Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 14

neela-thaamarai

குஞ்ஞிமாளு:    சம்பளம் வாங்க இந்தத் தடவை வராதப்பவே நான் என்ன காரணமா இருக்கும்னு நினைச்சேன். அம்மா அச்சுதன் நாயர்கிட்ட சம்பளப் பணத்தைக் கொடுத்து அனுப்பினாங்களே! கிடைச்சதா?

அப்புக்குட்டன்:  ம்... அதை வச்சு அங்கே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துட முடியுமா என்ன?

குஞ்ஞிமாளு:    நான் ஒருநாள் வர்றேன்.

அப்புக்குட்டன்:  அப்படி ஒண்ணும் வரவேண்டாம். நான் கூப்பிட்டப்போ வராத நீ, இனி ஏன் வரணும்? இப்போ அங்கே ஆகுற செலவு முழுவதையும் நான்தான் பார்த்துக்குறேன்.

குஞ்ஞிமாளு:    நீங்க இப்போ சுயநினைவு இல்லாம என்னன்னவோ பேசுறீங்க!

அப்புக்குட்டன்:  நீ ஒரு நாளு வருவே- அது எனக்குத் தெரியும். பணக்காரங்க வீட்ல வேலைக்காரிகளுக்கு என்ன சம்பாத்தியமா கிடைக்குமோ அதைச் சுமந்துக்கிட்டு வருவே!

குஞ்ஞிமாளு:    யாராவது இதைக் கேட்டா என்ன நினைப்பாங்க? கடவுளே...

அப்புக்குட்டன்:  த்தூ... எனக்கு உன்னோட தம்புராக்கன்மார்கள் யாரும் செலவுக்குப் பணம் தரல! ஒரு சோப்பு... கொஞ்சம் பவுடர்... இதுதான் உங்களோட விலையாடி? த்தூ....

அவள் அதைக் கேட்டு கோபமடைகிறாள்.

குஞ்ஞிமாளு:    ஏதாவது அனாவசியமா பேசினா, சொந்தம் பந்தம்னு கூட பார்க்க மாட்டேன். நீங்க இப்போ நகர்றீங்களா? இல்லியா?

அப்புக்குட்டன்:  இந்தப் பாதை என்ன கெழக்கும் பாட்டுக்காரங்களுக்குச் சொந்தமானதா என்ன?

அவன் அவளைக் கிண்டலாகப் பார்த்துச் சிரிக்கிறான். அவள் அவனைக் கடந்து செல்கிறாள்.

குஞ்ஞிமாளு வீட்டை அடையும்போது அங்கு அச்சுதன்நாயர் நின்றிருக்கிறார். அம்மா கீழே சுவரில் சாய்ந்தவாறு ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

கீழே பிரிக்கப்பட்ட ஒரு கவர் இருக்கிறது. படித்து முடித்த காகிதத்தை இராமாயணத்திற்குள் வைத்த அம்மா மனதில் மகிழ்ச்சி பொங்க புன்னகைக்கிறாள்.

அச்சுதன்நாயர்:  விசேஷம் ஒண்ணும் இல்லியா?

அம்மா:    இல்ல, சுகமா இருக்கான். வேலை நல்ல வேலைதான். அப்பு அண்ணன் போய் பார்த்திருக்காரு.

அச்சுதன் நாயர்: அவர் ஆளை விடமாட்டார் போலிருக்கே!

அம்மா எழுகிறாள். இராமாயணத்தை வாசல்படியில் வைத்தவாறு, அச்சுதன் நாயரிடம்-

அம்மா:    அதுக்குப் இப்ப என்ன அவசரம்? அவன் சொன்னதும் ஒரு விதத்துல சரிதான்.

அச்சுதன் நாயர்: என்னைக்கு இருந்தாலும் நடந்துதானே ஆகணும்!

வெளியே நின்றவாறு அவர்கள் பேசுவதை குஞ்ஞிமாளு கேட்டுக் கொண்டிருக்கிறாள். அச்சுதன் நாயரின் குரல் அவள் காதுகளில் கேட்கிறது:

“என்ன இருந்தாலும் அன்னிய ஆளுங்க இல்ல. ஒரு அளவோட செஞ்சா போதும். அவுங்களும் நீங்களும் சொந்தக்காரங்களா இருக்குறப்போ, தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் எதுக்கு?”

யாரும் இல்லாத வாசல் பகுதி.

குஞ்ஞிமாளு துடைப்பத்துடன் உள்ளே வருகிறாள். தரையைப் பெருக்குகிறாள். கையில் இருந்து துடைப்பத்தைக் கீழே வைத்துவிட்டு, பின்பக்க வாசலைப் பார்க்கிறாள். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும கண்களை ஓட்டியவாறு இராமாயணத்தை எடுத்து கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறாள்:

அன்புள்ள அம்மாவுக்கு,

இங்கு விசேஷங்கள் ஒன்றுமில்லை. அம்மா, உங்களின் காலில் வலி அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். நான் பணம் எதுவும் அனுப்பி வைக்கவில்லை. அங்கு பணத்திற்கு என்ன தேவை இருக்கிறது? ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படுகிற பொருட்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். அப்பு மாமா இங்கு வந்திருந்தார். வீட்டிற்கு என்னைக் கட்டாயம் வரச் சொல்லி இருக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அங்கு போய் வரலாம் என்று இருக்கிறேன். பஸ்ஸில் போனால், அன்றே திரும்பி வந்துவிடலாம். அச்சுதன்நாயர் என்னைப் பற்றி விசாரித்திருப்பாரே! இப்போது இங்கு புதிதாக ஒரு அதிகாரி வேலைக்கு வந்திருக்கிறார். அவருக்கு அப்பாவை நன்றாகத் தெரியுமாம். வேறு விசேஷங்கள் எதுவும் இல்லை.

                                                                                                                     உங்களின் மகன்

                                                                                                                            ஹரிதாசன்.

கடிதத்தை முழுமையாகப் படித்து முடித்தபோது அவளின் மனதில் ஒருவித ஏமாற்றமும் உண்டானது. அவள் மெதுவாக அந்தக் கடிதத்தை மடித்து ராமாயணத்திற்குள் வைத்துவிட்டு தரையைப் பெருக்குவதைத் தொடர்கிறாள்.

45

கரத்தில் உள்ள ஒரு வீடு. அத்தை. மூத்த மகள் நவநாகரீக தோற்றத்தில் உள்ள ரத்னம். அவளுக்கடுத்த ஒரு தங்கை, ஒரு தம்பி.

அந்த வீட்டின் வரவேற்பறை.

ரத்னம் நன்கு படித்த ஒரு இளம்பெண். அழகி. தன்னம்பிக்கை உள்ளவள். சாதாரண பெண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவள்.

ஒரு நல்ல குடும்ப சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருக்கிறது.

ஹரிதாசன்:     அப்பு மாமா வர்றப்போ சொன்னா போதும், அத்தை.

அத்தை:   ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நீ வருவேன்னு எங்கேயும் வெளியே போகாம இங்கேயே உன்னோட மாமா இருப்பாரு. இன்னைக்கு வக்கீலைப் பார்த்துட்டு வர்றேன்னு வெளியே புறப்பட்டுப் போனாரு. மத்தியானம் வரை உனக்காக எதிர்பார்த்துட்டுத்தான் போனாரு.

ஹரிதாசன்:     பரவாயில்ல... இன்னொரு நாளைக்கு வர்றேன்.

ரத்னம்:    சும்மா சொல்றாரும்மா. இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலதானே இவர் இருக்காரு! இதுவரை எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் கடந்து போயிருக்கு! (ஹரிதாசனிடம்) அப்பா வந்த பிறகு நீங்க போனா போதும்.

ரத்னம் தன்னுடைய முடிவை கூறிவிட்ட திருப்தியுடன் உள்ளே போகிறாள்.

ரத்னத்தின் தம்பி ஹரிதாசனின் கைக்கடிகாரத்தை அவிழத்து தன் கையில் கட்டுகிறான். பிறகு அதை தன் அக்காவிடம் காட்டுகிறான்.

அத்தை:   (அதைப் பார்த்து) நல்லா இருக்குற கடிகாரத்தைக் கெடுத்திடாதே. ஹரிதாசன் கையில அதைக் கொடு. தாசனைத் தொந்தரவு செய்யக் கூடாது. தெரியுதா? எல்லோரும் உள்ளே போங்க.

குழந்தைகள் அனைவரும் உள்ளே போகிறார்கள். அத்தையும், ஹரிதாசனும் மட்டும் தனியே-

அத்தை:   மாமா மற்ற விஷயத்தைப் பற்றிப் பேசத்தான் உன்னை இங்கே வரச் சொன்னதே!

அவனுக்கு எல்லாம் புரிந்தாலும் எதுவுமே தெரியாத மாதிரி அமர்ந்திருக்கிறான்.

ஹரிதாசன்:     என்ன விஷயம்?

அத்தை:   ரத்னத்தோட விஷயம்தான்.

ஹரிதாசன்:     அதுக்கு என்ன இப்போ அவசரம்?

அத்தை:   உனக்கு வேணும்னா அவசரம் இல்லாம இருக்கலாம். அவளுக்கு வயது இருபத்திரெண்டு ஆயிடுச்சே!

ஹரிதாசன்:     வேலையில சேர்ந்த உடனே லீவு எடுக்குறதுன்றது அவ்வளவு நல்லா இருக்காதே... அத்தை!

அத்தை:   அதிக நாட்கள் லீவு எதுக்கு? ஞாயிற்றுக் கிழமையைச் சேர்த்து ஒண்ணோ ரெண்டோ நாட்கள் லீவு எடுத்தால் போதாதா? நாம என்ன எங்கேயோவா இருக்கோம்? எல்லா விஷயங்களையும் மாமா வந்து சொல்லுவாரு. காலையில சீக்கிரமா நீ போயிடலாம்.

ஹரிதாசன்:     எனக்கு ஆபீஸ் இருக்கே!

அப்போது ரத்னம் அங்கே வருகிறாள்.

ரத்னம்:    ஆறரை மணிக்கு ஒரு பஸ் இருக்கு. ஏழரை மணி பஸ்ஸுக்குப் போனாக்கூட போதும். ஏன்- எட்டரை மணி ஃபாஸ்ட்ல போனாக் கூட ஆபீஸுக்குப் போயிடலாம்.

ஹரிதாசன்:     (ரத்னத்திடம்) நான் சட்டை, வேஷ்டி எதுவுமே கொண்டு வரலியே!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel