Lekha Books

A+ A A-

ராசலீலை - Page 7

raasaleelai

சிறிதுநேரம் சென்றதும் இரண்டு காலியான எண்ணெய் டின்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கிழவன் அந்தப் பக்கம் வந்தான். அறிமுகமில்லாத அந்த இருவரையும் பார்த்து ‘என்ன வேணும்?’ என்று கேட்கிற பாவனையில் அவன் அவர்களைப் பார்த்தான்.

“இங்கே யாரும் இல்லையா?”

“என்ன விஷயம்?”

“சேட்டைப் பார்க்கணும்.”

“எண்ணெய் விஷயமா இருந்தா சேட்டைப் பார்த்து பிரயோஜனமில்லை. இங்கே எண்ணெய் இப்போ ஸ்டாக் இல்ல.”

“எண்ணெய் வாங்க நாங்க வரல...”

“அப்படின்னா உள்ளே போங்க.”

கிழவன் சுட்டிக் காட்டிய வழியில் அவர்கள் உள்ளே சென்றார்கள். ஒரு ஸ்டூலின் மீது தன்னுடைய வீங்கிப்போன வயிற்றின் மீது கைகளைப் பிணைத்தவாறு சேட் உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னால் எண்ணெய் சம்பந்தப்பட்ட கணக்குப் புத்தகங்கள் இருந்தன. பாலன் கிருஷ்ணனைப் பிடித்து சேட்டின் முன்னால் நிறுத்தினான்.

“உங்களுக்கு என்னைத் தெரியலையா? பத்து வருடங்களுக்கு முன்னாடி இங்கேயிருந்துபோன கிருஷ்ணன்...”

“ஆமா... கிருஷ்ணன்...”

“என்னை நீங்க மறக்கலியே!”

கிருஷ்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

“உங்க வியாபாரம் எப்படி இருக்கு?”

சற்று அதிகார தொனியில் கேட்டான் கிருஷ்ணன். அந்த வியாபாரத்தை வளர்த்ததில் அவனுக்கு ஒரு பங்கு இருக்கிறதே! அவன் இரவு பகல் பாராமல் வேலைசெய்து வளர்த்த வியாபாரமாயிற்றே அது!

“உனக்குக் கண் தெரியாதா?”

சேட் கேட்டார்.

“நீங்க அதையெல்லாம் மறந்துட்டீங்களா? எனக்கு மூளை சம்பந்தமான உடல் நலக்கேடு...”

“நீ எதுக்காக இப்போ வந்தே?”

அந்தக் கேள்வி கிருஷ்ணனைச் சோர்வு கொள்ளச் செய்தது.

“சும்மாதான்...”

“டேய், நான் இந்த வியாபாரத்தை நிறுத்தப் போறேன். நீ எவ்வளவு காலம் இந்த நிறுவனத்துல வேலை செய்தே? பதினைஞ்சு வருடங்கள். அப்படித்தானே! அப்படின்னா நான் சொல்றதைக் கேளு. பதினைஞ்சு வருடங்கள் எண்ணெய் விற்று கிடைக்கிற லாபத்தை பதினைஞ்சு நாட்கள்ல நான் இப்போ சம்பாதிக்கிறேன்...”

சேட் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

“உங்களுக்கு வேற ஏதாவது பிஸினஸ் இருக்கா என்ன?”

“இருக்கு. கள்ளக் கடத்தல்...”

சேட்டின் சிரிப்புச் சத்தம் ஊசி முனைகளைப் போல கிருஷ்ணனின் காதுக்குள் நுழைந்து வேதனை உண்டாக்கியது. சேட் சொன்னதை அவனுக்கு நம்புவதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. நகரத்திலேயே கலப்படம் எதுவும் செய்யாமல் எண்ணெய் விற்கும் ஒருசில நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது அது. பல நேரங்களில் அது பயங்கர நஷ்டத்தின் எல்லையில் போய் நின்றிருக்கிறது.

இருப்பினும் திருட்டுத்தனமோ தவறான செயல்களோ செய்ய சேட் எப்போதும் தயாராக இருந்ததில்லை. “தப்பான வழிகள்ல பணம் சம்பாதிச்சா நம்ம பிள்ளைகளுக்கு அந்தப் பணத்தால நல்லது நடக்காது” -சேட் கூறுவார்.

“இந்தா... இதை வச்சுக்கோ. பதினஞ்சு வருடங்கள்...”

சேட் தன்னுடைய சில்க் ஜிப்பா பைக்குள் கையை நுழைத்து இரண்டு மூன்று நோட்டுகளை வெளியே எடுத்து அவனிடம் நீட்டினார். அந்தப் பணத்தை வாங்க கிருஷ்ணனின் மனம் சம்மதிக்கவில்லை.

“வாங்கிக்கோ...” பாலன் கிருஷ்ணனின் காதில் சொன்னான்.

சேட் இப்போதும் நோட்டுகளை நீட்டிக் கொண்டிருந்தார். தனக்கு அன்னம் தந்த கைகள்... கிருஷ்ணன் அந்தப் பணத்தை வாங்கினான். தன்னுடைய உள்ளங்கை எண்ணெய் பட்டு ஈரமாவதை அவனால் உணர முடிந்தது.

உண்மையாகச் சொல்லப்போனால் அது பழைய சேட் இல்லை. அவருடைய அதே உடலமைப்பையும் குரலையும் கொண்ட அவரின் மகனே அது. பழைய சேட் இரத்த அழுத்தத்தாலும் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியிருந்தார்.

தட்டுத் தடுமாறி கிருஷ்ணன் வெளியே வந்தான். அவர்கள் வேறொரு குதிரை வண்டியில் ஏறினார்கள். அழுகிப்போன உருளைக்கிழங்கு வாசனை வரும் பாதைவழியாகக் குதிரைவண்டி போய்க் கொண்டிருந்தது.

3

கால் வைக்கும்போது அசைகின்ற படிகள் வழியாக பழைய கட்டிடத்தின் முதல் மாடிக்கு கிருஷ்ணனும் பாலனும் ஏறிச் சென்றார்கள். ஒரு பழைய கட்டிடமாக அது இருந்தாலும் லீலாவின் வீட்டில் நல்ல வெளிச்சமிருந்தது. புதிதாக உண்டாக்கிய அகலமான ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வந்து கொண்டிருந்தது. இருட்டில் ஒரு கீற்றைப் போல கிருஷ்ணன் அந்த வெளிச்சத்தை உணர்ந்தான். தரையில் பிரம்பை வைத்தபோது கீழே தரை விரிப்பு இருப்பதை அவன் புரிந்துகொண்டான். மெத்தென்றிருந்த ஸோஃபாவில் பிரம்பை மடியில் வைத்தவாறு கிருஷ்ணன் அமர்ந்தான். அந்த அறையிலிருக்கும் மரச்சாமான்களையும் அலங்காரப் பொருட்களையும் காண அவனுடைய கண்கள் ஏங்கின. அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அவனுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

ஒரு வயதான பெண் உள்ளேயிருந்தவாறு முகத்தைக் காட்டினாள். புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்ட அந்தப் பெண் அந்த ஊர்க்காரிதான். காலடிச் சத்தத்தைக் கேட்டு கிருஷ்ணனின் நெஞ்சு படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பாலனைக் கண்ட அந்தப்பெண் உள்ளே பார்த்தாள். உள்ளே ஒரு ஆணின் குரல் கேட்டது.

“நாங்க நாலு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தோம்.”

அந்தப் பெண் சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். நான்கு ஆக இனியும் பத்து நிமிடங்கள் இருந்தன. அவள் உள்ளே போனாள். பாலன் கிருஷ்ணனின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய நண்பனின் இதயம் வேகமாக அடிப்பதை அவனால் உணர முடிந்தது.

“லீலா இங்கே இல்லையா பாலா?”

“இருக்கா. அவள் சின்னப் பிள்ளைக்குப் பால் கொடுத்துக்கிட்டு இருக்கா” பாலன் தன் தொடையில் தாளம் போட்டவாறு சொன்னான்.

உள்ளேயிருந்து மீண்டும் ஒரு ஆணின் குரல் மெதுவாகக் கேட்டது. கிருஷ்ணன் பாலனுக்கு நேராக முகத்தைத் திருப்பினான்.

“அது லீலா கணவரோட அப்பா.” -பாலன் விளக்கினான். “அவர் அப்படித்தான் பேசுவாரு.”

“இங்கே யாரெல்லாம் இருக்காங்க?”

“லீலாவும் அவ கணவரும் ரெண்டு குழந்தைகளும். பிறகு அவ கணவரோட அப்பா...”

“லீலாவோட கணவர் பேர் என்ன?”

“பேரு... ம்... ஸ்ரீதரன். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சீனியர் அக்கவுண்டன்டா இருக்காரு.”

கடிகாரத்தின் முட்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. வினாடி முள் ஒவ்வொரு தடவை நகர்கிறபோதும் ஒரு மெல்லிய ஓசை கேட்டது. கிருஷ்ணன் கடிகாரமிருந்த இடத்தைப் பார்த்தான். அங்கு இருண்ட ஒரு பெரிய துவாரம் இருப்பதை அவன் பார்த்தான். வெளிச்சம் வந்துகொண்டிருந்த ஜன்னலுக்குப் பக்கத்தில் இருட்டு சிவப்பு நிறத்தில் இருந்தது.

உள்ளே ஒரு கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு கிருஷ்ணன் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். ஒரு ஆஜானுபாகுவான மனிதன் சட்டை பொத்தான்களைப் போட்டவாறு நடந்து வந்து கொண்டிருந்தான். கிருஷ்ணன் அவனை அசைகின்ற ஒரு இருண்ட கட்டையாகப் பார்த்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel