Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 2

neela-thaamarai

அச்சுதன்நாயர்:  இப்படி ஊர் முழுக்க பிச்சை எடுத்துத் திரியிறதுக்குப் பதிலா அந்தத் தோட்டத்துல போயி நிலத்தைக் கொத்திக்கிட்டு இருக்கலாம்ல?

ரசித்தவாறு தேநீரை அருந்திய அவர் அதை கவனிக்காமல்,

குட்டிசங்கரன்:  வீட்ல பலகாரம் ஒண்ணும் இல்லியா?

அம்மா:    பலகாரத்துக்கு எங்கே போறது?

குட்டி சங்கரன் மனதில் கொஞ்சம் ஏமாற்றத்துடன் தேநீரைக் குடிக்கிறார். சமையலறையை ஒருவித ஏக்கத்துடன் பார்க்கிறார்.

குட்டிசங்கரன்:  (அச்சுதன் நாயரிடம்) சாப்பிடுறதுக்கு ஒண்ணும் தரலைன்னாலும் எனக்கு மாளு அக்கான்னாலே தனி பிரியம்தான், அச்சுதா, சுடுதண்ணி உள்ளே போனபிறகுதான் நிம்மதியா இருக்கு.

அவர் சொல்வதைப் பார்த்தவாறு-

அம்மா:    எல்லாம் தாட்சாயணியோட தலையெழுத்து! பாவம்!

பாத்திரத்தில் இருந்த மீதி தேநீரை ஒரு டம்ளரில் ஊற்றியவாறு.

“அச்சுதன் நாயரே, இதை செறுமி காளியோட மகனுக்குக் கொடுங்க. நான் சீக்கிரம் சாப்பிடணும்.”

அச்சுதன் நாயர் டம்ளருடன் வெளியே செல்கிறார்.

3

மாலை நேரம்.

மாடுகளை மேய்க்கும் சிறுவர்கள். மாடுகளைக் குளிப்பாட்டும் ஆற்றின் வழியே ஒரு கிழவியும், ஒரு இளம்பெண்ணும் நடந்து கிராமத்திற்குள் வருகிறார்கள். கிழவியின் தோற்றத்தில் வறுமை தெரிகிறது. அந்த இளம்பெண்ணுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும். முண்டும், ப்ளவுஸும் அணிந்திருக்கிறாள். கிராமத்திற்குள் அவர்கள் நுழையும்போது, வெகுதூரத்தில் எங்கோ ஒரு ராக ஆலாபனை கேட்கிறது. அந்த ஆலாபனை அவர்கள் நடக்க நடக்க, அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு சுமை தாங்கிக் கல்லின் அருகில் நிற்கிறார்கள்.

கிழவி கிராமத்தைக் கண்களால் அளக்கிறாள். எதிரே ஒரு புள்ளுவனும், ஒரு புள்ளுவத்தியும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையில் வீணை இருக்கிறது. தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் கோணியில் நெல் இருக்கிறது. புள்ளுவத்தி பானையை வெளியே தொங்க விட்டிருக்கிறாள்.

நீண்டதூரம் நடந்து வந்ததால், பயங்கர களைப்புடன் இருக்கிறாள் கிழவி. அவளுக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.

கிழவி:    (புள்ளுவத்தியிடம்) கெழக்கும்பாட்டெ வீடு எங்கே இருக்கு?

புள்ளுவன்: (தூரத்தில் விரலை நீட்டியவாறு) அங்கே ஏறி, கோயிலுக்குக் கீழே இறங்கி நடந்தா போதும்.

புள்ளுவத்தி:     நீங்க எங்கே இருந்துவர்றீங்க?

கிழவி:    நாங்க அக்கரையைச் சேர்ந்தவங்க...

புள்ளுவனும் புள்ளுவத்தியும் நடக்கிறார்கள். கிழவியும், அவளின் பேத்தியும் நடையைத் தொடர்கிறார்கள்.

கிழவியும், பேத்தி குஞ்ஞிமாளுவும் கோவிலுக்கருகில் வருகிறார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத கோவிலும் கோவிலைச் சுற்றியுள்ள இடமும். அந்த இடத்தை அடைந்ததும் கிழவி தயங்கி நிற்கிறாள். பிறகு ஆலமரத்திற்குக் கீழே இருக்கும் கிழவரைப் பார்த்ததும், நடந்து அவரை நோக்கி வருகிறாள்.

கிழவி:    இங்கேயிருந்து எப்படிப் போகணும்?

கிழவர் புன்னகைத்தவாறு, வழியை விரலால் காட்டுகிறார். அவர் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அவர்கள் நடந்து செல்லும்போது, அவர் இரண்டு வரிகளைச் சொல்லுகிறார்.

குஞ்ஞிமாளு, அவர் என்னமோ சொல்கிறார் என்று பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். அப்போது அவர் தான் சொன்ன கவிதையை நிறுத்திவிட்டு, அன்புடன், கள்ளங்கபடமில்லாத முகத்துடன் அவளைப் பார்த்து புன்னகை செய்கிறார்.

4

கிழக்கும்பாட்டெ அம்மா வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது யாரோ படியைக் கடந்து நடந்து வருவதை அவள் பார்க்கிறாள். கையில் இருந்த துடைப்பத்தை ஒரு மூலையில் போட்டுவிட்டு அவர்களை வரவேற்க தயாராகிறாள்.

கிழவியும், மகள் குஞ்ஞிமாளுவும் வாசலை அடைந்து நிற்கிறார்கள்.

கிழவி:    (இளைப்புடன்) கெழக்கும்பாட்டெ வீட்டுக்கு இவளை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க.

அம்மா:    உங்களை யாரு இங்கே அனுப்பினது?

கிழவி:    நெய்க்கன் மாப்ளதான் எங்கக்கிட்ட சொன்னாரு. மாப்ளைக்கிட்டச் சொன்னது இங்க இருக்குற கணக்குப் பிள்ளை. (யாரிடம் என்றில்லாமல்) ரெண்டடி நடந்தா போதும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. என்னால முடியல...

அம்மா:    உட்காருங்க... உட்காருங்க...

கிழவி திண்ணையில் அமர்கிறாள்.

அம்மா உள்ளே போகிறாள்.

கிழவியும் குஞ்ஞிமாளுவும் வாசலில் தனியே அமர்ந்திருக்கிறார்கள். வீட்டையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அவர்களின் கண்கள் அளக்கின்றன.

அம்மா உள்ளேயிருந்து மோர் கொண்டு வந்து கிழவியிடம் கொடுக்கிறாள்.

அம்மா:    இந்தாங்க மோர். வேலைக்காரப் பெண் போன பிறகு, சாயங்கால சாயா இல்லைன்றது மாதிரி ஆயிடுச்சு. எனக்கும் அடி வாதம்...

கிழவி பாத்திரத்தில் இருந்து, உதடு படாமல் மோரைக் கவிழ்த்து குடிக்கிறாள்.

கிழவி:    (ஆசுவாசமாகி) ஏவ்... கெழக்கும்பாட்டைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இக்கரைக்கு நான் அதிகம் வந்தது இல்ல.

அம்மா:    அக்கரையில வீடு எங்கே இருக்கு?

கிழவி:    நாங்க துணி சலவை செய்றவங்க. இது என்னோட மகளோட மக. இவளுக்குக் கீழே அஞ்சு பேரு இருக்காங்க.

அம்மா அவர்களை உற்றுப் பார்க்கிறாள்.

கிழவி:    இவளோட அம்மா இறந்துபோனபிறகு வீட்டு நிலைமை ரொம்பவும் மோசமாப் போச்சு. என்னால ஒண்ணுமே செய்ய முடியல. சில வீடுகள்ல சலவை செஞ்சேன்.

அம்மா:    ஆண் பிள்ளைகள் இல்லியா?

கிழவி:    இறந்து போனவளுக்கு மூத்ததா எனக்கு ஒரு மகன் இருக்கான். அவன் ஆரம்பத்துல துணி துவைச்சான். அதுக்குப் பிறகு அவனுக்கு அதுல வெறுப்பு வந்திடுச்சு. இப்ப அவன் பாக்கு வெட்டுற வேலைக்குப் போறான். பெருசா சொல்ற அளவுக்கு ஒண்ணுமில்ல. அவனோட பொண்டாட்டியும் நானும் சேர்ந்துதான் சலவை செய்யப் போறோம்.

அம்மா:    (குஞ்ஞிமாளுவைப் பார்த்தவாறு) பேரு என்ன?

குஞ்ஞிமாளு:    குஞ்ஞிமாளு.

அம்மா:    இதுக்கு முன்னாடி வேற எங்கயாவது வேலை பார்த்திருக்கியா?

குஞ்ஞிமாளு ‘இல்லை’ என்று தலையை ஆட்டுகிறாள்.

அம்மா:    இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். மகன் படிப்பு முடிஞ்சு வந்தா, அவனும் கூட இருப்பான். அவனும் நிரந்தரமா இங்கே இருப்பான்னு சொல்றதுக்கு இல்ல. வேற வேலைக்குப் போறது வரை இருப்பான். வெளி வேலை செய்றதுக்கு செறுமி இருக்கா.

கிழவி: பழைய முறையை விடாத பத்து இருபது வீடுகள் இருக்கு. அந்த வேலையைச் செய்ய மகனோட பொண்டாட்டி ஒருத்தி போதும். இப்போ எல்லா வீடுகள்லயும் அவங்களே சோப்புப் போட்டு துணிகளைத் துவைச்சிக்கிறாங்க. இஸ்திரிப் பெட்டி எல்லா வீடுகள்லயும் இருக்கு. யாருக்குமே வண்ணான்களைத் தேவை இல்லாமப் போச்சு.

அம்மா:    (அவளிடம்) நீ வீட்டுக்குள்ளே வா... (கிழவியிடம்) ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கீங்க இல்ல! இன்னைக்கு இங்கே தங்கியிருந்துட்டு நாளைக்கு போகலாம். தெரியுதா?

கிழவி:    ராத்திரிக்கு முன்னாடி வீட்டுக்குத் திரும்பி வர்றதா சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். நான் நடந்து போயிர்றேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel