Lekha Books

A+ A A-

யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 5

yanai-vaarium-thanga-siluvaium

தங்கச் சிலுவை அன்று வெளியே கொண்டு வரப்பட்டது. கண்குளிர பக்தர்கள் கூட்டம் அதைப் பார்த்து வணங்கியது. திருநாள் முடிந்தது. எல்லாரும் அவரவர் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். பகட்டான திருவிழாவையும் வாணவேடிக்கைகளையும் கூட தோமா மறந்துவிட்டார். பெரிய ஒரு பிரச்சினை தோமாவைப் போட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. தங்கச் சிலுவை- மரச் சிலுவை! தோமாவுக்கு உண்ண விருப்பமில்லை. உறக்கம் வரவில்லை.

மொத்தத்தில் இனம் புரியாத ஒரு குழப்பநிலை அவரை ஆட்கொண்டுவிட்டிருந்தது.

தோமாவுக்கு என்ன ஆயிற்று?

யானைவாரி கேட்டார். ஒற்றைக் கண்ணன் கேட்டான். மண்டு கேட்டான். எட்டுக்காலி கேட்டான். ஊர் மக்கள் பலரும் கேட்டார்கள். ஊரில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள்கூட கேட்டனர்.

தோமா எல்லாரிடமும் கூறினார்:

"எனக்கு ஒண்ணுமில்லை...''

அதற்காக ஒன்றுமே இல்லை என்று கூறிவிட முடியாது. இருக்கவே செய்தது. உண்மையான கிறிஸ்துவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி அது. கர்த்தாவான இயேசு கிறிஸ்துவை அறைந்தது மரச் சிலுவையிலா, தங்கச் சிலுவையிலா?

நிச்சயம் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு பெரிய பிரச்சினைதான் இது. எதற்கு நேரத்தை வீண் செய்ய வேண்டும்? நண்பர்களிடம்கூட ஒரு வார்த்தை கூறாமல் இருட்டிலேயே அந்த இடத்தைவிட்டு கர்மமே கண் என நினைத்து நகர்ந்து மறைந்தார் தோமா.

நாட்கள் கடந்தோடியது. ஒன்பது நாட்கள் பல இடங்களிலும் அலைந்து ஆராய்ந்து பார்த்தபிறகு, தோமா ஒரு முடிவுக்கு வந்தார். அன்று சரியாக இரண்டரை மணிக்குத் தோமாவை ஒரு போலீஸ்காரன் கைது செய்து லாக்-அப்பில் அடைக்கிறான். என்ன காரணம்? சந்தேகப்படக்கூடிய நிலையில் தோமாவைப் பார்த்த போலீஸ்காரன் அவரை ஒரு பயங்கர கேடி என்று நினைத்துக் காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்துவிடுகிறான். நமக்குத்தான் தெரிந்த விஷயமாயிற்றே- போலீஸ்காரர்களுக்குத் தெருவில் யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான்.

பழைய போலீஸ்காரர்கள் உண்மையிலேயே மிகவும் நல்லவர்கள். அவர்களுக்குச் சட்டதிட்டங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும். தோமாவைக் கைது செய்தது ஒரு புதிய போலீஸ்காரன். பழைய போலீஸ்காரராக இருந்தால் சாதாரண ஒரு குற்றத்திற்காக நிச்சயம் தோமாவைக் கைது செய்திருக்கமாட்டார்.

சரி போகட்டும்... தோமாவை லாக்-அப்பில் போட்டு பத்தொன்பது நாட்கள் ஆகிவிட்டன. இருபதாம் நாள் இரவு. நல்ல காற்றும் மழையும் இருந்ததால் உள்ளே பயங்கர குளிர். ஒழுங்காகச் சாப்பிட்டு இருப்பவர்கள் என்றால், போர்வையை இழுத்து மூடி அமைதியாகத் தூங்கலாம். கொஞ்சம் இடியும் மின்னலும்கூட இருந்தது. இரண்டு மணி கழிந்தது. தோமா உறங்கவில்லை. அன்று காவலுக்காகப் போடப்பட்டிருந்த ஆள் 1627-ஆம் எண்ணைக் கொண்ட பழைய மனிதனான பளுங்கன் கொச்சு குஞ்ஞூ ஒரு பீடியைக் கொளுத்தி, இரும்புக்கம்பி இடைவெளி வழியே உள்ளே இருந்த தோமாவுக்குக் கொடுத்தார். தொடர்ந்து வாழ்க்கையில் தனது சோகச் சம்பவங்கள் சிலவற்றைக் கடுமையான துக்கத்துடன் தோமாவிடம் கூறத்தொடங்கினார் குஞ்ஞூ.

"எல்லாம் கடவுள் சித்தம்.. பென்ஷன் வாங்க இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஏழு மகள்கள் வரிசையா நிக்கிறாங்க. மூத்த பொண்ணுக்கு இருபத்தேழு வயசாச்சு.''

தோமா கேட்டார்:

"சம்பாத்தியம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா?''

"சொத்து... தோமா, இருக்குற வீட்டுக்கு வாடகைப் பணம் அஞ்சரை ரூபா தர வேண்டி இருக்கு. ரொம்ப நாள் பாக்கி இது. பொண்டாட்டி பக்கவாதம் பிடிச்சு படுத்த படுக்கையாகெடக்கா. அதுதான் நான் சொன்னேனே, கடவுளோட சித்தம் இப்படி இருக்குன்னு...''

தோமா ஒன்றும் பதில் கூறவில்லை. சிறிது நேரம் சென்ற பிறகு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மெதுவான குரலில் தோமா சொன்னார்:

"கொஞ்சம் பக்கத்துல வா.''

பளுங்கன் கொச்சு குஞ்ஞூ அருகில் வந்து நின்றார்.

தோமா மெதுவான குரலில் சொன்னார்:

"ரெண்டு மணிநேரம் என்னை வெளியே திறந்துவிட முடியுமா? விட்டா ஒரு காரியம் நானே செய்யறேன்.''

அவ்வளவுதான்- நடுங்கிவிட்டார் பளுங்கன் கொச்சு குஞ்ஞூ. வெளியேவிடுவது என்பது சாதாரண ஒரு விஷயமா என்ன? ஆனால் சொன்னது தோமாவாயிற்றே! பளுங்கன் கேட்டார்:

"தோமா, என்னை நீ ஏமாத்திட மாட்டியே! பென்ஷன் போயிடும். பெண்டாட்டியும் குழந்தைகளும்... தோமா, நீ என்னை கம்பி எண்ண வச்சிரமாட்டேயில்ல...?''

"அப்படியெல்லாம் செய்வேனாடா! இதுவே ஒரு புது போலீஸ்காரனா இருந்தா இப்படி எல்லாம் செய்ய நடுங்குவானா?''

இவ்வளவு ஏன் சொல்ல வேண்டும்? புதிய போலீஸ்காரர்களை விட பழைய போலீஸ்காரருக்குத்தான் துணிச்சலும் தைரியமும் அதிகம். பளுங்கன் கொச்சு குஞ்ஞூ மற்ற லாக்-அப் அறைகளில் போய்ப் பார்த்தார். எல்லாரும் நன்றாகக் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தனர். வெளியே சென்று பார்த்தார்.

அங்கு இரண்டு புதிய போலீஸ்காரர்கள் வாய்பிளந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இருந்தாலும் பளுங்கன் கொச்சு குஞ்ஞூ மனதில் சிறிது ஊசலாட்டம் இருக்கவே செய்தது.

"தோமா இன்ஸ்பெக்டர் யார் தெரியும்ல... சிறுத்தை மாத்தன். அதைத் தெரிஞ்சுக்கோ!''

போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் பயங்கரமான ஒரு ஆள். தயவு தாட்சண்யம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார். கைதிகளும் சரி... போலீஸ்காரர்களும் சரி... சிறுத்தை மாத்தன் பெயரைக் கேட்டாலே நடுங்கிப் போவார்கள் என்பதே உண்மை.

தோமா சொன்னார்:

"நீ ஏன்டா வீணா பயப்படுறே?''

"கடவுளே! தோமாவுக்கு நீதான் நல்ல புத்தியைக் கொடுக்கணும்.''

கடவுளைப் பிரார்த்தனை செய்தவாறே பளுங்கன் கொச்சு குஞ்ஞூ சந்தடியில்லாமல் லாக்-அப்பின் பூட்டைத் திறந்தார். தொடர்ந்து மெல்ல கதவைத் திறந்துவிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் வெளியேறிய தோமா, மழை பெய்துகொண்டிருந்த இரவுப்பொழுதில் மறைந்தே போனார்.

நேரம் சிறிது சென்ற பிறகு பளுங்கன் கொச்சு குஞ்ஞூவிற்கு ஒரு பதட்டமே உண்டாகிவிட்டது. எப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தார். எத்தனையோ வருட போலீஸ் வேலை. அதற்காக அரசாங்கம் தருகிற பென்ஷன் பணத்தை இவ்வளவு சீக்கிரம் தொலைக்கும் வழியில் இறங்கியாகிவிட்டது! தோமா நிச்சயம் ஏமாற்றத்தான் போகிறார். மனைவியும் குழந்தைகளும் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னே... பளுங்கனால் இனியும் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மெல்ல எழுந்தார். வெளியே ஒரே இடி முழக்கம், மின்னல் வெட்டு, தொடர் மழை. பளுங்கன் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் நடந்தார். நடக்கக்கூடாதது நடக்கப்போகிறது! வெளியே தூங்கிக் கொண்டிருந்த

புதிய போலீஸ்காரர்கள் என்னவோ தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தார்கள். அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel