
என் திறமையையும் அனுபவத்தையும் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒரு கொலைச் செயலை செய்யக் கூடிய தகுதி எனக்கு உண்டாகிவிட்டிருந்தது.
என்னுடைய தனி குணம் என்னவென்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால், எனக்குள் இருக்கும் கொடூரமான ஜந்துவைப் பார்த்துவிட்டால் எங்கே அவள் பயந்துவிடப் போகிறாளோ என்று நான் பயந்தேன். இந்த விஷயத்தில் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்றொரு எண்ணம் என் மனதில் உண்டானது. அவளால் எனக்கு உதவி செய்ய முடியுமென்றும்; என்னைச் சுற்றிலும் ஒரு மாய வளையத்தை உருவாக்கிக் கொண்டு அதன் வழியாக வாழ்க்கையைப் பற்றிய இருண்ட பார்வையிலிருந்து அவளால் என்னைக் காப்பாற்ற முடியுமென்றும்; அதன்மூலம் என் ஆன்மா பலமும் சந்தோஷமும் பெறும் என்றும் நான் உறுதியாக நம்பினேன்.
அவளுடைய இயல்பான பேச்சும், மற்றவர்களிடம் அவள் கள்ளங் கபடமில்லாமல் நடந்து கொள்ளும் விதமும், அவளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அசாதரணமான ஒரு அறிவு இருக்கிறது என்றும்; வாழ்க்கை ஆழங்களின் இருட்டறைகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு சாவி அவளிடம் இருக்கிறது என்றும் என்னைக் கட்டாயமாக நினைக்கச் செய்தன. அதனால்தான் அவள் இந்த அளவிற்குச் சந்தோஷம் நிறைந்தவளாகவும் வாழ்க்கையைப் பற்றிய உறுதியான பார்வையைக் கொண்டிருப்பவளாகவும் இருக்க முடிகிறது. அவளைப் பற்றிய மிகவும் குறைவான- எனக்குப் புரியக்கூடிய விஷயங்களை மட்டும் மனதில் நினைத்துக்கொண்டு நான் அவளைக் காதலித்தேன். இளமையின் எல்லா தகுதிகளையும் பயன்படுத்தி நான் அவளைக் காதலித்தேன். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அடக்கி
ஒடுக்குவது என்பது மிகவும் பயங்கரமான வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அதன் மிகவும் எளிமையான, மனப்பூர்வமான வரவேற்பு என் கஷ்டங்களைக் குறைக்கலாம். ஆனால், ஆண்-பெண் உறவு என்பது உடல் ரீதியான ஒன்று என்பதைவிட வேறு ஏதோ ஒன்று என்று நான் நினைக்கிறேன். அந்த உடல் ரீதியான உறவின் மிருகத் தோற்றத்தை எனக்கு நன்கு தெரியும். உடல் பலமும் காதல் வேகமும் கொண்ட ஒரு இளைஞனாக இருந்தாலும், அப்படிப்பட்ட காதல் வடிவத்தை மனதில் நினைக்கும் போது எனக்கு வெறுப்பு உண்டாகத்தான் செய்கிறது.
ஆனால், இந்தக் காதல் என்பது என்னைப் பொறுத்தவரையில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்பதே உண்மை. இந்த எண்ணங்கள் எதுவும் நான் படித்த புத்தகங்களிலிருந்து நான் பெற்றவை இல்லை. நானே படைத்த எண்ணங்களே அவை. என்னுடைய பழைய கவிதைகளில் கூறியிருப்பதைப் போல, 'நான் இந்த உலகத்திற்கு வந்தது கலப்பதற்காகவே' என்பதுதான் உண்மை.
அதையும் தாண்டி அசாதாரணமானதும் எப்போதும் எனனைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதுமான ஒரு ஞாபகம் எனக்குள் எப்போதும் உறைந்திருக்கிறது. உண்மையின் எல்லைகளுக்கப்பால், என்னுடைய அந்தப் பழைய நிலையற்ற தன்மைக்குள், மகத்தான ஆன்ம எழுச்சி, இனிமையான ஒரு செயல்பாடு, சந்தோஷத்தைப் பற்றிய ஒரு ஆச்சரியமான அறிவு, உதயசூரியனின் பிரகாசத்தைவிட ஒளிமயமான ஆனந்தம்- இவை எல்லாவற்றையும் நான் உணர்ந்தேன். ஒரு வேளை, தாயின் கர்ப்பப்பைக்குள் இருந்தபோது அனுபவித்த வார்த்தையால் விவரிக்க முடியாத ஆனந்தம் ஒரு மின்னலைப்போல எனக்குள், என் உயிர் வடிவமெடுக்கும் நேரத்தில் ஆத்மாவிற்குள் பரவியிருக்கலாம்.
அறியமுடியாத விஷயங்களைப் பற்றி மனிதன் நினைத்துப் பார்க்கிறான். மொத்தத்தில் பார்க்கப்போனால் வாழ்க்கையில் மனிதன் அனுபவித்த அறிவுபூர்வமான ஒரே விஷயம் பெண்ணைக் காதலித்ததும், அவளுடைய அழகை வழிபட்டதும்தான். இந்த உலகத்திலுள்ள அனைத்து அழகான பொருட்களும் படைக்கப்ட்டது. ஆணுக்குப் பெண்மீது பிறந்த காதலால்தான்.
ஒருநாள் குளிக்கும்போது நான் ஆற்றில் குப்புற குதித்தேன். என் மார்பு படகுகளுக்கு நங்கூரமிடும் சங்கிலியில் மோதியது. கால் சங்கிலியில் மாட்டிக் கொண்டது. ஏதோ ஒரு படகோட்டி என்னைத் தூக்கும் வரை நான் தலைகீழாகத் தண்ணீரில் விழுந்து கிடந்தேன். அந்த மனிதன் எனக்குள் நுழைந்த நீரை வெளியே வரும்படி செய்தான். என் மேற்தோலில் காயம் உண்டானது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ரத்தவாந்தி எடுத்தேன். படுத்த படுக்கையாய் ஆனேன். என்னுடைய காதலி என்னைப் பார்ப்பதற்காக வந்தாள். என் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து ‘எப்படி இதெல்லாம் நடந்தது?’ என்று கேட்டவாறு தன் கையால் என் மார்பை வருடினாள். கலங்கிப் போயிருந்த கறுத்த கண்களால் அவள் என்னையே பார்த்தாள்.
நான் காதலிக்கும் விஷயம் அவளுக்குத் தெரியுமா என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.
"தெரியும்..."- சோகமான புன்சிரிப்புடன் அவள் சொன்னாள்: "நான் உன்னைக் காதலிக்கிறேன்றது உண்மைன்னாலும், அது இப்போ மோசமான நிலையிலயில்ல இருக்கு..."
அவளுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டபோது பூமியின் சுழற்சியே ஒரு நிமிடம் நின்றுவிட்டதைப் போல் நான் உணர்ந்தேன். தோட்டத்திலிந்த மரங்கள் சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டன. ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாக நான் என்ன பேசுவதென்று தெரியாமல் மவுனமாகி விட்டேன். என் தலையை நான் அவளின் மடிமீது வைத்து இறுகப் பிடித்துக்கொள்ளவில்லையென்றால் நான் ஜன்னல் வழியாக வெளியே போயிருப்பேன்.
"அசையாம படுத்திரு. அது உனக்கு நல்லது இல்ல."- கண்டிப்பான குரலில் சொன்ன அவள் என் தலையை எடுத்து தலையணை மீது வைத்தாள். "இனிமேலும் உன்னை நீயே கட்டுப்படுத்திக்கலைன்னா நான் வீட்டுக்குப் போயிடுவேன். நீ என்ன பைத்தியக்காரத்தனமெல்லாம் காட்டுற! உன்னைப்போல ஒரு ஆளை நான் இதுவரையில் பார்த்ததே இல்ல. நம்மளைப் பற்றி நம்மோட உணர்வுகளைப் பற்றி - உனக்கு எல்லாம் சரியான பிறகு நாம அதைப்பற்றிப் பேசுவோம்."
முழுமையான முதிர்ச்சியுடன் அவள் பேசினாள்.
அவளுடைய கண்களில் இருந்த மலர்ச்சி வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அன்பு நிறைந்ததாக இருந்தது. அவள் தான் எனக்கு நெருக்கமாக இருப்பதால் புதிய சிந்தனைகளும் உணர்வுகளும் கொண்ட உலகத்திற்குள் என்னால் நுழைய முடியும் என்ற புதிய நம்பிக்கையை என் மனதில் விதைத்து விட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
ஒருமுறை நகரத்திற்கு வெளியே ஒரு வயலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். தாவரங்கள் மீது காற்றுப்பட்டு ஒரு ஓசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. சாம்பல் நிறத்திலிருந்த ஆகாயம் மழை வரப்போவதைச் சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தது. வண்ணங்கள் பூசப்பட்ட அருமையான வார்த்தைகளால் எங்களுக்கிடையே இருக்கும் வயது வித்தியாசத்தைப் பற்றியும், நான் கல்வியை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயத்தைப் பற்றியும் ஒரு மனைவியையும் குழந்தையையும் பொறுப்பேற்று வளர்க்கக்கூடிய வயது எனக்கு இன்னும் வரவில்லை என்றும் அவள் என்னிடம் சொன்னாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook