Lekha Books

A+ A A-

கண்ணால் பார்த்த சாட்சி - Page 4

kannaal-partha-satchi

மாமாவின் கையில் பணம் இருக்காது என்றும் இவ்வளவு காலம் ஆன பிறகம் மாமா ஒரு ரூபாய் கூட சம்பாதித்ததில்லை என்றும் சிறுவன் கேள்விப்பட்டிருக்கிறான். எனினும் மாமா சொன்னார்: ‘‘நான் மனைவி இல்லாத ஒரு அதிர்ஷ்டசாலி!’’

சிறுவன் தன்னுடைய வீட்டின் வாசலில் ஏறி, கதவைத் தட்டினான். உரக்க தட்டினால் தன் தாய் கண் விழித்து வந்துவிடுவாள் என்பதும், தான் வெளியே சென்றதற்காக தன்மீது கோபப்படுவாள் என்றும் அவனுக்குத் தெரியும். அதனால் அவன் விரல்களால் செண்டை மீது மெதுவாகத் தட்டுவதைப் போல சிறிது நேரம் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. சமையல்காரன் சமையலறையில் நீர்க்குடம் வைக்கப்பட்டிருக்கும் மூலையில் உட்கார்ந்து கொண்டு ‘மாத்ருபூமி’ வாசித்துக் கொண்டிருந்தால், இந்த சத்தத்தை அவன் கேட்டிருப்பான். சமையல்காரன் சமையலறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். சிறுவன் மீண்டும் வாசலில் இறங்கி, வீட்டைச் சுற்றி, சமையலறையின் கதவுக்கு அருகில் சென்றான். அந்தக் கதவை அவன் பலமாகத் தட்டினான். சமையல்காரன் கதவைத் திறப்பதற்க மத்தியில் யாரையோ பலதடவை திட்டிக் கொண்டிருந்தான். கதவைத் திறந்தபோது சமையல்காரன் சொன்னான்:

‘‘நம்முடைய பால்காரன் என்று நான் நினைத்தேன். அவன் நேற்று பால் புட்டியுடன் வெளியேறியவன்தான். இதுவரை கடைக்குப் போகவே இல்லை.’’

சிறுவன் திடீரென்று அதிர்ச்சி அடைந்தான். காரணம் தன்னுடைய வலது பக்கத்தில் வெளியே இருக்கும் அடுப்புக் கரி வைத்திருக்கும் அறைக்குள் யாரோ போவதைப் போல அவனுக்குத் தோன்றியது. ஒரு மூச்சு விடும் சத்தம். அவன் வேகமாக சமையலறைக்குள் போய் நின்று கொண்டான். சமையல்காரன் பால்காரனைப் பற்றி கூறிக் கொண்டிருந்தான்.

‘‘இரண்டு மூன்று திசைகளில் இருந்து கிடைத்த பணம் கையில் இருந்தது. முதல் தேதி அல்லவா? அவன் அந்தப் பணத்துடன்  வண்டி ஏறி இருப்பான். நம்பவே முடியாத ஆள் என்பது அவனுடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும்.’’

சிறுவன் அதையெல்லாம் கேட்பதற்காக நின்று கொண்டிருக்காமல், தன் தாய் படுத்திருந்த அறைக்குள் சென்றான். அங்கு நீலக் கோடுகள் போட்ட ஒரு விரிப்பில் அவனுடைய தாய் சரிந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் தன் தாயை எழுப்பாமல் மெதுவாக அந்தக் கட்டிலில் போய் படுத்தான். அவனுடைய நெஞ்சு ஒரு கடிகாரத்தைப் போல துடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று இந்த அளவிற்கு பயப்படக் கூடிய அளவு என்ன நடந்தது என்று அவனுக்கே புரியவில்லை. அடுப்புக்கரி இருந்த அறையில் ஒரு ஆள் நின்றிருந்தால்தான் என்ன? பிச்சைக்காரர்கள் யாராவது ஓய்வெடுப்பதற்காக வந்து நின்றிருந்தால்...? அந்த கறுத்த கடித்த நிழல் தங்கப்பல் வைத்திருக்கும் டுக்காராமாகவே இருந்தால் கூட, தான் எதற்கு பயப்படவேண்டும்? தனக்குத் தெரிந்தவர்கள் யாருக்கும் ‘கண்ணால் பார்த்த காட்சி’ என்ற பெயரில்லை. சமையல்காரனைக் கொன்றால், ஒரேயொரு நோட்டு கூட டுக்காராமிற்குக் கிடைக்கப் போவதில்லை. தனக்குக் கிடைக்கக் கூடிய பதினைந்து ரூபாய்களையும் அப்படியே தன் தாய்க்கு சமையல்காரன் அனுப்பிவிடுவான். பிறகு... அவனுடைய காக்கி சட்டைக்காகவே சொல்வார்கள்?

சிறுவன் தன் தாயின் ஒரு தளர்ந்த கையை எடுத்து தன்னுடைய நெஞ்சின்மீது வைத்துக் கொண்டான். அதற்குப் பிறகும் அவனுடைய தாய் கண் விழிக்கவில்லை. தன் தாயின் கண்களின் இமைகள் மிகவும் நீளமாக இருப்பதை அவன் பார்த்தான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தன் தாயும் சமையல்காரனும் தொட்டிலில் படுத்திருக்கும் தங்கையும் கண்விழித்து எழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மதிய நேரம், மூடிய அந்த வீட்டில் கேட்டுக் கொண்டிருந்த சிறிய சத்தங்கள் ஒவ்வொன்றும் அவனை பயமுறுத்தின. சாளரத்தின் கதவின் முனகல், சுவர் கடிகாரத்தின் துடிப்பு, குளியலறையில் இறுக்கமாக இல்லாத குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் தண்ணீரின் சத்தம்...

சாளரத்தின் கதவில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையை யாரோ சற்று உயர்த்தினார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அறையில் அதிகமான வெளிச்சம் வந்து சேர்ந்திருந்தது. அவன் கட்டிலின் மீது ஏறி நின்றான். அவன் நினைத்தது சரிதான். சாளரத்தின் திரைச்சிலை மீது ஏறி நின்றான். அவன் நினைத்தது சரிதான். சாளரத்தின் திரைச்சீலை மீது ஒரு கறுத்த கை இருப்பதை அவன் பார்த்தான்.

‘‘யார் அது?’’

அவன் மெதுவாகக் கேட்டான். அந்தக் கை வெளியே நீண்டது. சிறுவன் பால்காரனின் பதக்கத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு எந்தவிதமான அசைவுமில்லாமல் அமர்ந்தான். யாரோ தன்னையோ தன் தாயையோ தொந்தரவு செய்ய நினைக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். இல்லாவிட்டால் சாளரத்தின் கதவிற்கு அருகில் ஒரு ஆள் எதற்கு நிற்க வேண்டும்? சாளரத்தின் கதவின் திரைச்சீலைகளை எதற்காகத் தூக்க முயற்சிக்க வேண்டும்? அவனுடைய உள்ளங்கைககள் வியர்த்தன. அவன் பால்காரனின் பதக்கத்தை மீண்டும் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து ஓசை உண்டாக்காமல் நடந்து சமையலறையை அடைந்தபோது, சமையல்காரன் அங்கு இல்லை. வெளியே செல்லும் கதவு திறந்து கிடந்தது. அதனால் சமையல்காரன் வெளியே கழிவறைக்குச் சென்றிருக்க  வண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. எது எப்படி இருந்தாலும் சமையல்காரன் திருப்பி வரும் வரை வாசலிலேயே காவல் காத்துக் கொண்டிருப்பது சிறந்த ஒரு விஷயமாக இருக்குமென்று சிறுவனுக்குத் தோன்றியது. கதவின் தாழ்ப்பாள் அவனுக்கு எட்டவில்லை. அதனால் கதவுகளை அடைத்துவிட்டு, அவற்றின் மீது சாய்ந்து கொண்டு அவன் நின்றிருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே நிற்க வேண்டியிருந்தது என்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய கண்கள் வேதனை தருவதைப் போலவும் கால்கள் தளர்வதைப் போலவும் அவன் உணர்ந்தான். கதவைத் தட்டும் சத்தம் கேட்ட போதும், அவன் விலகி நிற்கவில்லை. அப்போது அவன் தரையில் விழுந்துவிட்டான். யாரோ கதவை பலமாக தள்ளித் திறந்து விட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவன் "அய்யோ" என்று உரத்த குரலில் கத்தினான்.

"பாபா, எதற்கு அழறீங்க? என்னைப் பார்த்து பயந்துட்டீங்களா? நான் குழாயைச் சரி பண்ணும் ஆள்!"

சிறுவன் டுக்காராமின் முகத்தையே விரித்த கண்களுடன் பார்த்தான். தன்னைக் கொன்றுவிடுவான் என்றும் தன்னுடைய தலையைச் சுத்தியலால் நசுக்கி மரப்பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடுவான் என்றும் அவனுக்குத் தோன்றியது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel