
ஆனால், எனக்கு அந்தக் கதைகளின்மீது அதிக ஆர்வம் உண்டானதற்குக் காரணமே அவற்றில் இடம் பெற்ற பெண்களின் மாறுபட்ட தன்மைகள்தான். எனக்கும் நன்கு தெரிந்திருந்த பெண்களிடம் செல்லப்பன் ஆசாரிக்கு உண்டான ரகசிய அனுபவங்கள் என்ற முறையில், அந்தக் கதைகளில் என்னால் உடனடியாக இரண்டறக் கலக்க முடிந்தது.
எங்களுடைய அந்த ஆர்வத்தைத் தூண்டக் கூடிய சாயங்கால வேலைகளுக்குள் தகரயும் வந்து நுழைந்தான். அவனுக்குத் தேவையாக இருந்தது செல்லப்பன் ஆசாரியிடமிருந்த கடுக்கன்தான்.
கடுக்கனைத் தருவதாக செல்லப்பன் ஆசாரி சம்மதித்தான்.
"எப்போ தருவீங்க?''
"இப்போ... இந்த சொல்லிக் கொண்டு இருக்கும் விஷயத்தைக் கூறி முடித்தவுடன்...'' என்று கூறிக் கொண்டே செல்லப்பன் ஆசாரி மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த கதைக்குள் மூழ்கி விடுவான்.
அது ஒரு நல்ல கதையாக இருந்தது. நான் அதில் முழுமையாக மூழ்கிப்போய் விட்டேன். நான் தகரயை மறந்துவிட்டேன். என்னைப் போலவே தகரயும் கதையில் இரண்டறக் கரைந்து போய்விட்டான் என்பதையே கதை முடிந்து பார்த்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.
அவனுடைய பிளந்த வாயில் இருந்து எச்சில் வெளியே வழிந்து மணல் பரப்பில் விழுந்து கொண்டிருந்தது. அசாதாரணமான ஒரு பிரகாசம் அவனுடைய பெருமூச்சுகளுக்கு அடியில் தெரிவதை நாங்கள் பார்த்தோம்.
நானும் செல்லப்பன் ஆசாரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தது. எங்களுடைய சிரிப்பைப் பார்த்து எதுவும் புரியாமல் இருந்த தகரயும் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டான்.
"நாங்க என்ன சொன்னோம் என்று தெரியுமா?''
"எனக்குத் தெரியும்.'' அதைக் கூறும்போது தகரவிற்கு அளவுக்கும் அதிகமான வெட்கம் உண்டானது.
"என்ன தெரியும்?'' செல்லப்பன் ஆசாரி கேட்டான். ஒரு புதிய இரை கிடைத்த சந்தோஷம் அவனுக்கு உண்டானது.
தகர அந்தக் கேள்விக்கு பதில் கூறவில்லை. எனினும், ஆண்- பெண் உறவைப் பற்றி அவனுக்கு சில கருத்துகள் இருக்கின்றன என்ற சந்தேகம் அப்போது எங்களுக்கு உண்டானது. தெரியும் என்றோ, தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ... அப்படி ஏதோ ஒரு பருவம்.
எங்களுக்குத் தெரிந்திருந்த ஆங்கிலத்தில் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டோம். இந்த தகர பெண்ணுடன் சேர்ந்து படுத்திருக்கிறானா என்பதை விசாரித்துப் பார்க்க வேண்டும். விசாரித்துப் பார்த்தோம். தகர பெண்ணுடன் சேர்ந்து படுக்கவில்லை. அந்த விஷயத்தை அவன் உண்மையாகவே ஒப்புக்கொண்டு விட்டான். படுக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இல்லாமலிருந்தது.
பொழுது சாயும் வரை தகர எங்களையே சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்தான். கிளம்பும் வேளையில் செல்லப்பன் ஆசாரி அவனை, ஒரு சிஷ்யனாக பட்டியலில் ஏற்றுக் கொண்டிருந்தான்.
தகரயை அப்படி ஒரு சிஷ்யனாக செல்லப்பன் ஆசாரி ஏற்றுக் கொண்ட விஷயத்தை ஆரம்பத்தில் நான் சிறிதும் விரும்பவில்லை. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. அது ஒரு கோணலான அறிவு என்பதை ஆரம்பத்திலேயே நான் தெரிந்து கொண்டேன். அதையும் தாண்டி மெல்லிய பொறாமையும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் ஒரு உலகத்திற்குள் இன்னொரு மனிதனும் நுழையப் போகிறானா என்ற பயத்தில் உண்டான பொறாமை.
ஆனால், அது அப்படித்தான் நடந்தது. காலப்போக்கில் தகர எல்லா நாட்களிலும் எங்களுடன் பாலத்திற்குக் கீழேயோ வெறுமனே கிடந்த கோவில் நிலத்திலிருந்த மூங்கில் காட்டிலோ வேறு ஏதாவது இடத்திலோ பேசிக் கொண்டிருப்பது என்பது வழக்கமான செயலாக ஆனது. ஒவ்வொரு நாளும் என்னுடன் அவனுடைய அறிவின் எல்லைகளையும் விசாலப்படுத்தக் கூடிய பெரும் பொறுப்பை செல்லப்பன் ஆசாரி சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டான்.
அதைப் பார்த்தபோது எனக்கு கோபமோ வெறுப்போ உண்டாயின. முட்டாளான அந்த தடிமனான உருவம் அந்த புதிய உலகத்திற்குள் மிகவும் சீக்கிரமாகவே கவர்ந்து இழுக்கப்பட்டதைப் பார்த்ததும், மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. அது ஏதாவது ஆபத்தை வரவழைக்கும் என்று எனக்கு ஆரம்பத்திலேயே பயத்தை உண்டாக்கியது.
ஒருநாள் நான் அதை செல்லப்பன் ஆசாரியிடம் குறிப்பாக உணர்த்தவும் செய்தேன். அப்போது அவனுடைய எதிர்வினை ஒரு பெரிய சிரிப்பாக இருந்தது. கிண்டல் கலந்த ஒரு புன்னகை. தொடர்ந்து அவன் சொன்னான்: "நீ சரியான ஆள்... அவனைவிட பெரிய மடையன்!''
தகர எதுவும் செய்ய மாட்டான் என்று செல்லப்பன் ஆசாரி கூறினான். "தகர என்ன செய்வான்? அவன் இப்படி வாயைப் பிளந்து கொண்டு நடந்து திரிவான். அவனுடைய கையிடுக்கில் வளர்ந்து காட்சியளிக்கும் அந்த கறுத்த உரோமக் கூட்டம் இருக்கிறதே, அவை வெறும் வைக்கோல்கள். அவனுடைய சதைகள் இருக்கின்றனவே, அவற்றால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. பலகையைப்போல இறந்து போனவை அவை.''
"பிறகு என்னதான் உன் திட்டம்?'' நான் கோபத்துடன் கேட்டேன்.
"எனக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. அவன் தினமும் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டு எனக்குப் பின்னால் வந்தால், நான் பிறகு என்ன செய்வது? அடிச்சு விரட்டிவிட வேண்டுமா? அப்படியெல்லாம் என்னால் நடக்க முடியாது.''
"கல் பதித்த கடுக்கனைத் தர மாட்டேன்னு உறுதியாகச் சொல்லிவிட்டால் போதும்.''
"இப்போ அவனுக்குத் தேவை கல் பதித்த கடுக்கன் அல்ல.'' செல்லப்பன் ஆசாரி சொன்னான்:
"டேய், முட்டாள். இப்போதுதான் அவனுக்கு தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் உண்டாக ஆரம்பித்திருக்கிறது. சிலருக்கு அப்படித்தான். தகரயைப்போல முப்பது முப்பத்தைந்து வயதுகள் ஆனாலும், மரத்தைப்போல வளர்ந்திருப்பாங்க. அவ்வளவுதான். சில அப்படியே முட்டாளாகவே நின்றுவிடும். சிலவற்றிற்கு தாமதமாக விஷம் உள்ளே நுழையும்.''
"இந்த தகரவிற்குள் விஷத்தை ஏற்றி உனக்கு என்ன கிடைக்கப் போகுது?''
"எனக்கு எதுவும் கிடைக்கப் போறது இல்லை. இது ஒரு சுவாரசியமான விஷயமாக இல்லையாடா?''
ஆனால், வெறும் ஒரு சுவாரசியத்திற்காக செல்லப்பன் ஆசாரி தகரயைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற விஷயமே பின்னர்தான் எனக்குப் புரிய ஆரம்பித்தது. சோதனை செய்வதற்கு நல்ல ஒரு சீமைப் பன்றி கிடைத்திருக்கிறது என்பது புரிந்தவுடன் அவனுக்கு தகரமீது ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டானது.
செல்லப்பன் ஆசாரி கால்பந்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதற்கு மத்தியில் ஒரு சாயங்கால நேரத்தில் தகர என்னிடம் மெதுவான குரலில் கேட்டான்: "குழந்தை, நீ ஏதாவது பெண்ணுடன் படுத்திருக்கிறாயா?''
அவன் அந்தக் கேள்வியை மிகுந்த வெட்கத்துடன் கேட்டான். சிறு சிறு உரோமங்கள் வளர்ந்து நின்றிருந்த கன்னத்தில் ஒரு வளையத்தைப் போல சிவப்பு நிறம் பரவுவதை நான் கவனித்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook