Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 16

neela-thaamarai

49

லையில் வைக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்புகள், சுமைகள், மூட்டைகள்- கேமராவுக்கு முன்னால் கடந்து வருகின்றன.

அச்சுதன்நாயரும் வேலைக்காரர்களும் திண்ணையில் பொருட்களை இறக்கி வைக்கிறார்கள். அம்மா அவற்றைப் பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.

அம்மா (உள் பக்கம் பார்த்தவாறு)

குஞ்ஞிமாளு, ஹரிதாசன் வர்றப்போ யாராவது கூட வருவாங்க. சாயாவை முன்கூட்டியே போட்டு வச்சிடு. சாமான்களை எடுத்து ஒழுங்குபடுத்தி வைக்கணும். காளிக்கிட்ட ரெண்டு வேலைக்காரங்களை  கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன். எல்லாத்தையும் நீ சரியா பார்த்துக்கணும்.

அவள் உள்ளே போகிறாள்.

50

ரவு நேரம்.

சமையலறைக்கு வெளியே குஞ்ஞிமாளு என்னவோ சிந்தித்தவாறு நின்றிருக்கிறாள். அம்மா அங்கு வருகிறாள்.

அம்மா:    என்ன, வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா?

குஞ்ஞிமாளு:    ம்...           

அம்மா:    சரி... படுத்துக்கோ. காலையில சமையல்காரங்க வருவாங்க. இப்போ படுத்தாத்தான் கொஞ்சமாவது தூங்க முடியும். வாசல் கதவை அடைச்சிட்டியா? ஹரிதாசன் மேலே போயிருக்கான்.

இரவு நேரம்.

குஞ்ஞிமாளு படுத்திருந்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. ஒரே அமைதிச் சூழ்நிலை.

அவள் சில நிமிட யோசனைக்குப் பிறகு, படுக்கையை விட்டு எழுந்து நிற்கிறாள்.

ஏணிப்படிகளில் அவள் ஏறுகிறாள்- மிகவும் கவனத்துடன், அமைதியாக- நிழலைப் போல.

இருட்டு, ஹரிதாசன் கண்களைத் திறக்கிறான். கட்டிலுக்கு அருகில் குஞ்ஞிமாளு நிற்கிறாள். இருட்டில் கரைந்து போய் அவள் நிற்பது தெரிகிறது.

அவன் அவளைப் பிடித்து தனக்கருகில் உட்கார வைக்க முயற்சிக்கிறான். அவள் இப்போது அழவில்லை. தொண்டைகூட அடைக்கவில்லை. துக்கம் முழுவதும் இதயத்தில் மட்டுமே.

ஹரிதாசன்:     படுத்துக்கோ...

குஞ்ஞிமாளு:    (கைகளை உதறியவாறு) மாட்டேன்...

ஹரிதாசன்: நேரம் இருக்கு. படு...

மீண்டும் அவளை அவன் கட்டிப் பிடிக்க முயல, அவள் விலகி நிற்கிறாள். ஆனால், அவன் கையை எடுக்கவில்லை.

குஞ்ஞிமாளு:    வேண்டாம்.

ஹரிதாசன்:     வா... இனி இப்போ உன்னைப் பார்ப்பேன்னு எனக்கே தெரியாது.

குஞ்ஞிமாளு:    பார்க்கவே வேண்டாம். இதுவரை செய்த தப்புக்கு கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.

ஹரிதாசன்:     அப்படியெல்லாம் தேவையில்லாம ஏதாவது நினைக்காதே வா...(மீண்டும் அவளைக் கட்டிப் பிடிக்க முயல்கிறான்).

குஞ்ஞிமாளு:    வேண்டாம். இனிமேல் என்னைத் தொடாதீங்க. நீங்க இனிமேல் அந்தப் புதுபொண்ணுகூடத்தான் படுக்கப் போறீங்கள்ல?

மங்கலான வெளிச்சத்தில் அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

குஞ்ஞிமாளு: உங்களுக்கும் உங்க கூட வாழப் போற அந்த அம்மாவுக்கும் நல்லது நடக்கட்டும். நான்அதுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்குவேன்.

அவள் திரும்பி நடக்கிறாள்.

ஹரிதாசன் தனியே இருக்கிறான். பிறகு என்ன நினைத்தானோ வாசலருகே நடந்து சென்ற அவன், மெதுவான குரலில் அழைக்கிறான்:

“குஞ்ஞிமாளு!”

ஒரு நிமிடம் அதற்குப் பிறகும் அங்கேயே நின்றிருந்த அவன், திரும்பவும் வந்து மெத்தையில் அமர்கிறான். பிறகு தனக்குத் தானே புன்னகைத்தவாறு மெத்தையில் படுக்கிறான்.

51

காலை நேரம்.

வாசலில் இருந்த புல் தரையிலும், படியிலும் மற்ற இடங்களிலும் ஆட்கள் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

திருமணத்திற்கு வந்தவர்கள்.

கிராமிய மணம் கொண்ட மனிதர்களும் நாகரீகத் தோற்றம் கொண்டவர்களும்.

அச்சுதன் நாயரும், வேறு இரண்டு ஆட்களும் பரிமாறுகிறார்கள். கெட்டிலில் இருந்து தேநீரை டம்ளர்களில் ஊற்றுகிறாள் குஞ்ஞிமாளு. வாசலில் இருந்து கெட்டிலுடன் அவள் திரும்பவும் உள்ளே செல்கிறாள்.

உள்ளே போகும் குஞ்ஞிமாளுவிற்கு எதிரே அம்மாவுடன் திருமண ஆடைகளுடன் (சில்க் ஜிப்பா, வேஷ்டி) ஹரிதாசன் வருகிறான். (ஜிப்பாவிற்கு பட்டன் இட்டவாறு வருகிறான்)

அவள் ஒதுங்கி நிற்கிறாள். அவன் அவளைக் கடந்து போகிறான்.

வாசலில்-

“ம்... வாங்க... வாங்க... மாப்பிள்ளை வாங்க. நீங்க வர்றதுக்கு முன்னாடியே நாங்க சாயா குடிக்க ஆரம்பிச்சிட்டோம்.”

ஒருவன்:  “கழுத்துல ஒரு மைனர் செயின் போட்டிருக்கலாம்!”

மற்றொருவன்:  பொண்டாட்டிக்கிட்ட ஏகப்பட்ட நகைகள் இருக்கு. மாற்றி மாற்றி போட்டுக்க வேண்டியதுதான்.

அவர்கள் பேசுவதை குஞ்ஞிமாளு கேட்கிறாள். அவள் அடுத்த நிமிடம் வேகமாக உள்ளே போகிறாள்.

அவள் சமையலறை வழியாக வெளியே செல்கிறாள்.

தனக்கென்று விதிக்கப்பட்ட சமையலறையில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஐந்து அடுப்புகளும் ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்க, நெருப்புக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறாள் அவள்.

அம்மா சமைலறைக்கு, சமையல்காரர்களுடன் வருகிறாள்.

அம்மா:    ஆளுங்க வந்துட்டாங்க. சமையலறையை இவங்க பார்த்துப்பாங்க. நீ மேலே வராம இங்க என்ன செஞ்சிக்கிட்டு இருக்கே?

அம்மாவைத் தொடர்ந்து அவள் வெளியே செல்கிறாள். சமையல்காரர்கள், சமையலறைக்குள் நுழைகிறார்கள்.

பழைய அறை:

புதிய இரட்டைக் கட்டிலில் புதிய படுக்கைகள். கட்டில் இடம் மாறியிருக்கிறது. புதிய உறை போட்ட தலையணைகள் அவள் வைக்கிறபோது-

அம்மா:    அங்கே இல்ல... இங்க. இதுதான் கிழக்குப் பக்கம். (அம்மா மெத்தை, தலையணை எல்லாவற்றையும் தட்டி சரிப்படுத்துகிறாள்). புதிய கட்டிலும் படுக்கையும் இருக்கட்டும்னு நான்தான் சொன்னேன். அவுங்க இங்க ஒண்ணும் இருக்கப் போறது இல்ல. இருந்தாலும் அவங்களுக்குன்னு இங்க ஒரு அறை வேண்டாமா? அந்தச் சின்ன மேஜை மேல ஊதுபத்தி, சந்தனம், பழம் எல்லாத்தையும் சாயங்காலத்துக்கு முன்னாடியே சரி பண்ணி வச்சிடணும்...

குஞ்ஞிமாளு அந்தப் பக்கம் திரும்பியவாறு வேலை செய்கிறாள்.

அம்மா:    தங்கச்சிமார்களும், மற்ற பெண்களும்தான் எனக்கு இந்த விஷயத்துல உதவியா இருந்திருக்க வேண்டியது. அந்த பாக்யம் உனக்கு கிடைச்சிருக்கு! என்ன நான் சொல்றது!

அவள் புன்னகைக்க முயற்சிக்கிறாள். ஆனால் முடியவில்லை.

52

ன்று மாலை.

கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் வேனும், டாக்ஸியும். மணமகனும் மற்றவர்களும். (ரத்னத்துடன் ஒரு வயதான கிழவியும் இப்போது இருக்கிறாள்) எல்லோரும் வாகனத்தை விட்டு அப்போதுதான் இறங்குகிறார்கள். அவர்கள் கோவில் முன்நின்று தொழுகிறார்கள். பூசாரி வெளியே வந்து மணமகனுக்கும் மணமகளுக்கும் பிரசாதம் தருகிறார். அவர்கள் கோவில் குளத்தையொட்டி நடந்து போகிறார்கள். கூட்டத்தில் இருந்து தனியே ஆன ஹரிதாசனும் ரத்னமும் கோவில் குளத்தின் சுவரருகே நின்றிருக்கிறார்கள்.

ஹரிதாசன்:     இங்கே ஒரு பிரத்யேகமான பூ மலரும். பணம் வச்சு ராத்திரி வேண்டினா, காலையில ஒரு நீலத் தாமரை பூக்கும். நடக்குற விஷயங்களா இருந்தா கட்டாயம் பூ பூக்கும்.

ரத்னம்:    அதை நீங்க நம்புறீங்களா என்ன?

ஹரிதாசன்:     இங்கே உள்ளவங்களுக்கு இதுமேல உண்மையாகவே பெரிய அளவுல நம்பிக்கை இருக்கு.

ரத்னம்:    தாஸ் அத்தான், நீங்க இதுக்கு முன்னாடி இதைச் சோதிச்சுப் பாரத்திருக்கீங்களா?

ஹரிதாசன்:     நானா? எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

அவர்கள் நடந்துபோய் மற்றவர்களுடன் இணைந்து கொள்கிறார்கள். அவன் எதேச்சையாக பார்த்தபோது கோவிலைத் தாண்டி இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஒரு சிறிய உருவம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel