Lekha Books

A+ A A-

தாரா ஸ்பெஷல்ஸ் - Page 7

thara special

போளிக்கு அது புரியவில்லை.

"வெள்ளைக்காரங்க தினமும் தண்ணி அடிக்கிறாங்களே!''

"சூப், முட்டை, பால், மட்டன், மீன், காய்கறிகள், ரொட்டி, வெண்ணெய், பழங்கள், விட்டமின் மாத்திரைகள்- இவற்றையும் அவங்க ரெகுலரா சாப்பிடுறாங்களே! நாம் அப்படியா?''

பாப்பச்சன் சொன்னான்:

"குடல் வெந்து சாகுறதுக்கு இதுக்குமேல என்ன வேணும்?''

பிரேம்ரகு சொன்னான்: "முன்னாடி மாதிரி நான் இப்போ அதிகமா தண்ணி அடிக்கிறது இல்ல. இருந்தாலும் மது பாட்டில்களுக்குப் பஞ்சம் இல்ல... என்னோட ரெண்டு சகோதரிகளோட கணவர்களுக்கும் ரெண்டு நகரங்கள்ல ரெண்டு வெளிநாட்டு சரக்குகள் விக்கிற மதுக்கடைகள் இருக்கு. நான் கள்ளக்கடத்தல் செய்யிற சரக்கு வேற தனியா கிடைக்கும். அதுக்காகத் தொடர்ந்து இதைக் குடிக்கிறது இல்ல. நான் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. தென்னந்தோப்புகளைப் பார்த்துக்கணும். பன்னிரண்டு ஏக்கர் நெல் வயலைக் கவனிக்கணும். இது போக என்னோட சொந்த பிசினஸ் வேற. இதை எல்லாம் பார்த்துக்க நானும் செங்கிஸ்கானும் மட்டும்தான் இருக்கோம்.''

"அலமாரியில் இருக்கிற மதுபாட்டில்கள் எல்லாமே கடத்தல் பொருட்களா?'' போளி கேட்டான்.

"மது பாட்டில்கள் மட்டுமல்ல... டிரான்சிஸ்டர் ரேடியோ, டேப்ரிக்கார்டுகள், வாட்சுகள், விலை உயர்ந்த பவுண்டன் பேனாக்கள், சிகரெட்கள், லைட்டர்கள், டெலஸ்கோப்புகள், ரிவால்வர்கள், டார்ச் லைட்டுகள், விட்டமின் மாத்திரைகள், செவன் ஸீஸ் காட்லிவர் ஆயில் கேப்சூல்கள், சில்க் லுங்கிகள், ஷேவிங் செட்டுகள்... இப்படிப் பல சாமான்களை நான் வியாபாரம் செய்யறேன். தங்கத்தை மட்டும் நான் கடத்துறது இல்ல... அதை விற்கணும்னா தூரமா போகணும்.''

"எங்கே இருந்து இதை எல்லாம் வாங்குறே?''

"கடவுள் கடலைப் படைச்சிருக்காரு. மனிதன் அதுல கப்பல் ஓட்டிட்டு போறான். கப்பல்கள்ல பல நாடுகளைச் சேர்ந்த பல பொருட்கள் வந்து சேருது. கடற்கரைக்கு ரொம்ப தூரத்துலயே படகுகள் கப்பலை நெருங்குது. பொருட்கள் கை மாறுது. வியாபாரம் நடக்குறது இப்படித்தான்.''

"லாபம் என்ன வருது?''

"மாசத்துக்கு அய்யாயிரம் ரூபா கிடைக்கும்.'' பிரேம்ரகு சொன்னான். "இது ஆரம்பிச்சு மூணு நாலு வருஷமாச்சு. இதில் ஆபத்து நிறைய இருக்கு. இன்னும் ஒரு வருஷத்துல இந்த பிசினஸை ஒரேயடியா இழுத்து மூடிட்டு முழு கவனத்தையும் விவசாயத்துல செலுத்தப் போறேன். உணவு பற்றாக்குறை உள்ள நாடாச்சே இந்தியா!''

"இந்தியா முன்னேறுவதற்கு வழி இருக்கா பிரேம்?'' போளி கேட்டான்.

"இங்கு நடக்குறது முழுவதும் அரசியல் விளையாட்டு. சின்ன புள்ளைங்களோட அரசியல் விளையாட்டு. நல்ல ஒரு பொருளாவது இங்கே கிடைக்குமா? மேட் இன் இந்தியா என்று பார்த்தாலே எனக்கு பயம். ஊசி போடுற மருந்துக்குள்ளே யானை செத்துக் கிடக்கும்.''

"சொல்றப்போ எல்லாத்தையும் சொல்லணும்.'' பாப்பச்சன் சொன்னான்: "செத்துக் கிடக்குறது யானை இல்ல... ஈ...''

"சுதந்திரம் கெடைச்சு கொஞ்ச காலம்தானே ஆகுது, போளி!'' பிரேம்ரகு சொன்னான்: "இந்தியா நிச்சயம் நன்றாக ஆகும். பெரிய ஒரு நாடாக வளரும். அதுக்கு குறைந்தபட்சம் நூறு வருஷங்கள் ஆகும்.''

"நீங்க நூறு வருஷம் உயிரோட இருப்பீங்களா?''

இவ்வளவு நேரத்தில் இரண்டாவது பாட்டில் பாதி காலியானது. வறுத்த வைத்த திருதா மீன் தீர்ந்தது. ஐஸ்கட்டிகள் உருகி நீராகியது. மீதி இருந்த சட்னியைத் தொட்டு எல்லாரும் நக்கினர்.

5

"உனக்கு இப்போ எவ்வளவு சொத்து இருக்கு?'' போளி கேட்டான்.

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரெண்டு சகோதரிகளுக்கும் எனக்கும் சேர்த்து ஏழு லட்சம் மதிப்புக்கு சொத்து இருக்குன்னு வச்சுக்கோங்க. எனக்கு மட்டும் தனியா ஒரு அஞ்சு லட்சம் ரூபாய்க்கு சொத்து இருக்கு.''

"உன்னோட ஆயிரம் தூண்டில் காதல் இப்போ எப்படி இருக்கு? ஒரு கடிதத்தோட காப்பி எடுத்து ஏகப்பட்ட பெண்களுக்குக் கொடுத்து...''

"அனுப்புறது இல்ல. அது ஒரு தமாஷான நிகழ்ச்சிதான்.''

"நீ கல்யாணம் செய்யலியா? கல்யாணத்தைப் பற்றி உன்னோட கருத்து என்ன?''

"கல்யாணம்ன்றது ஒரு கூட்டு வியாபாரம். மனைவியோட முக்கிய எண்ணமே புருஷனை அடக்கி ஆளணும்ன்றதுதானே! அஞ்சு லட்சம் ரூபா எனக்கு வரதட்சணையா தர தயாரா இருக்கிற பெண் எங்கே இருக்கா?''

"கேட்டுக்கடா டாகே.'' போளி பாப்பாச்சனிடம் சொன்னான். "சொல்றது என்னன்னு கேளு!''

"அதனால...'' பிரேம்ரகு கூறினான்: "ஒரு ஏழைப் பெண்ணாப் பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கத் தீர்மானிச்சிருக்கேன்!''

"கேளுடா இப்போ.'' போளியைப் பார்த்து கூவினான் பாப்பச்சன்.

போளி உண்மையிலேயே அதிர்ந்துதான் போனான்.

பாப்பச்சன் உற்சாகத்துடன் கேட்டான்:

"பாக்கியவதியோட பேரு என்ன?''

"நளினி...''

பாப்பச்சன் பாட்டிலைத் திறந்து குடித்து, இருமி, கண்களில் நீர் வழியச் சொன்னான்:

"நளினிக்கும் ரகுவிற்கும் வாழ்த்துகள்! நல்லது நடக்கட்டும்.''

தொடர்ந்து பிரேம்ரகுவும் போளியும் பாட்டிலில் இருந்து ஊற்றிக் குடித்தார்கள். கூறும்போது எல்லாவற்றையும்கூற வேண்டும் அல்லவா? அவர்கள் இருமவில்லை. பிரேம்ரகு சொன்னான்:

"பாப்பச்சா... தாராவுக்கும் உனக்கும் நடக்குற கல்யாணத்துக்கு நான் உங்களுக்கு ஒரு தொகையைப் பரிசா தருவேன். ஆயிரத்தொரு  ரூபாய்...''

பாப்பச்சன் இதைக் கேட்டதும், நன்றிப் பெருக்கால் வாய்விட்டு அழுதான்.

"ப்ரேம்... நீ தேவகுமாரன்தான்.'' போளி பக்கம் திரும்பி பாப்பச்சன் சொன்னான்: "போளி, நீயும் தேவகுமாரன்தான்!''

"நான் தேவகுமாரன்... சரி. இந்த போளி எந்த வகையில் தேவகுமாரன்?''

தன் சகோதரிகளின் திருமணச்செலவை போளி ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன விஷயத்தை பிரேம்ரகுவிடம் சொன்னான் பாப்பச்சன்.

"உண்மையாகவே போளி தேவகுமாரன்தான். இருந்தாலும், போளியோட காதல் விஷயங்கள் என்னாச்சு...?''

பாப்பச்சன் ஏலிக்குட்டி விஷயத்தைப் பிரேம்ரகுவிடம் சொன்னான்.

தொடர்ந்து ஏலிக்குட்டியைப் பற்றிய விவாதம் நடந்தது. போளியின் போக்கைப் பற்றி குற்றம் சாட்டினான் பாப்பச்சன்.

"பிரேம் சொன்னால், நான் ஏலிக்குட்டியைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்'' போளி சொன்னான்.

"சும்மா கட்டுடா. ஆம்பளை நம்மள விட்டா வேறு யார்டா பெண் பிள்ளைகளைக் கட்டுறது?''

"போளி என்ற நான் ஏலிக்குட்டியைக் கல்யாணம் பண்ணப்போறேன்.''

"பிரேம், இவன் ஒரே மாதிரி எப்பவும் இருக்க மாட்டான். மாற்றி மாற்றிப் பேசுவான். கையெழுத்து போட்டுத் தரச்சொல்லு."

பேப்பரும் பேனாவும் வந்தது. போளி எழுதினான்:

"அன்புள்ள அப்பாவும் அம்மாவும் தெரிந்து கொள்ள வேண்டியது... மகன் போளி எழுதுவது என்னவென்றால்...

நான் ஏலிக்குட்டியைத் திருமணம் செய்வதாகத் தீர்மானித்திருக்கிறேன். தெய்வத்தின்மீது சத்தியமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இப்படிக்கு உங்கள் மகன் போளி." தேதியும் இடமும் எழுதிக் கையெழுத்து போட்டான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel