில் விழுந்தது. படுக்கையறையின் சுவர்களிலும் ஜன்னல்களிலும் மழை நீர் வந்து விழுந்த சத்தம் கேட்டது. மழை விழும் சத்தத்தைக் கேட்டு பயந்த சிறுவன் எந்த வித அசைவும் இல்லாமல் தன் தாயுடன் சேர்ந்து படுத்துக் கொண்டான்.

"தூங்கிட்டானா?"

"தெரியல."

"இலேசா கிள்ளிப் பாரு."

"ம்.. தூங்கிட்டான்."

அவன் அவளுக்கு நேராகச் சாய்ந்து படுத்தான்.

"என்னத்தை சிந்திக்கிறே?"

"குதிரை வண்டியில யார் போயிருப்பாங்க? அதுவும் இந்த நடுராத்திரி பொழுதுல."

"அது கச்சேரிக்குப் போயிருந்த சந்துநாயரா இருக்கும்."- அவன் சொன்னான்.

காலையில் குதிரை வண்டியில் ஏறி பதினான்கு மைல் தூரத்திலிருக்கும் கச்சேரிக்கு வழக்கு விஷயமாகப் போன சந்துநாயரை அவன் பார்த்திருந்தான்.

குதிரை வண்டியின் சத்தம் மீண்டுமொரு முறை கேட்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் காதைத் தீட்டிக் கொண்டு படுத்திருந்தாள். இந்த நள்ளிரவு நேரத்தில் ஜட்கா வண்டியில் இப்படியும் அப்படியுமாகப் போவது யாராக இருக்கும்?"

"கொஞ்சம் கதவைத் திறந்து பாருங்க."

"எதுக்கு?"

"அது சந்து நாயர் இல்ல. என் மனசு சொல்லுது."

"யாரா இருந்தா நமக்கு என்ன? நாம கிடந்து தூங்குவோம். ஏய், மழை நேரத்துல இப்படி படுத்திருந்தா என்ன சந்தோஷம் இருக்கு?"

அவன் அவளை இறுக அணைத்தான்.

"போய்ப் பாருங்க வாசல்ல யாருன்னு."

அவனும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான். வாசலில் ஒரு சிறு சத்தமோ, காலடி ஓசையோ ஏதோவொன்று கேட்பதைப் போல் இருந்தது. அறையில் முட்டை விளக்கின் திரி கரிந்து அணைந்து போய் எவ்வளவோ நேரமாகிவிட்டது.

"கொஞ்சம் போய்ப் பாருங்க."

"யார் என்னன்னு தெரியாம..."

அவன் தயங்கி நின்றான்.

"அப்படின்னா நானும் வர்றேன்."

ஆணாக இருந்த அவனைவிட பெண்ணான அவளுக்குத்தான் தைரியம் அதிகம். முட்டை விளக்கை எரிய வைக்க முயற்சி செய்து பார்த்தும், அது எரியவில்லை. எண்ணெய் தீர்ந்து கரிந்து போய் அதுதான் ஏற்கெனவே அணைந்து போய் விட்டதே! அவன் தட்டுத் தடுமாறி சமையலறைக்குள் சென்று அங்கு சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பானீஸ் விளக்கை எடுத்து கொளுத்தி வாசலை நோக்கி நடந்தான். கதவைத் திறப்பதற்குத் தயாரான கை ஒரு நிமிடம் அப்படியே தயங்கி நின்றது.

"கதவைத் திறக்கணுமா?"- அவன் கேட்டான். "இப்போ சத்தம் எதுவும் கேட்கலையே?"

"வாசல்ல யாரோ இருக்காங்க. அது மட்டும் நிச்சயம்." அவன் தாழ்வான குரலில் சொன்னான்.

பானீஸ் விளக்கை தன் மனைவியின் கையில் தந்த அவன் கதவின் தாழ்ப்பாளை நீக்கினான். இருட்டில் யாரோ 'விசுக்'கென்று நடப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது.

"யார் அது?"

திடீரென்று வந்த தைரியத்துடன் அவன் அசைவு கண்ட இடத்தை நோக்கி நடந்தான். பானீஸ் விளக்கின் வெளிச்சத்தில் சுவரில் மூலையில் யாரோ நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் தன் மனைவியின் கையிலிருந்த விளக்கை திரும்பவும் வாங்கி, அதை அந்த ஒதுங்கி நிற்கும் மனிதனுக்கு நேராக உயர்த்திக் காட்டினான். முகத்தில் வெளிச்சம் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மனிதன் தன் தலையை குனிந்து கொண்டான்.

"யார் நீ?"

அவன் கையில் பானீஸுடன் முன்னோக்கி நடந்தான்.

"திருடனாக இருக்கலாம் பார்த்துப் போங்க."

இப்போது தைரியம் குறைவாக இருந்தது அவளுக்குத்தான்.

"விளக்கை அணை"- தாழ்ந்த குரலில் அந்த மனிதன் சொன்னான்: "எனக்குப் பின்னால ஆள் இருக்காங்க."

"அப்போ, திருடன்தான்."

"நான் திருடன் இல்ல. விளக்கை அணைங்க. எல்லாத்தையும் நான் சொல்றேன்."

அந்த மனிதன் பதைபதைப்புடன் வெளியே இருட்டில் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாக இருந்தான். வயது இருபத்து ஐந்து இருக்கும்.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் உன்கிட்ட எதையும் கேட்க விரும்பல. நடுராத்திரி நேரத்துல வீட்டு வாசல்ல வந்து நின்னுகிட்டு தொந்தரவா தர்ற?"

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel