
அவளுடைய இளம் சிவப்பு நிறத்திலிருந்த நகங்களைக் கொண்ட விரல்களைப் பார்த்தபோது, நான் ஒரு வயலின் என்றும், அந்த வயலின் தந்திகளை மீட்டுகிறவள் அவள் என்றும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.
இந்தப் பெண்ணை என்னுடைய இதயத்தில் வைத்துக்கொண்டு இறக்க, அப்படியாவது அவளை வாழ்நாள் முழுவதும் என்னுடனேயே வைத்துக்கொள்ள நான் விரும்பினேன். என் உடல் வேதனையால் பயங்கரமாக வலித்தது. என்னுடைய இதயம் வெடித்து விடும்போல் எனக்குத் தோன்றியது.
நான் என்னுடைய முதல் கதையை அவளுக்குப் படிக்கத் தந்தேன். (அந்தச் சமயத்தில்தான் அது பிரசுரமாகியிருந்தது). ஆனால், அவள் அதைப் பற்றி என்ன சொன்னாள் என்பது என் ஞாபகத்தில் இல்லை. ஆச்சரியப்படும் விதத்தில் அவள் நடந்து கொண்டதை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
"ஓ... நீ கதையும் எழுத ஆரம்பிச்சிட்டியா?"- பிறகு ஒரு கனவிலிருந்து பேசுவதைப் போல அவள் சொன்னாள்:
"கடந்த இரண்டு வருடங்களா உன்னைப்பற்றி நான் நிறைய சிந்திச்சிருக்கேன். உண்மையா எனக்காகத்தான் நீ இந்தக் கஷ்டங்களையெல்லாம் சகிச்சிக்கிட்டியா?"
அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எனக்குத் துன்பங்கள் என்று எதுவும் இல்லை என்று நான் மெதுவான குரலில் முணு முணுத்தேன்.
"ஓ... நீ எவ்வளவு நல்ல மனிதன்!"
அவளை இறுகக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் என்று நான் மனதில் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், என் கைகள் மிகவும் நீளமானவையாகவும், சதைப்பிடிப்பு கொண்டவையாகவும் இருந்ததால் அவளை ஏன் வீணாக வேதனைப்படுத்த வேண்டும் என்று எண்ணி அவளைத் தொடுவதற்கே நான் பயந்தேன். எனினும், என் மனதில் உள்ள எண்ணத்தை அவளிடம் நான் சொன்னேன்:
"வா... என்கூட வந்து இரு... என் கூட வந்து இருன்னு உன்னை நான் கேட்டுக்குறேன்."
அதைக் கேட்டு அவள் சிறிது பதைபதைப்பு அடைந்தாலும் என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். கண்களே கூசிவிடும் அளவிற்கு மிகவும் பிரகாசமாக இருந்தன அவளுடைய கண்கள். அறையின் மூலையில் தள்ளி நின்றவாறு அவள் சொன்னாள்:
"நாம இப்போ இப்படி நடப்போம். நீ நிஷ்னிலொவோ கோதிக்கு திரும்பிப்போ. நான் இப்போதைக்கு இங்கேயே இருந்திடறேன். இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கிறேன். அதுக்குப் பிறகு உனக்குக் கடிதம் எழுதுறேன்."
"சரி" என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டு, முன்பு நான் படித்த புதினங்களின் கதாநாயகர்களைப் போல் வெளியே இறங்கி நடந்தேன்- காற்றைக் கிழத்துக் கொண்டு.
அந்த மழைக்காலத்தில் அவளும் குழந்தையும் நிஷ்னிலொவோ கோதில் என்னுடன் வந்து தங்க ஆரம்பித்தார்கள்.
'ஒரு ஏழையின் திருமண நேரத்தில் இரவுகள் கூட சபிக்கப்பட்டவைதான்' என்பது கவலைப்படத்தக்க ஒரு ரஷ்யப் பழமொழி. என்னுடைய சொந்த அனுபவங்களே அந்த உண்மையை எனக்குப் பறைசாற்றின.
இரண்டு ரூபிள் மாத வாடகைக்கு நாங்கள் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தோம். ஒரு பாதிரியாரின் வீட்டுக்குப் பின்னாலிருந்த குளியலறை அது. அதன் முன்பக்கத்திலிருந்த அறையை நான் எடுத்துக் கொண்டேன். பின்னாலிருந்த அறையை அவள் எடுத்துக் கொண்டாள். குடும்பத்துடன் இருப்பதற்கு ஏற்றதாக அந்த வீடு இல்லை. வீட்டின் பக்கவாட்டிலும் மூலைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்து
கிடந்தன. இரவு நேரங்களில் என் கையிலிருந்த அனைத்து ஆடைகளைக் கொண்டும், அதற்கும் மேலே ஒரு கம்பளியைப் போட்டும் என்னைப் போர்த்திக்கொண்டு படுப்பேன். எல்லாம் செய்தும் அந்தக் காலத்தில் நான் பெரிதாக நினைத்திருந்த என்னுடைய நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியைமீறி எனக்குக் காய்ச்சல் வந்தது.
குளியலறையின் அடுப்பில் நெருப்பை எரிய வைக்க முயன்றால், அந்த அறையிலிருந்து சோப்பின் வாசனையும் இற்றுப்போன மரத்துண்டுகளின் மணமும், அழுகிப்போன இலைகளின் சகிக்க முடியாத வாசனையும் வெளியே வந்தன. அந்த வாசனை அந்தக் குழந்தையை (அழகான கண்களைக் கொண்ட களிமண் பொம்மை) பைத்தியம் பிடித்ததைப் போல் ஆக்கி, அதற்குத் தலைவலி வரும்படி செய்தது.
வசந்தகாலம் வந்தபோது, எட்டுக்கால் பூச்சிகளுக்கும் மரத்தின் பட்டைகளில் வசிக்கும் ஜந்துக்களும் குளியலறையைத் தங்களின் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்டன. அதைப் பார்த்துத் தாயும் மகளும் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். செருப்பால் நான் அந்தப் பூச்சிகளை அடித்து விரட்டினேன். அந்த வீட்டின் சிறிய ஜன்னல்களில் ராஸ்ப்பெரி செடிகள் வளர்ந்து பந்தலிட்டதன் மூலம் வீட்டிற்குள் எப்போது பார்த்தாலும் மங்கலான வெளிச்சமே இருந்தது. ஆனால், மது அருந்தும் பழக்கத்தையும், நிலையான மனதைக் கொண்டிராதவருமான அந்தப் பாதிரியார் அந்தச் செடிகளை வேறு இடத்திற்கு மாற்றி நடவோ அல்லது அவற்றை ஒழுங்குபடுத்திக் கட்டிவைக்கவோ என்னை விடவில்லை.
எங்களுக்கு அதைவிட நல்ல வசதிகள் கொண்ட வீடொன்று கிடைத்தது. ஆனால், அந்தப் பாதிரியாருக்கு நான் கொஞ்சம் பணம் தரவேண்டியிருந்தது. என்னை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் அந்த இடத்தை விட்டுச் செல்ல என்னை விடவில்லை.
"எல்லா விஷயங்களும் காலப்போக்குல உனக்குப் பழக்கமாயிடும்"- அவர் கூறுவார்: "அப்படி இருக்க முடியலைன்னா, எனக்குத் தர வேண்டிய பணத்தைத் தந்துட்டு நீ எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனா, ஆங்கிலேயர்கள் கூட மட்டும் தங்காதே!"
அவர் ஆங்கிலேயர்களை வெறுத்தார்.
"அவர்கள் உல்லாசப் பேர்வழிகள். கல் வைத்த நகைகள் உண்டாக்குவதைத் தவிர, வேற எதையுமே அவர்கள் கண்டுபிடிக்கல. போர் செய்றது எப்படின்னு அவங்களுக்குத் தெரியாது" அவர் அலட்சியமான குரலில் கூறினார்.
சிவந்த வட்ட முகத்தையும், பெரிய சிவந்த தாடியையும் கொண்ட ஆஜானுபாகுவான ஒரு மனிதராக இருந்தார் அவர். தீவிரமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தேவையான நேரத்தில் தேவாலயத்திற்குச் சென்று சடங்குகளைச் செய்ய அவரால் முடியவில்லை. கூர்மையான மூக்கையும், கறுத்த தலைமுடியையும் கொண்ட, பார்த்தால் ஒரு காகத்தைப் போல் இருக்கும் ஒரு தையல்காரியுடன் அவருக்குச் சிறிய அளவில் காதல் தொடர்பு இருந்தது.
அவள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயத்தைக் கூறும்போது தன் தாடியில் விழுந்து ஒட்டிக்கொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகளை அவர் கையால் துடைப்பார்.
"அவள் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுன்னு எனக்குத் தெரியும். அவளைப் பார்க்குறப்போ எனக்கு ஃபிமியாமான்ற ஒரு ரத்தக் காட்டேரிதான் ஞாபகத்துல வருது."
'லைவ்ஸ் ஆஃப் ஸெயிண்ட்ஸ்' என்ற நூலை நான் தேடிப்பிடித்துப் படித்தேன். அந்தப் பெயரில் ஒரு ரத்தக் காட்டேரியை அந்த நூலில் என்னால் பார்க்கவே முடியவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook