Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 6

neela-thaamarai

அவள் அடுத்த நிமிடம் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு வந்து ஒரு பக்கெட்டுக்குள் போட்டுவிட்டு, மீண்டும் சமையலறையைத் தேடிப்போகிறாள்.

சமையலறையில் இப்போது இரண்டு அடுப்புகளும் எரிந்து கொண்டிருக்கின்றன. தீயை ஊதியவாறு அருகில் இருக்கிறாள் குஞ்ஞிமாளு.

குளியலறையில் நீர் விழும் ஓசை.

குளியலறையில் இருந்து ஒரு சினிமாப் பாடலின் வரி.

அவள் உப்பு பார்த்து, பாத்திரங்களை இறக்கி வைக்கிறாள்.

13

மாலை நேரம்.

துணி துவைத்து, குளித்து முடித்து (தோளில் ஹரிதாசனின் ஆடைகள்) குஞ்ஞிமாளுவும், ஷாரத்தெ அம்மிணியும் கோவில் குளத்திலிருந்து நடந்து வருகிறார்கள்.

அவர்கள் பார்வையில் - ஆலமரத்துக்குக் கீழே இருக்கும் பெரியவருக்குச் சற்று தள்ளி ஹரிதாசனும், வேறு இரண்டு வாலிபர்களும் தெரிகிறார்கள். மூன்று பேரும் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். கிழவரும் மூக்கின் வழியே புகையை விடுகிறார்.

அவர்கள் இருவரும் கிழவரை நெருங்குகிறார்கள். அப்போது

அம்மிணி: “ஆசான்... நீங்களும் சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சாச்சா?”

ஆசான் சிரித்தவாறு அம்மிணியிடம்:

“எல்லாமே வெறும் புகை, மகளே... புகைப்படலம்... புகை... படலம்...”

இளைஞர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள்.

குஞ்ஞிமாளு முகத்தைத் தரை நோக்கி கவிழ்த்தவாறு நின்றிருக்கிறார்கள்.

அம்மிணி: ஆசான்... நீங்க பாகவதரைப் பார்க்கப் போறதில்லையா?

குஞ்ஞிமாளு:    (மெதுவான குரலில்) சீக்கிரம் வா, அம்மிணி.

அம்மிணி இடது கண்ணால் ஹரிதாசனையும் அவனின் நண்பர்களையும் பார்த்தவாறு குஞ்ஞிமாளுவுடன் சேர்ந்து நடக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    அவங்க எல்லோருமே ஆலமரத்துக்குக் கீழே நின்னுக்கிட்டு இருக்காங்க!

அம்மிணி: (சிரித்தவாறு) ஹரிதாசனையும், கூட இருக்கிறவங்களையும் தானே சொல்ற? நமக்கென்ன? ஹரிதாசன் என்கூடத்தான் ஏழாம் வகுப்பு வரை படிச்சது. இப்போத்தானே எம்.ஏ. அது இதெல்லாம்.

அவர்கள் நடக்கிறார்கள்.

அம்மிணி: நாளைக்கு பிரசவத்துக்காக அக்கா வீட்டுக்கு வர்றாங்க. இது அவங்களுக்கு மூணாவது பிரசவம். அக்காவும், குழந்தைகளும், அக்கா புருஷனும் வந்துட்டாங்கன்னா வேலை செஞ்சு செஞ்சு என்னோட உடம்பே ஒரு வழியாயிடும். ஆமா... கெழக்கும்பாட்டு வீட்ல வேலை ரொம்பவும் அதிகமாக இருக்கா என்ன?

குஞ்ஞிமாளு:    இப்போத்தானே செய்யவே ஆரம்பிச்சிருக்கேன்! வந்திருக்குற ஆளோட விருப்பமும் விருப்பமில்லாததும் என்னன்னு யாருக்குத் தெரியும்?

அம்மிணி: அக்காவுக்கு இந்த முறை பிரசவம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குமாம். குழந்தைங்க எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. அவங்க செய்தசேட்டைகளைப் பார்க்கணுமே! அக்கா புருஷன் எப்படின்ற.... மணிக்கு நாற்பது தடவை என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பாரு.

குஞ்ஞிமாளு:    அம்மிணி, உனக்கு இதுவரை திருமண ஆலோசனை எதுவும் வரலியா?

அம்மிணியின் முகம் இருண்டு போய் காணப்படுகிறது. ஒரு நிமிடம் ஒரே நிசப்தம்.

அம்மிணி: அப்பாவுக்குப் பிடிச்சிருந்தா, ஜாதகப் பொருத்தம் சரியா வரமாட்டேங்குது. ஜாதகம் சரியா இருந்தா, ஆளை யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது. எனக்கு செவ்வா தோஷம் வேற...

இருவருமே மவுனமாக இருக்கின்றனர். ஒருவரோடு ஒருவர் ஒன்றும் பேசிக் கொள்ளாமலே, இரண்டு தனித்தனி வழிகளில் இருவரும் நடக்கிறார்கள்.

14

ரவு நேரம்.

சமையலறைக்கு வெளியே நின்றவாறு அம்மாவிடம் சாதத்தையும், குழம்பு, கூட்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக குஞ்ஞிமாளு நீட்டுகிறாள்.

சற்று தூரத்தில் அமர்ந்திருக்கும் ஹரிதாசனுக்கு அம்மாவே பரிமாறுகிறாள். பரிமாறிய பாத்திரங்களைத் திரும்பவும் வாங்கி, புதிய பாத்திரத்தை அம்மாவிடம் தருகிறாள் குஞ்ஞிமாளு.

ஹரிதாசன் சாப்பிடுவதை அவளால் பார்க்க முடியவில்லை. படம் பார்ப்போர்களும்தான். அவன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருக்கிறான். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது, இந்தப் பக்கத்தில்நின்று கொண்டிருக்கும் குஞ்ஞிமாளுவின் காதில் விழுகிறது.

ஹரிதாசன்:     குட்டிசங்கரன் மாமா எப்படி இருக்குறார்?

அம்மா:    வீட்ல ஒழுங்கா இருக்குறது இல்ல. சோறு எங்கெங்கே கிடைக்குதோ அங்கேயெல்லாம் போய் நின்னுக்கிட்டு இருப்பாரு. எவ்வளவு சொன்னாலும் ஆளு கேக்குறதுஇல்ல.

ஹரிதாசன்:     என்னோட வேலை விஷயம் சரியாயிடுச்சுன்னா, அம்மா... நீங்க என்கூட வந்துற வேண்டியதுதான்.

அம்மா:    அப்ப இங்கே?

ஹரிதாசன்:     அச்சுதன்நாயர் தோட்டத்தைப் பார்த்துக்கட்டும். அம்மா... நீங்க மட்டும் இங்கே தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க? உடம்புக்கு கொஞ்சம் ஆகாமப் போச்சுன்னு வச்சுக்கங்க, அதைப் பார்க்குறதுக்கு பக்கத்துல ஒரு டாக்டர் கூட இல்ல...

அம்மா:    கூப்பிட்டா, ஓடி வர்றத தூரத்துலதானே அச்சுதன்நாயர் இருக்காரு!

ஹரிதாசன்:     உங்க ஒரு ஆளுக்காக ஒரு வேலைக்காரி... செறுமி. வேலை செய்ற ஆளுங்க. வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்டோம்னு வச்சுக்கங்க. தோட்டத்துல இருந்து வர்ற வருமானம் முழுவதுமே லாபம்தான்.

அம்மா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள்.

அந்தப் பக்கம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு குஞ்ஞிமாளுவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி வெளிப்பாடுகள்.

15

ரவு நேரம்.

ஹரிதாசன் தன்னுடைய அறையில் அமர்ந்து சிகரெட் பிடித்தவாறு, எதையோ படித்துக் கொண்டிருக்கிறான். மிகவும் மெதுவான அவன் குரலில் - ஒரு கவிதையின் வரிகள் பாடலாக இல்லாத ட்ராக்கில். அது முடிந்ததும், அவன் படிப்பது மீண்டும் தொடர்கிறது. அப்போது பாகவதர் பாடுவது கேட்கிறது. அவள் காதுகளைத் தீட்டிக் கொண்டு அதைக் கேட்கிறான்.

பக்கத்திலிருந்து கேட்கும் அம்மாவின் இறுமல் ஒலி.

எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் சாதாரணமாக அமர்ந்துகொண்டு சிகரெட்டை அணைக்கிறான்.

அம்மா வாசலில்.

அம்மா:    படுக்கை விரிச்சுப் போட்டிருக்கில்ல?

ஹரிதாசன்:     அம்மா, நீங்க போய் படுங்க.

அம்மா:    பயணம் செஞ்சு வந்திருக்கே, இல்ல! சீக்கிரமா படு.

ஹரிதாசன்:     பாகவதரோட பாட்டு இப்பவும் இருக்குல்ல, அம்மா?

அம்மா:    ராத்திரிகூட அவர் தூங்கமாட்டார் போலத்தான் இருக்கு.

ஹரிதாசன்:     பாகவதருக்கு தளர்வாதம் வந்ததால, நம்ம ஊரு ஆளுங்களுக்கு இசைமேல ஒரு பெரிய நாட்டமே வந்திருக்கும் அப்படித்தானே?

அம்மா:    அவருக்கு நிலையான புத்தி கிடையாது. அதுனால படிக்கிறதுக்கு ஒரு குழந்தைகூட அங்கே போறது கிடையாது. மண்டல காலத்துல மட்டும் அவர் மவுன விரதம் இருக்கார். பாவம்...

ஹரிதாசன்:     என்ன இருந்தாலும் நம்ம ஊரு உண்மையிலேயே சாதாரணம்னு சொல்ல முடியாது. அம்மா... நான் என் நண்பர்கள்கிட்ட அடிக்கடி சொல்லுவேன். வேதாந்தம் சொல்லிக்கிட்டு இருந்த பூசாரி மட்டுமே உலகத்தை விட்டு போயிருக்காரு. ஆலமர நிழல்ல இருக்கும் நாணு ஆசானோட கவிதை, பக்கவாதம் பாதிக்கப்பட்ட அப்புக்குட்டி பாகவதரோடு பாட்டு... என்ன வித்தியாசமான கதாபாத்திரங்கள்!

அம்மா:    உனக்கு அப்படித்தான் தோணும். எது எப்படியோ உன்னோட அப்பா அடிக்கடி சொல்லுவாரு - இந்தக் கோவிலோட மகிமையே தனிதான்னு.

ஹரிதாசன்:     பாட்டி கூட இங்கே இருக்குற தெய்வத்தைப் பற்றிப் புகழ்ந்து சொல்லுவாங்க. ராத்திரி முழுக்க மூணு நாலு இடங்களுக்குப் போய் ரவுண்ட் அடிச்சிட்டு காலையிலதான் கோவிலுக்கு திரும்பி வருமாம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel