Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 9

neela-thaamarai

அம்மா ராமாயணம் வாசிக்கும் சத்தம் மட்டும். மற்றபடி ஒரே நிசப்தம்.

இரவு:

ஹரிதாசன் தன்னுடைய அறையில் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான். கவனம் அதில் முழுமையாகச் செல்லவில்லை. எழுதியது போதும் என்று நினைத்துப் பேனாவை மூடி வைக்கிறான். பிறகு ஒரு மாத இதழை எடுத்து பக்கங்களை வெறுமனே புரட்டுகிறான். இடையில் காதைத் தீட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். மீண்டும் புத்தகத்தைப் புரட்டுகிறான். என்னவோ யோசித்தவாறு அவன் பார்க்கும்போது வாசலில் பாதி மறைந்து கொண்டு அவனைப் பார்க்காமல் முகத்தைக் குனிந்தவாறு நின்றிருக்கிறாள் குஞ்ஞிமாளு.

அவன் மெதுவாக எழுந்து, வாசலை நோக்கி நடக்கிறான். பிறகு அவளின் கையைப் பற்றி உள்ளே அவளை ஆவேசத்துடன் இழுத்து தன்னுடன் நெருக்கமாக இருக்கச் செய்கிறான்.

அவளின் முகத்தில் காதல் உணர்வுகள் இல்லை. பயம்தான் தெரிகிறது. அவள் அறைக்குள் முழுமையாக வந்தபிறகு, அவன் மெல்ல - மிகவும் கவனமாக கதவை அடைக்கிறான். அவன் விளக்கை இப்போது அணைக்கிறான். திடீரென்று அறையில் இருள் மூடுகிறது. இருட்டில் கரைந்து அவர்கள் நிழல்களாக நின்று கொண்டிருக்கின்றனர். அவனின் கைப்பிடிக்குள் அவள் சிக்கிக் கொண்டிருக்கிறாள். அசையும் நிழல் உருவங்கள். அவன் அவளை மெத்தையில் படுக்க வைக்கிறான். எல்லாமே இருட்டில் நடக்கிறது. தூரத்தில் ஒரு ராக ஆலாபனை கேட்கிறது.

இருட்டில் எல்லாமே தெளிவு இல்லாமல் இருக்கின்றன. இருந்தாலும் அவளின் உடலின் மேல் மிகவும் நெருக்கமாக சாய்ந்து கிடக்கும் உருவம் தெரிகிறது. வயிற்றில் தடவிக் கொண்டிருக்கும் கைகள். வேண்டாம் என்று தடுக்கும் அவளின் கை. ப்ளவுஸின் கொக்கியை அவிழ்க்க முயலும் கை, எல்லாம் இருட்டில் கலந்து தெளிவில்லாமல் தெரிகின்றன.

ட்ராக்கில் ராக ஆலாபனை.

திரையில் மெல்லிய பெண் குரல்:

“வேண்டாம்... வேண்டாம்...”

தாழ்ந்த ஆண் குரல்:

“பரவாயில்லை... பரவாயில்லைன்றேன்...”

“அய்யோ வேண்டாம்...”

26

டிக்கொண்டிருக்கும் வாழைப்பூ. அதில் தேன் குடித்துக் கொண்டிருக்கும் அணில் அடுத்த நிமிடம் தாவி ஓடுகிறது.

இப்போது வாழைப் பூ மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறது. அணில் கத்தும் ஓசை மட்டும் கேட்கிறது. அதிகாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில் நின்றவாறு பல் தேய்த்துக் கொண்டிருக்கிறாள் குஞ்ஞிமாளு. அணிலின் அட்டகாசம் தாங்க முடியாமல் கல்லை எடுத்து வாழை மரங்களின் மேல் அவள் எறிகிறாள். அணிலின் ஆர்ப்பாட்டம் அடங்குகிறது.

அவள் கிணற்றின் கரையில் நின்று முகம் கழுவுகிறாள். ஈர்க்குச்சியால் நாக்கை வழித்து, மீண்டும் முகம் கழுவுகிறாள். சமையலறையை நோக்கி நடந்து செல்லும்போது வெளிவாசலில் அவளுக்கு முதுகை காட்டியவாறு நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஹரிதாசனின் ஒர தூரதோற்றம். அவள் சமையலறைக்குள் நுழைகிறாள்.

சமையலறையில் அம்மா தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு நிமிடம் அம்மாவை நேருக்கு நேராக பார்க்காமல் கவனிக்கிறாள்.

27

காலை நேரம்.

ஹரிதாசனின் படுக்கையறையில் குஞ்ஞிமாளு. கசங்கிக் கிடக்கும் மெத்தைக்கு அருகில் - அதையே பார்த்தவாறு ஒரு நிமிடம் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்துபோய் நின்றிருக்கிறாள் குஞ்ஞிமாளு.

அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது.

யோசனையில் இறுதியில் அவள் முகம். மெத்தையைச் சரி செய்தபோது என்னவோ கீழே விழுகிறது. என்னவென்று பார்த்தால் வளையல் துண்டுகள். அவள் தன் கைகளைப் பார்க்கிறாள்.

ஒரு வளையலைக் காணோம். யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்தவாறு அவள் கீழே கிடந்த வளையல் துண்டுகளை எடுத்து மடிக்குள் மறைத்து வைக்கிறாள்.

நீரில் ஒரு வளையல் துண்டு விழுகிறது. அது கொஞ்ச நேரத்தில் கீழே போகிறது. குஞ்ஞிமாளு மற்ற வளையல் துண்டுகளையும் நீருக்குள் எறிகிறாள்.

அவள் தற்போது கோவில் குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறாள். பின்னர் நடக்க ஆரம்பிக்கிறாள்.

குஞ்ஞிமாளு ஷாரத்தெ வீட்டின் முன் சந்தேகத்துடன் நிற்கிறாள். கையில் அப்பளக்கட்டு இருக்கிறது. முன்பக்கம் யாரையும் காணோம். உள்ளே இருந்து வாசலுக்கு வந்த அம்மிணி ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டுபோக முயலும்போது அவள் குஞ்ஞிமாளுவைப் பார்க்கிறாள். அடுத்த நிமிடம் படியை நோக்கி ஓடி வருகிறாள்.

அம்மிணி: அக்கா பிரசவமாயிட்டாங்க! நேத்து ராத்திரி. இப்பவும் பெண் குழந்தைதான்.

குஞ்ஞிமாளு:    நான் செட்டிச்சி கடை வரை போயிட்டு வர்றேன். அவருக்கு மிளகு அப்பளம்னா ரொம்பவும் பிடிக்குமாம்.

அம்மிணி: நீ வர்றியா? குழந்தையை நீ பார்க்க வேண்டாமா? நல்ல நிறம்... தெரியுமா? முடி எவ்வளவுன்ற?

குஞ்ஞிமாளு:    நான் பிறகு வர்றேன். இன்னும் குளிக்கக்கூட இல்ல. (சந்தேகத்துடன்) அம்மிணி, உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?

அம்மிணி: எதுக்கு? சின்னச் சின்னதா யாராவது சொன்னா புரிஞ்சுக்குவேன். அக்கா அப்பப்போ ஏதாவது சொல்லித் தருவாங்க. இப்போ படிச்சு என்னத்தைச் செய்யப் போறோம்?

குஞ்ஞிமாளு:    ஸேஃப்னா என்ன அர்த்தம்?

அம்மிணி: (சிறிது நேரம் ஆலோசித்து) ஸேஃப்... ஸேஃப்... அலமாரிக்குத்தான் அப்படிச் சொல்வாங்க.

குஞ்ஞிமாளு:    ஸ்வீட்னா?

அம்மிணி: இனிப்பா இருக்குறதை அப்படிச் சொல்லுவாங்க. மிட்டாயி, லட்டு... இதையெல்லாம் ஸ்வீட்னுதான் சொல்லுவாங்க. ஆமா... உன்கிட்ட யாரு இங்கிலீஷ்ல லெக்சர் அடிக்குறது?

குஞ்ஞிமாளு:    யாருமில்ல... சும்மா கேட்டேன். சரி போ...

அம்மிணி: சரி நான் போறேன். எச்சரிக்கையா இருந்துக்கோ. இங்கிலீஷ்ல ஆரம்பிச்சா, ரொம்பவும் எச்சரிக்கையா இரு. என்ன இருந்தாலும் எம்.ஏ.க்காரன் இருக்கிற வீடாச்சே! வேற சிலரோட இங்கிலீஷ் என்கிட்டயும் வருது. நீ ரொம்பவும் கவனமா இருந்துக்கோ.

குஞ்ஞிமாளு மிகவும் வெட்கத்துடன் - தயங்கியவாறு நின்றிருக்கிறாள்.

“உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிடுச்சு!”

அவள் தன் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை எங்கே அவள் பார்த்து விடப் போகிறாளோ என்று மறைத்தவாறு வேகமாக அந்த இடத்தை விட்டு நீங்குகிறாள்.

28

வீட்டின் வாசல்.

அம்மா, மகன், கணக்குப் பிள்ளை அச்சுதன் நாயர் ஆகியோர் இருக்கிறார்கள். அச்சுதன்நாயர் பாக்குகளை வெட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா தலை வாரிக் கொண்டிருக்கிறார்.

மகனின் கவனம் பாதி பத்திரிகையிலும் மீதி அம்மா மீதுமாக இருக்கிறது.

அம்மா:    அப்பு மாமாவைப் பார்க்குறப்போ நான் கேக்குறேன்- அவர் பண்றது சரியா இருக்கான்னு. (அச்சுதன் நாயரிடம்) இவனுக்கு வேலை விஷயம் சரியாயிருச்சா என்ன? இவனுக்குன்னு எல்லாம் ஒழுங்கா அமைய வேண்டாமா? அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுறதே இல்ல. கடிதத்துல ஒண்ணே ஒண்ணை மட்டும் தவறாம எழுதிடுறாரு.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version