Lekha Books

A+ A A-

யானைவாரியும் தங்கச் சிலுவையும் - Page 2

yanai-vaarium-thanga-siluvaium

"விஷயம் தெரியுமா? நம்ம கொச்சு நீலாண்டன் யானைப் பாகனைக் கொன்னுட்டு போலீஸ்காரங்களைக் குத்த ஓடிக்கிட்டிருக்கு.''

போலீஸ்காரர்கள் என்றாலே ஊர் மக்களுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. போலீஸ்காரர்களையும் அரசாங்கத்தையும் மக்கள் விரோத சக்திகள் என்ற பெயரில்தான் ஊர் மக்கள் அழைத்தனர். போலீஸ்காரரைக் கொச்சு நீலாண்டன் ஓட ஓட விரட்டுவதிலோ, குத்திக் கொலை செய்வதிலோ நிச்சயம் ஊர் மக்கள் மத்தியில் எதிர்ப்பே கிடையாது. கொச்சு நீலாண்டனின் விருப்பமும் அதுதானே! மொத்தம் ஊரில் இருப்பதே இரண்டு போலீஸ்காரர்கள்தான். அவர்களைக் கொலை செய்ய வேண்டியது மக்களே விருப்பப்படும் ஒரு செயல்தான். கொச்சு நீலாண்டன் விருப்பப்படி செய்யட்டும்! ராமன் நாயரும் தோமாவும் அசையவில்லை.

எட்டுக்காலி மம்மூஞ்ஞூ கேட்டான்:

"நாம போக வேண்டாமா?''

தோமாவும் ராமன் நாயரும் ஒரே குரலில் ஒரே சமயத்தில் கூறினார்கள்:

"ஊஹும்.''

காதைக் கிழிக்கும் ஒலி. ஊரில் உள்ள நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குரைத்தன. மக்களின் கூக்குரல்கள். குழப்பமான பல ஒலிகள். கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. அப்போது ஒரு முக்கிய செய்தியுடன் மூச்சிரைக்க ஓடிவந்தான் மண்டு முத்தபா.

"போலீஸ்காரங்க சொல்றாங்க. நம்ம கொச்சு நீலாண்டனை வெடி வச்சுக் கொல்லப் போறாங்களாம்.''

இதைக்கேட்ட பிறகு ராமன் நாயரும் தோமாவும் உட்கார்ந்திருப்பார்களா? அவர்கள் சும்மா அசையாமல் உட்கார்ந்திருப்பதற்கு கல்லோ மரமோ அல்லவே! இரண்டு பேரும் எழுந்தார்கள்.

நான்கு பேரும் ஓடினார்கள்.

தொடர்ந்து மக்கள்.

ராமன் நாயரும் தோமாவும் தலைமை தாங்கி நடக்க, அவர்களைப் பின்தொடர்ந்தனர் மக்கள். போலீஸ்காரர்களுக்கு எதிராகவும், கொச்சு நீலாண்டனுக்கு ஆதரவாகவும் கோஷங்களை வேறு எழுப்பினர்.

"போலீஸாரின் சமூக விரோதப் போக்கு ஒழிக!''

"கொச்சு நீலாண்டன் ஜிந்தாபாத்.''

மக்கள் ஒரே கூட்டமாகக் கோஷமிட்டவாறு முன்னேறினர். அனைவரும் போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி வளைத்தனர். போர் வெறிபிடித்து அலையும் அரசாங்கத்தின் சேவகர்களான போலீஸ்காரர்கள் மக்கள் கூட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே

நடுங்கிவிட்டனர். தோமாவும் ராமன் நாயரும் கோரிக்கைகள் வைத்தனர். கொச்சு நீலாண்டனை வெடி வைத்துக் கொல்லப்போவதாக எடுத்த முடிவை உடனடியாக போலீஸ் நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும். அதோடு நிற்காமல் மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டும்.

"இல்லாவிட்டால்...?''

ராமன் நாயரும் தோமாவும் சொன்னார்கள்:

"போலீஸ்காரர்களின் மூக்கை அறுத்து உப்புல ஊறப்போட்டுருவோம்.''

அவ்வளவுதான். மக்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து கீழே இறங்கி வருவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விட்டது போலீஸ்காரர்களுக்கு. கொச்சு நீலாண்டனை வெடி வைத்துக் கொல்வதாக எடுத்த தீர்மானத்தை வாபஸ் பெற்றதோடு, மக்களிடம் தாங்கள் அப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கவும் செய்தனர்.

இந்த விதத்தில் அந்த கொச்சு நீலாண்டன் போராட்டம் வெற்றி பெற்றது. பழம், வெல்ல உருண்டை ஆகியவற்றைக் கொடுத்து பாருக்குட்டியுடன், கொச்சு நீலாண்டனையும் நதியில் இறக்கி குளிப்பாட்டி அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தார்கள்.

அன்று சாத்தங்கேரி மனையின் தலைவரான கொச்சு நாராயணன் நம்பூதிரிப்பாடு ஊர் மக்களுக்கு ஒரு கஞ்சி விருந்து அளித்தார். அந்த விதத்தில் ஊருக்கு மீண்டும் சுகமும் அமைதியான சூழ்நிலையும் உண்டானது.

ஆனால், ராமன் நாயர், தோமா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ, மண்டு முத்தபா ஆகியோருக்கு எப்படி சுகம் கிடைக்கும்? தொழில் கைவசம் வைத்திருக்கிறார்கள். செய்வதற்கு மனதும் இருக்கிறது. இருந்தாலும்

வாய்ப்பு கிடைக்க வேண்டுமே! தொழில் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் தருகிற உதவிப் பணமும் அவர்களுக்குக் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழில் வாய்ப்பு அவர்களைத் தேடிவந்தது. சிறு வாய்ப்பு. சின்னஞ்சிறு வாய்ப்பு.

அந்தக் காலத்தில் மூன்று சீட்டு விளையாட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கரின் மகள் சைனபாவுக்கு, சிறிய அளவில் வீட்டிலிருந்து செய்வது மாதிரி ஒரு வியாபாரம் இருந்தது. அப்பம், புட்டு, வேகவைத்த கடலை, முட்டை, கப்பைக் கிழங்கு, இடியாப்பம், நேந்திரம் பழம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விற்பதே அவள் வேலை. காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரைதான் வியாபாரம். மேலே கூறிய தின்பண்டங்களை கடனுக்கு வாங்கித் தின்னுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நபர்கள் ராமன் நாயர், தொரப்பன் அவரான், தோமா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ, டிரைவர் பப்புண்ணி, மண்டு முத்தபா ஆகியோர். இது ஒரு புறமிருக்க இன்னொரு விஷயம்- அக்காலத்தில் ஊரிலேயே பேரழகியாக இருந்த சைனபாவிற்கு படுமுட்டாளாக இருந்த முத்தபாவிடம் காதல் என்று சரித்திரம் சொல்கிறது. இது குறித்துத் தகுந்த பல ஆதாரங்களுடன் ராமன் நாயராலும் தோமாவாலும் நிரூபிக்க முடியும் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆதாரம் என்று வருகிறபோது முக்கியமாக அவர்கள் பளிச்சென்று எடுத்துக்காட்டுவது ஒரு உதாரணத்தை. அது சைனபா புட்டில் காட்டிய ஒரு ஜகஜ்ஜால கில்லாடித்தனத்தைதான். மண்டு முத்தபாவுக்குக் கொடுத்த புட்டில் அவித்த முட்டை உள்ளே வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டும் இது எப்படி வந்தது?

சரித்திர மாணவர்கள் கட்டாயம் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. நேர்மையான மனநிலை கொண்டவர்களுக்கு மனதில் வேதனை தரக்கூடிய விஷயமல்லவா இது! எல்லாருமே கடனுக்குதான்

சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் புட்டில் அவித்த முட்டை இல்லாமல் போக, மண்டு முத்தபாவின் புட்டில் மட்டும் அது எப்படி வந்தது?

"மோசமான இந்த சமூகவிரோதக் காரியத்திற்கு எதிராக நாம் ஏதாவது செய்தாக வேண்டும்'' என்றார் ராமன் நாயர். ஆனால் தோமா அதற்குச் சம்மதிக்கவில்லை. காரணம்- மற்ற எல்லாரையும் போல் சைனபாவுக்கு ராமன் நாயரும் தோமாவும் கொஞ்சம் பணம் தரவேண்டி இருக்கிறது. இந்தச் செய்தியை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வாசலில் இருந்த பலகையொன்றில் எழுதி வைத்திருக்கிறாள் சைனபா. சுண்ணாம்பால் பெயரும் கரியால் காசும். நமது இந்த சரித்திரம் நடக்கிற காலத்தில் கீழே கூறப்பட்டிருக்கின்ற விதத்தில் இருந்தது ஊர்க்காரர்களின் கடன் பட்டியல்-

தொரப்பன்- 0 அணா

டய்வர்- 0 அணா

எட்டுக்காலி- 7 அணா

தோமா- 9 அணா

ராமன் நாயர்- 14 அணா

முத்தபா- 2 அணா

இந்தக் கணக்குகளைப் பார்க்கிறபோதே உங்களுக்கு ஒன்று புரியும். ஆனால் அதற்குப் பின்னால் மறைந்திருக்கிற ஒரு அநீதியைப் பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மண்டு முத்தபா குறைந்தபட்சம் நாற்பது அணாவாவது சைனபாவிற்குக் கடனாகத் தர வேண்டியதிருக்கும். இருந்தாலும் அவள் எழுதி வைத்திருக்கிறாள்

மண்டு முத்தபா வெறும் 2 அணாதான் தரவேண்டி இருக்கிறதென்று.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel