Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

மணலும் நுரையும் - Page 2

manalum nuraiyum

மறுப்பு

ஏழு முறை நான் என்னுடைய ஆன்மாவைக்

கடுமையான வார்த்தைகளால் திட்டினேன்.

முதல் முறை : அவள் உயரத்தை அடைய,

அளவுக்கு மீறி பணிவு காட்டியதற்காக.

இரண்டாவது முறை : அவள் கால்

ஊனமுற்றவர்களுடன் நொண்டிக்கொண்டு

நடப்பதைப் பார்த்து.

மூன்றாவது முறை : அவள் கடுமையானதற்கும்

நயவஞ்சகத்திற்கும் மத்தியில் நின்றுகொண்டு,

நயவஞ்சகத்தைத் தேர்வு செய்ததற்காக.

நான்காவது முறை : அவள் தானே தவறுகள்

செய்துவிட்டு, மற்றவர்கள் செய்த தவறுகளை

நினைத்துப் பார்த்துக் கூறியபோது.

ஐந்தாவது முறை : அவள் பலவீனமாக

இருந்துகொண்டு தன்னுடைய பொறுமை குணத்தைத்

தன்னுடைய பலம் என்று விவரித்த போது.

ஆறாவது முறை : அவள் மற்றவர்களின்

முகங்களில் இருக்கும் அவலட்சணத் தன்மைகளைப்

பார்த்து, அவற்றைப் பற்றி வெறுப்புடன் பேசும் அதே

நேரத்தில் தன்னுடைய முகமூடிகள்தான் அவை என்ற

விஷயத்தை அவள் அறியாமல் இருந்தபோது.

ஏழாவது முறை : அவள் பாராட்டுகள் நிறைந்த

பாடல்களைப் பாடி, அதுதான் புண்ணியம் என்று

நினைத்தபோது.

 

*****

 

அடிமை

பகலவனுக்குக் கீழே நீங்கள் எவ்வளவோ

சுதந்திரத்தன்மை கொண்டவர்.

இரவு நேர நட்சத்திரங்களுக்குக் கீழேயும் நீங்கள்

எவ்வளவோ சுதந்திரம் உள்ளவர்தான்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் ஒளி

இல்லாத வேளைகளிலும் நீங்கள் சுதந்திரமானவரே.

இருப்பவர்கள் எல்லோருக்கும் எதிராக நீங்கள்

கண்களை மூடிக்கொள்ளும்போதும்

சுதந்திரமானவர்தான். அதிகமான சுதந்திரத்தைக்

கொண்டவர்தான். அதே நேரத்தில் நீங்கள் ஒருவர்

மீது அன்பு செலுத்தும்போது அவருக்கு நீங்கள்

அடிமையே! நீங்கள் அவரை விரும்புவதால்.

உங்கள் மீது அன்பு செலுத்தும் அவர் உங்களின்

அடிமை! அவர் உங்களை விரும்புவதால்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version