Lekha Books

A+ A A-

யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 4

yanai-vaarium-thanga-siluvaium

"பயமா இருந்துச்சானா நீயும் மரத்துல ஏறிக்கோ. லேசா எறும்பு கடி இருக்கு. இருந்தாலும் வா.''

தோமா சொன்னார்:

"நான் ஒண்ணும் பயந்தாங்கொள்ளி இல்லை. சரி... இறங்கிக் கீழே வா.''

தோமா தைரியசாலி என்றால் ராமன் நாயரும் தைரியசாலிதான். மெதுவாக கீழே இறங்கிவந்த ராமன் நாயர் கேட்டார்:

"அந்தச் சத்தம் யாருடையது தோமா?''

தோமா கூறினார்:

"நம்ம பாருக்குட்டி போட்ட பிளிறல்தான்.''

"இதைக் கேட்டு யாருக்குத்தான் கோபம் வராது?"

ராமன் நாயர் கோபத்துடன் சொன்னார்:

"அந்த மடப்பய மகளோட சங்கை அறுத்துக் கொல்றேன்.''

தோமா சொன்னார்:

"நீ அவளை கூடையில வாரி எடுத்துட்டுப் போகலாம்னு நெனைச்சா சும்மா இருப்பாளா என்ன? பாவம்... அவள் ரொம்பவே பயந்துபோனாள்... மண்வெட்டியும் கூடைகளும் எங்கே?''

"பாருக்குட்டிக்குப் பக்கத்துல எங்கயாவது கிடக்கும். முத்தபா எங்கே?''

"அவன் உயிரைக் காப்பாத்திக்கறதுக்காக ஆத்துல குதிச்சிட்டான்.''

"எட்டுக்காலி எங்கே?'' ராமன் கேட்டதும் எங்கோ இருந்து ஓடி வந்தான் எட்டுக்காலி மம்மூஞ்ஞூ.

"விஷயம் தெரியுமா? அது நம்ம பாருக்குட்டி. அவள் நிற்கிற இடத்துக்கு கொஞ்ச தூரத்துல கொச்சு நீலாண்டனும் இருக்கான். ஆனா, அவன் வாயே திறக்கலை. பார்த்தீங்களா?''

தோமா சொன்னார்:

"ராமன் நாயரே, போய் எல்லா சாமான்களையும் எடுத்துட்டு வா.''

"நீ போயிட்டு வா. அவள்கூட எனக்கு உறவு சரியில்லைன்னு உனக்குத்தான் தெரியுமே!'' -ராமன் நாயர்.

தோமா மெல்ல பாருக்குட்டி இருந்த இடத்திற்குச் சென்றார்.

"பொன்னே... பாருக்குட்டி! அடியே என் கண்ணு.... தங்கம்... நான் உன்னை வெட்டி வாரி எடுத்துட்டுப் போக வந்த ராமன் நாயரில்லை. உன்னை உயிருக்குயிரா விரும்பும் தோமா. ஆமாண்டா கண்ணு. நான்தான். மண்வெட்டியையும், மற்ற சாமான்களையும் எடுத்துக்கிட்டாடா கண்ணு...?''

பாருக்குட்டியைச் சாந்தப்படுத்தும் வார்த்தைகளைத் தோமா அள்ளி வீசியபோது ராமன் நாயர் சொன்னார்:

"உன் அலங்கார வார்த்தைகளைத் தூக்கிப் போட்டுட்டு, சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துட்டு வா. ஒரேயடியா ஐஸ் வைக்காதே!''

தோமா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. என்ன காரியத்திற்காக வந்தார்களோ அதை முறைப்படி செய்து முடித்து, படகைச் சாணத்தாலும் சாம்பலாலும் நிறைத்து, இடத்தை விட்டு அகன்றார்கள். இரவிலேயே முட்டைக் கண்ணன் நந்துருவை எழுப்பி, படகில் கொண்டு வந்த பொருளை அவனிடம் ஒப்படைத்தார்கள். அவன் தர வேண்டிய மீதித் தொகையான மூன்று ரூபாயைத் தந்தான். ராமன் நாயர் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது, பின்னால் யாரோ "யானைவாரி" என்று மெல்ல அழைத்தது ராமன் நாயர் காதில் விழுந்தது. யார் அப்படிக் கூப்பிட்டது? தோமாவா? எட்டுக்காலி நிச்சயம் இருக்காது. பிறகு யார்?

அசரீரி!

அமைதியாக சென்று அவர்கள் உறங்கினர்.

"யானைவாரி ராமன் நாயர்னு என்னை யாராவது கூப்பிடட்டும். கூப்பிடுற ஆளோட மூக்கை அறுத்து உப்புல ஊறப்போடுறேன்.'' யாரைப் பார்த்தாலும் இப்படிச் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார் ராமன் நாயர். அதற்குப் பிறகு யாருக்கு தைரியம் வரும் அப்படிக் கூப்பிட? இருந்தாலும் யாராவது அப்படிக் கூப்பிட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடந்து திரிந்தார் ராமன் நாயர். சைனபாவின் கடைமுன் இருந்த பலகையில் இப்படி ஒரு பெயரைப் பார்த்ததும் ராமன் நாயருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"யானைவாரி ராமன் நாயர்... 6 அணா."

என்ன செய்வது? மக்களின் போக்கு இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகிவிட்டதே! இப்படி எழுதிய சைனபாவை என்ன செய்வது?

கையில் 6 அணா இல்லை. இந்த லட்சணத்தில் அவளை எப்படிக் கண்டிப்பது? மவுனமாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது ராமன் நாயருக்கு. சிறிது நேரத்தில் ஊர் ஆட்கள் நிறைய பேர் வந்தார்கள். வெள்ளைக்கார அரசாங்கத்தின் இரண்டு போலீஸ்காரர்கள் வேறு. "யானைவாரி ராமன் நாயர்" என்று எழுதியிருப்பதைப் படித்ததோடு நிற்காமல், அதற்குப் பிறகு அவரை அந்தப் பெயரிலேயே கூப்பிடவும் ஆரம்பித்தார்கள். "யானைவாரி" என்ற பெயர் தனக்கு எப்படி வந்தது என்ற வரலாற்று உண்மையை ஒருநாள் இந்த சரித்திர எழுத்தாளனிடம் ராமன் நாயரே கூறியதால் இது தெரியவந்தது.

"யானைத் திருடன் ராமன் நாயர்னு கூப்பிடுறதுதான் எனக்குப் பிடிக்குது.'' ராமன்நாயர் ஆசையுடன் சொன்னார்.

அவர் ஆசைப்படுவது சரிதான். ஆனால் அவரை யாரும் அப்படி அழைக்கவில்லை. அரசாங்கத்தின் போலீஸ் புத்தகங்களிலும் ஜெயில் புத்தகங்களிலும் "யானைவாரி ராமன் நாயர்" என்ற பெயரே எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ஏதோ கௌரவப்பட்டம் கிடைத்த மாதிரியான சம்பவம் அது! ஐம்பது ரூபாய் ஒப்பந்தத்தில் ஒரு யானையைக் கடத்திக்கொண்டு போகக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த மகா சம்பவத்தைக் கூறுவதற்கு முன்பு தோமாவுக்கு "தங்கச் சிலுவை" என்ற அடைமொழி எப்படி வந்தது என்பதை இந்த சரித்திர எழுத்தாளன் இப்போது விவரிக்கப் போகிறான்.

3

ருநாள் தோமா காதில் ரகசியமாகக் கூறினார்:

"அடே யானைவாரி, தனித்தனியா இன்னைக்கு ராத்திரி எல்லாரும் பெரிய பள்ளி மைதானத்துக்கு வந்திடணும்.''

அவ்வளவுதான். எல்லாரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர். இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். தனித்தனிப் பாதைகள் மூலம்

ஒவ்வொருவரும் வந்து பெரிய பள்ளி மைதானத்தில் ஒன்று சேர்ந்தனர். பதினோரு மைல் தூரத்தில் கிறிஸ்துவர்களுக்குச் சொந்தமான புராதனமான பெரிய பள்ளி மைதானத்தில் யானைவாரி ராமன் நாயர், தோமா, மண்டு முத்தபா, ஒற்றைக் கண்ணன் போக்கர், எட்டுக்காலி மம்மூஞ்ஞூ ஆகிய ஊர் பெரிய மனிதர்கள் ஒன்று கூடினர். அன்று அங்கு திருவிழா. பெரிய அளவில் மக்கள் கூட்டமும் கொண்டாட்டமும் அங்கு இருந்தது. வியாபாரம், தொட்டிலாட்டம், கயிறுமேல் நடத்தல், பட்டாசு போடுதல், மதப்பிரச்சாரம் எல்லாமே படுஜரூராக அங்கு நடந்து கொண்டிருந்தன. மூன்று சீட்டு விளையாட்டு, பிக்பாக்கெட் அடிப்பது, திருட்டு, வழிப்பறி போன்ற கலைகள் சர்வசாதாரணமாக அரங்கேறக்கூடிய நாள் அது.

அந்தப் பள்ளியில் பிரசித்தி பெற்ற தங்கச் சிலுவையை அன்று வெளியே கொண்டு வருவார்கள். கலப்படமே இல்லாத சுத்ததங்கத்தால் செய்யப்பட்ட சிலுவை அது. இந்த மாதிரியான தங்கச் சிலுவைகள் பூமியிலுள்ள புகழ் பெற்ற பல ஆயிரம் பள்ளிகளில் இருக்கின்றன. இந்தப் பெரிய பள்ளியில் மிகவும் பாதுகாப்பாக வைத்து இந்தத் தங்கச் சிலுவையைக் காப்பாற்றுகிறார்கள். பெட்டிக்குள் பெட்டி, பெட்டிக்குள் பெட்டி. எல்லாம் ஒரு அறைக்குள். தங்கச் சிலுவை இருக்கும் அறைக்குப் பக்கத்திலேயே பள்ளி ஃபாதரின் வசிப்பிடம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel