Lekha Books

A+ A A-

ராசலீலை - Page 2

raasaleelai

அதற்குத் தன்னுடைய சொந்தக் கால்களால் நிற்பதற்கான பலம்கூட இல்லாமலிருந்தது.

இந்த நகரத்திலுள்ள குதிரைகளில் பெரும்பாலானவை நோய் வந்தவையாகவோ, வயதானதாகவோ இருந்தன. இருப்பினும்...

பாலன் சொன்னான். “வயதான ஒரு குதிரைகூட இப்போ இந்த நகரத்துல இல்ல. அப்படிப்பட்ட குதிரைகள் இருக்குறதை அதிகாரிகள் அனுமதிக்கிறது இல்ல. இப்போ நகரத்தில் இருக்குற எல்லா குதிரை வண்டிகளையும் படுவேகமா இழுத்து ஓடிக்கிட்டு இருக்கிறது பந்தயக் குதிரைகளைப் போல நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வேகத்தையும் கொண்ட குதிரைகள்தான்...”

தான் அமர்ந்திருக்கும் குதிரை வண்டிக்கு முன்னால் மின்னல் வேகத்தில் பாய்ந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு பந்தயக் குதிரையை கிருஷ்ணன் கற்பனை பண்ணிப்பார்த்தான்.

“நீ இப்பவும் அந்த வார்னிஷ் ஃபாக்டரிக்குப் பக்கத்துல இருக்குற அறையிலதான் தங்குறியா?”

கிருஷ்ணன் கேட்டான்.

“இல்ல... இல்ல... எனக்கு இப்போ சொந்தத்துல ஒரு அருமையான ஃப்ளாட் இருக்கு. முன்னாடி ஒரு சின்ன பூந்தோட்டம் இருக்கு. அதுல ஒரு ஊஞ்சல் இருக்கு. சாயங்காலம் வந்தா என் மனைவியும் பிள்ளைகளும் அந்த ஊஞ்சல்ல உட்கார்ந்து காற்று வாங்குவாங்க...” -பாலன் சொன்னான்.

முன்பு பாலன் தங்கியிருந்த சிறிய, வெளிச்சமே இல்லாத அந்த அறை இப்போதுகூட கிருஷ்ணனின் மனதில் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. வார்னிஷ் ஃபாக்டரிக்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பத்தில் இருந்தது அந்த அறை. அதற்கு முன்னாலிருக்கும் சாக்கடையருகில் குழந்தைகள் மட்டுமல்ல, வயதானவர்களும் சிறுநீர் கழிப்பதிலோ, மலம் கழிப்பதிலோ ஈடுபட்டிருப்பார்கள். அசுத்தம் என்பது இந்திய மனதின் ஒரு பாகம் என்றுகூட கூறலாம். கிருஷ்ணன் இதைப் பற்றி பலமுறை வாதம் செய்திருக்கிறான். பிணங்கள் மிதந்து கொண்டிருக்கும் கங்கை நீர்தான் நமக்குத் தீர்த்தம். இப்படியெல்லாம் அவன் அந்தக் காலத்தில் பேசுவான்.

‘இப்போ நான் அதையெல்லாம் பார்க்கவேண்டியது இல்லியே! குருடனா இருக்குறதைப் பற்றி ஒரு இந்தியன் மனசுல கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொல்லப்போனா அப்படி அவங்க இருக்குறதுகூட ஒரு வகையில கொடுப்பினைன்னுதான் சொல்லணும்...’ -கிருஷ்ணன் நினைத்தான்.

ஒரு காலத்தில் கிருஷ்ணனுக்கு நல்ல பார்வை சக்தி இருந்தது. கடுகு எண்ணெய் வியாபாரம் செய்யக்கூடிய ஒரு சிறிய நிறுவனத்தில்தான் அவனுக்கு வேலை. சரஸ்வதியின் வண்ணப் படத்தைக்கொண்ட கடுகு எண்ணெய் டின்களுக்கு மத்தியில்தான் தன்னுடைய பகல்பொழுது முழுவதையும் அவன் செலவழித்தான். அஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் போட்ட பெரிய ஸ்டோரின் ஒரு மூலையில்தான் அவன் எப்போதும் அமர்ந்திருப்பான். அங்கே எப்போதும் கடுகு எண்ணெயின் மணம் இருந்துகொண்டேயிருக்கும். சேட் அவனுக்கு ஒழுங்காக சம்பளம் தருவதில்லை. ஆனால், அவனுக்குத் தேவை என்று வரும்போது எதைக் கேட்டாலும் சேட் உடனடியாகத் தருவார். கிருஷ்ணனுக்கு மூளையில் நோய் வந்தபோது சிகிச்சைக்கான முழு செலவையும் சேட்தான் பார்த்துக்கொண்டார். இரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் வந்து அவர் ஒரு நிரந்தர நோயாளியாக அப்போது இருந்தார்.

கிருஷ்ணனும் பாலனும் பயணம் செய்துகொண்டிருந்த குதிரை வண்டி ஜன சந்தடி நிறைந்த தூசு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு சாலை வழியே மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வயதான குதிரை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் இருக்கும் காட்சிகளைப் பார்ப்பதற்கு கிருஷ்ணன் மிகவும் ஆசைப்பட்டான். பதினைந்து வருடங்கள் அவன் வாழ்ந்த நகரமாயிற்றே அது! ஆனால், அவனால் நான்கு திசைகளிலும் இருட்டை மட்டுமே பார்க்கமுடிந்தது. தலையைப் பின்னோக்கி சாய்த்து வைத்து அமர்ந்திருக்கும் நேரங்களில் இருட்டில் ஒரு மங்கலான தீப்பிழம்பு அவன் கண்களில் தெரியும். அது... சூரியன்தான்.

கிருஷ்ணனின் தலையை ஞாபகங்களின் குவியல் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது. முதல் தடவையாக நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்தது, சேட்டிடம் வேலை பார்த்தது, பாலன் அறிமுகமானது, பழைய தாள்களும் காலி புட்டிகளும் வாங்கி விற்கும் கடைக்கு மேலே இருக்கும் தன்னுடைய அறை, தான் லீலாவைக் காதலிக்க ஆரம்பித்தது. தனக்கு வந்த நோய்...

“பாலா...”

“என்ன?”

“நீ லீலாவை பார்க்குறது உண்டா...?”

“ம்... அவ சந்தோஷமா இருக்கா.”

“குழந்தைங்க?”

“ரெண்டு குழந்தைங்க இருக்கு. ஒரு ஆண், ஒரு பெண்...”

பாலன் அவனைப் பார்த்து சிரித்தான்.

“என்ன... நீ லீலாவைப் பார்க்கணுமா?”

“கட்டாயம்...”

அதைச் சொன்னபோது கிருஷ்ணன் தனக்குள் நினைத்தான். ஒரு குருடனான தான் எப்படி லீலாவைப் பார்க்க முடியும்? கண்கள் வாடகைக்குக் கிடைப்பதாக இருந்தால் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் அவன் செலவழிக்கத் தயாராக இருந்தான். கிருஷ்ணன் லீலாமீது அந்த அளவிற்குக் காதல் வைத்திருந்தான்.

“நாம சீக்கிரம் லீலாவைப் போய்ப் பார்ப்போம்.”

பாலன் தன்னுடைய நண்பனிடம் சொன்னான். படிப்படியாக குதிரை வண்டி அதிகமாகக் குலுங்க ஆரம்பித்தது. குண்டு குழிகள் நிறைந்த சாலையின் வழியாக அவர்கள் இப்போது பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று கிருஷ்ணன் வார்னிஷ் வாசனை வருவதை உணர்ந்தான்.

“நாம வந்துட்டோம்... ரெண்டு திருப்பங்களைத் தாண்டிட்டா என் ஃப்ளாட் வந்திடும்...” -பாலன் சொன்னான்.

“வார்னிஷ் வாசனை...”

“அது சும்மா உனக்குத் தோணுறது...” பாலன் சிரித்துக்கொண்டே கிருஷ்ணனின் கையை அழுத்தினான். “உன்னோட பழைய ஞாபகம்...”

வார்னிஷ் ஃபாக்டரியிலிருந்து வரும் அந்த வாசனை பலமாக வந்தது. முன்பு பாலன் தங்கியிருந்த அறைக்குப் போகும்போதெல்லாம் அந்த வாசனையை கிருஷ்ணன் உணர்ந்திருக்கிறான். காற்று வீசும் நேரங்களில் பாலனின் அறைவரை அந்த வாசனை வந்து கொண்டிருக்கும்.

“உன் அறையில கல்யாண வீட்டோட மணம் இருக்கு...”

கிருஷ்ணன் விளையாட்டாகக் கூறுவதுணடு.

லீலாவின் வீட்டிற்குப் போகக்கூடிய பாதையும் இதுதான். பாலனின் அறையைக் கடந்து சுமார் ஒரு மைல் தூரம் உள்ளே போகவேண்டும். அப்போது அவள் தன்னுடைய வயதான தந்தையுடன் இருந்தாள். ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி செய்கின்ற ஒரு நிறுவனத்தில் அவளுக்கு ஒரு சிறிய வேலை கிடைத்திருந்தது. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருந்த ஒரு தம்பியும் அவளுடன் இருந்தான். செலவுக்குப் பிரச்சினையாக இருக்கும் மாதங்களில் பாலனும், கிருஷ்ணனும் அவளுக்கு உதவிசெய்ய முன்வருவார்கள். ஆனால், பெரிய மரியாதைக்காரியாக இருந்தாள் அவள். ஒருமுறைகூட அவள் அவர்களிடமிருந்து ஒரு பைசாகூட வாங்கியதில்லை.

“தேவைப்படுறப்போ நானே கேக்குறேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு என்ன வேற ஆள்களா?” - அவள் கூறுவாள்.

அவள் கள்ளங்கபடமில்லாமல் சிரிப்பாள்.

விலை குறைந்த நைலான் புடவைகளைத்தான் அவள் எப்போதும் அணிவாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel