Lekha Books

A+ A A-

யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 7

yanai-vaarium-thanga-siluvaium

இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் பிஷப்பை அழைத்தார். ஃபாதரை அழைத்தார். அலுவலர்களை அழைத்தார். ஊழியர்களை அழைத்தார். தங்கச் சிலுவையைத் திரும்பத் தந்தார். எல்லா விஷயங்களையும் சொன்னார். வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் பளுங்கன் கொச்சு குஞ்ஞூவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். அவரின் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தங்கச் சிலுவைக்காகப் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்த மனிதர்களுக்கு ஆளுக்கு ஐந்து ரூபாயும், வேஷ்டியும் துண்டும் கொடுக்க வேண்டும்.

அவர் கூறியபடியே அவர்கள் செய்தார்கள். பளுங்கனின் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். பளுங்கனுக்கு ஒரு நல்ல வேலையும் பார்த்துக் கொடுத்தார்கள். கொடுமைகள் அனுபவித்த ஆட்களுக்கு தலா ஐந்து ரூபாயும் வேஷ்டியும் துண்டும் தரப்பட்டன. இந்த வகையில் எல்லா விஷயங்களும் நல்ல முறையில் மகிழ்ச்சியான விதத்தில் நடந்து முடிந்தன. தோமாவுக்கு ஒன்றரை மாத சிறைத் தண்டனை மட்டும் அளிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை முடிந்து ஊர் திரும்பிய தோமாவுக்கு ஏற்கெனவே நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்திருந்த ஊர் மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். அதோடு நிற்காமல் ஒரு பண முடிப்பை வேறு பரிசாகக் கொடுத்தார்கள். நோட்டுமாலையும் போடப்பட்டது. ஊர் பெரிய மனிதர்களான சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த கொச்சு நாராயணன் நம்பூதிரிப்பாடு, அவரின் தம்பி சங்கரன் நம்பூதிரிப்பாடு, சந்தனத்தரை இல்லத்தைச் சேர்ந்த வாசு கைமள், கரியில் பத்ரோஸ் மாப்பிள்ளை, முட்டைக் கண்ணன் நந்துரு, குன்னேத்தாழத்து குட்டியாலி முதலாளி ஆகியோர் தாராளமாக நன்கொடை கொடுத்தார்கள் என்ற உண்மையை இந்த சரித்திர எழுத்தாளன் வெளிப்படுத்துவதில் மனப்பூர்வமான சந்தோஷமுண்டு. தோமா அன்று ஒரு குலை வாழைப்பழமும் இரண்டு

ராத்தல் சர்க்கரையும் வாங்கி பாருக்குட்டிக்கும் கொச்சு நீலாண்டனுக்கும் கொடுத்தார். தோமா இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஊரில் முக்கியமான ஒரு நபராகிவிட்டார். ஊரில் அவர் ஒரு வீரர் என்று மக்களால் மதிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் யானைவாரி ராமன் நாயர் தோமாவைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டார். தோமாவை ஒரு பெண் காதலிக்கிறாள். கொச்சு திரேசா என்பது அவள் பெயர். அவள் வயது பதினெட்டு. அழகி. பளுங்கன் கொச்சு குஞ்ஞூவின் கடைசி மகள்- இதுதான் ராமன் நாயர் கேள்விப்பட்ட விஷயம்.

இந்த விஷயம் யானைவாரி ராமன் நாயருக்கு எப்படித் தெரிந்தது தெரியுமா? ஒருநாள் சைனபாவின் கடை முன் இருந்த பலகையில் "தங்கச் சிலுவை தோமா- 3 ரூபாய் 6 அணா" என்று எழுதப்பட்டிருந்ததை யானைவாரி பார்த்தார். அதன் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. தோமாவின் கையில் பணம் இருக்கிறது. பிறகு எதற்குக் கடன் வாங்க வேண்டும்? தோமாவைப் பார்த்து விசாரிக்க வழியே இல்லை. அவரை நேரில் பார்த்துப் பல  நாட்களாகிவிட்டன. யானைவாரி கேட்டார்.

"தோமா காசு எதுவும் தர வேண்டியதில்லையே!''

சைனபா சொன்னாள்:

"நாலஞ்சு நாளா தங்கச் சிலுவையைப் பார்க்க கொச்சு திரேசா...''

"கொச்சு திரேசாவா? யார் அது?''

ஒற்றைக் கண்ணன் போக்கர் சொன்னான்:

"அது நம்ம பளுங்கனோட கடைசி மகள். இவ்வளவு தூரம் நடந்து களைச்சுப்போயி வந்தா. தங்கச் சிலுவை தோமா கணக்குல புட்டும் பழமும் கருப்பட்டி காப்பியும் அவளுக்குக் கொடுத்திருக்கு.''

அக்கிரமம்! அக்கிரமம்! நேரிலேயே ஒரு காட்சியைப் பார்த்து விட்டார் யானைவாரி. கொச்சு திரேசாவும் தங்கச் சிலுவை தோமாவும் ஆற்றங்கரையோரம் அமர்ந்து தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த அநீதிக்கெதிராக என்ன செய்வது?

யானைவாரி நடந்து போய் பந்தாவாகக் கேட்டார்:

"அடே தங்கச் சிலுவை!''

"என்ன?''

"ஒரு ரெண்டுரூபா இங்க எடு.''

தங்கச் சிலுவை தோமா ஒரு வார்த்தைகூட எதற்கு என்று கேட்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். யானைவாரி ராமன் நாயர் கொச்சு திரேசாவை எரிச்சலுடன் ஒருமுறை வெறித்துப் பார்த்தார். தொடர்ந்து பழமும் சர்க்கரையும் வாங்கிக் கொண்டு போய் பாருக்குட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே கொச்சு நீலாண்டனுக்குக் கொடுத்தார். பெண்களின் பிரதிநிதி ஆயிற்றே பாருக்குட்டி!

பாருக்குட்டி ஆர்வத்துடன் தும்பிக்கையை நீட்டியபோது, "போடி கழுதை'' என்று வெறுப்புடன் கத்தினார் ராமன் நாயர். இது நடந்து சிறிது நாட்களில் யானைவாரிக்கு, யானையைக் கடத்திப் போகும் வேலை வாய்ப்பு கிடைத்தது. பாருக்குட்டிக்கு அவர் செய்த துரோகத்திற்கு இயற்கை தந்த பரிசு அது.

ஊரில் எல்லா கெட்ட விஷயங்களும் தெரிந்த ஆள் சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரிப்பாடு! அவருக்குத் தெரியாத கெட்ட சமாசாரங்கள் உலகத்தில் மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும். அவர் சொன்னார்:

"யானைவாரி யானையைக் கடத்தவே இல்லை. சுத்த பொய் அது.''

யானைவாரியின் பதில் கூற்று இது:

"நீங்கள் சொல்லித்தானே நாங்கள் யானையையே கடத்தினோம். இல்லாட்டி தங்கச் சிலுவைக்கிட்ட கேளுங்க. சொல்லப்போனால் இந்த விஷயத்தில் நீங்கள் 40 ரூபா எங்களுக்குத் தர வேண்டியதிருக்கு.''

இந்த வழக்கு இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சரித்திர எழுத்தாளனுக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் இதுதான். அதைக் கூறுவதற்கு முன்பு இன்னொரு விஷயம். போலீஸ்காரனாயிருந்த பளுங்கன் கொச்சு குஞ்ஞூ என்ற- பள்ளியில் மணியடிக்கும் மனிதனின் மணியடி சத்தம்... பள்ளியில் மணியடிக்கும் சத்தத்தைக் கேட்கிறபோது ஆட்கள் நினைப்பார்கள்: தங்கச் சிலுவை... தங்கச் சிலுவை தோமா... பள்ளிக்கு எதற்குத் தங்கச் சிலுவை?

யானைவாரி ராமன் நாயருக்கும், தங்கச் சிலுவை தோமாவுக்கும் கிடைத்திருப்பது மிகமிக அபூர்வமாகக் கிடைக்கக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பு.

யானையைக் கடத்துவது!

அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அந்தக் கதையைத்தான் இப்போது நான் கூறப்போகிறேன், கவனமாகக் கேளுங்கள்.

4

யானைக் கடத்தல் ஒரு மகத்தான கலை ஆகிவிட்டது! இந்த நம்பிக்கையை மனதில் ஆழமாக வைத்துக்கொண்டு வாழ்பவர்கள் தான் அந்த ஊரில் முக்கிய அறிவாளிகள். யானையை எப்படிக் கடத்துவது? தங்கம், பணம், பெண் போன்றவற்றைக் கடத்துவது போல் இதைச் செய்ய முடியாது. சரித்திர மாணவர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக யானைக் கடத்தல் என்ற கலையைப் பற்றி இங்கு விவரமாகச் சொல்கிறேன்.

யானைவாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா சொல்வது என்ன தெரியுமா? யானைக் கடத்தல் பெரிய ஒரு கலை ஒன்றும் கிடையாது. அதற்குத் தேவை- துணிச்சல்! அது இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு உண்டாயிருக்க வேண்டும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel