Lekha Books

A+ A A-

ராசலீலை - Page 5

raasaleelai

தட்டுத்தடுமாறி அவன் முன்னோக்கி நடந்தான். அருகில் யாராவது கடந்து சென்றால் கிருஷ்ணன் கேட்பான்.

“யார் அது?”

“ஒரு குழந்தை.”

“குழந்தை போட்டிருக்கிற ஆடையோட நிறம் என்ன பாலா?”

“நீலம்.”

கண்பார்வை தெரியாதவனாக ஆகிவிட்டாலும் மனதைக் கொண்டு எல்லா வண்ணங்களையும் அவனால் காண முடிந்தது. இப்போதும் கற்பனையில் அவற்றை அவனால் காண முடிகிறது. இருந்தாலும் சமீபத்தில் ஒரு நாள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவனுடைய மனதில் வயலட் நிறம் தெரியவேயில்லை. அந்த வண்ணத்தை அவன் நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தான். படிப்படியாகத் தான் வண்ணங்களை ஒவ்வொன்றாக மறந்து போய்விடுவோமோ என்று அவன் பயப்படத் தொடங்கினான்.

“இதோ நாம வந்துட்டோம்...”

பாலன் சொன்னான். பாதையில் அழுக்கு நீர் தேங்கிக் கிடந்தது. நீரில் கால்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிருஷ்ணனுக்கு பாலன் உதவினான். கிருஷ்ணனின் கையை இறுகப் பற்றிக்கொண்டு பாலன் பூங்காவை நோக்கி நடந்தான். பூங்காவில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. புற்களோ, பூச்செடிகளோ மருந்துக்குக்கூட அங்கு இல்லை. எல்லாவற்றையும் பசியில் சிக்கிய பசுக்கள் தின்று முடித்திருந்தன.

“இது டிசம்பர் மாசமாச்சே! பூங்கா முழுவதும் கிறிஸ்துமஸ் பூக்கள் இருக்குமே பாலா?”

“ஆமா கிருஷ்ணா! பூங்காவோட நாலு பக்கங்களிலும் கிறிஸ்துமஸ் பூக்கள் மலர்ந்து கிடக்குது.” -பாலன் சொன்னான்.

“என்ன நிறங்கள்ல பாலா?”

“வெள்ளை, சிவப்பு, வயலட்...”

கிருஷ்ணனின் மன இருட்டில் சிவப்பு, வெள்ளை நிறங்களில் கிறிஸ்துமஸ் மலர்கள் விரிந்தன. வயலட் நிறத்தில் மலர் விரியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அந்த நிறத்தை அவனால் நினைவுபடுத்த முடியவில்லை. தன்னுடைய நண்பனின் முகம் வாடிப்போனதை பாலன் கவனித்தான்.

“என்ன ஆச்சு கிருஷ்ணா?”

“ஒண்ணுமில்ல...”

“பொய் சொல்ற.”

“பாலா, வயலட் நிறத்தை என்னால நினைவுபடுத்திப் பார்க்க முடியல. அது எப்படி இருக்கும்?”

“சிறு வயசுல பள்ளிக்கூடத்துக்கு எழுதக் கொண்டுபோன வயலட் நிற மையை நினைச்சுப் பாரு...”

“இல்ல... என்னால முடியல.”

“ஓணப்பண்டிகை சமயத்துல வயலில் மலர்ந்து நிக்கிற காக்கா பூக்கள்...”

“இல்ல... எனக்கு ஞாபகத்துல வரல...”

“சங்கு புஷ்பங்கள்...”

“இல்ல...”

கிருஷ்ணனின் கண்களைவிட்டு எப்போதோ எல்லா வண்ணங்களும் மறைந்துபோயிருந்தன. இப்போது மனதைவிட்டும் அவை மறைய ஆரம்பிக்கின்றன.

அவர்கள் வறண்டு காய்ந்துகிடக்கும் பூங்காவில் மெதுவாக நடந்தார்கள். பாலன் கையைப் பிடித்திருந்ததால் கிருஷ்ணனுக்குத் தன்னுடைய பிரம்பை உபயோகிக்க வேண்டிய அவசியம் உண்டாகவில்லை.

“என்னை சிலைக்குப் பக்கத்துல கூட்டிட்டு போ.”

கிருஷ்ணன் இருட்டில் துழாவினான். பாலன் அவன் கையைப் பிடித்து காந்தியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான். கிருஷ்ணனின் கையில் இருந்ததைப் போல காந்தியின் கையிலும் ஒரு தடி இருந்தது. சிலைக்குக் கீழே ஒரு சொறிபிடித்த நாய் சுருண்டு படுத்திருந்தது. காந்தியின் தலையில் காகங்கள் எச்சமிட்டிருந்தன. அது எதையும் பார்க்க முடியாத கிருஷ்ணன் காந்தியின் முன்னால் கைகூப்பி நின்றான். அவனுடைய கால் சொறிநாயின் உடம்பில் பட்ட பிறகும், அந்த நாய் சிறிதும் அசையவில்லை. காலைப் பின்னால் இழுத்தவாறு கிருஷ்ணன் கேட்டான்.

“இது என்ன பாலா?”

“யாரோ பூவைக் கொண்டு வந்து வச்சிருக்காங்க. ஒரு கட்டு லில்லிப்பூக்கள்...”

அதைக்கேட்டு கிருஷ்ணனின் மனம் குளிர்ந்தது. அதே நேரத்தில் அவனுக்குக் கொஞ்சம் குற்றவுணர்வும் உண்டானது. தானும் ஒரு சிறு கட்டு மலர்களுடன் வந்திருக்க வேண்டாமா என்று அவன் நினைத்தான்.

“வா.. நாம போகலாம்.”

பாலன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பூங்காவைவிட்டு வெளியே வந்தான். வெயில் முழுமையாகப் போய் விட்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இரவு வந்துவிடும். கிருஷ்ணனைச் சுற்றியுள்ள இருட்டு கனமாகிக் கொண்டிருந்தது. பாலன் பிறகு அவனை அழைத்துக் கொண்டுபோனது முன்பு கிருஷ்ணன் வசித்த இடத்திற்கு.

சலவைத் தொழிலாளர்களின் காலனிக்குப் பக்கத்தில் இருந்தது அந்த இடம். கண்ணுக்கெட்டாத தூரம்வரை நேராகவும் தலைகீழாகவும் ஆடைகள் காய்வதற்காகத் தொங்கவிடப்பட்டிருந்தன. நனைந்த துணிகளின் வாசனை அந்தப் பகுதியெங்கும் பரவியிருந்தது. பச்சை நிற நீர் நிறைந்திருந்த தடாகப் பகுதியில் சலவைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் குளித்துக்கொண்டும், மல ஜலம் கழித்துக் கொண்டும் இருந்தார்கள். நகர மக்கள் உடுத்தும் ஆடைகளைச் சலவை செய்யும் அதே நீரில் சலவைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களின் பின்பக்கத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.

“பாலா, என் கையை விடு...”

பாலனிடமிருந்து தன் கையை உருவிய கிருஷ்ணன் கையிலிருந்த பிரம்பை ஊன்றியபடி நடந்தான். தன்னுடைய பழைய இருப்பிடத்திற்குப் போகும் குறுகலான பாதையில் நடந்து செல்லும்போது நடப்பதற்குச் சிறிதுகூட பாலனின் துணை கிருஷ்ணனுக்குத் தேவையில்லை என்றாகிவிட்டது. பத்து வருடங்கள் கடந்துபோன பிறகும் சிறிதுகூட மாற்றமில்லாமலிருக்கும் அந்த குறுகலான பாதையின் ஒவ்வொரு வளைவையும் திருப்பத்தையும் அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்தது. தன்னுடைய கால்களுக்கு திடீரென்று கண்கள் முளைத்துவிட்டிருப்பதைப் போல் சர்வ சாதாரணமாக அவன் முன்னோக்கி நடந்து சென்றான். அவனுக்கு நிகராக வேகமாக நடந்துபோவதற்குப் பதிலாக பாலன் ஓடினான். வழிகாட்டுவதற்குப் பயன்படக்கூடிய பிரம்பு கையில் இருந்தாலும் கிருஷ்ணன் அதை உபயோகிக்கவே இல்லை. நடந்துபோவது கண்பார்வை தெரியாத ஒரு மனிதன் என்று சொன்னால் பார்ப்பவர்கள் யாரும் நம்பவே மாட்டார்கள்.

இரண்டாவது மாடியில் இருந்தது கிருஷ்ணன் முன்பு வசித்த வீடு. கோழிக்கூட்டைப் போன்ற ஒரு அறை. அதைவிட நல்ல ஒரு அறையை வாடகைக்கு எடுக்க அவனால் முடியும். லீலாவைத் திருமணம் செய்த பிறகு அப்படியொரு நல்ல இடமாக வாடகைக்கு எடுத்து போகலாம் என்று அவன் தீர்மானம் செய்து வைத்திருந்தான். மாடிக்குச் செல்லும் படிகளின் முன்னால் போய் நின்ற கிருஷ்ணன் லேசாகத் தயங்கி நின்றான். கையிலிருந்த பிரம்பால் அவன் நான்கு பக்கங்களிலும் தடவிப் பார்த்தான். படிமீது பிரம்பால் தட்டிப்பார்த்தான். ஒரு மழைக்காலத்தின்போது இடிந்துவிட்ட அந்தப் படியைப் புதிதாகப் புதுப்பித்திருந்தார்கள். அதில் ஏறுவதற்கு கிருஷ்ணனுக்கு பாலனின் உதவி தேவைப்பட்டது.

மேலே படிகள் முழுவதும் ஏறியபிறகு கடைசியாக இருந்த படியில் கிருஷ்ணன் ஒரு நிமிடம் நின்றான். அங்கேயிருந்து பார்த்தால் சலவைத் தொழிலாளர்களின் சாம்ராஜ்யத்தை முழுமையாகப் பார்க்கலாம். கிருஷ்ணனின் கண் முன்னால் இருட்டில் அந்த சாம்ராஜ்யம் மெதுவாகத் தெரிந்து உடனே மறையவும் செய்தது. உலர்வதற்காகப் போட்டிருந்த பல வண்ணங்களைக் கொண்ட துணிகள். அந்த ஈரத்துணிகளின் பலவிதப்பட்ட வண்ணங்களை கற்பனை பண்ணிப் பார்க்க மீண்டும் அவை இருட்டோடு சங்கமமாகின. சலவைத் தொழிலாளர்களுடைய உலகம் ஒரு இருட்டான கடலாக மாறியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel