Lekha Books

A+ A A-

தோழி - Page 6

thozhi

ஒரு புதையலைத் திறந்து பார்ப்பதைப் போல அவள் அந்தப் பழைய 'வினோலியா ஒயிட் ரோஸ்' பெட்டியைத் திறந்து காட்டினாள்.

தலைமுடியைக் கட்ட பயன்படும் பல்வேறு வண்ணங்களிலிருந்த மூன்று நான்கு பட்டு நாடாக்கள், உடைந்த கண்ணாடி வளையல்கள், முனை முறிந்த ஒரு சிறு கத்திரிக்கோல், புதிய வேஷ்டிகளிலும் முண்டுகளிலுமிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட சில தலைவர்மார்களின் படங்கள், ஒன்றிரண்டு வண்ணக் குச்சிகள், எரிந்து முடிந்து ஃப்யுஸ் ஆகிப்போன இரண்டு மின்சார பல்புகள், பாதி எழுதிய ஒரு சிறிய பழைய பாக்கெட் டைரி, ஒரு ஜப்பான் முத்து மாலை, ஒரு சிறிய சென்ட் குப்பி, ஒரு பவுண்டன் பேனா மூடி, சில மயில் இறகுகள், தையல்காரர்களிடமிருந்து சேகரித்த சில வண்ணத் துணித்துண்டுகள், வண்ணத்துப் பூச்சியைப் போல் இருந்த ஒரு கூந்தலில் வைக்கும் பின் - இவ்வளவு சாமான்களும் அந்த அட்டைப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "காளி, இது எல்லாம் இனிமேல் உனக்குத்தான்" என்றாள் பிரபா.

தான் சேகரித்து வைத்திருந்த, தான் பெரிதாக நினைத்த கலைப் பொருட்கள் அடங்கிய அந்தப் பெட்டியைத் தன்னுடைய தோழியிடம் தந்த பிரபா படுக்கையில் படுத்தாள். அவள் காளியின் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். "நான் தந்த நகைகளைவிட, ஆடைகளைவிட விலை மதிப்பு உள்ளதாயிற்றே இது?" என்ற அர்த்தம் அந்தப் பார்வையில் பொதிந்திருந்தது.

ஆனால், காளியின் முகம் இப்போதும் மரத்துப் போனது மாதிரியே இருந்தது. அந்த அறை முழுவதும் வெப்பம் நிறைந்த புகை சூழ்ந்திருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். எதையும் நினைத்துப் பார்ப்பதற்கோ, அங்கு நடந்து கொண்டிருப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கோ அவளால் முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே அசையாமல் சிலையென தான் நின்றிருந்தோம் என்பது அவளுக்கே தெரியாது. அவள் ஒரு பெரிய அலறல் சத்தத்தைக் கேட்டாள். ஏராளமான பேர் அறையை விட்டு நகர்ந்து கொண்டிருப்பது நிழல்கள் மாதிரி அவள் கண்களில் தெரிந்தது. "அய்யோ... என் பிள்ளை என்னை ஏமாத்திட்டாளே."

"கொஞ்சம் தள்ளி நில்லுங்க..."

"காற்று வரட்டும். ஒண்ணும் பயப்பட வேண்டாம். கோவிந்த மேனனைப் பிடிச்சுக்க..."

இப்படி சில வார்த்தைகள் காளியின் காதுகளில் விழுந்தன.

திடீரென்று யாரோ வந்து அவளைப் பிடித்து குலுக்கியவாறு உரத்த குரலில் சொன்னார்கள்: "போடி வெளியே"

அடுத்த நிமிடம் அவள் அதிர்ச்சியடைந்து நின்றாள். இப்போது அவளுக்கு மெதுவாக சுய உணர்வு வந்தது. அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் கனவில் நடக்கும் ஒரு சிறுமியைப் போல அவள் நடந்து வெளியே வந்தாள்.

அவள் கண்கள் புகை மூடியதைப் போல் இருந்தன. மூளையில் ஒரு சூறாவளியே வீசிக் கொண்டிருந்தது. அவள் வாசலுக்கு வந்தாள். அழுகைச் சத்தம் கேட்டு அவள் தாய் அருகிலிருந்த நிலத்தில் வேலிக்கருகில் வந்து நின்றிருந்தாள். தன் தாய் தளியாயியைப் பார்த்ததும், காளி தளர்ந்து போய் விட்டாள். வாய் விட்டு உரத்த குரலில் அவள் அழுதாள். மனதில் ஒருவித கலக்கத்துடன் அவள் தன் தாயின் அருகில் போக நகர்ந்தாள். ஆனால், ஒரு அடி முன்னால் வைப்பதற்கு முன்பே அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

கோவிந்தமேனன் கலங்கிய கண்களுடன் அவளைப் பிடித்துத் தூக்கி நிற்க வைத்து கீழே விழுந்த பொருட்களை எடுத்து அவளின் கையில் தந்தார். பிறகு அவளைக் கைகளால் தூக்கிக் கொண்டு வாசல் வரை கொண்டு போனார். என்னவோ மனதில் நினைத்தவாறு அவர் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவளைக் கீழே இறக்கிவிட்டு அன்பு மேலோங்க அவளின் தோளை இலேசாகத் தட்டியவாறு அவர் சொன்னார்: "அழாதே, போ..."

6

காளி இன்று ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியை. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற அந்தச் சம்பவத்தை இப்போது கூட அவள் மனதில் நினைத்துப் பார்ப்பதுண்டு. பரந்து கிடக்கும் அந்த நிலத்தில் இருக்கும் பிரபாவின் கல்லறைக்கு நீர் வழியும் கண்களுடன் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு பூங்கொத்துடன் அவள் போகாமல் இருப்பதில்லை.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel