
கலை சம்பந்தமான எந்த விஷயத்தையும் அப்பாவால் தீர்மானிக்க முடியாது. எந்த அளவிற்கு என் விஷயத்தில் அவர் அதிகம் தலையிடாமல் இருக்கிறாரோ அந்த அளவிற்கு அவருடன் இணக்கமாக என்னால் பழக முடியும். காரணம்- என்னுடைய வேலைகளில் சுதந்திரமான ஒரு மனிதனாகவும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத ஒருவனாகவும் இருக்கவே நான் விரும்புகிறேன். நான் அப்படி நினைப்பது நியாயம்தானே?
சில நேரங்களில் கீயைப் பற்றி நினைக்கும்போது, நான் உண்மையிலேயே அதிர்ச்சிக்கு ஆளாகி விடுகிறேன். கடந்த காலத்திற்குள் அவள் எந்த அளவிற்கு தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் பழைய செத்துப் போன கொள்கைகளை அவள் பிடித்துக் கொண்டு தொங்குவதையும் பார்க்கும்போது எனக்கு மனதில் சங்கடமாக இருக்கிறது. அவள் அப்படி இருப்பதில் நிச்சயம் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. அவள் தன்னுடைய கருத்துக்களை மாற்றிக் கொண்டால், நிச்சயம் அந்த ஆபத்திலிருந்து அவள் தப்பிக்க முடியும். அப்படியொரு முடிவை அவள் எடுப்பதே அவளுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். மார்ச் மாதத்தில் அவளுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். மார்ச் மாதத்தில் நான் தி ஹேக்கிற்கு மீண்டும் போகலாமென்றிருக்கிறேன். அப்படியே ஆம்ஸ்டர்டாமிற்கும் செல்வேன். கடந்த முறை ஆம்ஸ்டர்டாமை விட்டுப் புறப்படுகிறபோது எனக்கு நானே கூறிக்கொண்டேன் - ‘எந்தவித காரணத்தைக் கொண்டும் மனதில் மகிழ்ச்சி இல்லாமல் உன்னை ஆக்கிக்கொள்ளக் கூடாது. எந்தவித அதிர்ச்சிக்கும் ஆளாகக்கூடாது. உன் வேலைகள் அதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. வளர்ச்சியை நோக்கி அது நடை போட்டுக் கொண்டிருக்கின்ற நிமிடத்தில் அப்படியொரு சம்பவம் நடக்கவே கூடாது’ என்று. இந்த மாதிரியான சூழ்நிலைகள் வாழ்க்கையில் அவ்வப்போது வரத்தான் செய்யும். ஆனால், அது சிறிது காலத்திற்கு மட்டுமே. அதைத் தாண்டி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.
என்னைப் பார்த்து சில காரணங்களுக்காக நீ பொறாமைப்படலாம். நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேனோ, அதை யாராலும் தேடிக் கண்டுபிடித்து விட முடியும். ஏன், என்னை விட வெகு சீக்கிரமே கூட நீ அதைக் கண்டுபிடிக்கலாம். உண்மையாக சொல்லப் போனால் எத்தனையோ விஷயங்களில் நான் மிகவும் பின்தங்கியவனாகவும், குறுகலான மனதைக் கொண்டவனுமாகத்தான் இருக்கிறேன். தப்பு எங்கே இருக்கிறது என்பதை நிச்சயம் நான் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தத் தப்பை கண்டுபிடித்து, அதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும். பல நேரங்களில் நம் கண்களில் இருக்கும் உத்திரத்தை நாம் பார்க்காமலே இருந்து விடுகிறோம் என்பதுதான் விந்தையாக இருக்கிறது. உன்னுடைய பதில் கடிதத்தை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். என் கடிதங்களில் தானியத்தையும் பதரையும் நீ தனித்தனியாக கட்டாயம் பிரிக்க வேண்டும். நான் எழுதிய கடிதங்களில் ஏதாவது உண்மை இருப்பின், நல்ல விஷயங்கள் இருப்பின் அதை மட்டும் எடுத்துக்கொள். அவற்றில் சரியில்லாத பலவும் இருக்கவே செய்கின்றன. பல நேரங்களில் மிகைப்படுத்தப்பட்ட பல விஷயங்களும் அவற்றில் இருக்கின்றன. என்னால் அதைத் தெளிவாக உணர முடிகிறது. நானொன்றும் மெத்த படித்தவனில்லை. நான் ஒரு அப்பாவி மனிதன். எல்லோரையும் போல ஏன் - எல்லோரையும்விட என்றுகூட சொல்லலாம். அப்படி இருப்பதால்தான் பல நேரங்களில் நான் தவறு செய்து விடுகிறேன். ஆனால், அப்படி தவறு செய்கிறபோதுதான், சரியான பாதை எது என்பதே நமக்குத் தெரிய வருகிறது. ‘வாழ்க்கையில் உண்டாகும் சிறு சிறு மாற்றங்கள் கூட ஏதோ சில நன்மைகளை நமக்குக் கொண்டு வரவே செய்கிறது’ என்ற ஜுலி ப்ரெட்டனின் வார்த்தைகளை நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். மவ்வின் பேச்சை எப்போதாவது நீ கேட்டிருக்கிறாயா? அவர் பல சமயப் பிரச்சாரகர்களையும் நகலெடுத்து பேசுவதை நான் பார்க்கிறேன். பீட்டரின் பிரசங்கத்தை மவ் அப்படியே நகலெடுத்து பேசுவதை ஒருமுறை நான் கேட்டிருக்கிறேன். அவர் அதை அப்படியே களவாடியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அவர் கடவுளின் நல்ல நோக்கங்களைப் பற்றி பேசினார். ‘டைக்ரீஸ் அன்ட் யூப்ரட்டீஸ்’ என்பதைப் பற்றி பேசினார். பாதிரியார் பெர்னார்ட்டின் பேச்சை நகலெடுத்து மவ் பேசியதையும் நான் கேட்டேன். ‘கடவுள்... கடவுள்... அவர் எல்லையற்றவர். அவர்தான் கடலைப் படைத்தார். பூமியைப் படைத்தார். வானத்தைப் படைத்தார். நட்சத்திரங்களைப் படைத்தார். சூரியினைப் படைத்தார். நிலவைப் படைத்தார். அவர் எல்லாவற்றையும் செய்வார். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.. இல்லை - அவர் எல்லையற்றவரில்லை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவரால் செய்யவே முடியாது. கடவுளால் செய்ய முடியாத அந்த ஒன்று எது?
ஆமாம் - பாவம் செய்பவனைப் படைக்காமல் அவரால் இருக்க முடியாது.
இத்துடன் கடிதத்தை நிறுத்துகிறேன். தியோ, சீக்கிரம் கடிதம் எழுது. எண்ணத்தில் கை குலுக்குகிறேன். என்னை நம்பு.
உன்
வின்சென்ட்.
***
திஹேக், மார்ச் 1882
அன்புள்ள தியோ,
தெர்ஸ்டீக்கைப் பற்றி நான் எழுதியதற்காக நீ ஒரு மாதிரி ஆகியிருப்பாய். ஆனால், நான் எழுதியது என்னவோ உண்மை. அவரிடம் இதை நேரடியாகச் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர் பல வருடங்களாகவே என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? நான் ஏதோ சதா நேரமும் கனவு கண்டு கொண்டிருப்பவன் என்றும், எதைப் பற்றியும் பெரிதாக நினைக்காதவன் என்றும் என்னை அவர் இப்போதும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு ‘உனக்கு வாட்டர் கலர்களை எப்படி பயன்படுத்தி படம் வரையிறதுன்னே தெரியல’ என்றார்.
அவர் சொன்னது ஒரு விதத்தில் பார்க்கப் போனால் சரிதான். வாட்டர் கலர்களை நான் பயன்படுத்தாதற்குக் காரணம் - என்னுடைய ஓவியங்களை மேலும் தீவிர கவனம் செலுத்தி நான் வரைய விரும்புவதுதான். அதனுடைய வடிவம், ஒழுங்கமைப்பு போன்றவற்றில் நான் முழுமையான சிரத்தை செலுத்த விரும்புகிறேன்.
அவரின் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் வரைந்த ஓவியங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்கிறபோது, நானும் அவற்றை அவருக்கு ஏன் காட்ட வேண்டும்?
என் ஓவியங்களைப் பார்த்து அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார். ஆனால், அந்த ஓவியங்களில் பாராட்டக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவர் இப்படியெல்லாம் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிப்பார் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook