Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 11

neela-thaamarai

34

கிராமத்தில் இருக்கும் வைத்தியர் வீட்டின் படியில் குஞ்ஞிமாளுவும் (கையில் களிம்பு குப்பி), அவளுக்குப் பின்னால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுவனும் (காளியின் பேரன்) இறங்கி நடக்கிறார்கள். தூரத்தில் பாகவதரின் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.

அவள் கிழக்கும் பாட்டு வீட்டுப் படியில் கால் வைக்கிறபோது, பாட்டு இலேசாகக் கேட்கிறது. படிக்கு அருகிலேயே சிறிது நேரம் நிற்கிறாள். கேமரா அந்த வீட்டுக்குள் தன் பார்வையைப் பதிக்கவில்லை.

அவள் நடக்க ஆரம்பிக்கிறாள்.

கிராமத்துக் காட்சிகள்.

தூரத்தில் பாட்டுச் சத்தம்.

35

கிராமத்தின் ஒரு தேநீர் கடை. அதற்கு முன்னால் ஒரு சைக்கிள்காரன் வண்டியை விட்டு இறங்கி, அங்கு இருப்பவர்களிடம் என்னவோ விசாரித்துக் கொண்டிருக்கிறான்.

“கெ.ஹரிதாஸ் மேனன், கிழக்கும்பாட்டு... அவருக்கு ஒரு தந்தி வந்திருக்கு... அவரோட வீடு எங்கே இருக்கு?”

கடைக்காரன்:   கெழக்கும் பாட்டு ஹரிதாசனா? இதோ... அந்த வழியே போயி, இடது பக்கம் போனா ஒரு கோயில் இருக்கும். அங்கே இருந்து கீழே போனா ரெண்டு வழி இருக்கு. முதல் வழியை விட்டுட்டு ரெண்டாவது வழியில நீ போகணும்.

தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் ஒருவன்:

நாம கொடுத்திடலாம். இல்லாட்டி அந்தக் கணக்குப்பிள்ளை இப்போ வருவாரு.

அங்கே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் சாப்பாட்டுப் பிரியர் குட்டிசங்கர மேனனைப் பார்த்து:

“இதோ இந்த மேனன் இருக்காரே... இவர் அந்தப் பக்கம் போறவருதான். நீ இவர்கிட்டயே கூட கொடுக்கலாம்.”

குட்டி சங்கர மேனனின் முகத்தில் ஒரு உணர்ச்சி மாற்றமும் இல்லை.

தந்திக்காரன்:    இதுல கையெழுத்துப் போடுங்க.

அவர் அசையாமல் இருக்கிறார்.

அச்சுதன் நாயர் அப்போது அங்கு வருகிறார்.

“என்ன அங்கே? யாருக்குத் தந்தி வந்திருக்கு? ஹரிதாசனுக்கு தந்தி வந்திருக்கிறதா சொன்னாங்களே!”

அவர் தந்தியை வாங்குகிறார்.

தந்திக்காரன் காட்டிய இடத்தில் அவனுடைய பேனாவை வாங்கி கையெழுத்துப்போட்ட அச்சுதன் நாயர், வாங்கிய தந்தியை இப்படியும் அப்படியுமாய் பார்த்தவாறு என்னவோ சிந்திக்கிறார்.

தேநீர் கடைக்காரன்:  தந்தின்னு வர்றப்போ யார் வேணும்னாலும் பிரிச்சு பார்க்கலாம். என்ன யோசிக்கிறீங்க அச்சுதன் நாயரே?

அவர் அந்த ஆள் சொன்னதை கவனிக்காமலே நடக்கிறார்.

36

ற்றையடிப் பாதை.

அச்சுதன் நாயர் வேகமாக நடக்கிறார். ஒரு முஸ்லீம் எதிரில் வந்து நின்று:

“உங்களை காலையில இருந்து நான் தேடிக்கிட்டு இருக்கேன். எவ்வளவு நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறது!”

அச்சுதன் நாயர்: (நடந்தவாறு) எனக்கு இப்போ பேசுறதுக்கு நேரமில்ல. என் பின்னாடியே வா... (நடந்தவாறு) ஹரிதாசனுக்கு தந்தி வந்திருக்கு (நடக்கிறார்)....

பின்னால் யாரோ கூப்பிடுகிறார்கள்.

“அச்சுதன் நாயர்... கொஞ்சம் நில்லுங்க... ஒரு விஷயம் சொல்லணும்...”

அச்சுதன் நாயர்: (திரும்பி நின்று) இப்போ பேசுறதுக்குநேரம் இல்ல குமாரா... ஹரிதாசனுக்கு தந்தி வந்திருக்கு...

நடக்கிறார்.

37

மையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் குஞ்ஞிமாளு. மகிழ்ச்சியுடன் சமையலறை வாசலில் வந்து நிற்கிறாள் அம்மா.

“ஹரிதாசன் பாசாயிட்டான். முதல் வகுப்பு... இப்போத்தான் அச்சுதன் நாயர் தந்தி கொண்டு வந்து கொடுத்தாரு....”

அவள் வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து நின்றாள். தன் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை முடிந்தவரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் வைத்திருக்கிறாள் குஞ்ஞிமாளு. அம்மா திரும்பியபோது-

குஞ்ஞிமாளு:    அம்மா...

அம்மா திரும்பி நிற்கிறாள்.

குஞ்ஞிமாளு:    (தயக்கத்துடன்) நாம இன்னனக்கு பாயசம் வைப்போம்.

அம்மா ஒரு நிமிடம் யோசிக்கிறாள்.

அம்மா:    கோயில்ல பாயசம் கொடுக்க ஏற்பாடு பண்ணச் சொல்லி அச்சுதன் நாயர்கிட்ட சொல்லி இருக்கேன். அதுபோதும். இவனோட அழுக்குத் துணிகளை நல்லா துவைச்சுப் போடு. அச்சுதன்நாயர் கிட்ட கொடுத்து இஸ்திரி போட்ட வாங்கி வரச் சொல்லணும். எப்போ இவன் போக வேண்டியதிருக்கும்னு எனக்குத் தெரியல...

குஞ்ஞிமாளு:    பெட்டி இருந்தா, நானே இஸ்திரி போட்டு கொடுத்துடுவேன்.

அம்மா:    வீட்ல இஸ்திரி போடுறது பொதுவா அவனுக்குப் பிடிக்காது (வெளியே செல்கிறாள்).

மனதில் மகிழ்ச்சியுடன் புன்னகை தவழ நின்றிருக்கிறாள் குஞ்ஞிமாளு. ஏதோ கனவு கண்டு எழுந்ததைப் போல், மீண்டும் சமையல் வேலைகளில் அவள் மூழ்கி விடுகிறாள்.

அம்மாவின் குரல் அவள்மேல்-

“குஞ்ஞிமாளு... கொஞ்சம் வாசலுக்கு வா. வேலைகளை முடிச்சிட்டு வந்தா போதும்...”

அவளின் முகத்தில் மீண்டும் ஒரு மலர்ச்சி.

வாசல்.

வண்ணாத்திக் கிழவி வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறாள். அம்மா தந்த பணத்தை வாங்கி கிழவி தன்னுடைய மடியில் வைக்கிறாள்.

கிழவி:    எட்டு வருஷமா அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்ல. இப்போத்தான் வந்தான். அவன் இப்போ ரொட்டிக் கடையில வேலை பார்த்துக்கிட்டு இருக்கான்.

அம்மா:    உங்களுக்கு உதவிக்கு ஒரு ஆளு வந்தது மாதிரி ஆச்சே!

கிழவி:    அவன் வீட்ல இருந்தா, துணி துவைக்க ஒரு ஆளு கிடைச்ச மாதிரி இருக்கும். நாலு ஆளுங்க செய்ற வேலையை அவன் ஒருத்தனே செஞ்சு முடிச்சிடுவான். ஆனா வந்ததுல இருந்து திரும்பிப் போறதுலயே குறியா இருக்கான்.

அப்போது குஞ்ஞிமாளு அங்கு வருகிறாள். தயக்கத்துடன் நிற்கிறாள். கிழவியைப் பார்த்ததும் மலர்ந்திருந்த அவளின் முகத்தில் ஒருவகை வாட்டம் வந்து ஒட்டிக் கொள்கிறது.

கிழவி:    உன்னோட அப்பு மாமா வந்திருக்கான், குஞ்ஞிமாளு...

குஞ்ஞிமாளு எதுவுமே பேசாமல் மவுனமாக நின்றிருக்கிறாள்.

கிழவி:    (அம்மாவிடம்) அவன் அவளை வீட்ல இருக்க வைக்கிறதுதான் நல்லதுன்னு சொல்றான். யோசிக்கிறப்போ ஒரே ஒரு வழிதான் தெரியுது. இவளை அவனுக்குக் கல்யாணம் பண்ணித் தர்றதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். அப்போத்தான் அவன் வீட்ல ஒழுங்கா இருப்பான். அவன் கல்யாணம் பண்றேன்னோ, பண்ணமாட்டேன்னோ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறான்.

அம்மா:    ம்... இவளுக்கும் கிட்டத்தட்ட பதினேழு வயசு ஆச்சுல்ல!

அம்மா பார்க்கும்போது குஞ்ஞிமாளு மெதுவாக தலையைக் குனிந்தவாறு உள்ளே போய்க் கொண்டிருக்கிறாள்.

38

கல்.

ஏணியில் இறங்கி வரும் ஹரிதாசன் அங்குமிங்கும் பார்க்கிறான்.

அம்மா பகலில் உறங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்க்கிறான்.

அடுத்த நிமிடம் சமையலறைப் பக்கம் செல்கிறான்.

சமையலறைக்கு வெளியே கிணற்றுக்குப் பக்கத்தில் குஞ்ஞிமாளு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாள். அவன் தோட்டத்தைப் பார்க்கிறான். கன்றுக்குட்டி அங்கு நின்றிருக்கிறது.

அவன் அவளருகில் வருகிறான்...

தனக்கு நெருக்கமாக காலடிச் சத்தம் கேட்டதும், அவள் தலையை உயர்த்திப் பார்க்கிறாள். ஹரிதாசன் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறான்.

ஹரிதாசன்:     அம்மா தூங்கிக்கிட்டு இருக்காங்க. மேலே வா.

அவன் மீண்டும் உள்ளே செல்கிறான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel