
இருந்தாலும் ராமச்சந்திரன் என்ற கல் தொழிலாளியின் சற்றும் எதிர்பாராத மரணத்திற்குப் பின்னாலும், சாரதாவின் மோசமான சாவிற்குப் பின்னாலும் ஏதாவது சதி வேலைகள் இருக்குமோ என்று யாராவது கேட்டால் உடனடியாகப் பதில் சொல்வது என்பது கஷ்டமான ஒரு விஷயமே. சாரதா மரணம் அடைந்து சில நாட்கள் ஆவதற்குள்ளாகவே அவளின் தந்தையின் உடல் ஒரு மாமரத்தின் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த விஷயம் மேலும் பல ரகசியங்களை நோக்கி பலரையும் விரல் நீட்ட வைத்தது.
ஊர்க்காரர்களோ பக்கத்து ஊர்க்காரர்களோ போலீஸ்காரர்களோ யாரும் அந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேல் கிளறவில்லை. ராமச்சந்திரனின் மரணம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் என்றும்; மற்ற இரு மரணங்களும் முழுமையான தற்கொலையென்றும் விஷயம் தெரிந்த நிபுணர்கள் முடிவாக எழுதினார்கள். அதன் மூலம் போலீஸையும் மக்களையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதற்கு முன்பு ஆங்காங்கே சில முணுமுணுப்புகளும் தாழ்ந்த குரலில் சில விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஊரில் உள்ள இளைஞர்களின் ரகசியக் கூட்டங்களில் அவர்களால் மெதுவாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயமாகவும் அது இருந்தது.
ஒருவன் சொன்னான்: "அப்படின்னா இந்த விஷயத்துல ஏதோ இருக்கு! அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சது குறுப்பச்சனும், அவறாச்சனும சேர்ந்துதானே! அவங்கதானே எல்லா செலவையும் ஏத்து கல்யாணத்தையே பண்ணி வைச்சாங்க! பையனைக் கண்டுபிடிச்சு கொண்டு வந்தது குறுப்பச்சன். அவனுக்கு வேலை கொடுத்தது அவறாச்சன். இதையெல்லாம் பார்க்கிறப்போ..." இது இன்னொருவன்.
"சே... சே... அப்படியெல்லாம் பேசாதே"- இன்னொரு இளைஞன் அதை எதிர்த்துப் பேசினான்: "இந்த ஊர்ல இருக்குற எவ்வளவோ பேருக்கு அவங்க உதவியிருக்காங்க. இங்கே எந்த வீட்டுல யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் அவங்க உதவியிருக்காங்க. கூட இருந்து பார்த்திருக்காங்க. அவங்க அப்படி இருக்குறப்போ, அவங்க மேலயே நாம சந்தேகப்பட்டா எப்படி? இதையெல்லாம் யோசிச்சுப் பாருங்க..."
"நீ சொல்றது சரிதான்"- பெரும்பாலானவர்கள் இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
"அப்படிப் பார்த்தா..."- கோபால கணகன் என்ற மனிதன் சொன்னான்: "நம்மளை நாமே சந்தேகப்பட்டது மாதிரி இருக்கும். நம்ம பொண்டாட்டிமார்களையும், அக்கா- தங்கச்சிகளையும் நாமே சந்தேகப்படுறது மாதிரி இருக்கும். பிறகு... எதுக்கெடுத்தாலும் நமக்குச் சந்தேகம்தான் வரும். அதற்காக ராத்திரி- பகல் எல்லா நேரங்கள்லயும் வேலைக்குப் போகாம வீட்டுலயே நாம உட்கார்ந்துக்கிட்டு இருக்க முடியுமா? வீட்டுல இருக்கிற பெண்களுக்கு எந்த நேரமும் காவலா இருந்துக்கிட்டு இருக்க முடியுமா?"
"கணியான் அண்ணன் சொன்னது ரொம்பவும் சரின்றதுதான் என்னோட கருத்து." - அங்கிருந்த இளைஞர்களில் சற்று வயது அதிகமானவனும் ஸ்டார்ச் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளியும் பருமனான உடம்பைக் கொண்டவனுமான பார்கவன் தன்னுடைய முறுக்கு மீசையை விரலால் தடவி விட்டவாறு தன்னுடைய மனதில் இருக்கும் கருத்தைச் சொன்னான்: "டேய், ஆலும்காவில் இருந்த பொண்ணு... அவ பேரு என்ன? ம்... மாதவி... அவ ரயில் தண்டவாளத்துல தலையை வச்சு செத்தாளே! அது யாரோட தப்பு? தெற்குப் பக்கம் இருந்த உண்ணிகிருஷ்ணன் ஆத்துல குதித்து செத்தானே! அது யாரோட குத்தம்? இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ஊர்ல நடந்த எல்லா கொலைகளையும் சந்தேகத்துக்கிடமான மரணங்களையும் நம்ம போலீஸ்காரங்க நல்லாவே கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்களை எந்த விதத்திலேயும் நாம குறை சொல்றதுக்கு இல்ல. எந்த விஷயமா இருந்தாலும் அவங்க எப்படியாவது கண்டுபிடிச்சிருக்காங்கள்ல?"
பார்கவன் தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தான். அவன் சொன்னதற்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் சொன்னதை ஒன்றாக அங்கு கூடியிருந்தவர்கள் இறுதியாக ஒத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. நட்சத்திரங்கள் சிரித்தனவா என்பதை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை
இப்படிப்பட்ட சிறு சிறு விவாதங்கள் பல இடங்களிலும் நடந்து கொண்டுதானிருந்தன.
பெண்கள் கூடும் இடங்களில் பெரும்பாலும் இப்படிப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டன. இரண்டு பக்கங்களிலும் பேசுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஆனால் அங்கேயும் கடைசியில் அவறாச்சனும் குறுப்பச்சனும் நிரபராதிகளாகவே கருதப்பட்டார்கள். ஆற்றில் குளிக்குமிடம்தானே பெரும்பாலும் அவர்கள் உட்கார்ந்து பேசக்கூடிய இடமாக இருந்தது. ஆற்றின் நீர்க்குமிழிகள் சிரித்தனவா இல்லையா என்பது அவர்கள் யாருக்குமே தெரியாது.
ஆறு மீண்டும் ஓடியது. சூரியனும் சந்திரனும் உதித்தார்கள். இரயில் ஓடிக் கொண்டிருந்தது. அவற்றோடு சேர்ந்த கிராம வாழ்க்கையும் ஓடியது.
எல்லாம் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எங்கும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.
இப்படி அமைதியும் நல்ல சூழ்நிலையும் ஊரில் நிலவிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று ஆட்டக்களத்தில் அவறாச்சன் மரணத்தைத் தழுவினார்.
அவறாச்சனின் மரணம் ஊரையும், ஊரில் உள்ள மனிதர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் அனைவரும் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
மரணம் மிகவும் இயல்பாக, நடந்த ஒன்று என்ற உண்மையை நன்கு அறிந்து இருந்தாலும், அவர்களுக்கு உண்டான அதிர்ச்சிக்கும், பதைபதைப்புக்கும் ஒரு அளவே இல்லை. என்னதான் மரணத்தைப் பற்றிய முழுமையான அறிவு அவர்களுக்கு இருந்தாலும், அது எந்த விதத்திலும் அவர்களுக்கு ஆறுதல் தரவே இல்லை. அவறாச்சன் இல்லாத ஒரு உலகத்தை அவர்களால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. அவறாச்சன் இல்லாத ஒரு பண்ணையாறா? அவறாச்சன் இல்லாத ஒரு ஆகாயமா? அவறாச்சன் இல்லாத ஒரு ரயில் பாதையா? அவறாச்சன் இல்லாத காற்றா? அவறாச்சன் இல்லாத ஒரு வாழ்க்கையா?
ஆனால், எப்போதும்போல சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. பண்ணையாறு சூரியனைப் பிரதிபலித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. காற்று மாமரங்களுக்கிடையே 'உய்'யென்று வீசிக் கொண்டிருந்தது. இப்போதும் இந்த கிராமம் வாழ்ந்து கொண்டிருக்கிறதா என்ன? இந்த ஆறும் இந்த காற்றும் இந்த இரயில் பாதையும் எந்த விஷயத்தையும் இதுவரை அறியாமல் இருக்கின்றனவா என்ன?
எது எப்படியோ கடுமையான ஒரு நடுக்கத்துடன், ஆழமான ஒரு பயத்துடன், மிகவும் பலமான ஒரு கவலையுடன் புதிரான ஒரு இருட்டில் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாமல் சிக்கிக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருந்தனர். அந்த முழு கிராமத்து மக்களும் என்பதை மறுப்பதற்கில்லை.
இரவு நேரத்தில்தான் அவறாச்சனின் மரணம் நடந்தது. அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்பே அவறாச்சனின் மரணச் செய்தி கிராமம் முழுக்கப் பரவிவிட்டது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook