Lekha Books

A+ A A-

புனிதப் பயணம் - Page 3

punidha payanam

மனம் முழுவதும் வீட்டைப் பற்றிய கவலையிலேயே சதா நேரமும் மூழ்கிப் போயிருந்தது. வீட்டில் எல்லா விஷயங்களும் ஒழுங்காக நடக்குமா என்பதைப் பற்றிய கவலையிலேயே அவர் இருந்தார். தன் மகனிடம் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று தான் விளக்கமாகச் சொல்லிவிட்டு வந்ததையே அவர் மறந்து போனார். தன் மகன் தான் இல்லாத வேளையில் எல்லா காரியங்களையும் ஒழுங்காகச் செய்வானா என்று அவர் கவலைப்பட ஆரம்பித்து விட்டார். உருளைக்கிழங்குகள் ஒழுங்காக விதைக்கப்பட்டிருப்பதையும், அவற்றிற்கு முறையாக உரம் போடப்பட்டிருப்பதையும் பார்த்தால், உண்மையிலேயே அவர் ஆச்சரியம்தான் படுவார். தான் இல்லாத வேளையில், தான் சொன்னபடியே தன் மகன் நடந்திருக்கிறானா என்று நினைத்து அவர் வியப்படையவே செய்வார். சொல்லப்போனால் பயணத்தை கைவிட்டு, வீட்டிற்கு வந்து தன் மகனிடம் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படியெப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று விளக்கிக் கூற வேண்டும் என்றே அவர் மனம் விழைந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லப் போனால் எல்லா விஷயங்களையும் தானே நேரடியாகச் செய்யவே அவர் விரும்பினார்.

3

ந்த இரு வயதான கிழவர்களும் ஐந்து வாரங்கள் தொடர்ந்து நடந்தார்கள். அவர்கள் தாங்களாகவே வீட்டில் செய்த காலணிகள் மிகவும் பழுதடைந்து போய், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆகிவிட்டன. சின்ன ரஷ்யாவை (சின்ன ரஷ்யா என்பது ரஷ்யாவின் தென் மேற்குப் பகுதியில் இருக்கிறது. கீவ், போல்டாவா, செர்னிகோவ், கார்கோவ், கெர்சன் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் சின்ன ரஷ்யா. இப்போது அது உக்ரெய்ன் என்று அழைக்கப்படுகிறது) அவர்கள் அடைந்தவுடன், அங்கிருந்தவர்கள் புதிய காலணிகளை அவர்களுக்கு வழங்கினார்கள். வீட்டைவிட்டு புறப்பட்டதிலிருந்து அவர்கள் தங்களின் உணவிற்காகவும், தங்குமிடத்திற்காகவும் கையிலிருந்து பணத்தைச் செலவழிக்க வேண்டியதிருந்தது! ஆனால், அவர்கள் சின்ன ரஷ்யாவை அடைந்த போது, அங்குள்ள மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் இருவரையும் தங்களின் வீடுகளுக்கு அழைத்தார்கள்.அவர்கள் அந்த இரு கிழவர்களையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உணவைத் தந்தார்கள். அதற்கு எந்தவொரு கட்டணத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ரொட்டியையும், கேக்குகளையும் அவர்களின் பைகளில் போட்டு தங்களின் பயணத்தின்போது அவற்றைச் சாப்பிட்டுக் கொள்வதற்கு உதவி செய்தார்கள்.

எந்தவிதமான செலவும் இல்லாமல் அந்த இரு வயதான மனிதர்களும் ஐந்நூறு மைல்கள் பயணம் செய்தார்கள்.அதற்குப் பிறகு அவர்கள் ஒரு இடத்தைக் கடக்க வேண்டி வந்தது. அந்த மாநிலத்தில் அறுவடை மிகவும் மோசமாக இருந்த சமயமது. இருப்பினும் அங்குள்ள விவசாயப் பெருமக்கள் இரவு நேரத்தில் எந்தவித பணச் செலவும் இல்லாமல் தங்குவதற்கான வசதியை உண்டாக்கித் தந்தார்கள். ஆனால், பணம் வாங்காமல் உணவு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. சொல்லப்போனால், சில நேரங்களில் அந்த வயதான இரு கிழவர்களுக்கும் சாப்பிடுவதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை. அவர்கள் ரொட்டிக்கு பணம் தரத் தயாராக இருந்தார்கள். ஆனால், ரொட்டியைத் தருவதற்குத்தான் யாரும் அங்குத் தயாராக இல்லை. அறுவடை முழுக்க முழுக்க தோல்வியில் முடிந்துவிட்டதாக அங்குள்ள மக்கள் சொன்னார்கள்.பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட விளைச்சல் மிகவும் மோசமாக இருந்ததால், முழுமையான வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் உடைமைகளை விற்க ஆரம்பித்தார்கள். நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு அனாதைகளாகக் கிளம்பினார்கள். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வேறெங்குமே போக முடியாமல் ஊர் ஊராய் அலைந்து பிச்சை எடுத்துக்கொண்டும், இல்லாவிட்டால் வீட்டில் வறுமையில் வாடிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குளிர்காலம் வந்தபோது அவர்கள் தவிட்டைச் சாப்பிட்டு உயிர் வளர்த்தார்கள். ஒருநாள் இரவில் அந்த வயதான இரு கிழவர்களும் ஒரு சிறு கிராமத்தில் தங்கினார்கள்.அவர்கள் பதினைந்து பவுண்டுகளுக்கு ரொட்டி வாங்கினார்கள். அந்த ஊரிலேயே தங்கினார்கள். சூரிய உதயம் வருவதற்கு முன்பு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது கிளம்பினால்தான் அவர்களால் மதிய நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணம் செய்திருக்க முடியும். எட்டு மைல் தூரத்தைத் தாண்டியதும்,அவர்கள் ஒரு ஓடையைப் பார்த்தார்கள். அவர்கள் அங்கு அமர்ந்து கையிலிருந்த பாத்திரத்தில் நீர் பிடித்துக் கொண்டார்கள். கொஞ்சம் ரொட்டியை எடுத்து அந்த நீரில் தொட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். கால்களில் சுற்றியிருந்த கட்டுகளை அவிழ்த்து மாற்றினார்கள். சிறிது நேரம் அங்கு படுத்து ஓய்வெடுத்தார்கள். எலிஷா தன்னுடைய பொடி டப்பாவை எடுத்தார். எஃபிம் அதைப் பார்த்து ஒரு மாதிரி தன் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டினார்.

"இந்தக் கெட்டப் பழக்கத்தை உங்களால விடவே முடியலியா?" அவர் கேட்டார்.

எலிஷா தன் கைகளை ஆட்டியவாறு சொன்னார். "இந்தப் பழக்கம் என்னைவிட பலம் மிக்கதா இருக்கே!"

அவர்கள் இருவரும் எழுந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அடுத்த எட்டு மைல் தூரத்தைத் தாண்டியதும், அவர்கள் ஒரு பெரிய கிராமத்தை அடைந்து அதற்குள் நுழைந்தார்கள். அப்போது மிகவும் புழுக்கமாக இருந்தது. எலிஷா மிகவும் களைத்துப் போய் இருந்தார். சற்று ஓய்வெடுத்து ஏதாவது குடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று எலிஷா நினைத்தார். ஆனால் எஃபிம் நிற்கவேயில்லை. அவர்கள் இருவரில் எஃபிம் தான் வேகமாக நடக்கக் கூடியவர். அவருடன் நடப்பதற்கு உண்மையாகவே எலிஷா மிகவும் சிரமப்பட்டார். 

"நான் கொஞ்சம் ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும்"- அவர் சொன்னார். "சரி... தாராளமா குடிங்க..."- எஃபிம் சொன்னார்."ஆனா, எனக்கு எதுவும் வேண்டாம்."

எலிஷா அந்த ஊரில் நின்றார்.

"நீங்க போய்க்கிட்டு இருங்க"- அவர் சொன்னார். "நான் அதோ அங்கே இருக்குற சின்ன குடிசைக்குள்ளே போறேன். கொஞ்ச நேரத்துல உங்களை நான் பிடிச்சுடுவேன்."

"சரி... அப்படியே செய்யுங்க"- எஃபிம் சொன்னார். தொடர்ந்து அவர் தனியே சாலையில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். எலிஷா சற்று தூரத்தில் தெரிந்த குடிசையை நோக்கி நடந்தார்.

அது ஒரு சிறு குடிசை. களிமண்ணால் கட்டப்பட்டிருந்தது. கீழ்ப்பகுதி கறுப்பு வண்ணத்தில் இருந்தது. மேற்பகுதி சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் களிமண் ஆங்காங்கே பிளவுபட்டிருந்தது. அந்தக் குடிசை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதை அதைப் பார்த்த கணத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மேற்கூரையின் ஒரு பக்கத்தில் கொம்பு ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel