Lekha Books

A+ A A-

தோழி - Page 3

thozhi

மலர்கள் என்றால் அவளுக்கு உயிர். காளி பல்வேறு இடங்களிலிருந்து அவளுக்கு மலர்களைக் கொண்டு வந்து தருவாள். அப்போது பிரபா தன் மனதிற்குள் நினைத்துக் கொள்வாள். 'நான் காளியின் தங்கச்சியா பிறக்காமப் போயிட்டேனே!’ என்று.

திருவோணத் திருநாளன்றுதான் பிரபா பிறந்தாள். அன்று அவளுக்கு ஒன்பதாவது வயது பிறக்கிறது. ஓணம் பண்டிகைக்கு எடுக்கப்பட்டட ஆடைகளுக்கு மத்தியில் அவளின் தந்தை அவளுக்கு ஒரு ஜரிகை போட்ட முண்டு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த முண்டைத்தான் அன்று பிரபா அணிந்தாள்.

அன்று சாயங்காலம் பிரபாவின் தாய் கைகொட்டிக்களியைப் பார்ப்பதற்காக அடுத்த வீட்டைத் தேடிப்போயிருந்த நேரத்தில் பிரபா வேலைக்காரியின் உதவியுடன் ஒரு பாத்திரத்தில் சாதத்தையும் கூட்டையும் மற்ற உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு காளியின் குடிசையை நோக்கி நடந்தாள்.

"காளி... காளி" என்று அவள் குடிசைக்கு வெளியில் நின்றவாறு அழைத்தாள். தான் மட்டும் தனியாக வந்து ஒருவகை தர்மசங்கடமான நிலையுடன் அவள் அங்கு நின்றிருந்தாள். இடுப்பில் அவிழ்ந்து கொண்டிருந்த முண்டை ஒரு கையால் பிடித்தவாறு அதே நேரத்தில் இன்னொரு கையில் தான் கொண்டு வந்த உணவு பதார்த்தங்கள் கீழே விழுந்து விடாமல் இருக்கும்படி அவள் மிகவும் கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டாள். அந்தக் காட்சியைப் பார்த்த புலையக் கிழவியின் நரைத்த கண்களில் நீர் அரும்பி விட்டது.

காளி இரண்டு மூன்று நாட்களாக பள்ளிக்கூடம் வரவில்லை. அதனால் பிரபா மிகவும் கவலைப்பட்டாள். காளிக்குக் காய்ச்சல் என்ற செய்தி அவளுக்கு வந்தது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அவள் காளியின் குடிசையைத் தேடிப் போனாள். பள்ளிக்கூடத்தைப் பற்றிய பல செய்திகளையும், வேறு பல நகைச்சுவையான விஷயங்களையும் அவளிடம் பேசியவாறு அங்கேயே நீண்ட நேரம் இருந்தாள் பிரபா.

அவள் அங்கு போன விஷயம் எப்படியோ மாதவியம்மாவிற்குத் தெரிய வந்தது. அதற்காக அவள் பிரபாவைப் பார்த்து வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாள்.

பிரபா, "காளியும் என்னைப் போல ஒரு பொண்ணுதானே?" என்று கேட்டாள். அவ்வளவுதான். அதைக் கேட்ட மாதவியம்மாவுக்கு வெறியே வந்து விட்டது. "என்னடி சொன்னே? எலியைப் போல இருந்துக்கிட்டு மலையைப் போல நியாயம் பேசுறியா?" என்று கோபத்துடன் கூறிய அவள் பிரபாவின் இரண்டு கன்னங்களையும் பலமாகக் கிள்ளினாள். "இனிமேல் நீ அந்தக் குடிசைப் பக்கம் போறது தெரிஞ்சதுன்னா, அவ்வளவுதான்... உன்னைச் சாணித் தண்ணியிலதான் குளிக்க வைப்பேன்." என்றாள் பிரபாவைப் பார்த்து கோபத்துடன்.

கோவிந்தமேனனும் அன்று பிரபாவைப் பார்த்து பயங்கரமாகத் திட்டினார். அன்று முழுவதும் பிரபா அழுது கொண்டேயிருந்தாள். நான்கு நாட்கள் கடந்தோடின. காளியின் காய்ச்சல் மேலும் அதிகமாகி விட்டிருக்கிறது என்ற செய்தி அவளுக்கு வந்தது. தன் தோழியின் நிலையை மனதில் நினைத்து, பிரபா தனியே அமர்ந்து வாய்விட்டு அழுதாள்.

சேவல் கூவி முடித்திருந்த நேரம். வானத்தில் நிலவு இப்போதும் இருந்தது. வயலையொட்டி, மரங்களைத் தாண்டி ஒரு சிறுமி மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் காளியின் குடிசையை நோக்கி நடந்தாள்.

காளி கண்களைத் திறந்தபோது, எதிரில் பிரபா நின்றிருந்தாள். ஆனால், அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்சிரிப்பு இல்லாமல் இருந்தது.

"காளி, இதை வாங்கிக்கோ."

அவள் காளியின் கையில் ஒரு சிறு தாள் பொட்டலத்தைத் தந்தாள்.

காளி அதைத் திறந்து பார்ப்பதற்கு முன்பே "அப்போ பிறகு பார்ப்போம். நான் இங்கே வந்ததை யார்கிட்டயும் சொல்லாதே" என்று சொல்லியவாறு பிரபா வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.

காளி அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள். ஒரு அணாவாகவும், காலணாவாகவும் இருந்த காசுகளை எண்ணிப் பார்த்தாள். மொத்தத்தில் பதின்மூன்று அணாக்களும் ஐந்து பைசாவும் அந்தப் பொட்டலத்தில் இருந்தது.

பிரபாவின் ஆறு மாத சம்பாத்தியம் அது. காளிக்காக அவள் நேற்று இரவு தன்னுடைய உண்டியலை உடைத்தாள்.

பனிப்படலம் மூடியிருக்கும் வயல் வழியாக அவள் வேகமாக நடந்தாள். வீட்டை அடைந்ததும், யாருக்கும் தெரியாமல் படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள். அதற்கு மறுநாள், தலைவலியுடன் பிரபா பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வந்தாள்.

கோவிந்தமேனன் அவள் நெற்றியைத் தொட்டு பார்த்தார். படுக்கையில் போய் படுக்கும்படி அவர் சொன்னார். அன்று இரவு அவளால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு "பரவாயில்ல..." என்று சொன்னார்.

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் பிரபாவின் உடல் நிலை சரிப்பட்டு வரவில்லை. காய்ச்சல் அதற்கு மேல் போகாமலும் அதற்குக் கீழே இறங்காமலும் அப்படியே இருந்தது. கோவிந்த மேனன் வேறொரு டாக்டரைத் தேடிப் போனார்.

அதற்கு மேல் ஒரு வாரம் ஓடியது. பிரபாவின் உடல்நிலையில் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. அவளைப் பரிசோதிப்பதற்காக அவளின் தந்தை ஒரு நாட்டு வைத்தியரை அழைத்து வந்தார்.

இந்த நாட்களில் பிரபாவின் புறத் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் உண்டாகிவிட்டிருந்தன. அவளின் தடிமனான தோற்றம் மறைந்து மிகவும் மெலிந்து போய் காணப்பட்டாள். முகத்தில் இருந்த ஒளி முழுமையாக இல்லாமற் போனது. வெளிறிப் போன தோற்றத்துடன் அவள் இருந்தாள். கூந்தலில் இருந்த நீல வண்ணம் மறைந்து போய் செம்பட்டை விழுந்திருந்தது. உதடுகளில் இருந்த துடிப்பு முழுமையாக மறைந்து போய் விட்டிருந்தது. ஒரு வகையான நீல நிறம் அவள் உடலெங்கும் பரவியிருந்தது.

அவளின் தலைமுடி படுக்கையில் விரிந்து கிடந்தது. அதற்கு நடுவில் அவளின் உடல் ஒரு பொன் வாளைப் போல பிரகாசமாகத் தெரிந்தது.

கட்டிலுக்குப் பக்கத்திலிருக்கும் ஜன்னல் வழியாக பரந்து கிடக்கும் வயலைப் பார்த்தவாறு அவள் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தாள். கதிர் முற்றிக் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் நெல்லையும், வயலில் இங்குமங்குமாய் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும் கொக்குகளையும் பார்க்கும்போது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வயலில் இன்னொரு கரையில் இருக்கும் அவள் பள்ளிக்கூடம் இங்கிருந்து பார்க்கும்போது நன்றாகத் தெரியும். சாயங்காலம் நான்கு மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு விளையாடி சிரித்துக் கொண்டே நடந்து போகும் மாணவர்களும், மாணவிகளும் தூரத்தில் அவள் கண்களில் தெரிவார்கள். அவர்களையே வைத்தகண் எடுக்காது பார்த்தவாறு அவள் கட்டிலில் படுத்திருப்பாள். இனிமையான பள்ளிக்கூட நினைவுகள் அவள் மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருக்கும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel